Showing posts with label கல்லறைப் பாடம். Show all posts
Showing posts with label கல்லறைப் பாடம். Show all posts

Saturday, 30 November 2024

கல்லறைப் பாடம் - 30

கல்லறைப் பாடம் - 30

தாராள குணத்தில் உத்தரிக்கும் ஆன்மாக்களை யாராலும் வெல்ல முடியாது



பாஸ்டனில் உள்ள ஒரு தொழிலதிபர் இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களுக்காக மன்றாடுவோரின் சங்கத்தில் சேர்ந்தார். அவர் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபிக்கவும், திருப்பலி ஒப்புக்கொடுக்கவும் ஆண்டுதோறும் ஒரு பெரிய தொகையை வழங்கினார்.

அவர் அவ்வளவு பெரிய ஒரு பணக்காரர் அல்ல என்பதை அனைவரும் அறிவர்.  ஒருநாள் சங்கத்தின் இயக்குநரான அருள்பணியாளர் அந்த தொழிலதிபரிடம். மிகப் பெரிய தொகையைத் தருகிறீர்களே, இது உங்களுடைய தனிப்பட்ட காணிக்கையா அல்லது பலரிடம் தானமாகப் பெறப்பட்ட தொகையா என மென்மையாய் வினவினார். 

அதற்கு அந்த தொழிலதிபர், “அன்புள்ள குருவே, நான் வழங்குவது எனது சொந்த பணமே. ஆச்சரியப்பட வேண்டாம், ஆமாம், நான் பெரிய பணக்காரன் அல்ல, ஆனால் நான் என்னால் செய்ய முடிந்ததைவிட அதிகமாக கொடுக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அது அவ்வாறு இல்லை. ஏனென்றால் எனது சேவைகள் மூலம் நான் பணத்தை இழக்காத வகையில், நான் கொடுப்பதை விட மிகுந்த அளவு என்னுடைய தொழிலில் நான் வருமானம் பெறுவதை உத்தரிக்கும் ஆன்மாக்கள் பார்த்துக் கொள்கிறார்கள். தாராள குணத்தில் அவர்களை யாராலும் வெல்ல முடியாது” என்று பதிலளித்தார்.

Friday, 29 November 2024

கல்லறைப் பாடம் - 29

கல்லறைப் பாடம் - 29


கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றிய உத்தரிக்கும் ஆன்மாக்கள்



அருள்பணியாளர் லூயிஸ் மனாசி என்பவர் ஒரு தீவிர மறைப்பணியாளர். அவர் உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் ஓர் ஆபத்தான பாதையில் தன் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆகவே, அவர் அப்பயணத்தில் சந்திக்கக்கூடிய ஆபத்துகளிலிருந்து தன்னைப் பாதுகாக்க, உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் நம்பிக்கையுடன் மன்றாடினார். 

அவரது பாதை ஒரு பரந்த பாலைவனத்தின் வழியாக இருந்தது. அது கொள்ளைக்காரர்களால் நிறைந்திருந்ததெனவும் அவருக்குத் தெரியும். உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபமாலைச் சொல்லியவாறு, அவர் மிக வேகமாக அப்பாதையைக் கடந்தார். அப்போது அவர் தன்னைச் சுற்றி பரிசுத்த ஆன்மாக்கள் அரண்போல சூழ்ந்து வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். 

கொள்ளையர்கள் அவரைத் தாக்கமுற்பட்டபோது, பரிசுத்த ஆன்மாக்கள் அக்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி அந்த குருவைக் காப்பாற்றினர். அவர் பாதுகாப்பாக அவ்விடத்தைக் கடக்கும் வரை அவருக்கு பரிசுத்த ஆன்மாக்கள் வழித்துணையாய் வந்தனர்.

Thursday, 28 November 2024

கல்லறைப் பாடம் - 28

கல்லறைப் பாடம் - 28

புற்றுநோயிலிருந்து நலம்



ஜோனா தி மெனிசஸ் என்னும் பெண்மணி தனது குணம் பற்றி இவ்வாறு கூறுகிறார்: 

காலில் தனக்கு ஏற்பட்ட புற்றுநோயால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு சோகத்தில் ஆழ்ந்தார். அச்சமயத்தில் உத்தரிக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களின் வல்லமையைப் பற்றி அவர் கேள்விப்பட்டதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் மீது தனது முழு நம்பிக்கையையும் வைக்க முடிவு செய்தார்.

மேலும் அவர்களுக்காக ஒன்பது திருப்பலிகளை ஒப்புக்கொடுத்தார். அதனால் அவர் குணமடைந்தால் பரிசுத்த ஆன்மாக்களுக்காக சாட்சியம் அளிப்பதாக உறுதியளித்தார். படிப்படியாக வீக்கம் குறைந்து, கட்டி மற்றும் புற்றுநோய் முற்றிலும் மறைந்தது. இவ்வாறு அவர் முழுமையான சுகம் அடைந்தார்.

Wednesday, 27 November 2024

கல்லறைப் பாடம் - 27

கல்லறைப் பாடம் - 27

டைபாய்டு காய்ச்சலிலிருந்து பிழைத்த இளைஞன்



சிர்போன்டைன்னஸ் என்னும் சபையின் அதிபர் இந்நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

ஓர் இளைஞன் டைபாய்டு காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் மிகுந்த துக்கத்தில் மூழ்கி, உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் தங்கள் மகனுக்காகச் செபிக்கும்படி அந்த அதிபரிடம் கேட்டார்கள்.

