Sunday, 19 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 19

யோசேப்பு



மத்தேயு 1:24

இன்றைய நாளின் சிந்தனை: யோசேப்பு

இன்றைய நாளின் குறியீடு: இரம்பம்


தாவீது குடும்பத்தைச் சார்ந்தவர் யோசேப்பு. இவர் தச்சுத் தொழில் செய்து வந்தார். மரியாவுக்கும், இவருக்கும் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தபோது மரியா கருவுற்றிருப்பதை யோசேப்பு கேள்வியுற்று, மறைவாக மரியாவை விலக்கிவிட வேண்டும் என்று நினைத்தார். இது அவருடைய மென்மையான குணத்தைக் காட்டுகிறது. நற்செய்தி, யோசேப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது நேர்மையாளர் எனச் சொல்கிறது. இவரையே கடவுள் தன்னுடைய திருமகனின் வளர்ப்புத் தந்தையாக இருக்கும்படித் தேர்ந்தெடுத்தார். 

கடவுளின் தூதர் இவருடைய கனவில் சொன்னபடியால், இவர் மரியாவைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டார். பேறுகாலம் வந்தபோது கருவுற்ற மரியாவை கைப்பிடித்தவராய் பெத்லகேமில் இடத்திற்காக அலைந்திருப்பார். மரியா இயேசுவைப் பெற்றெடுக்கும் வேளையில் இவரே உடனிருந்து உதவியிருப்பார். யோசேப்பு தனக்கு சொல்லப்பட்டபடியே எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்து, குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணித்து, அவருக்கு இயேசு என்றும் பெயரிட்டார். ஒரு தந்தைக்குரிய கடமைகள் அனைத்தையும் யோசேப்பு மிகவும் கண்ணும் கருத்துமாய் இயேசுவுக்குச் செய்தார்.

ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகின்றான் என்று கனவில் எச்சரிக்கப்பட்டு பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடினார். இவ்வாறு மரியாவையும், இயேசுவையும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற அழிவின் சக்திகளுடன் யோசேப்பு போராடினார். ஏரோதின் இறப்பிற்குப் பின்பு மீண்டும் தனக்கு வானதூதர் சொல்லியபடி நாசரேத்துக்குத் தன்னுடைய குடும்பத்தோடு திரும்பிய யோசேப்பு இறைவனின் விருப்பத்திற்கிணங்க கடைசிவரை வாழ்ந்தார். திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து நன்முறையில் கடவுள் தனக்குக் கொடுத்த அனைத்து பொறுப்புகளையும் தனது அயாராத உழைப்பால் செய்து முடித்தார். 

கடவுளின் திட்டத்தை வாழ்வின் கடைசிவரை செய்துமுடிப்பதில் முனைப்போடு இருந்த யோசேப்பு நமக்கு இறைவிருப்பத்தை நிறைவேற்றுவதில் ஒரு முன்னுதாரணம். நம்முடைய விருப்பத்தை தள்ளிவைத்துவிட்டு கடவுளின் விருப்பத்தைச் செய்ய நாமும் அழைக்கப்படுகின்றோம். யோசேப்பைப் பின்பற்றி நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பணிப் பொறுப்புகளை நேர்மையோடும், அர்ப்பண உள்ளத்தோடும் நிறைவேற்ற முயல வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்களுடைய வாழ்வில் நீர் எங்களுக்காக வைத்திருக்கும் உம்முடைய திட்டங்களுக்கு நாங்கள் முழுமையாய் ஒத்துழைக்கவும், உம்முடைய விருப்பத்தை துணிந்து நிறைவேற்றுவதன் வழியாக உமது ஆசியை அதிகமாகப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.




Saturday, 18 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 18

மரியா



லூக்கா 1:35

இன்றைய நாளின் சிந்தனை :     மரியா

இன்றைய நாளின் குறியீடு :     லீலி மலர்


மனித குலத்தின் மீட்புக்கான காலம் கனிந்து வந்தபோது கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்ப விரும்பினார். அதற்காக கடவுள், மரியாவை தேர்ந்தெடுத்தார். பிறப்புநிலைப் பாவம் தீண்டாமல் மரியாவை சுவக்கீன் மற்றும் அன்னாவுக்கு முதிர்ந்த வயதில் மகளாகப் பிறக்கச் செய்தார். வெண்ணிற லீலிமலர் போல பாவமாசு ஏதும் அணுகாத கன்னிமரியா தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். கடவுள் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொல்ல தம்முடைய தூதர் கபிரியேலை அனுப்பினார். 

தூய ஆவியால் நிரப்பப்பட்டு மரியா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் என்றும், அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார் என்றும் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவிடம் சொன்னார். ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று கூறி கடவுளின் மகனைக் கருச்சுமக்க கன்னி மரியா இசைவு தெரிவித்தார். பழைய ஏற்பாட்டு ஏவாள் பாம்பை நம்பி பாவத்தை சுமந்தபோது, புதிய ஏற்பாட்டில் வரும் மரியா என்கிற புதிய ஏவாள் வானதூதரை நம்பி புனிதத்தை சுமந்தாள். 

