Showing posts with label தவக்காலம். Show all posts
Showing posts with label தவக்காலம். Show all posts

Thursday, 30 March 2023

தவக்காலத் திருவுரைகள்

 இறவாமையை அடைய இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்! 

யோவா 8:51-59


நாம் வாழும் வாழ்க்கைக்கு தொடக்கமும் முடிவும் உண்டு. ஆனால் இவ்வாழ்வைக் கொடுத்த கடவுளின் வார்த்தைக்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. இவ்வாறு தொடக்கமும் முடிவும் இல்லாத இந்த இறைவார்த்தையே நம்முடைய வாழ்வுக்கு வழியும் ஒளியும் என்கிறது திருப்பாடல். காலம் நிறைவுற்றபோது இந்த இறைவனின் வார்த்தையே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்தது. முதலும் முடிவும் இல்லாத வார்த்தை மனிதரானதன் நோக்கம் நாமும் இறைவனைப் போன்று இறவாமையில் இணைந்திட வேண்டுமென்பதே ஆகும்.  

உடல் கொண்ட அனைத்தும் சாவை சந்திக்க வேண்டும். இந்த சாவு உடலைத் தீண்டமே ஒழிய ஆன்மாவை அல்ல. உடலுக்குள் உறையும் ஆன்மா சாகாது. அந்த சாகாத ஆன்மா இறைவனின் இறவாமையில் இணைந்து இன்புற்றிட வழி சொன்னவர்தான் இயேசு. ஆம், மனிதர்களும் சாவைக் கடந்து வாழ முடியும் என்பது மனிதராகப் பிறந்த இயேசு நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பது நிலைவாழ்வை உறுதி செய்யும் என்கிறார் இயேசு. என்றும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தையை கடைப்பிடிப்பது மட்டுமே நமக்கான வழி.

திருச்சட்டத்தை நிறைவேற்றவே வந்தேன் என்றார் இயேசு. திருச்சட்டமும் அனைத்து இறைவாக்குகளும் இயேசுவில்தான் நிறைவேறின. தந்தையாம் கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ இயேசு ஒருபோதும் தயங்கியதுமில்லை, அதைத் தவிர்த்ததுமில்லை. கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்வது எப்படி என்பதை இயேசுவே கற்றுக்கொடுத்துள்ளார். சடங்காச்சாரமாகவோ, சம்பிரதாயத்திற்காகவோ அன்று, மாறாக உண்மை அர்த்தம் உணர்ந்து உளப்பூர்வமாக உறுதிப்பாட்டுணர்வோடு இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ இயேசுவின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

இறவாமையை அடைய இறைவார்த்தையைக் கடைப்பிடிக்க கற்றுத்தரும் இயேசு, இவ்வாறு கடைப்பிடிப்போர் அடையும் சவால்களையும், சிரமங்களையும் முன்னுணர்த்துகிறார். மனிதர்களின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்போர் பலர் இருக்கையில் இறைவனது வார்த்தைகளைக் கடைப்பிடிக்கவும் அதனால் சிரமப்படவும் இயேசு அழைக்கிறார். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்போரை மனிதர்கள் மட்டம் தட்டலாம். ஆனால் இறைவனோ அவர்களுக்கு பெருமை சூட்டுகிறார் என்றும் இயேசு தெளிவுபடுத்துகிறார். இறவாமை நமது இலக்கென்றால், இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பதே நம்முடைய வழியாகட்டும். நிலை வாழ்வு நமக்கான பரிசாகிட, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவோம். இறவாமையை அடைய இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்!


Friday, 24 March 2023

தவக்காலத் திருவுரைகள்

தவக்காலத் திருவுரைகள் 


பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வருவோம்!


யோவான் 7:1,2,10, 25-30



நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒருபோதும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஆகவே நமது பாதுகாப்பு என்பது நம்முடைய அடிப்படை எதிர்பார்ப்பாகவும், அத்தோடு நம்முடைய சுகமான வாழ்வு என்பது நம்முடைய அடிப்படை ஏக்கமாகவும் எல்லோருக்கும் இருக்கிறது. எதிர்பாராமல் நம் வாழ்க்கையில் வரும் பாதுகாப்பற்ற சூழலை சந்திப்பதில் பலரும் சோர்ந்து போகிறார்கள் அல்லது சோடை போகிறார்கள். 

