Wednesday, 22 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 22

பெத்லகேம்




மத்தேயு 2:9

இன்றைய நாளின் சிந்தனை: பெத்லகேம்

இன்றைய நாளின் குறியீடு: விண்மீன்


யூதேயா நாட்டில் பெத்லகேம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இடம் ஆகும். இது தாவீதின் ஊர். இங்குதான் தாவீது வாழ்ந்தார் என்றும், மன்னராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்றும் விவிலியத்தில் படிக்கின்றோம். பெத்லகேம் என்ற சொல்லுக்கு அப்பத்தின் வீடு என்பது அர்த்தம். இது எருசலேமிலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. 

பெத்லகேம் என்ற ஊர்தான் தாவீதின் வழிமரபில் வந்த யோசேப்பினுடைய சொந்த ஊராகும். அகுஸ்து சீசர் காலத்தில் மக்கள் தொகை முதன் முதலில் கணக்கிடப்பட்டபோது

யோசேப்பும்;, மரியாவும் தங்கள் பெயரைப் பதிவு செய்ய கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊருக்குப் போனார்கள் என்று நற்செய்தியாளர் லூக்கா எழுதுகிறார். பழைய ஏற்பாட்டு மீக்கா இறைவாக்கினர் மெசியாவின் பிறப்பைப் பற்றி எழுதும் போது மெசியா பெத்லகேமில் பிறப்பார் என்று குறிப்பிடுகின்றார். எருசலேம் தலைநகரான பின்பு பெத்லகேம் என்பது பெரியதாய் வெளியே அடையாளம் எதுவும் தெரியப்படாத ஊராகியது. 

கடவுள் மனிதகுலமீட்பின் வரலாற்றில் மிகச் சாதாரணமானவற்றையே தேர்ந்து கொண்டார். பிரபலமானவற்றையும், பிரசித்திப்பெற்றவற்றையும் தேடிப்போகாமல் எளியவற்றையும், சிறியவற்றையும் தேடிப்போவது கடவுளின் குணம். இவ்வகையில் அடையாளமும் அங்கீகாரமும் சிறிதும் இல்லாத இந்த பெத்லகேம் என்கிற ஊரைத் தன்னுடைய திருமகன் இயேசுவின் பிறப்பிற்காக கடவுள் தேர்ந்தெடுக்கிறார். புறக்கணிக்கப்பட்ட ஓரம்கட்டப்பட்ட ஒரு சிறிய ஊர்தான் அன்றைய பெத்லகேம். இதுதான் இயேசுவின் பிறந்த ஊர். இங்கேதான் விண்மீன் கீழ்த்திசை ஞானியர் மூன்று பேரை அழைத்து வந்தது. மறைவாய்க் கிடந்த பெத்லகேம் இயேசுவின் பிறப்பால் மகத்துவம் பெற்றது. 

பெத்லகேம் என்னும் ஊர் நம்முடைய வாழ்க்கையின் யதார்த்தமான நிலையைக் கண்முன் நிறுத்துகிறது. பிறர் கண்களுக்கு மறைவான, மங்கலான, அற்பமான, அவலமான வாழ்க்கை நிலையில் நாம் இருந்தாலும் கடவுள் நம்மையும் தேர்ந்தெடுத்து தேடி வருவார். கடவுளின் வருகைக்காக நாமும் பெத்லகேமைப் போல பகட்டையும், புகழையும் விடுத்து எளிமையிலும், தாழ்ச்சியிலும் நம்மைத் தயாரிக்க முற்பட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்கள் வாழ்வில் பெயர், புகழ், பெருமை, போன்றவற்றை தேடி அலையாமல், எப்போதும் எளிய வாழ்க்கை வாழ எங்களுக்கு கற்றுத்தாரும். இவ்வுலகில் சிறியவர்களாய், நலிந்தவர்களாய், வலுக்குறைந்தவர்களாய் எங்களோடு வாழும் மனிதர்களைத் தேடி, உம்மைப் போல நாங்களும் பயணப்பட எங்களுக்கு அருள் புரியும். ஆமென்.

Tuesday, 21 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 21

இடையர்கள்



லூக்கா 2:11

இன்றைய நாளின் சிந்தனை: இடையர்கள்

இன்றைய நாளின் குறியீடு: கோலும், மிதியடியும்


இஸ்ரயேல் மக்களின் முதன்மையான தொழில் ஆடு மேய்த்தல் ஆகும். செல்வம் படைத்த யூதர்கள் தங்கள் ஆடுகளை கூலிக்கு ஆள் அமர்த்தி மேய்க்கச் செய்வார்கள். பாமரர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் கிடையை தாங்களே மேய்த்தும், காவல் காத்தும் வருவார்கள். விவிலியப் பின்னணியில் ஆடு மேய்க்கும் தொழில் என்பது முக்கியமான ஒன்று. இறையியல் அடிப்படையில் அது கடவுளை ஆயனாகவும், மக்களை மந்தையின் ஆடுகளாவும் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாக இருக்கின்றது. 

ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்தையும், உறவையும் பிரிந்து பல நாட்கள் ஊருக்கு வெளியே வயல்வெளிகளிலே தங்க வேண்டியிருக்கும். இடையர்கள் ஆடு மேய்க்கும்போது பல ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தங்கள் ஆடுகளை ஓநாய் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுவார்கள். இப்படிப்பட்ட இடையர்கள் இறைவனின் பார்வையில் சிறப்பிடம் பெறுகின்றார்கள். 

