Thursday, 23 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர்: 23

தீவனத்தொட்டி



லூக்கா 2:7

இன்றைய நாளின் சிந்தனை : தீவனத்தொட்டி

இன்றைய நாளின் அடையாளம் : வைக்கோலும், தீவனத்தொட்டியும்


மரியாவும் யோசேப்பும் பெத்லகேம் ஊரில் தங்க இடம் இன்றி தத்தளித்தனர். எங்கும் எவரும் கையளவு இடம் கூட தராமல் விரட்டியடித்த சூழ்நிலையில் மாட்டுக் கொட்டகைக்குள் மனமகிழ்வோடு நுழைந்தனர் மரியாவும் யோசேப்பும். மாடுகள் தங்கும் இடத்தில் மானிடமகனுக்கு இடம் கிடைத்தது. பிள்ளைப் பேறு நெருங்கிவந்த வேளையில் துணைக்கு ஆளின்றி துயருற்ற அன்னைமரியாவின் கைப்பிடித்து நம்பிக்கை தந்திருப்பார் யோசேப்பு. 

புறக்கணிப்பும் புறந்தள்ளுதலும் மரியாவுக்கும் யோசேப்புக்கும் ஒருசேர வந்துவிழ தலைச்சன் பிள்ளையை பெற்றெடுக்க அவர்கள் தடைகள் பலவற்றைத் தாண்டவேண்டியிருந்தது. சுற்றிலும் அங்கு ஒரு மனித முகம் கூட இல்லை. முனதை மயக்கும் நறுமணம் இல்லை. களைப்பாற கட்டில் இல்லை. படுக்க பஞ்சு மெத்தை இல்லை. இப்படி சொல்லப் போனால் சராசரியாக நம்முடைய வீடுகளில் இருக்கும் எந்தவொரு வசதியும் அந்த மாட்டுக் கொட்டகையில் இல்லவே இல்லை. மனிதர் நிற்பதற்குக்கூட முகம் சுளிக்கும் இடத்தில் மரியாவின் பிள்ளைப்பேறு நடந்தேறுகிறது. 

மரியா தான் பெற்ற பிள்ளை குழந்தை இயேசுவை துணிகளில் சுற்றி தீவனத்தொட்டியில் கிடத்தினார். மானிடமகனுக்;கு தலைசாய்க்கவும் இடமில்லை என்பது எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது. தீவனத்தொட்டி என்பது மாடுகளுக்கான உணவுப்பொருள் வைக்கப்படும் இடம். மாடுகளுக்கு வாழ்க்கை தரும் உணவை வைக்கின்ற இடத்தினில் மரியா தன்னுடைய தலைமகன் இயேசுவைக் கிடத்துகின்றாள். இது மனிதருக்கான நிலைவாழ்வு தரும் உணவாக இயேசு இருக்கப்போகின்றார் என்பதை எடுத்துக்காட்டும் அருமையான அடையாளமாக இருக்கின்றது. 

மேலான இடங்களில் தங்கி மகிமையோடு வாழ வேண்டும் என்கின்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு. ஆனால் இயேசுவோ தன்னுடைய பிறப்பிடமாக மாட்டுக்கொட்டகையையும் தன்னுடைய முதல் தொட்டிலாக தீவனத்தொட்டியையும் தேர்ந்தெடுக்கின்றார். வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவாக, நம் மீட்பர் இயேசு இருக்கின்றார் என்பதை நாமும் உணர்ந்திடுவோம். அவரை திருப்பலியில் ஆன்மீக உணவாக உட்கொள்ளும் நாமும் சமூகத்திற்கு நம்மையே பலியாக்கிடத் தீர்மானித்து அதற்காக செயல்பட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மையே எங்களுக்காகப் பலியாக்கப் போகின்றீர் என்பதன் அடையாளமாக நீர் பிறந்தவுடன் தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டீர். உம்மையே எங்கள் ஆன்ம உணவாக உட்க்கொள்ளும் நாங்களும் உம்மால் திடப்படுத்தப்பட்டவர்களாக மாறி, உம்மைப்போல பிறருக்காகப் பலியாகும் வாழ்வு வாழ எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.

Wednesday, 22 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 22

பெத்லகேம்




மத்தேயு 2:9

இன்றைய நாளின் சிந்தனை: பெத்லகேம்

இன்றைய நாளின் குறியீடு: விண்மீன்


யூதேயா நாட்டில் பெத்லகேம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இடம் ஆகும். இது தாவீதின் ஊர். இங்குதான் தாவீது வாழ்ந்தார் என்றும், மன்னராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்றும் விவிலியத்தில் படிக்கின்றோம். பெத்லகேம் என்ற சொல்லுக்கு அப்பத்தின் வீடு என்பது அர்த்தம். இது எருசலேமிலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. 

பெத்லகேம் என்ற ஊர்தான் தாவீதின் வழிமரபில் வந்த யோசேப்பினுடைய சொந்த ஊராகும். அகுஸ்து சீசர் காலத்தில் மக்கள் தொகை முதன் முதலில் கணக்கிடப்பட்டபோது

யோசேப்பும்;, மரியாவும் தங்கள் பெயரைப் பதிவு செய்ய கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊருக்குப் போனார்கள் என்று நற்செய்தியாளர் லூக்கா எழுதுகிறார். பழைய ஏற்பாட்டு மீக்கா இறைவாக்கினர் மெசியாவின் பிறப்பைப் பற்றி எழுதும் போது மெசியா பெத்லகேமில் பிறப்பார் என்று குறிப்பிடுகின்றார். எருசலேம் தலைநகரான பின்பு பெத்லகேம் என்பது பெரியதாய் வெளியே அடையாளம் எதுவும் தெரியப்படாத ஊராகியது. 

