Tuesday, 25 August 2020

திருத்தூதர்களின் பெயர்களும் அர்த்தங்களும்

 திருத்தூதர்களின் பெயர்களும் அர்த்தங்களும்



பேதுரு                      –  பாறை

அந்திரேயா            –          துணிச்சல்மிக்கவர், ஆண்மையுள்ளவர்

யாக்கோபு              –         குதிங்காலைப் பிடிப்பவன்

யோவான்               –          கடவுளின் கொடை, கடவுளின் அருள்

பிலிப்பு                    –           குதிரைகளின் நண்பர்

பர்த்தலமேயு                  தாலமியின் மகன்

தோமா                              இரட்டை

மத்தேயு                            கடவுளின் பரிசு

யாக்கோபு                       குதிங்காலைப் பிடிப்பவன்

யூதா ததேயு                    பாராட்டப்பட்டவர் 

சீமோன்                  –           கேட்கிறவர்

மத்தியா                           கடவுளின் பரிசு


Monday, 17 August 2020

உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையின் கர்தினால்கள்

 யார் இந்த கர்தினால்கள்?

கர்தினால்கள் என்பவர்கள் உரோமைக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆட்சி பீடத்தினுடைய உயர்ந்த அதிகார அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். கர்தினால்களை நியமிக்கும் அதிகாரம் திருத்தந்தைக்கு மட்டுமே உண்டு. கர்தினால் பொறுப்பில் உள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் ‘கர்தினால் குழாம்’ (College of Cardinals) என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் ‘திரு அவையின் இளவரசர்கள்’ என்று அழைப்பதும் உண்டு.

பெயர் விளக்கம்

‘கர்தினால்’ என்னும் சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ‘அச்சாணி’ என்னும் அர்த்தம் உடையது. திரு அவையில் அச்சாணி போன்று மைய இடம் வகிப்பவர்கள் என்னும் பொருளில் ‘கர்தினால்’ என்னும் பட்டம் சிலருக்கு வழங்கப்படுகிறது. மத்திய காலங்களில் உரோமை மாநில எல்கைக்குள் திரு அவையின் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சிப் பொறுப்பில் பணிபுரியும் திருப்பணியாளர்களுக்கு மட்டுமே இத்தலைப்பு வழங்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் ஒட்டுமொத்த உலகளாவிய திரு அவை முழுவதற்கும் இது பரவியது.

கர்தினால்களின் அடையாளம்

கர்தினால்கள் தங்கள் தலையில் சிவப்பு நிற சிறு தொப்பியும், இடையில் சிவப்பு நிற கச்சையும் அணியும் தகுதி பெறுகின்றனர். இந்த சிவப்பு வண்ணம் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு துணிந்தவர்கள் என்பதைக் குறிக்கும். புதிய கர்தினால்களை நியமிக்கும் சடங்கின்போது, திருத்தந்தையினால் ஒரு முத்திரை மோதிரம் வழங்கப்படும். இதன் வெளிப்புறத்தில் திருத்தந்தையினால் தெரிவு செய்யப்படும் புனிதர்களின் படமும், உட்புறத்தில் திருத்தந்தையரின் ஆட்சி முத்திரையும் பொறிக்கப்பட்டிருக்கும்.

கர்தினாலின் பதவிக் கேடயம் 



கர்தினாலின் பதவிக் கேடயம் அதன் மேல்பகுதியில் காணப்படும் சிவப்பு நிற விரிதொப்பியால் அடையாளம் காட்டப்படும். தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். இத்தோடு அவர்களின் விருதுவாக்கும்  இணைக்கப்படுவது வழக்கம். 

கர்தினால்கள் நியமனம்

குறைந்த அளவு, குருத்துவ நிலையில் உள்ள மற்றும் கோட்பாடு, ஒழுக்கநெறி, பக்தி மற்றும் செயல் விவேகம் ஆகியவற்றில் உண்மையில் சிறந்து விளங்கும் ஆண்களை திருத்தந்தை தனது சொந்த விருப்பத்தால் கர்தினால்களாக உயர்த்தலாம். இவ்வாறு உயர்த்தபடும் நபர், ஏற்கனவே ஆயராக இல்லாதவர்கள் ஆயர் திருநிலைப்பாட்டைப் பெறவேண்டும்.  