நம்முடைய பாதுகாப்புக்காவும் வசதிக்காகவும் நாம் பலவற்றை விரும்பிச் செய்கிறோம். எவையெல்லாம் நம்மை எவ்வித தொல்லையும் தொந்தரவும் இல்லாமல் வைத்திருக்குமோ அவற்றையே விரும்பிச் செய்ய எண்ணுகிறோம். எவையெல்லாம் நமக்கு வருத்தமும் வேதனையும் தராதோ அவற்றையே விரும்பித் தேடுகிறோம். எவையெல்லாம் நம் வாழ்வில் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தாதோ அவற்றையே நமது அன்றாட பழக்க வழக்கங்களாக்கிவிடுகிறோம். 

பாதுகாப்பு வளையத்தினுள்ளேயே எப்போதும் இருப்பவர்களின் வாழ்க்கை ஆமைக்கு ஒப்பானது. சிறிது ஆபத்து வருவதை உணர்ந்ததும் ஆமை தன்னுடைய ஓட்டுக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்ளும். அதைப் போலவே நம்மில் பலரும் ஆபத்தான சூழலை, பாதுகாப்பற்ற சூழலை, வசதி குறைவான சூழலை சந்திக்க தயக்கம் காட்டுவதுண்டு. ஆபத்தை விரும்பாத ஆமை நல்ல ஆளுமையை உருவாக்க சரியான எடுத்துக்காட்டு அல்ல. பாதுகாப்பையும், வசதியான சூழலையும் எப்போதும் விரும்புகிற ஆமையின் மனநிலை கிறிஸ்துவின் மனநிலைக்கு ஏற்புடையதாகாது.   

பாதுகாப்பற்ற சூழல்கள் மட்டுமே நமது வாழ்வுக்கு வளர்ச்சியைக் கொணரும். சவாலான நேரங்கள் மட்டுமே நமது வாழ்வை சிகரத்திற்கு அழைத்துப்போகும். சிரமமான தருணங்கள் மட்டுமே நமது வாழ்வில் முன்னேற்றத்தை வழங்கும்.  ஆக, பாதுகாப்பு வளையங்களுக்கு வெளியே அடியெடுத்து வைப்பவர்களே, தங்கள் வாழ்வுக்கு மகத்தான பாதையை அமைத்துக்கொள்கிறார்கள். 

இயேசுவைக் கொல்ல யூதர்கள் அவரைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் வெளிப்படையாக திருவிழாவில் மக்களுக்கு போதிக்கிறார். அனைவரும் அதைக் குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். சாவு துரத்துகிறது என்பதற்காக, வாழ்வை பிறருக்கு பயன் தரும் விதத்தில் வாழ இயேசு எப்போதும் மறந்ததே இல்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் ஒரு நாளும் பதுங்கி இருந்தவர் அல்ல இயேசு. தன்னுடைய வசதிகளை முன்னிறுத்தி இயேசு என்றும் செயல்பட்டதே இல்லை. கிறிஸ்துவின் பணி வாழ்வும் பலி வாழ்வும் பாதுகாப்பு வளையத்தை துறப்பதை வலியுறுத்துகிறது. நாமும் இனி நம்முடைய   பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வருவோம்!  


Monday, 27 February 2023

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு செய்ய விரும்பவதையெல்லாம் அடுத்தவருக்கு செய்வோம்!

மத்தேயு 25:31-46


மனிதர்கள் கடவுளின் சாயலாய் படைக்கப்பட்டுள்ளனர். மனிதம் இறைமையைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு மனிதனும் நமக்கு கடவுளின் முகத்தையே அடையாளம் காட்டுகின்றனர். கடவுள் கடவுளாகவே இவ்வுலகுக்கு வந்தால் கடவுளை எவரும் விரட்டியடிக்கப்போவதில்லை. ஆனால் கடவுள் கடவுளாகவே இவ்வுலகுக்கு ஒருபோதும் வருவதில்லை. கடவுள் தம் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதர்களின் வழியாகவே இம்மண்ணில் வலம் வருகிறார். மனிதர்களின் மாண்பைக் காக்கிறவர்கள் கடவுளையே மாட்சிப்படுத்துகிறார்கள். 