கடவுள் மனிதகுலமீட்பின் வரலாற்றில் மிகச் சாதாரணமானவற்றையே தேர்ந்து கொண்டார். பிரபலமானவற்றையும், பிரசித்திப்பெற்றவற்றையும் தேடிப்போகாமல் எளியவற்றையும், சிறியவற்றையும் தேடிப்போவது கடவுளின் குணம். இவ்வகையில் அடையாளமும் அங்கீகாரமும் சிறிதும் இல்லாத இந்த பெத்லகேம் என்கிற ஊரைத் தன்னுடைய திருமகன் இயேசுவின் பிறப்பிற்காக கடவுள் தேர்ந்தெடுக்கிறார். புறக்கணிக்கப்பட்ட ஓரம்கட்டப்பட்ட ஒரு சிறிய ஊர்தான் அன்றைய பெத்லகேம். இதுதான் இயேசுவின் பிறந்த ஊர். இங்கேதான் விண்மீன் கீழ்த்திசை ஞானியர் மூன்று பேரை அழைத்து வந்தது. மறைவாய்க் கிடந்த பெத்லகேம் இயேசுவின் பிறப்பால் மகத்துவம் பெற்றது. 

பெத்லகேம் என்னும் ஊர் நம்முடைய வாழ்க்கையின் யதார்த்தமான நிலையைக் கண்முன் நிறுத்துகிறது. பிறர் கண்களுக்கு மறைவான, மங்கலான, அற்பமான, அவலமான வாழ்க்கை நிலையில் நாம் இருந்தாலும் கடவுள் நம்மையும் தேர்ந்தெடுத்து தேடி வருவார். கடவுளின் வருகைக்காக நாமும் பெத்லகேமைப் போல பகட்டையும், புகழையும் விடுத்து எளிமையிலும், தாழ்ச்சியிலும் நம்மைத் தயாரிக்க முற்பட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்கள் வாழ்வில் பெயர், புகழ், பெருமை, போன்றவற்றை தேடி அலையாமல், எப்போதும் எளிய வாழ்க்கை வாழ எங்களுக்கு கற்றுத்தாரும். இவ்வுலகில் சிறியவர்களாய், நலிந்தவர்களாய், வலுக்குறைந்தவர்களாய் எங்களோடு வாழும் மனிதர்களைத் தேடி, உம்மைப் போல நாங்களும் பயணப்பட எங்களுக்கு அருள் புரியும். ஆமென்.

Tuesday, 21 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 21

இடையர்கள்



லூக்கா 2:11

இன்றைய நாளின் சிந்தனை: இடையர்கள்

இன்றைய நாளின் குறியீடு: கோலும், மிதியடியும்


இஸ்ரயேல் மக்களின் முதன்மையான தொழில் ஆடு மேய்த்தல் ஆகும். செல்வம் படைத்த யூதர்கள் தங்கள் ஆடுகளை கூலிக்கு ஆள் அமர்த்தி மேய்க்கச் செய்வார்கள். பாமரர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் கிடையை தாங்களே மேய்த்தும், காவல் காத்தும் வருவார்கள். விவிலியப் பின்னணியில் ஆடு மேய்க்கும் தொழில் என்பது முக்கியமான ஒன்று. இறையியல் அடிப்படையில் அது கடவுளை ஆயனாகவும், மக்களை மந்தையின் ஆடுகளாவும் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாக இருக்கின்றது. 

ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்தையும், உறவையும் பிரிந்து பல நாட்கள் ஊருக்கு வெளியே வயல்வெளிகளிலே தங்க வேண்டியிருக்கும். இடையர்கள் ஆடு மேய்க்கும்போது பல ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தங்கள் ஆடுகளை ஓநாய் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுவார்கள். இப்படிப்பட்ட இடையர்கள் இறைவனின் பார்வையில் சிறப்பிடம் பெறுகின்றார்கள். 

இயேசுவின் பிறப்பின் போது ஊருக்கு வெளியே தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள்தான் முதன் முதலில் மெசியாவின் பிறப்புச் செய்தியைக் கேட்டார்கள். வானதூதர் இடையர்களிடம் மகிழ்ச்சியின் செய்தி என்று சொல்லி இயேசுவின் பிறப்புச் செய்தியை அறிவித்தார்கள். இடையர்களாக இருந்தவர்களுக்கு தங்களை மீட்க வரும் மீட்பரின் பிறப்பு உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்க வேண்டும். அன்று சமூகத்தின் பார்வையில் முகவரி இல்லாத முகங்களாகிய இடையர்களுக்கு, இன்பமான இயேசுவின் பிறப்புச் செய்தியை முதலில் அறிவித்ததோடு, திருமகன் இயேசுவின் திருமுகத்தை முதலில் பார்க்கும் பாக்கியத்தையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார்.

நள்ளிரவு வேளையிலும் விழிப்புடன் இருந்து தங்கள் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்ததால் இயேசு பிறப்பின் நற்செய்தி இடையர்களுக்குக் கிடைத்தது. இந்த அடையாளம் இல்லாத ஆட்டு இடையர்களைப்போல நாமும்கூட கடவுளின் கடைக்கண் பார்வையில் தயை நிரம்பப்பெற்றவர்களாய் விழிப்புடன் நம்முடைய பணியைச் செய்ய உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நாங்களும் இடையர்களைப் போல எங்களில் பணிப்பொறுப்புகளில் விழிப்புடன் இருக்க உதவிடும். ஊருக்கு வெளியே, ஆபத்தான சூழலில் இருந்த ஆட்டிடையர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு ஆனந்த்ததைக் கொடுத்தது போன்று எங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் மகிழ்ச்சியால் நிரப்புவீராக. ஆமென்.