கர்தினால்கள் திருத்தந்தையின் ஆணையால் உருவாக்கப்படுகின்றனர். இவ்வாணை கர்தினால்கள் குழாம் முன்னிலையில் திருத்தந்தையின் ஆலோசனைக்குழு கூடும் போது வெளியிடப்படும்; இவ்வெளியீடு செய்யப்பட்ட கணத்திலிருந்து சட்டத்தால் வரையறுக்கப்பட்ட கடமைகளையும் உரிமைகளையும் அவர்கள் பெறுகின்றனர். (திரு அவைச் சட்டம் எண்: 351)



மூவகை கர்தினால் அணிகள்

திருத்தந்தை இரண்டாம் உர்பன் காலத்தில் (1088 - 1099) ஏற்படுத்தப்பட்ட திரு அவைச் சீர்திருத்தத்தின் போது கர்தினால்கள் குழாமில் மூன்று அணிகள் அமைக்கப்பட்டன. அவை முறையே ஆயர்கள் அணி, குருக்கள் அணி மற்றும் திருத்தொண்டர்கள் அணி.

ஆயர்கள் அணி: ஆயர்கள் அணியானது திருத்தந்தையால் ஒரு புறநகர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள கர்தினால்களையும், கர்தினால்களாக்கப்பட்ட கீழைத் திருஅவைகளின் மறைமுதுவர்களையும் கொண்டுள்ளது.

குருக்கள் அணி: இவர்கள் உலகில் உள்ள முக்கிய மறைமாவட்டங்களை நிர்வகிக்கும் ஆயர்களாகவோ, பேராயர்களாகவே இருப்பர். ஆயினும் சிலர் உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராகவும் இருக்கின்றனர்.

திருத்தொண்டர்கள் அணி: இவர்கள் உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராக இருப்பர்.

குருக்கள் அல்லது திருத்தொண்டர்கள் அணியின் ஒவ்வொரு கர்தினாலுக்கும் உரோமைத் தலைமைக்குருவால் ஓர் உரிமைத்தகுதி அல்லது உரோமை நகரின் திருத்தொண்டர்களின் ஒரு வட்டத் தொகுதி வழங்கப்படுகிறது. (திரு அவைச் சட்டம் எண்: 350)


உரோமை ஆலயங்களின் உரிமைத்தகுதி

கி.பி. 1059 இல் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உரோமையின் முக்கிய குருக்களிடமும், உரோமையின் ஏழு புறநகர் ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள ஆயர்களிடமும் இருந்தது. இவ்வழக்கத்தாலேயே இன்று வரையும் கர்தினாலாக உயர்த்தப்படுபவருக்கு, உரோமையின் புறநகர் ஆலயத்தின் அல்லது உரோமையிலுள்ள மற்றோர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்படும். 

புறநகர் ஆலயத்தின் அல்லது உரோமையிலுள்ள மற்றோர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள கர்தினால்கள், அவற்றின் பொறுப்பேற்றபின், அந்த மறைமாவட்டங்கள் அல்லது ஆலயங்களின் நலனைத் தங்கள் ஆலோசனையாலும் ஆதரவாலும் மேம்படுத்த வேண்டும்; ஆயினும், அவற்றின் மீது அவர்களுக்கு எவ்வித ஆட்சி உரிமையும் இல்லை. அவற்றின் சொத்துக்கள் நிர்வாகம், ஒழுங்குமுறை அல்லது ஆலயங்கள் பணி ஆகியவற்றில் எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தலையிடவும் முடியாது. (திரு அவைச் சட்டம் எண்: 357)

கர்தினால் குழாமின் உறுப்பினர்களாக்கப்பட்ட கீழைத் திருஅவையின் மறைமுதுவர்கள் தங்களுடைய மறைமுதுவர் ஆட்சிப்பீடத்தை உரிமைத் தகுதியாய்க் கொண்டுள்ளனர். எனவே இவர்களுக்கு உரோமை ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்படுவதில்லை.

கர்தினால்களின் வசிப்பிடம்

கர்தினால்கள் உரோமைத் தலைமைக்குருவோடு ஆர்வமுடன் ஒத்துழைக்கக் கடமைப்பட்டுள்ளனர். எனவே, செயலகத்தில் ஏதாவது ஒரு பதவியைக் கொண்டிருக்கும் மறைமாவட்ட ஆயராக இல்லாத கர்தினால்கள் உரோமையில் வாழக் கடமைப்பட்டுள்ளனர். ஒரு மறைமாவட்டத்தில் ஆயராகப் பொறுப்பு வகிக்கும் கர்தினால்கள் உரோமைத் தலைமைக்குருவால் அழைக்கப்படும்போதெல்லாம் உரோமைக்குச் செல்ல வேண்டும். (திரு அவைச் சட்டம் எண்: 356)

கர்தினாலின் அதிகாரங்களும் பணிகளும்

புதிய திருத்தந்தையை தேர்வு செய்வது - திருப்பீடத் தேர்தல்

திருத்தந்தையின் இறப்பாலோ அல்லது பணித்துறப்பாலோ அவருடைய பணியிடம் வெறுமையாகும் வேளையில் சட்ட விதிமுறைக்கேற்ப புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும். இக்காலத்தில், திருச்சபையின் அன்றாட நிர்வாகப் பொறுப்பு கர்தினால் குழுவிடம் இருக்கும். 