அன்று சனிக்கிழமை. அந்த இளைஞன் மரணத்தின் வாசலில் இருந்தான். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அனைத்தும் வீணானது. அவர்களால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. அவர்கள் விரக்தியில் இருந்தனர்.

ஆனால் அதிபர் மட்டும் சொன்னார்: “எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பரிசுத்த ஆன்மாக்களின் வல்லமையை நான் நன்கு அறிவேன், ஏனென்றால் அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.”

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிபர் உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் நோய்வாய்ப்பட்ட இளைஞருக்காக உருக்கமாக செபிக்குமாறு அனைவரிடமும் கேட்டேன். அனைவரும் செபித்தோம்.

திங்கட்கிழமை அன்று ஆபத்து கட்டத்தைத் தாண்டி, அந்த இளைஞன் குணமடைந்தான்.

Tuesday, 26 November 2024

கல்லறைப் பாடம் - 26

கல்லறைப் பாடம் - 26

புனித பீட்டர் தமியானும் உத்தரிக்கும் ஆன்மாக்களும்



புனித பீட்டர் தமியான் பிறந்த சிறிது காலத்தில் தந்தை மற்றும் தாய் இருவரையும் இழந்தார். அவரது சகோதரர்களில் ஒருவர் அவரை வளர்த்து வந்தார். ஆனால் அவர் பீட்டரை மிகக் கடுமையுடன் நடத்தினார். அவரை கடுமையாக உழைக்க வற்புறுத்தினார். ஆனால் அவருக்கு மோசமான உணவு மற்றும் பழைய ஆடைகளையே வழங்கினார்.

வெளியில் ஒரு நாள் பீட்டர் மிக விலை உயர்ந்த ஒரு வெள்ளித் துண்டைக் கண்டெடுத்தார். உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாததால், ஒரு நண்பர் அவரிடம், எவ்வித மனஉறுத்தலுமின்றி அப்பொருளை அவர் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

பீட்டருக்கு நிறைய காரியங்கள் தேவைப்பட்டன. ஆகவே அவற்றுள் எதற்கு இப்பொருளைப் பயன்படுத்துவது என அவருக்குப் புரியவில்லை. ஆகவே மிகுந்த யோசனைக்குப் பிறகு, அவர் இப்பொருளை மிக உயர்ந்த ஒரு காரியத்திற்காக செலவிட வேண்டும் என முடிவெடுத்து, தம்முடைய பெற்றோரின் ஆன்மாக்களுக்காக ஒரு திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். அது முதல் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. உத்தரிக்கும் ஆன்மாக்கள் அவருக்கு தாராளமாய் கைம்மாறு வழங்கினர். 

ஒருமுறை அவரது குடும்பத்தின் மூத்த சகோதரர் பீட்டர் வசித்துவந்த சகோதரரின் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் அனுபவித்த கொடூரமான துன்பங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆகவே, அவரை தனது சொந்த பராமரிப்பில் ஏற்றுக்கொண்டார். நல்ல ஆடை அணிவித்து, தனது சொந்தக் குழந்தையாக அவருக்கு உணவளித்துப் பராமரித்தார். மேலும் அவரை மிகவும் அன்பாகப் படிக்க வைத்தார். அதன் பிறகும் பீட்டரின் வாழ்வில் ஆசீர்வாதத்திற்கு மேல் ஆசீர்வாதம் தொடர்ந்து வந்தது.

விரைவில் அவர் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தார். பின்பு ஆயராகவும், கர்தினாலாகவும் உயர்ந்தார். அவரது இறப்பிற்குப் பின்பு இவருடைய பரிந்துரையால் நடைபெற்ற பல அற்புதங்கள் அவரது புனிதத்தன்மைக்குச் சான்றளித்தன. இதனால் அவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். 

உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்ததன் பயனாக ஓர் ஏழைச் சிறுவன் எவ்வாறு பல்வேறு ஆசீர்வாதங்களைப் பெற்றான் என்பதை புனித பீட்டர் தமியானின் வாழ்விலிருந்து நாம் அறியலாம். 

Monday, 25 November 2024

கல்லறைப் பாடம் - 25

கல்லறைப் பாடம் - 25

விண்ணகம்


விண்ணகம் என்பது ஒப்புயர்வற்ற நிலையான பேரின்பம் ஆகும். இறை அருளில் இறப்போர் தூய்மை பெறத் தேவையற்றோர். இயேசு, மரியா, வானதூதர்கள், புனிதர்கள் ஆகியோருடன் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கடவுளை நேரில் காண்கின்ற விண்ணகத் திரு அவையை உருவாக்குகிறார்கள். அவர்கள் தூய்மைமிகு மூவொரு இறைவனோடு அன்புறவில் வாழ்ந்து நமக்காகப் பரிந்துபேசுகிறார்கள். 

விண்ணகத் திரு அவையை வெற்றிவாகை சூடிய திரு அவை என்றும், அகமகிழும் திரு அவை என்றும் அழைக்கிறோம். 

Sunday, 24 November 2024

கல்லறைப் பாடம் - 24

கல்லறைப் பாடம் - 24

நரகம் என்பது கடவுளை முற்றிலும் நிராகரிப்பதே!


