Friday, 24 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 24

இயேசு



யோவான் 1: 14

இன்றைய நாளின் சிந்தனை: இயேசு

இன்றைய நாளின் அடையாளம் : சிலுவை


கடவுள் நம்மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடாக தன்னுடைய ஒரே பேறான மகனை மனிதராகப் பிறக்கச் செய்தார். மரத்தால் விளைந்த சாபத்தை மரத்தால் வெற்றிகொள்ள இயேசு மரத்திலே மரிக்க வேண்டியிருந்தது. அதற்கு மனிதனாகப் பிறக்க வேண்டியிருந்தது. மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு தொடக்கநூலில் ஏதேன் தோட்டத்தில் உடைபட்டது. உடைந்த இந்த இறைமனித உறவை மீண்டும் சீர்செய்ய மனிதனைக்காட்டிலும் கடவுளே முன்வருகிறார். அதுவே இயேசுவின் மானுட ஏற்பு. 

தன்னை உதறிய மனித இனத்தை, தனக்கு எதிராக தவறுகளை தாராளாமாய் செய்கிற மானுட குலத்தை, தான் அனுப்பிய இறைவாக்கினர்களை தாக்கிய மனித சமூகத்தை கடவுள் வெறுக்கவில்லை. கடவுள் எப்போதும் தன்னுடைய பிள்ளைகள் மீது அன்பும் கருணையும் கொண்டவராய் இருக்கிறார். சேற்றில் தன் பிள்ளை விழும் போது ஓடிச்சென்று, தாயே சேற்றில் இறங்கி தூக்கி எடுப்பாள் அல்லவா? அதைவிட அதிகமாகவே கடவுள் செய்கின்றார். 

இயேசு கடவுளின் அன்பின் அடையாளம். கடவுள் மனிதரை எந்த அளவுக்கு அன்பு செய்தார் என்பதை இயேசுவின் வாழ்வு நமக்கு விளக்கிச் சொல்கிறது. கடவுள் அன்பாய் இருக்கின்றார் என்றும் அதை உறுதிப்படுத்துவதற்கு இயேசு மனிதராகப் பிறந்தார் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவேதான் யோவான் தன்னுடைய திருமடலில் எழுதினார்: ‘நாம் வாழ்வுபெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரேமகனைஉலகிற்குஅனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.’ (1யோவா 4:9). இயேசுவின் பிறப்பு முதல் இறப்புவரை, அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் இறைவனின் அன்பின் திருவெளிப்பாடாகவே அமைந்திருந்தது. 

நாம் விலகிப் போனாலும் விரும்பிநம் அருகே வந்துநிற்கக் கூடியது, தொலைந்து போனாலும் தேடி வரக்கூடியது, நாம் காயப்படுத்தினாலும் நமக்கு கருணைகாட்டக் கூடியது, இதுவே தெய்வீக அன்பு. அது இயேசுவின் அன்பு. அது இறைவனின் அன்பு. அன்பாய் நாமும் இயேசுவைப் போன்று பிறக்கவும், அன்பினால் நம் வாழ்வு தினமும் இயக்கப்படவும் உளமார உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! எம்மை எவ்வளவு அதிகமாக நீர் அன்பு செய்கின்றீர் என்பதை நாங்கள் உம்முடைய திருமகனின் திருப்பிறப்பின் வழியாக அறிந்து கொண்டுள்ளோம். என்றும் நாங்கள் நீர் எம்மீது காட்டும் அன்பிற்கு பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழவும், அன்பால் இயக்கப்படும் வாழ்வை நாங்கள் வாழவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.

