சிலுவை அடையாளமிடுதல்
சிலுவை – கிறிஸ்துவின் அடையாளம்; கிறிஸ்தவத்தின் அடையாளம்
அடையாளம் என்பது ஒவ்வொரு சமயத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று. எல்லா சமயங்களும் தங்களை எளிதில் எடுத்தியம்பிட அடையாளங்களைப் பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் கிறிஸ்தவர்களின் புனித அடையாளமாக சிலுவை உள்ளது. ஏனெனில் அது கிறிஸ்து இயேசுவின் அடையாளம் ஆகும். நமக்காக மனிதராகப் பிறந்த இயேசு சிலுவையில் பலியானதால், சிலுவை நம்முடைய புனிதச் சின்னமாக திகழ்கிறது. சிலுவை கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மீட்பின் சின்னமாகவும், அருளின் வாய்க்காலாகவும் போற்றப்படுகிறது.
எங்கு சிலுவை இருந்தாலும் அது கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. சிலுவை அணிந்திருக்கும் மனிதர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாகவும், சிலுவை வைக்கப்பட்டுள்ள வீடுகளை கிறிஸ்தவர்களின் வீடுகள் எனவும், சிலுவை வைக்கப்பட்டுள்ள நிறுவனங்களை கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றும் நாம் புரிந்துகொள்கிறோம். (இன்று கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் சிலுவையை ‘பேஷனாக’ அணிந்துகொள்வதை பார்க்கிறோம்).
விவிலியமும் அடையாளமிடுதலும்
மனிதர்கள் தம்மீது அடையாளம் இட்டுக்கொள்வதும், இல்லங்களில் அடையாளம் இட்டுக்கொள்வதும் பழைய ஏற்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு விவிலிய மரபு ஆகும். எடுத்துக்காட்டாக:
1. நெற்றியில் அடையாளமிடுதல்
‘நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு’ (எசே 9:4).
2. வீடுகளில் அடையாளம் இடுதல்
‘ஈசோப்புக் கொத்தை எடுத்து, கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்து, கதவின் மேல் சட்டத்திலும், இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள்’ (விப 12:22).
இவ்வாறு விவிலியத்தில் அடையாளங்கள் என்பவை அருள்வாழ்வுக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பதை அறிகிறோம். இப்பின்னணியில் கிறிஸ்தவர்களாகிய நாமும் சிலுவை அடையாளத்தை நம்முடைய அருள்வாழ்வுக்கு உதவும் ஒன்றாகவே அணுகிட வேண்டும்.
சிலுவை அடையாளமிடுதல் தோன்றிய வரலாறு
கிறிஸ்தவர்கள் தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதைப்பற்றி விவிலியத்தில் நேரடியான குறிப்புகள் இல்லை. ஆனால் திருத்தூதர்கள் காலம் தொட்டே இந்த சிலுவை அடையாளம் வரைவது என்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது. புனித பேசில் என்பவர் திரு அவையின் தொடக்க காலங்களில் திருமுழுக்கு கொடுக்கப்பட்டபோது இந்த சிலுவை அடையாளம் வரைவது என்பது வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார். அதிலிருந்துதான் சிலுவை அடையாளம் வரைவது எல்லோருக்கும் பொதுவான ஓர் கிறிஸ்தவ செய்கையாக மாறியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
திரு அவையின் தந்தையர்களுள் ஒருவரான தெர்த்தூலியன் (கி.பி.
211) என்பவர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்காக வாழ்கிறார்கள் என்பதை நினைவூட்ட, கிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியிலே சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளவேண்டும் என்று போதித்தார். மேலும் நாளின் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுங்கள் என்றும் இவர் கற்பித்தார்.
சிலுவை அடையாளம் - செபம் மற்றும் அருட்கருவி
‘புனித சிலுவை அடையாளம்’ என்பதை ஒரு முக்கியமான அடிப்படை செபமாக கத்தோலிக்கத் திரு அவை வைத்திருக்கிறது. இந்த சிலுவை அடையாளம் என்கிற செபத்தை எல்லா அன்றாட மற்றம் ஆன்மீக நிகழ்வுகளுக்கு முன்னதாகவும், இறுதியிலும் நாம் பயன்படுத்துகிறோம். ‘புனித சிலுவை அடையாளம்’ என்பது மிக முக்கியமான அருட்கருவியும் ஆகும். திரு அவையால் ஏற்படுத்தப்பட்டு, அருள் வாழ்வில் நாளும் வளர நமக்கு உதவிடக் கூடியவற்றை (செயல்கள், பொருட்கள்) அருட்கருவிகள் என்கிறோம். அந்த அருட்கருவிகளில் முதன்மையான இடத்தை சிலுவை அடையாளம் பெறுகிறது.
சிலுவை அடையாளம் வரைவது ஏன்?