தங்கள் சாவான பாவங்களுக்காக மனம் வருந்தாத மனிதர்கள், கடவுளுடனான ஒன்றிப்பை இழக்கிறார்கள். அதனால் அவர்கள் நிரந்தர துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று விவிலியம் மீண்டும் மீண்டும் கற்பிக்கிறது. “மனந்திரும்பாமல், கடவுளின் இரக்கமிகு அன்பை ஏற்றுக்கொள்ளாமல் சாவான பாவத்தில் இறப்பது என்பது, நம்முடைய சொந்த விருப்பத்தின் மூலம் கடவுளிடமிருந்து என்றென்றும் பிரிந்து வாழ்வதாகும். கடவுள் மற்றும் புனிதர்களுடன் ஒன்றிப்பு கொள்வதில் இருந்து தன்னைத் தானே ஒதுக்கிவைக்கும் இந்த நிலை “நரகம்” என்று அழைக்கப்படுகிறது". (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி 1033) 

நல்ல கடவுள் நரகத்திற்குப் பொறுப்பல்ல 

கடவுள் யாரையும் நிரந்தரமான தண்டனைக்கு முன்னிறுத்துவதில்லை. ஒரு மனிதரே தனது இறுதி இலக்கை கடவுளுக்கு வெளியேயும் எதிராகவும் தேடுவதன் மூலம், கடவுளின் பேரொளியும் பேரன்பும் ஊடுருவ முடியாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உலகத்தை தனக்கு உருவாக்கிக் கொள்கிறார். அதுவே நரகமாகிறது.

Saturday, 23 November 2024

கல்லறைப் பாடம் - 23

கல்லறைப் பாடம் - 23

நிலைவாழ்வை நம்புகிறேன்


நிலை வாழ்வு என்றால் இறப்பிற்குப் பிறகு உடனே தொடங்கும் வாழ்வு ஆகும். இதற்கு முடிவே இராது. இதற்கு முன்பாக ஒவ்வொருவருக்கும் தனித் தீர்ப்பு உண்டு. இந்த தனித் தீர்ப்பு பொதுத் தீர்ப்பில் உறுதி செய்யப்படும்.

உலகம் முடியும் நாளில் நாம் அனைவரும் நமது உடலோடு உயிர்தெழுந்து அழியா உடலைப் பெறுவோம். அந்நாளில் நமது ஆன்மாவும் உடலும் மீண்டும் இணையும். நேர்மையாளர்கள் (கடவுளின் திருவுளத்திற்கேற்ப வாழ்ந்தவர்கள்) இவ்வுலக வாழ்விற்குப்பின் நிலையான பேரின்பத்தை (விண்ணகத்தை) அடைவார்கள். தீயவர்கள் முடிவில்லா தண்டனைக்கும் அழியா நெருப்பிற்கும் (நரகத்திற்கும்) செல்வார்கள். 

உலகம் முடியும் நாளில் பொதுத் தீர்வையின் போது உத்தரிக்கிற இடத்தில் இருக்கின்றவர்கள் அனைவரும் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்தில் இறைத் தந்தையோடு அமர்வர். அதன் பின் உத்தரிக்கின்ற இடம் என்ற ஒரு நிலை இல்லாமல் போகும்.

Friday, 22 November 2024

கல்லறைப் பாடம் - 22

கல்லறைப் பாடம் - 22

தனித் தீர்ப்பு, பொதுத் தீர்ப்பு



தனித் தீர்ப்பு

தனித் தீர்ப்பு என்றால் இறந்தவுடன் ஒவ்வொருவருக்கும் கைம்மாறு அளிக்கும் தீர்ப்பு ஆகும். நம்பிக்கைக்கும் செயல்களுக்கும் ஏற்பத் தம் அழியா ஆன்மாவில் கடவுளிடமிருந்து ஒவ்வொருவரும் அந்தக் கைமாற்றை பெற்றுக்கொள்வர். உடனடியாகவோ தகுந்த தூய்மையாக்குதலுக்குப் பிறகோ, விண்ணகப் பேரின்பத்தை அடைவதில் அல்லது நரகத்தின் முடிவில்லா தண்டனையை அடைவதில் அது அடங்கும். 

பொதுத் தீர்ப்பு

பொதுத் தீர்ப்பு என்பது பேரின்பத்திற்கோ முடிவில்லாத் தண்டனைக்கோ வழங்கப்படும் தீர்ப்பு ஆகும். உலக முடிவில் ஆண்டவர் இயேசு வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராக வரும்போது, நேர்மையாளருக்கும் நேர்மையற்றோருக்கும் இத்தீர்ப்பை வழங்குவார். பொதுத் தீர்ப்புக்குப் பிறகு, தனித்தீர்ப்பில் ஆன்மா ஏற்கெனவே கைம்மாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ தண்டனையிலோ உயிர்த்த உடல் பங்குபெறும். 

பொதுத் தீர்ப்பு உலக முடிவில் நடைபெறும். அந்நாளையும் நேரத்தையும் கடவுள் மட்டுமே அறிவார். 

பொதுத் தீர்ப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் அழிவிற்குரிய அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்துவின் மாட்சியில் பங்கு பெறும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் தொடங்கும் (2பேது 3:13). அப்போது இறையாட்சி முழுமை பெறும்.

