முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்
தொடக்கநூல் 1: 27
இன்றைய நாளின் குறியீடு : பாம்பும் கனியும்
படைப்புகள் அனைத்தின் சிகரமாக கடவுள் மனிதரைப் படைத்தார். யாவற்றையும் தன் வாய்ச் சொல்லால் உண்டாக்கிய கடவுள், தன்னுடைய கைகளால் மண்ணைப் பிசைந்து மனிதனை உண்டாக்கினார். இறைவனின் உருவிலும், சாயலிலும் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். இறைவனது உயிர் மூச்சு, மனிதருக்குள் இருக்கிறது. இவ்வாறு மிகச் சிறப்புக்குரிய விதத்தில் முதல் பெற்றோரான ஆதாமையும், ஏவாளையும் இறைவன் படைத்தார். அவர்களைத் தன்னுடைய ஏதேன் தோட்டத்தில், தன்னோடு வைத்திருந்து, தன்னுடைய பேரின்பத்தில் பங்களித்திருந்தார். ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருக்கும் மரத்தின் கனியை மட்டும் முதல் பெற்றோர் உண்ணக்கூடாது என்பதை கடவுள் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தார்.
ஆனால் ‘கடவுளைப் போல் ஆவீர்கள்’ என்ற பாம்பின் பொய்யுரையைக் கேட்டு விலக்கப்பட்ட மரத்தின் கனியை அவர்கள் விரும்பிப் பறித்து உண்டார்கள். அலகையின் ஆசை வார்த்தைகளை நம்பி பாவப் படுகுழியில் விழுந்தனர். கடவுளால் முதல் பெற்றோர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனித இனம் தவறிழைத்தாலும், அவர்கள் மீது ஆண்டவருக்கு இன்னும் அக்கறை இருக்கத்தான் செய்தது. ‘உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்’ (தொநூ 3:15) என்று பாம்பிடம் கடவுள் கூறிய வார்த்தைகளில் மனித இனத்தின் மீட்புத் திட்டம் முதன் முதலாக அப்போதே முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பது நமக்குப் புலப்படுகிறது.
கீழ்ப்படியாமையால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவோம் என உணருவோம். இனி பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளைவிட்டு விலகி நிற்போம் என்றும் உளப்பூர்வமாகத் தீர்மானிப்போம். கடவுளின் கட்டளைகளைக் கருத்தாய்க் கடைபிடித்து கடவுளின் அன்புப் பிள்ளைகளாய் வாழ முயல வேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பான இறைவா! உம்முடைய உருவிலும், சாயலிலும் எங்களைப் படைத்ததற்காக நன்றி. நீதியின்படி நீர் எங்கள் குற்றங்களைத் தண்டித்தாலும், உம்முடைய இரக்கத்தை எங்களுக்குக்காட்ட நீர் ஒருபோதும் தவறியதில்லை. உம் கட்டளைகளின்படி நாங்கள் தொடர்ந்து வாழவும், எங்கள் பலவீன நேரங்களில், உம் இரக்கத்தால் நீர் எங்களைத் தாங்கிடவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.