திரு ஆட்சிப்பீடம் காலியானால், கர்தினால் குழாம் சிறப்புச் சட்டத்தில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மட்டுமே கொண்டிருள்ளது. (திரு அவைச் சட்டம் எண்: 359) 

இன்றைய திருச்சபைச் சட்டப்படி, திருத்தந்தைப் பணியிடம் வெறுமையாகின்ற வேளையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கூடும் திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்க வேண்டுமானால், கர்தினால் 80 வயதினைத் தாண்டாதவராக இருக்கவேண்டும்.

தனிப்பட்ட கர்தினால்களுக்கு, முந்தைய திருத்தந்தையால் கொடுக்கப்பட்டிருந்த உரோமைச் செயலகப் பொறுப்புகளையும், திருத்தந்தையின் தூதர்களாக அவர்கள் வகித்தப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் தானாகவே இழப்பர். இப்பொறுப்புகள் புதிதாய் தேர்வு செய்யப்படும் திருத்தந்தையால் மீண்டும் உறுதி செய்யப்படும் வரை அவர்களால் அவற்றை நிறைவேற்ற முடியாது.


திருத்தந்தையின் தூதர்களாக

ஒரு சில மிகச்சிறப்பு நிகழ்வுகளில் அல்லது ஒரு சில கூட்டங்களில் தம் பிரதிநிதியாகச் செயல்படத் தமது சிறப்புத் தூதராக அதாவது தமது ‘மறு பிம்பமாக’ இருக்கும் பணியானது திருத்தந்தையால் ஒரு கர்தினாலிடம் ஒப்படைக்கப்படலாம். அவ்வாறே மேய்ப்புப்பணி சார்ந்த குறிப்பிட்ட ஓர் அலுவலைத் தமது சிறப்புத் தூதுவராக நிறைவேற்ற அவர் ஒரு கர்தினாலைப் பணிக்கலாம்;. அத்தகைய கர்தினால்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் காரியங்களில் மட்டுமே சட்ட உரிமை பெற்றுள்ளனர். (திரு அவைச் சட்டம். எண்: 358)

அன்றாடப் பணிகள்

கர்தினால் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதும், திருத்தந்தை வேண்டும்போது அவருக்கு தனியாகவோ, குழுவாகக் கூடியோ ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணிகளுள் அடங்கும். 

மேலும், கர்தினால்கள் அதிமுக்கிய ஆய்வுக்குரிய பொருள்களைப் பற்றி விவாதித்திட அழைக்கப்படும்போது உரோமைத் தலைமைக்குருவுக்குக் குழுவாக உதவி புரிகின்றனர். அல்லது சிறப்பாக அனைத்துலகத் திரு அவையின் அன்றாட அக்கறையில் பல்வேறு பதவிகள் மூலம் அவர்கள் தங்கள் உதவியை நல்குவதால் தனியாக உதவி புரிகின்றனர். (திரு அவைச் சட்டம் எண்: 349)

மறைமாவட்டங்களை நிர்வகித்தல், உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராக இருத்தல் போன்ற பணிகளையும் கர்தினால்கள் செய்கின்றனர்.

பணித்துறப்பு

பேராயங்களுக்கும், உரோமைச் செயலகம் மற்றும் வத்திக்கான் நகரின் நிரந்தர நிறுவனங்களுக்கும் தலைமை ஏற்கும், 75 வயது நிறைவடைந்த கர்தினால்கள் தங்கள் பணித்துறப்பை திருத்தந்தையிடம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து அதற்கேற்ப ஏற்பாடு செய்வார். (திரு அவைச் சட்டம் எண்: 354)


Friday, 14 August 2020

மூன்று அருள் நிறைந்த மரியே

 மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சி 



வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது ஏறக்குறைய கி.பி. 13 ஆம் நூற்றாண்டளவில் ஜெர்மன் நாட்டில் இப்பக்தி முயற்சி பழக்கத்தில் இருந்தது என்பதை அறிகிறோம். தினமும் இரவில் தூங்கப்போகும் முன்பாக ஆன்ம சோதனை செய்துவிட்டு இந்த மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை செபிப்பது வழக்கத்தில் இருந்தது. 

மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை மரியன்னை தாமே 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பெனடிக்ட் துறவற சபையின் துறவியாகிய புனித மெக்டில்டாவுக்கு காட்சியளித்தபோது வழங்கினார். இது மரியன்னையோடு சேர்ந்து மூவொரு கடவுளுக்கு நன்றி செலுத்தும் பக்தி முயற்சி ஆகும். 

தந்தையாகிய இறைவன் மரியாவுக்கு வழங்கிய மேலான வல்லமைக்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும், இறைமகன் இயேசு மரியாவுக்கு வழங்கிய ஞானத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும், தூய ஆவியாராம் இறைவன் மரியாவுக்கு வழங்கிய அன்பு மற்றும் இரக்கத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டும் இப்பக்தி முயற்சியில் செபிக்கப்படும். 


புனித மெக்டில்டாவுக்கு அன்னையின் காட்சி

புனித மெக்டில்டா 1241 இல் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். ஒரு நாள், தன் மரணத்தைப் பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தாள். அப்போது தன் வாழ்க்கையின் கடைசி தருணங்களில் அதாவது இறப்பின் வேளையில் தனக்கு உதவும்படி இறைவனின் தாயிடம் அன்பாய் வேண்டினார்.

அதற்கு இறைவனின் தாய் புனித மரியா இவ்வாறு பதிலளித்தார்: 

‘ஆம். நான் உனக்கு உதவி செய்வேன்;. ஆனால் அதற்காக நீ ஒவ்வொரு நாளும் மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டை என்னிடம் செபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதல் அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், தந்தையாகிய இறைவன் என்னை மாட்சியின் அரியணைக்கு உயர்த்தி, வானத்திலும் பூமியிலும் என்னை மிகவும் சக்திவாய்ந்த படைப்பாக ஆக்கியது போல, நானும் இப்பூமியில் உங்களை வலுப்படுத்தி, எதிரியின் ஒவ்வொரு சக்தியையும் உங்களிடமிருந்து விரட்டி, நான் உங்களுக்கு உதவ செபியுங்கள்.   

இரண்டாவது அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், இறைவனுடைய திருமகனாம் இயேசு எல்லா புனிதர்களையும் விட தூய்மைமிகு மூவொரு கடவுளைப் பற்றி அதிக அறிவைக் கொண்டிருக்கும் அளவிற்கு என்னை ஞானத்தால் நிரப்பியதைப் போல, உங்கள் வாழ்க்கையின் கடைசி தருணங்களில் தவறுகள் மற்றும் அறியாமையின் நிழல்கள் உங்களை இருளாக்கிடாமல் இருக்க, உங்கள் ஆன்மாவை விசுவாசத்தின் ஒளியினாலும் உண்மையான ஞானத்தினாலும் நிரப்பி நான் உங்களுக்கு உதவி செய்திட செபியுங்கள். 

மூன்றாவது அருள் நிறைந்த மரியே மன்றாட்டில், கடவுளுக்கு அடுத்து, நான் மிகவும் இனிமையானவராவும், இரக்கமுள்ளவராகவும் இருக்கும்படியாக, தூய ஆவியார் அவருடைய அன்பின் இனிமையால் என்னை நிரப்பி, என்னை மிகவும் அன்பானவராக்கியது போல, நானும் உங்கள் மரண நேரத்தில், உங்கள் மரணத்தின் துக்கமும் கசப்பும் உங்களுக்கு மகிழ்ச்சியாக மாறும்படிக்கு, தெய்வீக அன்பின் மேன்மையால் உங்கள் ஆன்மாவை நிரப்பி உங்களுக்கு உதவி செய்திட செபியுங்கள்.”


புனிதர்களும் திருத்தந்தையர்களும்

இப்பக்தி முயற்சி பல்வேறு புனிதர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று என்பதையும் நாம் பார்க்கிறோம். குறிப்பாக புனித தொன் போஸ்கோ, புனித பதுவை அந்தோனியார், புனித மரிய அல்போன்ஸ் லிகோரி போன்றோர் இப்பக்தி முயற்சியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். 

மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை ஒப்புரவு அருளடையாளத்தில் பாவப் பொறுத்தலாக வழங்கியவர் புனித போர்ட் மௌரீஸ் லியோனார்டு. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சிக்கு தனது திருத்தூது ஆசீரை வழங்கியவர் திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர்.