Thursday, 21 November 2024

கல்லறைப் பாடம் - 21

 கல்லறைப் பாடம் - 21

உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்


உடலின் உயிர்ப்பு என்பது ஆன்மா உடலிலிருந்து பிரிக்கப்பட்ட நிலை, மனிதரின் முடிவான நிலையாக இருக்காது என்பதைக் குறிக்கிறது. ஏனெனில் அழிவுக்குரிய நம் உடல்களும் ஒரு நாள் மீண்டும் வாழ்வு பெறும்.

நம்பிக்கை அறிக்கையில் இடம்பெறும் உடலின் உயிர்ப்பு என்பதன் நேர் பொருள் ஊனுடலின் உயிர்ப்பு ஆகும். ஊனுடல் என்னும் சொல் வலுவற்ற, அழிவுக்குரிய நிலையில் உள்ள மானுடத்தைக் குறிக்கிறது. ஊனுடல் மீட்பின் காரணியாக உள்ளது என்கிறார் தெர்த்துலியன். ஊனுடலைப் படைத்த கடவுளை நம்புகிறோம். ஊனுடலை மீட்க மனித உடல் எடுத்த வார்த்தையானவரை நம்புகிறோம். மேலும் உடலின் உயிர்ப்பை நம்புகிறோம். இது ஊனுடலின் படைப்பு, மீட்பு ஆகியவற்றின் நிறைவு ஆகிறது. 

Wednesday, 20 November 2024

கல்லறைப் பாடம் - 20

கல்லறைப் பாடம் - 20

இறப்புக்கு அப்பால்


இறக்கும்போது உடலிலிருந்து ஆன்மா பிரிகிறது. இறப்பிற்குப் பிறகு உடல் அழிந்துவிடுகிறது. அதே வேளையில் அழியாத் தன்மை கொண்ட ஆன்மா இறைவனின் தீர்ப்பைச் சந்திக்கச் செல்கிறது. ஆண்டவர் மீண்டும் வரும்போது, மாற்றுரு பெற்று எழும் உடலோடு மீண்டும் இணையக் காத்திருக்கிறது. உடலின் உயிர்ப்பு எப்படி நிகழும் என்பது நம் கற்பனைக்கும் புரிதலுக்கும் எட்டாதது. 

கிறிஸ்துவின் உயிர்ப்பும் நம் உயிர்ப்பும்

கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உண்மையாகவே உயிர்த்தெழுந்து என்றென்றும் வாழ்கிறார். அது போல அவரே இறுதி நாளில் ஒவ்வொருவரையும் அழியா உடலோடு உயிர்த்தெழச் செய்வார். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர். (யோவா 5:29)

கிறிஸ்துவில் இறத்தல்

கிறிஸ்து இயேசுவில் இறப்பது என்பது சாவான பாவம் ஏதும் இன்றிக் கடவுளின் அருள் நிலையில் இறப்பதாகும். இவ்வாறு, நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இறைத்தந்தைக்குக் காட்டும் கீழ்ப்படிதல், அன்பு ஆகியவற்றின் செயலாகத் தங்களது சொந்த இறப்பை மாற்ற இயலும். “பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்”. (2 திமொ 2:11)


Tuesday, 19 November 2024

கல்லறைப் பாடம் - 19

கல்லறைப் பாடம் - 19

உத்தரியமும் உத்தரிக்கும் நிலையும்


பல பிரபலமான புனிதர்களும், பல்வேறு காட்சிகளில் புனித கன்னி மரியாவும் உத்தரிக்கும் நிலையில் துன்பப்படும் ஆன்மாக்களின் சார்பாக மன்றாடுபவர்களாக திரு அவையால் குறிப்பிடப்படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக கார்மல் அன்னை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக பரிந்துரைப்பவராக உள்ளார். 

மணிமுடி சூட்டப்பட்ட கார்மல் அன்னை தம் கையில் ஒரு பழுப்பு நிற உத்தரியத்தை வைத்திருப்பார். இது கார்மல் சபைத் துறவியரின் சிறப்பு வாய்ந்த பக்தி ஆடைகளின் ஒரு வடிவம். இந்த உத்தரியம் பரிபூரணபலன்களைப் பெற்றிடவும் அதன் வழியாக மீட்கப்படவும் நமக்கு உதவக் கூடியதாக உள்ளது.

முதல் வாக்குறுதி

“இந்த உத்தரியத்தை அணிந்துகொண்டு பக்தியுடன் இறப்பவர், முடிவில்லா நரக நெருப்பிற்கு ஆளாகமாட்டார்". 

(புனித சைமன் ஸ்டாக் அவர்களுக்கு புனித கன்னி மரியா வழங்கியது) 

இதுவே உத்தரியம் அணிவோருக்கு கார்மெல் அன்னை அளித்த முதலாவதும் நன்கு அறியப்பட்டதுமான வாக்குறுதிகளில் ஒன்றாகும். இறக்கும் நேரத்தில் உத்தரியத்தை அணிந்த எவரும் அன்னையின் தயவைப் பெறுவார்கள் என்று கத்தோலிக்க இறையியலாளர்கள் இந்த வாக்குறுதியை விளக்குகிறார்கள், 

இரண்டாவது வாக்குறுதி

“ஒரு கனிவான தாயாக, நான் அவர்களின் மரணத்திற்குப் பிறகு சனிக்கிழமையன்று உத்தரிக்கும் நிலைக்கு இறங்குவேன், அங்கிருந்து அவர்களை விடுவிப்பேன், புனித மலைக்கு, நிலைவாழ்வின் மகிழ்ச்சியான விண்ணகத்திற்கு கொண்டு வருவேன்."

