Saturday, 18 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 18

மரியா



லூக்கா 1:35

இன்றைய நாளின் சிந்தனை :     மரியா

இன்றைய நாளின் குறியீடு :     லீலி மலர்


மனித குலத்தின் மீட்புக்கான காலம் கனிந்து வந்தபோது கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்ப விரும்பினார். அதற்காக கடவுள், மரியாவை தேர்ந்தெடுத்தார். பிறப்புநிலைப் பாவம் தீண்டாமல் மரியாவை சுவக்கீன் மற்றும் அன்னாவுக்கு முதிர்ந்த வயதில் மகளாகப் பிறக்கச் செய்தார். வெண்ணிற லீலிமலர் போல பாவமாசு ஏதும் அணுகாத கன்னிமரியா தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். கடவுள் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொல்ல தம்முடைய தூதர் கபிரியேலை அனுப்பினார். 

தூய ஆவியால் நிரப்பப்பட்டு மரியா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் என்றும், அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார் என்றும் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவிடம் சொன்னார். ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று கூறி கடவுளின் மகனைக் கருச்சுமக்க கன்னி மரியா இசைவு தெரிவித்தார். பழைய ஏற்பாட்டு ஏவாள் பாம்பை நம்பி பாவத்தை சுமந்தபோது, புதிய ஏற்பாட்டில் வரும் மரியா என்கிற புதிய ஏவாள் வானதூதரை நம்பி புனிதத்தை சுமந்தாள். 

பிறகு மரியா யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று, முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கும் தன்னுடைய உறவினராகிய எலிசபெத்தோடு ஏறக்குறைய மூன்று மாதமளவு தங்கியிருந்து பணிவிடை செய்தார். சொந்த ஊரான பெத்லகேமுக்கு தங்கள் பெயரைப் பதிவுசெய்ய யோசேப்பும், மரியாவும் சென்றிருந்தபோது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. விடுதியில் இடம் கிடைக்காமல் மரியா மாட்டுக் கொட்டகையில் தன்னுடைய தலைமகனைப் பெற்றெடுத்தார். மரியா தனது வாழ்வு முழுவதும், தனக்கு நடப்பதை எல்லாம் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். 

மண்ணில் மனிதராகப் பிறந்த இறைமகன் இயேசுவின் தாயாகிற பாக்கியத்தை, தன்னுடைய கீழ்ப்படிதலால் பெற்றவர் மரியா. உதிரத்தில் இயேசுவைச் சுமக்கும் முன், தன் உள்ளத்தில் இயேசுவைச் சுமந்தார் மரியா என்பதற்கு ஏற்ப, நாமும் இயேசுவை நம்முடைய உள்ளத்தில் சுமக்க முடிவெடுத்தவர்களாக, மரியின் வழியில் மனித மீட்புக்காக உழைக்கத் தொடங்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! மரியாவைப் போன்று நாங்களும் கடவுளுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவும், இயேசுவை எங்கள் உள்ளத்தில் என்றும் சுமப்பவர்களாகவும் வாழ உதவிடுவீராக. மரியாவின் வழிகாட்டலில் நாங்களும் மாசில்லாத புனிதமான வாழ்வு வாழ எங்களுக்கும் உமது அருளைப் பொழிந்தருளும். ஆமென்.



Friday, 17 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 17

திருமுழுக்கு யோவான்




மத்தேயு 3:2

இன்றைய நாளின் சிந்தனை: திருமுழுக்கு யோவான்

இன்றைய நாளின் குறியீடு: கிளிஞ்சல் (சிப்பி)

 

பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்குமான இணைப்புப் பாலம் புனித திருமுழுக்கு யோவான். இயேசுவின் முன்னோடியாக தன்னுடைய பணி வாழ்வைச் செய்தவர். இவருடைய வாழ்க்கைமுறை மிகுந்த கடினமானதொரு துறவு வாழ்வின் அடையாளமாக இருந்தது. சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாலைநிலத்தில் வாழ்ந்த இவருடைய உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் ஆகும். இவர் ஒட்டகமுடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார். 

மனமாற்றத்தை வலியுறுத்திய இவருடைய போதனைகளும் வாழ்க்கை முறையும் மக்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பையும், இறைவாக்கினருக்குரிய அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது. இவர் யோர்தான் ஆற்றில், மக்களுக்கு பாவமன்னிப்பின் அடையாளமாகத் திருமுழுக்கு கொடுத்து வந்தார். இயேசுவும்கூட தன்னுடைய 30 ஆம் வயதில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்றார். இவர் தன்னை மெசியா இல்லை என்றும் மெசியாவின் வருகைக்காக தயாரிக்கின்றவர் என்றும் தெளிவாக மக்களுக்கு புரியவைத்தார். இயேசுவின் மிதியடிகளை அவிழ்க்கக் கூட தான் தகுதியற்றவன் என்று சொல்லித் தன்னுடைய தாழ்ச்சியை எடுத்துக்காட்டினார். 

