Wednesday, 1 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 1

 ஈசாய் 



எசாயா 11:1

இன்றைய நாளின் சிந்தனை : ஈசாய்

இன்றைய நாளின் அடையாளம் : மரம் 


யார் இந்த ஈசாய்? தன்னிகரற்ற தனிப்பெரும் அரசராக ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாட்டை உருவாக்கிய மற்றும் ஆட்சி செய்த பெருமை தாவீது அரசரைச் சேரும். அந்த தாவீது அரசருடைய தந்தையின் பெயர்தான் ஈசாய். இவரது வழி மரபில் தான் இறைமகன் இயேசு பிறப்பார் என்று இறைவாக்கினர் எசாயா முன்னிறிவித்தார். 

எதற்கு இந்த ஈசாய் மரம்? கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாட பல வகையான தயாரிப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் ஈசாய் மரம் பக்தி முயற்சி. இதன் வழியாக நாம், படைப்பின் தொடக்கத்திலிருந்து இவ்வுலகம் இறைமகன் இயேசுவின் வருகைக்காக எவ்வாறெல்லாம் காத்திருந்தது என்றும், எப்படியெல்லாம் தயாரித்தது என்றும் அறிய முடிகிறது. திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறியீடானது இந்த ஈசாய் மரத்திலே தொங்கவிடப்படும். இப்படி மெசியாவின் வருகைக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்களினம் எதிர்பார்த்திருந்தது என்பதை எண்பிக்க, இயேசுவின் முன்னோர்களை இந்த ஈசாய் மரத்தில் பதித்து தினமும் தியானிப்பது வழக்கம்.

இஸ்ரயேல் மக்கள், யாவே இறைவன் நட்டு வளர்த்த தோட்டம். அவ்வப்போது ஏற்பட்ட பகைவர்களின் படையெடுப்பால் ஆபத்தையும், அழிவையும் இஸ்ரயேல் இனம் சந்திக்க நேரிட்டது. தங்களைக் காப்பாற்ற கடவுள் வருவார், மீட்பதற்கு மெசியா பிறப்பார் என்ற நம்பிக்கையை மட்டும் இறுதி வரை அவர்கள் இழக்கவில்லை. இதைத்தான் இறைவாக்கினர் எசாயா ‘ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்’ என்று சொன்னார்.

எல்லாம் முடிந்தது என்று நாம் நினைத்தாலும், முடிவையும் தொடக்கமாக மாற்றக் கூடியவர் நம் கடவுள். கருகினாலும் கடவுளின் கருணையால் மீண்டும் உருவாவோம் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. நம் அழிவுகளுக்கு மத்தியிலும் நமக்கு ஆரம்பம் பிறக்கும் என்ற இறை நம்பிக்கைத் தளிரை நம் மனங்களிலும் துளிர்விடச் செய்யும் நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! எம் மீட்பராம் இயேசுவின் வருகைக்காக நாங்கள் எங்களைத் தகுதியாகத் தயாரிக்கவும், பொறுமையோடு காத்திருக்கவும், நம்பிக்கையோடு எதிர்நோக்கவும் அருள் தாரும். ஆமென்.


Tuesday, 30 November 2021

ஈசாய் மரம் - திருவருகைக்காலம்

 ஈசாய் மரம்   

திருவருகைக் கால தயாரிப்பு பக்தி முயற்சி



ஈசாய் மரம் - ஏன்?

இது திருவருகைக் கால தயாரிப்பு பக்தி முயற்சி.

காலத்தால் மிகப் பழமையான ஒரு மரபும்  சடங்கும் ஆகும்.

ஆதாம் முதல் இயேசு வரை வாழ்ந்த பழைய ஏற்பாட்டின் மிகமுக்கியமான இயேசுவின் முன்னோர்களை நினைவு கூரும் வழிமுறை.