(திருத்தந்தை 22 ஆம் ஜான் அவர்களுக்கு புனித கன்னி மரியா வழங்கியது) 

இந்த வாக்குறுதியே சனிக்கிழமை சிறப்புரிமை என்று அழைக்கப்படுகிறது.

Monday, 18 November 2024

கல்லறைப் பாடம் - 18

 கல்லறைப் பாடம் - 18


புனித ஜெம்மா கல்கானியும் உத்தரிக்கும் நிலையிலிருந்த ஓர் அருள்சகோதரியின் ஆன்மாவும்


இத்தாலியின் கார்னெட்டோவில் உள்ள ஓர் அருள்சகோதரிகளின் துறவு மடத்தில், கடவுளுக்கு மிகவும் பிரியமான ஓர் அருள்சகோதரி மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு செபங்கள் தேவை எனவும் புனித ஜெம்மா தமது செப வல்லமையால் அறிய வந்தார்.

பிறகு புனித ஜெம்மா அந்த மரணப் படுக்கையில் இருந்த அருள்சகோதரியின் பாவங்களை மன்னிக்குமாறு இயேசுவிடம் மன்றாடத் தொடங்கினார். இதனால் அந்த அருள்சகோதரி இறந்தவுடன் விண்ணகத்தில் நுழையலாம் என புனித ஜெம்மா நம்பினார். 

சில மாதங்களில், அந்தச் சகோதரி இறந்து போனார் என்று புனித ஜெம்மா தன் துறவு மடத்தில் இருந்தவர்களிடம் சொல்லியதோடு, இறந்தவருக்காக செபிக்க வேண்டும் என்பதற்காக, அச்சகோதரியின் பெயரைக் குழந்தை இயேசுவின் மரியா தெரசா என்று சொன்னார். இறந்த அந்த அருள்சகோதரியின் ஆன்மா உத்தரிக்கும் நிலையில் துன்புற்றுக்கொண்டிருந்ததை காட்சியில் கண்ணுற்ற புனித ஜெம்மா, அந்த அருள்சகோதரியின் ஆன்மாவுக்காக மிகுந்த செபங்களையும் ஒறுத்தல்களையும் மேற்கொண்டார். 

இந்தச் சூழலில் புனித ஜெம்மா தனது நாள்குறிப்பில் பின்வருமாறு எழுதுகிறார்:

“அன்று மணி 9:30 ஆயிற்று. நான் படித்துக் கொண்டிருந்தேன்; திடீரென்று என் இடது தோளில் யாரோ கை வைத்தது போல் இருந்தது. நான் பயந்து நடுங்கி, திரும்பினேன்;. அங்கு வெள்ளை உடை அணிந்திருந்த ஒருவரைப் பார்த்தேன். அவருடைய முகத் தோற்றத்திலிருந்து நான் பயப்பட ஒன்றுமில்லை என்று எனக்கு நம்பிக்கை பிறந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, “ஜெம்மா, என்னைத் தெரியுமா?" என்று அவர் என்னைக் கேட்டார். நானோ “தெரியாது” என உண்மையை உரைத்தேன்.

அதற்கு அவர் “நான்தான் அருள்சகோதரி குழந்தை இயேசுவின் மரியா தெரசா. நீங்கள் என்னிடம் காட்டிய மிகுந்த அக்கறைக்கு மிக்க நன்றி. ஏனென்றால் விரைவில் நான் விண்ணக மகிழ்ச்சியை அடைய இருக்கிறேன்”. 

இவை அனைத்தும் நான் விழிப்புடனும் முழு சுய உணர்வுடனும் இருந்தபோது நடந்தது. பின்னர் அச்சகோதரி மேலும் இவ்வாறு சொன்னார்: “இன்னும் எங்கள் செபம் தேவை. ஏனென்றால் எனக்கு இன்னும் சில நாள்கள் உத்தரிக்கும் நிலையில் துன்பம் உள்ளது." 

அதிலிருந்து அவர் விரைவில் விண்ணகத்தை அடைய வேண்டும் என்று, நான் அவருடைய ஆன்மாவுக்காக என் செபங்களை இரட்டிப்பாக்கினேன். 

பதினாறு நாள்களுக்குப் பின்பு, அச்சகோதரியின் ஆன்மா உத்தரிக்கும் நிலையிலிருந்து விடுதலை பெற்று, விண்ணகத்தை அடைந்தது. 


Sunday, 17 November 2024

கல்லறைப் பாடம் - 17

கல்லறைப் பாடம் - 17

போலந்து இளவரசர்




சில அரசியல் காரணங்களுக்காக, தனது சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு போலந்து இளவரசர் பிரான்சில் ஓர் அழகான கோட்டையையும் சொத்துக்களையும் வாங்கி அங்கு வசித்து வந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது குழந்தைப் பருவத்தில் பெற்ற கிறிஸ்தவ நம்பிக்கையை இழந்துவிட்டார். மேலும் அவர் கடவுளுக்கும் மறுமை வாழ்க்கையின் இருத்தலுக்கும் எதிராக ஒரு புத்தகத்தை எழுதுவதில் ஈடுபட்டிருந்தார்.