திருமுழுக்கு யோவானுடைய குரல், எப்போதும் நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது. ஏரோது அரசன் அவனுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாவை சட்டத்திற்குப் புறம்பே சேர்த்துக்கொண்டதை மிகவும் கோபத்தோடு திருமுழுக்கு யோவான் கண்டித்தார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு தலைவெட்டிக் கொல்லப்பட்டார். வரவிருக்கின்ற மெசியாவின் வருகைக்குத் தயாரிக்க எலியா மீண்டும் வருவார் என்ற யூதர்களின் நம்பிக்கையானது, திருமுழுக்கு யோவானிடம் நிறைவேறியது என்று இயேசுவே குறிப்பிடுவதைப் பார்க்கமுடியும்.

ஆண்டவருக்கான பாதையை ஆயத்தம் செய்யும் பணியை ஆர்வத்தோடு செய்த திருமுழுக்கு யோவானை இயேசு ‘மனிதராய்ப் பிறந்தவருள் பேறுபெற்றவர்’ என்று பாராட்டுகின்றார். அத்தோடு விண்ணரசில் மிகச் சிறியவரும், திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் என்று இயேசு நமக்கும் பேறுபெறும் பாக்கியத்தை வழங்குகிறார். நாமும் திழுமுழுக்கு யோவானைப்போல தாழ்ச்சியுடனும், நீதியுடனும் வாழ்ந்து, ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்திட உறுதி எடுத்து உழைக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நீதியின் குரலாய் எங்கள் குரல் சமுதாயத்தில் ஓங்கி ஒலிக்கவும், தாழ்ச்சியும், கீழ்ப்படிதலும் எங்கள் வாழ்வில் என்றும் வெளிப்படவும் நீரே துணை செய்வீராக. திருமுழுக்கு யோவானைப்போல நாங்களும் உம்முடைய பாராட்டுக்குரிய வாழ்க்கை வாழ எங்களுக்கும் உமது அருள் உதவியைப் பொழிவீராக. ஆமென்.



Thursday, 16 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 16

செக்கரியாவும், எலிசபெத்தும்



லூக்கா 1:13

இன்றைய நாளின் சிந்தனை : செக்கரியாவும், எலிசபெத்தும்

இன்றைய நாளின் குறியீடு: செபிக்கும் கைகள்


யூதேய நாட்டில் ஏரோது அரசனாக, இருந்த காலத்தில் அபியா வகுப்பைச் சேர்ந்தவர் செக்கரியா என்ற குரு. இவருடைய மனைவியின் பெயர் எலிசபெத்து. இவர் ஆரோன் வழிமரபைச் சார்ந்தவர். இவர்கள் கடவுளின் பார்வையில் நேர்மையாளர்களாய் இருந்தார்கள். கட்டளைகளுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இவர்களுக்கு முதிர்ந்த வயதிலும் குழந்தை இல்லை. எலிசபெத்து கருவுற இயலாதவராக இருந்தார். யூத வழக்கப்படி பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்கள் என்று நம்பப்பட்டது. 

குருத்துவப் பணிமரபின்படி திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவதற்கு சீட்டுக் குலுக்கிப் போடப்படும். இந்த முறை அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. இவர் தூயகத்தில் தூபம் காட்டும் நேரத்தில் மக்கள் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கபிரியேல் என்னும் கடவுளின் தூதர் தூப பீடத்தின் வலப்பக்கம் நின்றவாறு அவருக்கு தோன்றினார். செக்கரியா மற்றும் அவருடைய மனைவி எலிசபெத்த் ஆகியோரின் வேண்டுதல் கடவுளால் கேட்கப்பட்டது என்றும், கடவுள் இவர்களுக்கு ஒரு மகனைக் கொடுப்பார் என்றும் கூறினார். 

ஆனால் செக்கரியாவோ அதை நம்பி ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டினார். எனவே அவருடைய நா கட்டப்பட்டு, பேச்சற்றவராக இருக்கும்படி செய்யப்பட்டார். சைகைகள் வழியாகவே அனைவரிடமும் உரையாடி வந்தார். பின்பு வானதூதர் சொன்னபடியே எலிபெத்தும் கருவுற்றார். இச்செய்தி வானதூதர் வாயிலாக அவருடைய உறவினர் மரியாவுக்கும் சொல்லப்பட்டது. மரியா வந்து ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கி பணிவிடை செய்தார். எலிசபெத்தும் தன் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு யோவான் என்று பெயரிட்டனர். செக்கரியாவின் நாவும் கட்டவிழ்ந்து பேசத்தொடங்கினார். 

கடவுளால் இயலாதது ஒன்றும் இல்லை என்று துணிவுடன் நம்பிட நம்மை செக்கரியா மற்றும் எலிசபெத்தின் வாழ்க்கை அழைக்கிறது. நாமும் கூட இவர்களைப்போல கடவுளின் முன்பு நேர்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வாழும்படி இவர்கள் நமக்கு முன்மாதிரி காட்டுகிறார்கள். கடவுளின் பணியைச்செய்து, கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றிட தீர்மானம் எடுத்து வாழத்தொடங்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மால் எல்லாம் ஆகும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். அவ்வப்போது எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நம்பிக்கைக் குறைபாடுகளை நீரே நீக்கியருளும். நாங்களும்கூட செக்கரியாவையும், எலிசபெத்தையும் போல பிரச்சனைகளுக்கும், குறைபாடுகளுக்கும் மத்தியில்கூட உமக்கு மட்டுமே என்றும் பணிசெய்து வாழ வரம் தாரும். ஆமென்.