அன்னையை அறிவோம் - 16
1. இடைவிடா சகாய அன்னையின் பக்தி முயற்சியை உலகம் முழுவதும் பரப்பும் துறவற சபை குருக்கள் யார்? இரட்சகர் சபை குருக்கள்.
2. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படம் முதன் முதலாக உரோமை நகரின் எந்த ஆலயத்தில், எப்போது நிறுவப்பட்டது? 1499 இல் புனித மத்தேயு ஆலயத்தில்.
3. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படம் நிறுவப்பட்ட புனித மத்தேயு ஆலயம் எங்கு அமைந்திருந்தது? புனித மரியன்னை பேராலயத்திற்கும், புனித யோவான் பேராலயத்திற்கும் (லாத்தரன்) இடையே அமைந்திருந்தது.
4. புனித மத்தேயு ஆலயம் அழிக்கப்பட்ட பிறகு காப்பாற்றப்பட்ட இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படம் இப்போது எங்கு நிறுவப்பட்டுள்ளது? புனித மத்தேயு ஆலயம் இருந்த அதே இடத்தில் பின்னர் கட்டப்பட்ட புனித அல்போன்ஸ் லிகோரி ஆலயத்தில் 1866 ஆம் ஆண்டில் இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படம் நிறுவப்பட்டு, இன்றளவும் அங்கே வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
5. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படம் யாரால் வரையப்பட்டிருக்க வேண்டுமென்று திரு அவை மரபு கூறுகிறது? புனித லூக்கா.
6. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்திலுள்ள மிக்கேல் வானதூதர் அணிந்திருக்கும் மேலாடையின் நிறம் என்ன? கரும் பச்சை.
7. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்திலுள்ள கபிரியேல் வானதூதர் அணிந்திருக்கும் மேலாடையின் நிறம் என்ன? இளஞ்சிவப்பு.
8. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்திலுள்ள அன்னைக்கும் குழந்தை இயேசுவுக்கும் எப்போது கிரீடம் அணிவிக்கப்பட்டது? 1867 (வத்திக்கானிலிருந்து வந்த சிறப்பு ஆணைக்குப் பிறகு).
9. இடைவிடா சகாய அன்னையின் திருவுருவப் படத்தில் அன்னையின் வாய் சிறியதாகவும், கண்கள் பெரியதாகவும் வரையப்பட்டுள்ளதன் பொருள் என்ன? அன்னை அதிகம் பேசாமல் அமைதியிலும் செபத்திலும் இருந்ததைக் குறிக்க வாய் சிறியதாகவும், அன்னை நம்முடைய தேவைகளையும் துன்பங்களையும் உற்று நோக்குகிறார் என்பதைக் குறிக்க கண்கள் பெரியதாகவும் வரையப்பட்டுள்ளன.
10. இடைவிடா சகாய அன்னையின் தலையிலுள்ள முக்காட்டில் இருக்கும் விண்மீன் பற்றிக் கூறு. அன்னையின் தலையில் இருக்கும் விண்மீன் 8 முனைகள் கொண்ட விண்மீன் ஆகும். இது அன்னை விடியற்காலை விண்மீன் என்பதைக் காட்டுகிறது. அன்னை நம்மை இறைமகன் இயேசுவிடம் அழைத்துப்போகிறார் என்பதற்காக விண்மீனின் இடப்பக்கத்தில் சற்று அருகிலேயே சிறிய அலங்கரிக்கப்பட்ட சிலுவைச் சின்னமும் வரையப்பட்டுள்ளது.