ஒரு நாள் மாலையில் அவர் தனது தோட்டத்தில் உலா வந்து கொண்டிருந்தபோது, ஓர் ஏழைப் பெண் கதறி அழுவதைக் கண்டார். அவளின் வருத்தத்திற்குக் காரணம் என்ன என்று அவர் அவளிடம் விசாரித்தார்.

“ஓ! இளவரசே, நான் இரண்டு நாள்களுக்கு முன்பு இறந்த, உங்கள் முன்னாள் பணியாளரான ஜோன் மரியின் மனைவி. அவர் எனக்கு ஒரு நல்ல கணவராகவும், உங்களுக்கு நல்ல ஊழியராகவும் இருந்தார். அவருக்கு நோய் நீண்ட காலமாக இருந்தது. அதனால் எங்களுடைய சேமிப்பை எல்லாம் மருத்துவர்களுக்காகச் செலவழித்தேன். இப்போது அவருடைய ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒரு திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்குக்கூட என்னிடம் எதுவும் இல்லை" என்று அவள் பதிலளித்தாள்,

அவளது துயரத்தைக் கண்ட இளவரசர், சில அன்பான ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார். மேலும் இறப்புக்குப் பிறகான வாழ்க்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அவளது கணவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்குச் சில பொற்காசுகளைக் கொடுத்தார்.

சிறிது காலத்திற்குப் பின்பு, ஒரு நாள் மாலை வேளையில், இளவரசர் தனது படிக்கும் அறையில், தீவிரமாக வாசிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாசலில் கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டது. மேலே நிமிர்ந்து பார்க்காமலே அந்த பார்வையாளரை உள்ளே வரும்படி இளவரசர் அழைத்தார். கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. ஒரு நபர் உள்ளே நுழைந்து இளவரசரின் புத்தக மேசைக்கு அருகே வந்தார். இளவரசர் நிமிர்ந்து பார்த்தபோது, மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். ஏனென்றால் அங்கே நின்றது இறந்துபோன அவருடைய பணியாளர் ஜோன் மரி.

ஓர் இனிமையான புன்னகையுடன் ஜோன் மரி இளவரசரைப் பார்த்து,  “இளவரசே, என் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்க,  நீங்கள் என் மனைவிக்கு உதவியதற்காக நன்றி சொல்ல வந்தேன். என் மீட்புக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நன்றி. நான் இப்போது விண்ணகம் போகிறேன். அதற்கு முன்பு, உங்களுக்கு நன்றி தெரிவித்துவர, கடவுள் என்னை அனுமதித்தார்.” என்று கூறினார்.

பின்னர் மேலும் அவர் இவ்வாறு கூறினார்:  “இளவரசே, கடவுள், இறப்புக்குப் பின் வாழ்வு, விண்ணகம், நரகம் நிச்சயம் உண்டு”. இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவர் மறைந்தார்.

உடனே, இளவரசர் முழங்காலிட்டு, நம்பிக்கை அறிக்கையை செபித்தார்.


Saturday, 16 November 2024

கல்லறைப் பாடம் - 16

 கல்லறைப் பாடம் - 16



பரவச நிலையில் உத்தரிக்கும் ஆன்மாக்களின் காட்சி

புனித நிக்கோலஸ் கோராபியூ என்னும் இடத்தில் தம்முடைய துறவற குழுமத்தைத் தொடங்கிய சில நாள்களுக்குப் பிறகு இந்நிகழ்வு நடைபெற்றது. ஒருநாள் திருப்பலிக்குப் பின்பு அனைவரும் உணவருந்தச் சென்றனர். அவ்வேளையில் பலரின் முன்பாக நிக்கோலஸ் பரவச நிலைக்குச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் பரவச நிலையிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

அப்போது அவர் தம்முடைய துறவற சபையினரைப் பார்த்து பின்வருமாறு கூறினார்: “ சகோதரர்களே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், அவர்களுக்காக செபியுங்கள். ஏனென்றால் அங்கு அவர்கள் தாங்க முடியாத துன்பங்களை அனுபவிக்கிறார்கள்."

அந்த நிகழ்வுப் பிறகு, அவர் வெளியே வராமல், தனது அறையிலேயே பல நாள்கள் தங்கியிருந்தார். உத்தரிக்கும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காக கடுமையான இறைவேண்டலிலும், நோன்பிலும் ஈடுபட்டார்.


Friday, 15 November 2024

கல்லறைப் பாடம் - 15

கல்லறைப் பாடம் - 15



இறந்த இராணுவ வீரர்களது ஆன்மாக்களின் காட்சி

1675 ஆம் ஆண்டு துருக்கிக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்றது. அச்சமயம் புனித நிக்கோலஸ் உக்ரைன் இராணுவத்தில் ஆன்மிக அருள்பணியாளராக பணியாற்றினார். ஒருமுறை போரில் இறந்த இராணுவ வீரர்களின் ஆன்மாக்களது காட்சியை இவர் பெற்றார். அக்காட்சியில், உத்தரிக்கும் நிலையில் இருந்த அந்;த ஆன்மாக்கள் தங்களின் விடுதலைக்காக இவரிடம் பரிந்துரை செபங்களைக் கேட்டன. 