பிறகு மரியா யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று, முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கும் தன்னுடைய உறவினராகிய எலிசபெத்தோடு ஏறக்குறைய மூன்று மாதமளவு தங்கியிருந்து பணிவிடை செய்தார். சொந்த ஊரான பெத்லகேமுக்கு தங்கள் பெயரைப் பதிவுசெய்ய யோசேப்பும், மரியாவும் சென்றிருந்தபோது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. விடுதியில் இடம் கிடைக்காமல் மரியா மாட்டுக் கொட்டகையில் தன்னுடைய தலைமகனைப் பெற்றெடுத்தார். மரியா தனது வாழ்வு முழுவதும், தனக்கு நடப்பதை எல்லாம் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். 

மண்ணில் மனிதராகப் பிறந்த இறைமகன் இயேசுவின் தாயாகிற பாக்கியத்தை, தன்னுடைய கீழ்ப்படிதலால் பெற்றவர் மரியா. உதிரத்தில் இயேசுவைச் சுமக்கும் முன், தன் உள்ளத்தில் இயேசுவைச் சுமந்தார் மரியா என்பதற்கு ஏற்ப, நாமும் இயேசுவை நம்முடைய உள்ளத்தில் சுமக்க முடிவெடுத்தவர்களாக, மரியின் வழியில் மனித மீட்புக்காக உழைக்கத் தொடங்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! மரியாவைப் போன்று நாங்களும் கடவுளுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவும், இயேசுவை எங்கள் உள்ளத்தில் என்றும் சுமப்பவர்களாகவும் வாழ உதவிடுவீராக. மரியாவின் வழிகாட்டலில் நாங்களும் மாசில்லாத புனிதமான வாழ்வு வாழ எங்களுக்கும் உமது அருளைப் பொழிந்தருளும். ஆமென்.



Friday, 17 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 17

திருமுழுக்கு யோவான்




மத்தேயு 3:2

இன்றைய நாளின் சிந்தனை: திருமுழுக்கு யோவான்

இன்றைய நாளின் குறியீடு: கிளிஞ்சல் (சிப்பி)

 

பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்குமான இணைப்புப் பாலம் புனித திருமுழுக்கு யோவான். இயேசுவின் முன்னோடியாக தன்னுடைய பணி வாழ்வைச் செய்தவர். இவருடைய வாழ்க்கைமுறை மிகுந்த கடினமானதொரு துறவு வாழ்வின் அடையாளமாக இருந்தது. சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாலைநிலத்தில் வாழ்ந்த இவருடைய உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் ஆகும். இவர் ஒட்டகமுடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார். 

மனமாற்றத்தை வலியுறுத்திய இவருடைய போதனைகளும் வாழ்க்கை முறையும் மக்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பையும், இறைவாக்கினருக்குரிய அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது. இவர் யோர்தான் ஆற்றில், மக்களுக்கு பாவமன்னிப்பின் அடையாளமாகத் திருமுழுக்கு கொடுத்து வந்தார். இயேசுவும்கூட தன்னுடைய 30 ஆம் வயதில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்றார். இவர் தன்னை மெசியா இல்லை என்றும் மெசியாவின் வருகைக்காக தயாரிக்கின்றவர் என்றும் தெளிவாக மக்களுக்கு புரியவைத்தார். இயேசுவின் மிதியடிகளை அவிழ்க்கக் கூட தான் தகுதியற்றவன் என்று சொல்லித் தன்னுடைய தாழ்ச்சியை எடுத்துக்காட்டினார். 

திருமுழுக்கு யோவானுடைய குரல், எப்போதும் நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது. ஏரோது அரசன் அவனுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாவை சட்டத்திற்குப் புறம்பே சேர்த்துக்கொண்டதை மிகவும் கோபத்தோடு திருமுழுக்கு யோவான் கண்டித்தார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு தலைவெட்டிக் கொல்லப்பட்டார். வரவிருக்கின்ற மெசியாவின் வருகைக்குத் தயாரிக்க எலியா மீண்டும் வருவார் என்ற யூதர்களின் நம்பிக்கையானது, திருமுழுக்கு யோவானிடம் நிறைவேறியது என்று இயேசுவே குறிப்பிடுவதைப் பார்க்கமுடியும்.

ஆண்டவருக்கான பாதையை ஆயத்தம் செய்யும் பணியை ஆர்வத்தோடு செய்த திருமுழுக்கு யோவானை இயேசு ‘மனிதராய்ப் பிறந்தவருள் பேறுபெற்றவர்’ என்று பாராட்டுகின்றார். அத்தோடு விண்ணரசில் மிகச் சிறியவரும், திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் என்று இயேசு நமக்கும் பேறுபெறும் பாக்கியத்தை வழங்குகிறார். நாமும் திழுமுழுக்கு யோவானைப்போல தாழ்ச்சியுடனும், நீதியுடனும் வாழ்ந்து, ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்திட உறுதி எடுத்து உழைக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நீதியின் குரலாய் எங்கள் குரல் சமுதாயத்தில் ஓங்கி ஒலிக்கவும், தாழ்ச்சியும், கீழ்ப்படிதலும் எங்கள் வாழ்வில் என்றும் வெளிப்படவும் நீரே துணை செய்வீராக. திருமுழுக்கு யோவானைப்போல நாங்களும் உம்முடைய பாராட்டுக்குரிய வாழ்க்கை வாழ எங்களுக்கும் உமது அருள் உதவியைப் பொழிவீராக. ஆமென்.