கல்லறைப் பாடம் - 12
புனித ஒடிலோ
பிறப்பு: 962, பிரான்ஸ்
இறப்பு: சனவரி 1, 1049
புனிதர் நிலை: திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டர் 1063
1030 ஆம் ஆண்டில், குளுனி துறவற மடத்தின் தலைவர் ஒடிலோ நவம்பர் 2 ஆம் தேதியை தனது துறவற சபையில் இறந்த உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு சிறப்பு நினைவு நாளாக ஒதுக்கினார். அனைத்து புனிதர்களின் பெருவிழாவுக்கு அடுத்த நாளில், அதாவது நவம்பர் 2 ஆம் தேதி அன்று, இறந்த துறவிகளுக்காக இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.
நாளடைவில் அவர் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து மடங்களுக்கும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2 ஆம் தேதியில் திருப்பலி, இறைவேண்டல், சுய ஒறுத்தல் செயல்கள் மற்றும் பிறரன்புச் செயல்கள் ஆகியவற்றை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக அவசியம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.
இது உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு மூன்று திருப்பலிகள் நிறைவேற்றும் பழக்கமாக மிக விரைவில் வளர்ந்தது. இறுதியில் 1748 இல் உரோமைத் திரு அவையால், இந்த அனுசரிப்பு அதிகாரப்பூர்வமாக முழு மேற்கத்திய திரு அவைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பிறகு இது உலகளாவிய அனுசரிப்பாக வளர்ந்தது.