தன்னுடைய துறவு இல்லத்திற்குத் திரும்பியதும், இறந்தவர்களுக்காக, குறிப்பாகப் போரில் இறந்த இராணுவ வீரர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுதல் செய்யவும், மன்த்துயர் மன்றாட்டு செபிக்கவும், பிறரன்புச் செயல்களைச் செய்யவும் தனது தோழர்களை அழைத்தார்.

 

Thursday, 14 November 2024

கல்லறைப் பாடம் - 14

 கல்லறைப் பாடம் - 14

அப்பெனைன் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு

ஒரு முக்கியமான சிக்கல் குறித்து விவாதிப்பதற்காக சில அருள்பணியாளர்கள் கொண்ட குழு ஒன்று உரோமைக்கு அழைக்கப்பட்டது. அவர்களிடம் முக்கியமான ஆவணங்களும், திருத்தந்தையிடம் கொடுப்பதற்கான ஒரு பெரிய தொகையும் இருந்தன. அவர்கள் உரேமைக்குச் செல்லும் வழியில் கொடிய கொள்ளையர்கள் வசித்த அப்பெனைன் என்ற ஊரின் வழியாகவே பயணிக்க வேண்டியிருந்தது. தங்களுக்கு நம்பகமான ஓர் ஓட்டுநரைத் தேர்ந்தெடுத்து, ஒரு குதிரை வண்டியில் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

அருள்பணியாளர்கள் அனைவரும் தங்களை உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாப்பில் ஒப்படைத்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கான கட்டளை செபம் சொல்லவும் தீர்மானித்து பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் மலையின் மையப் பகுதியைக் கடக்கையில், ஓட்டுநர் அபயக்குரல் எழுப்பினார். அதே நேரத்தில் குதிரைகளை ஆவேசமாக அடித்து, வண்டியை கூடுதலான வேகத்தில் செலுத்தத் தொடங்கினார். அருள்பணியாளர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது, பாதையின் இருபுறமும் துப்பாக்கிகளுடன், அப்பெனைன் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதைக் கண்டனர். ஆனால் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட சுடப்படவில்லை. 

ஒரு மணி நேரம் மிகவும் வேகமாக வண்டியைச் செலுத்திய ஓட்டுநர், பாதுகாப்பான பகுதியை அடைந்த பின்பு வண்டியை நிறுத்தி,  அருள்பணியாளர்களைப் பார்த்து, “நாம் எப்படி தப்பித்தோம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த ஈவு இரக்கமற்ற கொள்ளையர்கள் இதுவரை யாரையும் தப்பவிட்டதே இல்லை”.

அருள்பணியாளர்கள் தாங்கள் தப்பியது முழுக்க முழுக்க உத்தரிக்கும் ஆன்மாக்களால்தான் என்று உறுதியாக நம்பினர். இது பின்னைய நாள்களில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டது. எவ்வாறெனில், உரோமையில் அவர்களது 

வேலை முடிந்ததும், அவர்களில் ஓர் அருள்பணியாளர் மட்டும் அங்கே உள்ள ஒரு சிறைச்சாலைக்கு ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, இத்தாலியின் கடுமையான அப்பெனைன் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார். நீண்ட தொடர் கொலைகளுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அந்த சிறையில் மரணதண்டனைக்காக காத்திருந்தார்.

இக்கைதியைப் பற்றி எதுவும் அறியாத அந்த அருள்பணியாளர், கைதியின் மனமாற்றத்திற்காக தினமும் அவரைச் சந்தித்து, தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். அவ்வாறு ஒரு சமயம், அவர் அப்பெனைன் கொள்ளையர்களிடமிருந்து தப்பித்த அனுபவத்தை அந்த கைதிக்கு விவரித்தார். அவர் அதைச் சொல்லி முடித்ததும், அந்த கைதி, ‘குருவே, நான் தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவன். உங்களிடம் பணம் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் உங்கள் பொருள்களைக் கொள்ளையடித்துவிட்டு, உங்களைக் கொலை செய்ய முடிவு செய்தோம். ஆனால் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி, அன்று எங்கள் அனைவரையும் துப்பாக்கிச் சூடு நடத்தவிடாமல் தடுத்தது’. 

இக்கொள்ளைக் கூட்டத் தலைவனின் வாக்குமூலம் உத்தரிக்கும் ஆன்மாக்களின் உதவியால் அன்று அந்த அருள்பணியாளர்கள் பாதுகாக்கப்பட்டனர் என்பதை மிகவே உறுதிப்படுத்தியது. அதற்கு பிறகு, அக்கொள்ளையன் மனம்மாறி, தம் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்து இறந்தான். 


Wednesday, 13 November 2024

கல்லறைப் பாடம் - 13

 கல்லறைப் பாடம் - 13


இறந்த நம்பிக்கையாளர் நினைவு நாளில் 3 திருப்பலிகள்

இறந்த நம்பிக்கையாளர் நினைவு தினத்தில், அருள்பணியாளர்கள் மூன்று திருப்பலிகளைக் கொண்டாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

வரலாற்றுச் சூழல்

1915 ஆம் ஆண்டில், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் முதல் உலகப் போரின்போது, அதிக எண்ணிக்கையிலான போர் இறப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆலயங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக, இறந்த நம்பிக்கையாளர் நினைவு தினத்தில், மூன்று திருப்பலிகளைக் கொண்டாடும் அனுமதியை அருள்பணியாளர்களுக்கு வழங்கினார். 

