Tuesday, 21 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 21

இடையர்கள்



லூக்கா 2:11

இன்றைய நாளின் சிந்தனை: இடையர்கள்

இன்றைய நாளின் குறியீடு: கோலும், மிதியடியும்


இஸ்ரயேல் மக்களின் முதன்மையான தொழில் ஆடு மேய்த்தல் ஆகும். செல்வம் படைத்த யூதர்கள் தங்கள் ஆடுகளை கூலிக்கு ஆள் அமர்த்தி மேய்க்கச் செய்வார்கள். பாமரர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் கிடையை தாங்களே மேய்த்தும், காவல் காத்தும் வருவார்கள். விவிலியப் பின்னணியில் ஆடு மேய்க்கும் தொழில் என்பது முக்கியமான ஒன்று. இறையியல் அடிப்படையில் அது கடவுளை ஆயனாகவும், மக்களை மந்தையின் ஆடுகளாவும் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாக இருக்கின்றது. 

ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்தையும், உறவையும் பிரிந்து பல நாட்கள் ஊருக்கு வெளியே வயல்வெளிகளிலே தங்க வேண்டியிருக்கும். இடையர்கள் ஆடு மேய்க்கும்போது பல ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தங்கள் ஆடுகளை ஓநாய் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுவார்கள். இப்படிப்பட்ட இடையர்கள் இறைவனின் பார்வையில் சிறப்பிடம் பெறுகின்றார்கள். 

இயேசுவின் பிறப்பின் போது ஊருக்கு வெளியே தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள்தான் முதன் முதலில் மெசியாவின் பிறப்புச் செய்தியைக் கேட்டார்கள். வானதூதர் இடையர்களிடம் மகிழ்ச்சியின் செய்தி என்று சொல்லி இயேசுவின் பிறப்புச் செய்தியை அறிவித்தார்கள். இடையர்களாக இருந்தவர்களுக்கு தங்களை மீட்க வரும் மீட்பரின் பிறப்பு உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்க வேண்டும். அன்று சமூகத்தின் பார்வையில் முகவரி இல்லாத முகங்களாகிய இடையர்களுக்கு, இன்பமான இயேசுவின் பிறப்புச் செய்தியை முதலில் அறிவித்ததோடு, திருமகன் இயேசுவின் திருமுகத்தை முதலில் பார்க்கும் பாக்கியத்தையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார்.

நள்ளிரவு வேளையிலும் விழிப்புடன் இருந்து தங்கள் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்ததால் இயேசு பிறப்பின் நற்செய்தி இடையர்களுக்குக் கிடைத்தது. இந்த அடையாளம் இல்லாத ஆட்டு இடையர்களைப்போல நாமும்கூட கடவுளின் கடைக்கண் பார்வையில் தயை நிரம்பப்பெற்றவர்களாய் விழிப்புடன் நம்முடைய பணியைச் செய்ய உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நாங்களும் இடையர்களைப் போல எங்களில் பணிப்பொறுப்புகளில் விழிப்புடன் இருக்க உதவிடும். ஊருக்கு வெளியே, ஆபத்தான சூழலில் இருந்த ஆட்டிடையர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு ஆனந்த்ததைக் கொடுத்தது போன்று எங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் மகிழ்ச்சியால் நிரப்புவீராக. ஆமென்.


Monday, 20 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 20

வானதூதர்


லூக்கா 2:10

இன்றைய நாளின் சிந்தனை: வானதூதர்

இன்றைய நாளின் குறியீடு: இறக்கைகள்


விவிலியத்தில் வானதூதர்களின் பணிகளைப் பற்றி நிறைய வாசிக்கின்றோம். வானதூதர்கள் கடவுளை நேருக்கு நேராகக் கண்டு இடையறாது அவரை மாட்சிப்படுத்தும் மகத்தான பணியைச் செய்கிறவர்கள் ஆவர். மீட்பின் வரலாற்றில் கடவுளின் செய்தியை சுமந்து வந்து மனிதர்களுக்கு கொடுக்கும் பொறுப்பு இவர்களுக்கு தரப்பட்டது. விவிலியத்தில் சேராபீன்கள், கெருபுகள் என்று பலவகையான வானதூதர்களின் கூட்டத்தினைப் பார்த்தாலும் நற்செய்தி நூல்களில் வருகின்ற சில வானதூதர்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. 

செக்கரியாவுக்கு திருமுழுக்கு யோவானின் பிறப்பை முன்னறிவித்தவர் கபிரியேல் என்கிற வானதூதர். அதேபோல மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவரும் கபிரியேல் என்னும் வானதூதரே ஆவார். யோசேப்புக்கு கனவில் தோன்றி மரியாவை ஏற்றுக்கொள்ளப் பணித்தவரும் ஆண்டவருடைய தூதர் ஒருவரே. மேலும் யோசேப்பின் கனவுகளில் அடிக்கடி ஆண்டவருடைய தூதர் தோன்றி அவர் என்ன செய்யவேண்டுமென்பதை அவருக்குத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். 