Thursday, 23 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர்: 23

தீவனத்தொட்டி



லூக்கா 2:7

இன்றைய நாளின் சிந்தனை : தீவனத்தொட்டி

இன்றைய நாளின் அடையாளம் : வைக்கோலும், தீவனத்தொட்டியும்


மரியாவும் யோசேப்பும் பெத்லகேம் ஊரில் தங்க இடம் இன்றி தத்தளித்தனர். எங்கும் எவரும் கையளவு இடம் கூட தராமல் விரட்டியடித்த சூழ்நிலையில் மாட்டுக் கொட்டகைக்குள் மனமகிழ்வோடு நுழைந்தனர் மரியாவும் யோசேப்பும். மாடுகள் தங்கும் இடத்தில் மானிடமகனுக்கு இடம் கிடைத்தது. பிள்ளைப் பேறு நெருங்கிவந்த வேளையில் துணைக்கு ஆளின்றி துயருற்ற அன்னைமரியாவின் கைப்பிடித்து நம்பிக்கை தந்திருப்பார் யோசேப்பு. 

புறக்கணிப்பும் புறந்தள்ளுதலும் மரியாவுக்கும் யோசேப்புக்கும் ஒருசேர வந்துவிழ தலைச்சன் பிள்ளையை பெற்றெடுக்க அவர்கள் தடைகள் பலவற்றைத் தாண்டவேண்டியிருந்தது. சுற்றிலும் அங்கு ஒரு மனித முகம் கூட இல்லை. முனதை மயக்கும் நறுமணம் இல்லை. களைப்பாற கட்டில் இல்லை. படுக்க பஞ்சு மெத்தை இல்லை. இப்படி சொல்லப் போனால் சராசரியாக நம்முடைய வீடுகளில் இருக்கும் எந்தவொரு வசதியும் அந்த மாட்டுக் கொட்டகையில் இல்லவே இல்லை. மனிதர் நிற்பதற்குக்கூட முகம் சுளிக்கும் இடத்தில் மரியாவின் பிள்ளைப்பேறு நடந்தேறுகிறது. 

மரியா தான் பெற்ற பிள்ளை குழந்தை இயேசுவை துணிகளில் சுற்றி தீவனத்தொட்டியில் கிடத்தினார். மானிடமகனுக்;கு தலைசாய்க்கவும் இடமில்லை என்பது எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது. தீவனத்தொட்டி என்பது மாடுகளுக்கான உணவுப்பொருள் வைக்கப்படும் இடம். மாடுகளுக்கு வாழ்க்கை தரும் உணவை வைக்கின்ற இடத்தினில் மரியா தன்னுடைய தலைமகன் இயேசுவைக் கிடத்துகின்றாள். இது மனிதருக்கான நிலைவாழ்வு தரும் உணவாக இயேசு இருக்கப்போகின்றார் என்பதை எடுத்துக்காட்டும் அருமையான அடையாளமாக இருக்கின்றது. 

மேலான இடங்களில் தங்கி மகிமையோடு வாழ வேண்டும் என்கின்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு. ஆனால் இயேசுவோ தன்னுடைய பிறப்பிடமாக மாட்டுக்கொட்டகையையும் தன்னுடைய முதல் தொட்டிலாக தீவனத்தொட்டியையும் தேர்ந்தெடுக்கின்றார். வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவாக, நம் மீட்பர் இயேசு இருக்கின்றார் என்பதை நாமும் உணர்ந்திடுவோம். அவரை திருப்பலியில் ஆன்மீக உணவாக உட்கொள்ளும் நாமும் சமூகத்திற்கு நம்மையே பலியாக்கிடத் தீர்மானித்து அதற்காக செயல்பட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மையே எங்களுக்காகப் பலியாக்கப் போகின்றீர் என்பதன் அடையாளமாக நீர் பிறந்தவுடன் தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டீர். உம்மையே எங்கள் ஆன்ம உணவாக உட்க்கொள்ளும் நாங்களும் உம்மால் திடப்படுத்தப்பட்டவர்களாக மாறி, உம்மைப்போல பிறருக்காகப் பலியாகும் வாழ்வு வாழ எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.