பின்வரும் கருத்துக்களுக்காக மூன்று திருப்பலிகள் கொண்டாடப்படுகிறது:

முதல் திருப்பலி: அன்றைய ஒரு குறிப்பிட்ட கருத்திற்காக 

இரண்டாவது திருப்பலி: இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமாக 

மூன்றாவது திருப்பலி: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக


Tuesday, 12 November 2024

கல்லறைப் பாடம் - 12

கல்லறைப் பாடம் - 12



புனித ஒடிலோ 

பிறப்பு: 962, பிரான்ஸ்

இறப்பு: சனவரி 1, 1049

புனிதர் நிலை: திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டர் 1063


1030 ஆம் ஆண்டில், குளுனி துறவற மடத்தின் தலைவர் ஒடிலோ நவம்பர் 2 ஆம் தேதியை தனது துறவற சபையில் இறந்த உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு சிறப்பு நினைவு நாளாக ஒதுக்கினார். அனைத்து புனிதர்களின் பெருவிழாவுக்கு அடுத்த நாளில், அதாவது நவம்பர் 2 ஆம் தேதி அன்று, இறந்த துறவிகளுக்காக இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். 

நாளடைவில் அவர் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து மடங்களுக்கும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2 ஆம் தேதியில் திருப்பலி, இறைவேண்டல், சுய ஒறுத்தல் செயல்கள் மற்றும் பிறரன்புச் செயல்கள் ஆகியவற்றை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக அவசியம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

இது உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு மூன்று திருப்பலிகள் நிறைவேற்றும் பழக்கமாக மிக விரைவில் வளர்ந்தது. இறுதியில் 1748 இல் உரோமைத் திரு அவையால், இந்த அனுசரிப்பு அதிகாரப்பூர்வமாக முழு மேற்கத்திய திரு அவைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பிறகு இது உலகளாவிய அனுசரிப்பாக வளர்ந்தது. 


Saturday, 11 November 2023

கல்லறைப் பாடம் - 11

 நினைவாற்றல் குறைபாட்டை நிவர்த்தி செய்த 

திருத்தந்தை 9 ஆம் பயஸ்


வணக்கத்திற்குரிய திருத்தந்தை 9 ஆம் பயஸ் பக்தியான நேர்மையான தோமாசா என்கிற அருள்பணியாளரை, ஆயராக ஒரு மறைமாவட்டத்திற்கு தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த அருள்பணியாளரோ, பெரும் பொறுப்புகளை எண்ணி அச்சமுற்றவராய் அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். ஆனால் அந்த அருள்பணியாளரின் பல நற்குணங்களை அறிந்திருந்த திருத்தந்தையோ மறுத்துவிட்டார். 

பின்பு திருத்தந்தையிடம் நேரில் பேசுவதற்கு அனுமதி பெற்றுச் சென்ற அருள்பணியாளர் தோமாசா, மீண்டும் தன் கோரிக்கையை ஏற்க வேண்டினார். ஆனால் மிகுந்த அன்போடு அவரை வரவேற்ற திருத்தந்தையோ, தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். 

இறுதியில் அருள்பணியாளர் தோமாசா திருத்தந்தையிடம் தனக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அது உயர்ந்த பொறுப்பலிருந்து பணியாற்றுவதற்கு பெரும் தடையாக இருக்கும் என்பதாலேயே தனக்கு ஆயர் பொறுப்பு வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.

அதற்கு திருத்தந்தை 9 ஆம் பயஸ் சிரித்தவாறு, “அன்பான அருள்பணியாளரே, என் தோளில் நான் ஏற்றிருக்கும் உலக திரு அவையின் பொறுப்புகளை ஒப்பிட்டால் உமது மறைமாவட்டம் மிகவும் சிறியது. அதன் பொறுப்புகளும் எளியதே. நானும் ஒரு காலத்தில் உங்களைப் போல நினைவாற்றல் குறைபாட்டால் அதிக சிரமப்பட்டேன். ஆனால் உத்தரிக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காக நான் தினமும் தீவிரமாக செபம் செய்து வந்தேன். அவர்கள் அதற்கு ஈடாக எனக்கு நல்ல நினைவாற்றலை பெற்றுத் தந்துள்ளார்கள். நீங்களும் என்னைப் போலவே செய்யுங்கள். ஒரு நாள் கண்டிப்பாக பலன் பெற்று மகிழ்வீர்கள்” என்றார். 

உத்தரிக்கும் நிலையிலுள்ள புனித ஆன்மாக்கள் நமக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் சிறந்த பரிந்துரையாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், நாம் அவர்களுக்காக செபிப்பதன் மூலம், அவர்கள் நம்முடைய தேவைகளில் நமக்காக செபிக்க முடியும். புனித ஆன்மாக்கள் ஒருபோதும் தங்களுக்காக செபிக்க முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக செய்யப்படும் அவர்களின் செபங்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. இந்த ஆன்மாக்களிடம் செபம் செய்வதன் மூலமும், அவர்களின் சில துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதன் மூலமும், நாம் கடவுளின் சிறப்பு அருளைப் பெறமுடியும். ஏனெனில் “இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.”