இயேசுவின் பிறப்பின் போது இடையர்களுக்கு தோன்றி பெரும் மகிழ்ச்சியூட்டும் மாபெரும் நற்செய்தியாக மெசியாவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தவரும் வானதூதரே. பிறகு விண்ணகத் தூதர் பேரணி தோன்றி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி என்றும், உலகில் அவருக்கு உகந்தோருக்கு மனிதருக்கு அமைதி என்றும் ஆர்ப்பரித்து கீதம் இசைத்தது. இவ்வாறு மண்ணுலகிற்கு இறைவனின் திட்டத்தைக் கொண்டு வருவதும், இறைவன் தரும் மகிழ்வை மனிதருக்கு முழங்குவதும் வானதூதர்களின் பணியாக இருந்ததென இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்வுகளில் பார்க்கிறோம்.

வானதூதர்கள் நமக்கும் கடவுளின் செய்தியை நற்செய்தியாக சுமந்து வரவேண்டும் என்று நாம் விருப்பப்பட வேண்டும். நம்மைத் தேடி எத்தனையோ செய்திகள் வந்தாலும் வானதூதர் கொண்டுவரும் செய்தியைப் போல எதுவும் நிறைவானதாக, மகிழ்வானதாக இருக்கப் போவதில்லை என்று புரிந்து கொள்வோம். கடவுளின் தூதர்கள் நமக்குச் சொல்லுகிறபடி நாமும் செயல்பட்டு, கடவுளின் மகிழ்வைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்தவர்களாய் வாழத் தொடங்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்கள் வாழ்வில் உம்முடைய வானதூதர்களின் வழியாக, நீர் எங்களுக்கென வைத்திருக்கும் மேலான திட்டத்தை நாங்கள் அறிந்துகொள்ளவும், அதன்படி செயல்படவும் நீர் எங்களுக்கு உதவிடுவீராக. அதன் வழியாக உம்முடைய நிறைமகிழ்ச்சியை எங்களுக்கும் வானதூதர்கள் மூலம்; அறிவித்து, எங்கள் வாழ்வில் வசந்தம் வீசச் செய்தருளும்.  ஆமென்.


Sunday, 19 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 19

யோசேப்பு



மத்தேயு 1:24

இன்றைய நாளின் சிந்தனை: யோசேப்பு

இன்றைய நாளின் குறியீடு: இரம்பம்


தாவீது குடும்பத்தைச் சார்ந்தவர் யோசேப்பு. இவர் தச்சுத் தொழில் செய்து வந்தார். மரியாவுக்கும், இவருக்கும் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தபோது மரியா கருவுற்றிருப்பதை யோசேப்பு கேள்வியுற்று, மறைவாக மரியாவை விலக்கிவிட வேண்டும் என்று நினைத்தார். இது அவருடைய மென்மையான குணத்தைக் காட்டுகிறது. நற்செய்தி, யோசேப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது நேர்மையாளர் எனச் சொல்கிறது. இவரையே கடவுள் தன்னுடைய திருமகனின் வளர்ப்புத் தந்தையாக இருக்கும்படித் தேர்ந்தெடுத்தார். 

கடவுளின் தூதர் இவருடைய கனவில் சொன்னபடியால், இவர் மரியாவைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டார். பேறுகாலம் வந்தபோது கருவுற்ற மரியாவை கைப்பிடித்தவராய் பெத்லகேமில் இடத்திற்காக அலைந்திருப்பார். மரியா இயேசுவைப் பெற்றெடுக்கும் வேளையில் இவரே உடனிருந்து உதவியிருப்பார். யோசேப்பு தனக்கு சொல்லப்பட்டபடியே எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்து, குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணித்து, அவருக்கு இயேசு என்றும் பெயரிட்டார். ஒரு தந்தைக்குரிய கடமைகள் அனைத்தையும் யோசேப்பு மிகவும் கண்ணும் கருத்துமாய் இயேசுவுக்குச் செய்தார்.

ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகின்றான் என்று கனவில் எச்சரிக்கப்பட்டு பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடினார். இவ்வாறு மரியாவையும், இயேசுவையும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற அழிவின் சக்திகளுடன் யோசேப்பு போராடினார். ஏரோதின் இறப்பிற்குப் பின்பு மீண்டும் தனக்கு வானதூதர் சொல்லியபடி நாசரேத்துக்குத் தன்னுடைய குடும்பத்தோடு திரும்பிய யோசேப்பு இறைவனின் விருப்பத்திற்கிணங்க கடைசிவரை வாழ்ந்தார். திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து நன்முறையில் கடவுள் தனக்குக் கொடுத்த அனைத்து பொறுப்புகளையும் தனது அயாராத உழைப்பால் செய்து முடித்தார். 

கடவுளின் திட்டத்தை வாழ்வின் கடைசிவரை செய்துமுடிப்பதில் முனைப்போடு இருந்த யோசேப்பு நமக்கு இறைவிருப்பத்தை நிறைவேற்றுவதில் ஒரு முன்னுதாரணம். நம்முடைய விருப்பத்தை தள்ளிவைத்துவிட்டு கடவுளின் விருப்பத்தைச் செய்ய நாமும் அழைக்கப்படுகின்றோம். யோசேப்பைப் பின்பற்றி நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பணிப் பொறுப்புகளை நேர்மையோடும், அர்ப்பண உள்ளத்தோடும் நிறைவேற்ற முயல வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்களுடைய வாழ்வில் நீர் எங்களுக்காக வைத்திருக்கும் உம்முடைய திட்டங்களுக்கு நாங்கள் முழுமையாய் ஒத்துழைக்கவும், உம்முடைய விருப்பத்தை துணிந்து நிறைவேற்றுவதன் வழியாக உமது ஆசியை அதிகமாகப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.