Monday, 25 November 2024

கல்லறைப் பாடம் - 25

கல்லறைப் பாடம் - 25

விண்ணகம்


விண்ணகம் என்பது ஒப்புயர்வற்ற நிலையான பேரின்பம் ஆகும். இறை அருளில் இறப்போர் தூய்மை பெறத் தேவையற்றோர். இயேசு, மரியா, வானதூதர்கள், புனிதர்கள் ஆகியோருடன் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கடவுளை நேரில் காண்கின்ற விண்ணகத் திரு அவையை உருவாக்குகிறார்கள். அவர்கள் தூய்மைமிகு மூவொரு இறைவனோடு அன்புறவில் வாழ்ந்து நமக்காகப் பரிந்துபேசுகிறார்கள். 

விண்ணகத் திரு அவையை வெற்றிவாகை சூடிய திரு அவை என்றும், அகமகிழும் திரு அவை என்றும் அழைக்கிறோம். 

Sunday, 24 November 2024

கல்லறைப் பாடம் - 24

கல்லறைப் பாடம் - 24

நரகம் என்பது கடவுளை முற்றிலும் நிராகரிப்பதே!


தங்கள் சாவான பாவங்களுக்காக மனம் வருந்தாத மனிதர்கள், கடவுளுடனான ஒன்றிப்பை இழக்கிறார்கள். அதனால் அவர்கள் நிரந்தர துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று விவிலியம் மீண்டும் மீண்டும் கற்பிக்கிறது. “மனந்திரும்பாமல், கடவுளின் இரக்கமிகு அன்பை ஏற்றுக்கொள்ளாமல் சாவான பாவத்தில் இறப்பது என்பது, நம்முடைய சொந்த விருப்பத்தின் மூலம் கடவுளிடமிருந்து என்றென்றும் பிரிந்து வாழ்வதாகும். கடவுள் மற்றும் புனிதர்களுடன் ஒன்றிப்பு கொள்வதில் இருந்து தன்னைத் தானே ஒதுக்கிவைக்கும் இந்த நிலை “நரகம்” என்று அழைக்கப்படுகிறது". (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி 1033) 

நல்ல கடவுள் நரகத்திற்குப் பொறுப்பல்ல 

கடவுள் யாரையும் நிரந்தரமான தண்டனைக்கு முன்னிறுத்துவதில்லை. ஒரு மனிதரே தனது இறுதி இலக்கை கடவுளுக்கு வெளியேயும் எதிராகவும் தேடுவதன் மூலம், கடவுளின் பேரொளியும் பேரன்பும் ஊடுருவ முடியாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உலகத்தை தனக்கு உருவாக்கிக் கொள்கிறார். அதுவே நரகமாகிறது.

Saturday, 23 November 2024

கல்லறைப் பாடம் - 23

கல்லறைப் பாடம் - 23

நிலைவாழ்வை நம்புகிறேன்


நிலை வாழ்வு என்றால் இறப்பிற்குப் பிறகு உடனே தொடங்கும் வாழ்வு ஆகும். இதற்கு முடிவே இராது. இதற்கு முன்பாக ஒவ்வொருவருக்கும் தனித் தீர்ப்பு உண்டு. இந்த தனித் தீர்ப்பு பொதுத் தீர்ப்பில் உறுதி செய்யப்படும்.

உலகம் முடியும் நாளில் நாம் அனைவரும் நமது உடலோடு உயிர்தெழுந்து அழியா உடலைப் பெறுவோம். அந்நாளில் நமது ஆன்மாவும் உடலும் மீண்டும் இணையும். நேர்மையாளர்கள் (கடவுளின் திருவுளத்திற்கேற்ப வாழ்ந்தவர்கள்) இவ்வுலக வாழ்விற்குப்பின் நிலையான பேரின்பத்தை (விண்ணகத்தை) அடைவார்கள். தீயவர்கள் முடிவில்லா தண்டனைக்கும் அழியா நெருப்பிற்கும் (நரகத்திற்கும்) செல்வார்கள். 

உலகம் முடியும் நாளில் பொதுத் தீர்வையின் போது உத்தரிக்கிற இடத்தில் இருக்கின்றவர்கள் அனைவரும் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்தில் இறைத் தந்தையோடு அமர்வர். அதன் பின் உத்தரிக்கின்ற இடம் என்ற ஒரு நிலை இல்லாமல் போகும்.