இயேசு சவுலை தமஸ்குக்கு செல்லும் பாதையில் சந்திக்கிறபோது ‘ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்கிற கேள்வியை எழுப்புகிறார். ஆனால் உண்மையில் பவுல் இயேசுவை அல்ல, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருந்த கிறிஸ்தவர்களையே துன்புறுத்தினார். துன்புறுவோரின் துன்பத்தை தம் துன்பமாகவே பாவிக்கிறவர் நம் கடவுள். ஆகவே கடவுளை நேரடியாக எவரும் துன்புறுத்த விரும்புவதில்லை. ஆனால் சக மனிதர்களை துன்பத்துக்கு உள்ளாக்குவதன் வழியாக கடவுளை நம்மால் துன்புறச் செய்ய முடியும்.

இறுதித் தீர்ப்பு குறித்த நற்செய்திப் பகுதியில் நிலைவாழ்வு என்பது அடுத்தவர் மீது அக்;கறைகொண்டு அவர்களின் தேவைகளை நிறைவு செய்கிறவர்களுக்கு வழங்கப்படும் கடவுளின் அன்புப் பரிசாகும் என்றும், அணையா நெருப்பு என்பது அடுத்தவர் மட்டில் அக்கறையற்று அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவிடும் மனமில்லாதவர்களுக்கு வழங்கப்படும் முடிவில்லாத் தண்டனையாகும் என்றும் சொல்லப்படுகிறது. 

தேவையில் இருப்போருக்கு செய்யப்படும் எதுவும் தெய்வத்துக்கே செய்யப்படுவதாகும் என்றும், தேவையில் இருப்போருக்கு செய்யப்படாத எதுவும் தெய்வத்துக்கே செய்யப்படாததாகும் என்றும் இயேசுவின் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆகவே கருணையுள்ளமே கடவுளுக்கு உகந்த இல்லிடம்.  ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார் (நீமொ 19:17). 

பசித்திருப்பவரும், தாகத்தோடு இருப்பவரும் இயேசுக்களே. ஆடையின்றி இருப்பவரும், அன்னியராய் இருப்பவரும் இயேசுக்களே. நோயுற்றிருப்பவரும், சிறையிலிருப்பவரும் இயேசுக்களே. இல்லாமையில் இழிவுறும் இந்த இயேசுக்களின் மீது நம் கண்களை திருப்புவோம். அடுத்தவருக்கு செய்யப்படும் நன்மைகள் ஆண்டவருக்கு செய்யப்படும் ஆராதனைகளே. அடுத்தவருக்கு செய்ய மறந்த நன்மைகள் ஆண்டவருக்கு செய்யப்படும் அவசங்கைகளே. ஆகவே ஆண்டவருக்கு செய்ய விரும்புவதையெல்லாம் அடுத்தவருக்கு செய்வோம்!  


Saturday, 27 February 2021

தவக்காலம் - கிறிஸ்துவின் கைகள்

 இழந்த கைகளின் கதை



ஒரு நாள் காலை.

நான் மண்டியிட்டு செபிக்கும்போது 

கிறிஸ்துவின் சிலுவையைப் பார்த்தேன்.

மிகவே திகைத்துப் போனேன். 

இயேசுவின் கைகளை அதில் காணவில்லை.

நான் கூரையிலிருந்து தரை வரைக்கும் தேடினேன்.

அதற்கு அப்பாலும் தேடினேன்.

ஆனால் காயமடைந்த அவருடைய கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.


அதனால் ஆண்டவர் பக்கம் திரும்பினேன்.

இது ஒரு கனவு தானா?

ஏன் மாட்சிக்குரிய அவரது இருக்கையில் 

அவர் முழுமையற்றவராக தெரிகிறார்?

என்று கேட்டேன்.


அவர் சொன்னார்:

“குழந்தாய்! 

நீங்களே என் கைகள்.  

பாதிக்கப்பட்டவரின் காயங்களை குணமாக்குங்கள்.  

ஏழைகளை கரிசனையோடு கவனித்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கையற்றோருக்கு நம்பிக்கை கொடுங்கள். 

சோர்வுற்றோரை  தேற்றுங்கள். 

ஆடை இழந்தோரை உடுத்துங்கள்.

இதைச் செய்வதன் மூலம் 

நீங்கள் என் கைகளை மீட்டெடுங்கள்."


மூலம்: " Encountering God in our Life ".