இயேசுவின் வருகைக்காக காத்திருந்த பழைய ஏற்பாட்டு மனிதர்களை, அன்றாடம் அடையாள வடிவில் ஒரு மரத்தில் தொங்கவிடச் செய்வதன் வழியாக, மெசியாவின் வருகைக்காக பழைய ஏற்பாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்ததை நாமும் தியானிக்க முடிகிறது. 

இம்மரத்தில் தொங்கவிடப்படும் விவிலிய மாந்தர்கள் மூலமாக, இயேசுவின் பிறப்புக்கு முந்தைய பழைய ஏற்பாட்டின் மீட்பின் வரலாற்றினை இப்பக்தி முயற்சி திரும்பிப் பார்க்க வைக்கிறது. 

கிறிஸ்துமஸ் மரத்தினை விவிலிய ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அடையாளப்படுத்தும் அர்த்தமுள்ள பக்தி முயற்சி.


வரலாறு



மத்தியக் காலங்களில் திரு அவையில் காணப்பட்ட மரபு இது.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில பேராலயங்களில் காணப்படும் ஓவியங்களில் இது பற்றி பார்க்க முடியும். 

குறிப்பாக கி.பி. 1260 இல் அர்ப்பணிக்கப்பட்ட சார்ட்ரஸ் பேராலயத்தின் சன்னல் கண்ணாடியில் ஈசாய் மரத்தின் மரபைச் சுட்டிக்காட்டும் ஓவியத்தைக் காணமுடியும்.

இவ்வகையான ஓவியங்களில் காணப்படும் மரத்தின் கிளைகளில் பழைய ஏற்பாட்டு மனிதர்களின் படங்களும், மரத்தின் உச்சியில் இயேசுவின் தாய் மரியா மற்றும் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பின் படங்களும், அதற்கு மேலாக இயேசுவின் படமும் வரையப்பட்டிருக்கும். 

பயன்பாடு


குடும்பங்களில் அனைவரும் இணைந்து செபிக்கவும், தியானிக்கவும் இது உதவுகிறது.

குழந்தைகளுக்கு பழைய ஏற்பாட்டின் முக்கியமான மனிதர்களைப் பற்றிக் கற்றுத்தர இது பயன்படுகிறது. 

குடும்பங்கள், குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் பங்குகள் ஆகியவற்றில் கிறிஸ்து பிறப்பை தகுந்த விதத்தில் கொண்டாடுவதற்கான நல்ல தயாரிப்பாக இது அமைகிறது.

மீட்பின் வரலாற்றை மீண்டுமாக மீள்பார்வை செய்வதற்கான நல்ல வாய்ப்பாக இது இருக்கிறது.

கதையாடல்கள் வடிவிலும், அடையாளங்கள் வடிவிலும், குறியீடுகள் வடிவிலும் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதத்தில் பழைய ஏற்பாட்டு மாந்தர்களை நமக்கு இது அறிமுகப்படுத்துகிறது.

விவிலியத்தை மையப்படுத்தியதாகவும், இறைவார்த்தையின் ஒளியில் அமைக்கப்பட்டதாகவும் இம்மரபு அமைந்துள்ளது.

குறிப்பு: டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை கிறிஸ்து பிறப்புக்கு தகுந்த விதத்தில் நம்மைத் தயாரிப்பு செய்வதற்காக 24 அடையாளங்களும், அவற்றிற்கான தியானச் சிந்தனைகளும்  தொடர்ந்து கொடுக்கப்படும். 

Friday, 25 June 2021

இயேசுவின் தூய்மைமிகு இதயம்

திருஇதய ஆண்டவர் புனித மார்கரெட் மரியாவின் வழியாக அளித்த 12 வாக்குறுதிகள்




1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.

2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.

3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம்.

4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.

5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.

6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும்.

7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.

8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.

9. எந்த வீட்டில் நம் திருஇதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.

10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.

11. திருஇதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும்.

12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம் பகைவராகவோ, அருளடையாளங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.