Wednesday, 22 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 22

பெத்லகேம்




மத்தேயு 2:9

இன்றைய நாளின் சிந்தனை: பெத்லகேம்

இன்றைய நாளின் குறியீடு: விண்மீன்


யூதேயா நாட்டில் பெத்லகேம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இடம் ஆகும். இது தாவீதின் ஊர். இங்குதான் தாவீது வாழ்ந்தார் என்றும், மன்னராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்றும் விவிலியத்தில் படிக்கின்றோம். பெத்லகேம் என்ற சொல்லுக்கு அப்பத்தின் வீடு என்பது அர்த்தம். இது எருசலேமிலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. 

பெத்லகேம் என்ற ஊர்தான் தாவீதின் வழிமரபில் வந்த யோசேப்பினுடைய சொந்த ஊராகும். அகுஸ்து சீசர் காலத்தில் மக்கள் தொகை முதன் முதலில் கணக்கிடப்பட்டபோது

யோசேப்பும்;, மரியாவும் தங்கள் பெயரைப் பதிவு செய்ய கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற ஊருக்குப் போனார்கள் என்று நற்செய்தியாளர் லூக்கா எழுதுகிறார். பழைய ஏற்பாட்டு மீக்கா இறைவாக்கினர் மெசியாவின் பிறப்பைப் பற்றி எழுதும் போது மெசியா பெத்லகேமில் பிறப்பார் என்று குறிப்பிடுகின்றார். எருசலேம் தலைநகரான பின்பு பெத்லகேம் என்பது பெரியதாய் வெளியே அடையாளம் எதுவும் தெரியப்படாத ஊராகியது. 

கடவுள் மனிதகுலமீட்பின் வரலாற்றில் மிகச் சாதாரணமானவற்றையே தேர்ந்து கொண்டார். பிரபலமானவற்றையும், பிரசித்திப்பெற்றவற்றையும் தேடிப்போகாமல் எளியவற்றையும், சிறியவற்றையும் தேடிப்போவது கடவுளின் குணம். இவ்வகையில் அடையாளமும் அங்கீகாரமும் சிறிதும் இல்லாத இந்த பெத்லகேம் என்கிற ஊரைத் தன்னுடைய திருமகன் இயேசுவின் பிறப்பிற்காக கடவுள் தேர்ந்தெடுக்கிறார். புறக்கணிக்கப்பட்ட ஓரம்கட்டப்பட்ட ஒரு சிறிய ஊர்தான் அன்றைய பெத்லகேம். இதுதான் இயேசுவின் பிறந்த ஊர். இங்கேதான் விண்மீன் கீழ்த்திசை ஞானியர் மூன்று பேரை அழைத்து வந்தது. மறைவாய்க் கிடந்த பெத்லகேம் இயேசுவின் பிறப்பால் மகத்துவம் பெற்றது. 

பெத்லகேம் என்னும் ஊர் நம்முடைய வாழ்க்கையின் யதார்த்தமான நிலையைக் கண்முன் நிறுத்துகிறது. பிறர் கண்களுக்கு மறைவான, மங்கலான, அற்பமான, அவலமான வாழ்க்கை நிலையில் நாம் இருந்தாலும் கடவுள் நம்மையும் தேர்ந்தெடுத்து தேடி வருவார். கடவுளின் வருகைக்காக நாமும் பெத்லகேமைப் போல பகட்டையும், புகழையும் விடுத்து எளிமையிலும், தாழ்ச்சியிலும் நம்மைத் தயாரிக்க முற்பட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! எங்கள் வாழ்வில் பெயர், புகழ், பெருமை, போன்றவற்றை தேடி அலையாமல், எப்போதும் எளிய வாழ்க்கை வாழ எங்களுக்கு கற்றுத்தாரும். இவ்வுலகில் சிறியவர்களாய், நலிந்தவர்களாய், வலுக்குறைந்தவர்களாய் எங்களோடு வாழும் மனிதர்களைத் தேடி, உம்மைப் போல நாங்களும் பயணப்பட எங்களுக்கு அருள் புரியும். ஆமென்.