அர்ப்பணமும் புனிதப்படுத்துதலும்: சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நாம் நம்மை மூவொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம். மூவொரு கடவுளின் பெயரால் நம்மையே நாம் புனிதப்படுத்திக்கொள்கிறோம். இச்செயல் அருள்வாழ்வில் வளர நமக்கு உதவுகிறது.
மூவொரு கடவுள் மீதான நம்பிக்கை: சிலுவை அடையாளம் வரைகிற போது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் நற்செய்தியில் நாம் வாசிக்கிறபடி ‘தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால்’ (காண்: மத் 28:19) என்கிற திருமுழுக்கின் வாய்பாடு ஆகும். இவ்வாறு சொல்வதன் வழியாக, நாம் நம்முடைய கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மையாகிய மூவொரு கடவுள் மீதான நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம்.
சிலுவையின் வழியில் மீட்பு: புனித பவுல் சொல்வதைப் போல கிறிஸ்தவர்களாகிய நமக்கு சிலுவையைப் பற்றிய வெட்கம் ஏதும் இல்லை. (காண்: 1 கொரி 1:18,23). எனவே சிலுவை அடையாளத்தை நம் மீது வரைகின்றபோது வெளிப்படையாக நாம் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்துகின்றோம். சிலுவையின் வழியாகவே இயேசு நமக்கு மீட்பு கொடுத்தார் என்பதையும் இதன் வழியாக நாம் அறிக்கையிடுகின்றோம்.
சிலுவை அடையாளம் வரைவதன் இறையியல்
சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதில் ஏராளமான கருத்துகளும் சிந்தனைகளும் இறையியல் அடிப்படையில் நிறுவப்படுகின்றன. இருப்பினும் நம்முடைய கற்றறிதலுக்காக ஆறு காரியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
- நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம்
- திருமுழுக்கின் நினைவூட்டல்
- சீடத்துவத்தின் அடையாளம்
- துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் உறுதிப்பாடு
- அலகைக்கு எதிரான ஆயுதம்
- தன்னலத்தின் மீதான வெற்றி
1. நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம்
நாம் சிலுவை அடையாளம் வருகிறபோது தந்தை கடவுள் இயேசு மற்றும் தூய ஆவியார் மீதான நம்முடைய நம்பிக்கையை அறிக்கை செய்கிறோம். நம் கடவுள் ஒரே கடவுள் என்றும் அவர் மூன்று ஆட்களாக இருக்கின்றார் என்றும் நம்முடைய நம்பிக்கை அறிக்கையின் சுருக்கத்தை இதன் வழியாக எளிய முறையில் பறைசாற்றுகிறோம்.
2. திருமுழுக்கின் நினைவூட்டல்
சிலுவை அடையாளம் வரைந்துகொள்வது நம்முடைய திருமுழுக்கை நமக்கு நினைவூட்டக்கூடியதாக இருக்கிறது. கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் விதமாகவே, திருமுழுக்கின் போது நம்மீது சிலுவை அடையாளம் வரையப்பட்டது. அதனால் நாம் ஒவ்வொரு முறையும் நம்மீது சிலுவை அடையாளம் வரையும் போது நம்முடைய திருமுழுக்கை நாம் மீண்டுமாக நினைவுபடுத்திக் கொள்கிறோம். நாம் இயேசுவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம் என்கிற நம்பிக்கையையும் பெறுகிறோம்.
3. சீடத்துவத்தின் அடையாளம்
கிரேக்க கலாச்சாரத்தின்படி அடிமைகளின் உரிமையாளர்கள் தங்கள் அடிமைகளின் நெற்றியின் மீது ஏதேனும் அடையாளத்தையோ அல்லது முத்திரையையோ பதிப்பது வழக்கம். இது அந்த அடிமை அவருடைய உரிமையாளருக்குச் சொந்தம் என்பதை வெளிக்காட்டுகிறது. அதேபோல கிறிஸ்துவின் சிலுவை அடையாளத்தை தம்மீது வரைந்துகொள்கிற கிறிஸ்தவர்கள் கிறிஸ்து இயேசுவுக்கு சொந்தமானவர்கள் என்பதையும் இது நமக்கு வெளிப்படுத்துகிறது. அடிமை அவருடைய உரிமையாளர் சொல்வதற்குக் கட்டுப்பட்டும் கீழ்படிந்தும் வாழ்வதைப் போல நாமும் கிறிஸ்துவுக்கு கட்டுப்பட்டும் கீழ்ப்படிந்தும் வாழ வேண்டும் என்பதையும் நமக்கு இது தெரிவிக்கிறது. கிறிஸ்துவின் சீடர்கள் என்பவர்கள் அவருடைய கட்டளைகளை கடைபிடித்து அவரைப்போல வாழ முயல வேண்டும். எனவே சிலுவை அடையாளம் வரைவதன் மூலம் நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைபிடித்து, இயேசுவைப் போன்று வாழத் தயார் என்று தீர்மானித்துவிட்ட சீடத்துவத்தின் அடையாளமாகும்.
4. துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் உறுதிப்பாடு
சிலுவை என்பது துன்பத்தின் குறியீடு. துன்பமாகிய சிலுவையின் வழியாகவே கிறிஸ்து மனிதருக்கு மீட்பை பெற்றுக் கொடுத்தார். எனவே கிறிஸ்து இயேசுவைப் போல நாமும் துன்பத்தை துணிவுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்கிற மனநிலையையும், உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகிறது.
5. அலகைக்கு எதிரான ஆயுதம்
சிலுவை என்பது கிறிஸ்துவின் வெற்றியின் சின்னமாகவும் இருக்கிறது. நம்மீது சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் எனத் தெரிவிக்கிறோம். அதனால் இது அலகையை மிகவே அச்சுறுத்துகின்றது. கிறிஸ்துவுக்கு சொந்தமானதை அலகையால் தீண்ட முடியாது. எனவே சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நம்மை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்கி, நம்மையே நாம் அலகையிடமிருந்து பாதுகாத்துக்கொள்கிறோம்.
6. தன்னலத்தின் மீதான வெற்றி
இறையன்போடும், பிறர் அன்போடும் வாழ்வதே சிலுவை வழி வாழ்வதாகும். இதற்கு தன்னலம் தடையாக இருக்கிறது. தன்னலத்தை தகர்த்து அன்பு வாழ்வு வாழ, இயேசுவின் சிலுவை நமக்கு உதவுகிறது. இவ்வாறு சிலுவை அடையாளமிடுவது, நம்மையும் இயேசுவைப் போல தன்னலம் இல்லாதவர்களாக வாழ அழைக்கிறது. சிலுவை இயேசு நம்மீது கொண்டிருந்த தன்னலமற்ற அன்பை நமக்கு உணர்த்துகிறது. நம்மையும் சுய விருப்பு வெறுப்புகளை அகற்றி, அன்புடன் பிறர் மைய வாழ்வு வாழ அழைப்பு தருகிறது. சிலுவை அடையாளம் வரைவது நம்முடைய தன்னலத்தின் மீது வெற்றிகொள்ளவும் நமக்கு உதவுகிறது.
சிலுவை அடையாளம் வரையும் முறை – சுருக்கமானது
இடது கையை மார்பின் மீது வைத்தவாறு, திறந்த வலது கையினுடைய ஐந்து விரல்களையும் சேர்த்த வண்ணம் முதலில் ‘தந்தை’ என்று சொல்லியவாறு நெற்றியைத் தொட வேண்டும். பின்பு ‘மகன்’ என்று சொல்லியவாறு மார்பைத் தொட வேண்டும். பின்பு ‘தூய’ என்று சொல்லியவாறு இடது பக்க தோள்பட்டையையும், ‘ஆவியாரின்’ என்று சொல்லியவாறு வலது பக்க தோள்பட்டையையும் தொட வேண்டும். இறுதியில் இரு கைகளையும் குவித்தவாறு ‘பெயராலே, ஆமென்’ என்று சொல்லி முடிக்க வேண்டும்.
சிலுவை அடையாளம் வரையும் முறை – விரிவானது
இடது கையை மார்பில் வைத்துக்கொண்டு, வலது கையின் பெரு விரலால் கீழ்கண்டவாறு நெற்றியிலும், வாயிலும் மற்றும் மார்பிலும் சிலுவை அடையாளம் வரைய வேண்டும்.
‘புனித சிலுவை’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘அடையாளத்தினாலே’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடு) என்று சொல்லியவாறு நெற்றியில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.
‘எங்கள் எதிரிகளிடமிருந்து’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘எங்களை விடுவித்தருளும்’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடு) என்று சொல்லியவாறு வாயில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.
‘எங்கள்’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘இறைவா’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடு) என்று சொல்லியவாறு மார்பினில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.
குறியீடுகளின் அர்த்தமும் ஆழமும்
- திறந்த வலது கை - நம்மை ஆசீர்வதிப்பதன் அடையாளம்
- ஐந்து விரல்கள் - இயேசுவின் ஐந்து காயங்களைக் குறிக்கின்றன.
- நெற்றியில் வரையப்படும் சிலுவை – இறைவார்த்தையை திறந்த மனதுடன் கேட்க
- உதட்டில் வரையப்படும் சிலுவை – இறைவார்த்தையை அறிவிக்க
- மார்பில் வரையப்படும் சிலுவை - இறைவார்த்தையை தியானித்து வாழ்வாக்க
- நெற்றியைத் தொடுதல் - அறிவின் குறியீடு (கடவுளை அறிய)
- மார்பினைத் தொடுதல் - அன்பின் குறியீடு (கடவுளை அன்பு செய்ய)
- தோள்பட்டை – ஆற்றலின் (சக்தியின்) குறியீடு (கடவுளுக்கு பணி செய்ய)