இயேசுவின் பிறப்பின் போது ஊருக்கு வெளியே தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள்தான் முதன் முதலில் மெசியாவின் பிறப்புச் செய்தியைக் கேட்டார்கள். வானதூதர் இடையர்களிடம் மகிழ்ச்சியின் செய்தி என்று சொல்லி இயேசுவின் பிறப்புச் செய்தியை அறிவித்தார்கள். இடையர்களாக இருந்தவர்களுக்கு தங்களை மீட்க வரும் மீட்பரின் பிறப்பு உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்க வேண்டும். அன்று சமூகத்தின் பார்வையில் முகவரி இல்லாத முகங்களாகிய இடையர்களுக்கு, இன்பமான இயேசுவின் பிறப்புச் செய்தியை முதலில் அறிவித்ததோடு, திருமகன் இயேசுவின் திருமுகத்தை முதலில் பார்க்கும் பாக்கியத்தையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார்.

நள்ளிரவு வேளையிலும் விழிப்புடன் இருந்து தங்கள் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்ததால் இயேசு பிறப்பின் நற்செய்தி இடையர்களுக்குக் கிடைத்தது. இந்த அடையாளம் இல்லாத ஆட்டு இடையர்களைப்போல நாமும்கூட கடவுளின் கடைக்கண் பார்வையில் தயை நிரம்பப்பெற்றவர்களாய் விழிப்புடன் நம்முடைய பணியைச் செய்ய உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நாங்களும் இடையர்களைப் போல எங்களில் பணிப்பொறுப்புகளில் விழிப்புடன் இருக்க உதவிடும். ஊருக்கு வெளியே, ஆபத்தான சூழலில் இருந்த ஆட்டிடையர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு ஆனந்த்ததைக் கொடுத்தது போன்று எங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் மகிழ்ச்சியால் நிரப்புவீராக. ஆமென்.


Monday, 20 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 20

வானதூதர்


லூக்கா 2:10

இன்றைய நாளின் சிந்தனை: வானதூதர்

இன்றைய நாளின் குறியீடு: இறக்கைகள்


விவிலியத்தில் வானதூதர்களின் பணிகளைப் பற்றி நிறைய வாசிக்கின்றோம். வானதூதர்கள் கடவுளை நேருக்கு நேராகக் கண்டு இடையறாது அவரை மாட்சிப்படுத்தும் மகத்தான பணியைச் செய்கிறவர்கள் ஆவர். மீட்பின் வரலாற்றில் கடவுளின் செய்தியை சுமந்து வந்து மனிதர்களுக்கு கொடுக்கும் பொறுப்பு இவர்களுக்கு தரப்பட்டது. விவிலியத்தில் சேராபீன்கள், கெருபுகள் என்று பலவகையான வானதூதர்களின் கூட்டத்தினைப் பார்த்தாலும் நற்செய்தி நூல்களில் வருகின்ற சில வானதூதர்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. 

செக்கரியாவுக்கு திருமுழுக்கு யோவானின் பிறப்பை முன்னறிவித்தவர் கபிரியேல் என்கிற வானதூதர். அதேபோல மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவரும் கபிரியேல் என்னும் வானதூதரே ஆவார். யோசேப்புக்கு கனவில் தோன்றி மரியாவை ஏற்றுக்கொள்ளப் பணித்தவரும் ஆண்டவருடைய தூதர் ஒருவரே. மேலும் யோசேப்பின் கனவுகளில் அடிக்கடி ஆண்டவருடைய தூதர் தோன்றி அவர் என்ன செய்யவேண்டுமென்பதை அவருக்குத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். 

இயேசுவின் பிறப்பின் போது இடையர்களுக்கு தோன்றி பெரும் மகிழ்ச்சியூட்டும் மாபெரும் நற்செய்தியாக மெசியாவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தவரும் வானதூதரே. பிறகு விண்ணகத் தூதர் பேரணி தோன்றி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி என்றும், உலகில் அவருக்கு உகந்தோருக்கு மனிதருக்கு அமைதி என்றும் ஆர்ப்பரித்து கீதம் இசைத்தது. இவ்வாறு மண்ணுலகிற்கு இறைவனின் திட்டத்தைக் கொண்டு வருவதும், இறைவன் தரும் மகிழ்வை மனிதருக்கு முழங்குவதும் வானதூதர்களின் பணியாக இருந்ததென இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்வுகளில் பார்க்கிறோம்.

வானதூதர்கள் நமக்கும் கடவுளின் செய்தியை நற்செய்தியாக சுமந்து வரவேண்டும் என்று நாம் விருப்பப்பட வேண்டும். நம்மைத் தேடி எத்தனையோ செய்திகள் வந்தாலும் வானதூதர் கொண்டுவரும் செய்தியைப் போல எதுவும் நிறைவானதாக, மகிழ்வானதாக இருக்கப் போவதில்லை என்று புரிந்து கொள்வோம். கடவுளின் தூதர்கள் நமக்குச் சொல்லுகிறபடி நாமும் செயல்பட்டு, கடவுளின் மகிழ்வைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்தவர்களாய் வாழத் தொடங்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்கள் வாழ்வில் உம்முடைய வானதூதர்களின் வழியாக, நீர் எங்களுக்கென வைத்திருக்கும் மேலான திட்டத்தை நாங்கள் அறிந்துகொள்ளவும், அதன்படி செயல்படவும் நீர் எங்களுக்கு உதவிடுவீராக. அதன் வழியாக உம்முடைய நிறைமகிழ்ச்சியை எங்களுக்கும் வானதூதர்கள் மூலம்; அறிவித்து, எங்கள் வாழ்வில் வசந்தம் வீசச் செய்தருளும்.  ஆமென்.