Tuesday, 30 November 2021

ஈசாய் மரம் - திருவருகைக்காலம்

 ஈசாய் மரம்   

திருவருகைக் கால தயாரிப்பு பக்தி முயற்சி



ஈசாய் மரம் - ஏன்?

இது திருவருகைக் கால தயாரிப்பு பக்தி முயற்சி.

காலத்தால் மிகப் பழமையான ஒரு மரபும்  சடங்கும் ஆகும்.

ஆதாம் முதல் இயேசு வரை வாழ்ந்த பழைய ஏற்பாட்டின் மிகமுக்கியமான இயேசுவின் முன்னோர்களை நினைவு கூரும் வழிமுறை.

இயேசுவின் வருகைக்காக காத்திருந்த பழைய ஏற்பாட்டு மனிதர்களை, அன்றாடம் அடையாள வடிவில் ஒரு மரத்தில் தொங்கவிடச் செய்வதன் வழியாக, மெசியாவின் வருகைக்காக பழைய ஏற்பாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்ததை நாமும் தியானிக்க முடிகிறது. 

இம்மரத்தில் தொங்கவிடப்படும் விவிலிய மாந்தர்கள் மூலமாக, இயேசுவின் பிறப்புக்கு முந்தைய பழைய ஏற்பாட்டின் மீட்பின் வரலாற்றினை இப்பக்தி முயற்சி திரும்பிப் பார்க்க வைக்கிறது. 

கிறிஸ்துமஸ் மரத்தினை விவிலிய ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அடையாளப்படுத்தும் அர்த்தமுள்ள பக்தி முயற்சி.


வரலாறு



மத்தியக் காலங்களில் திரு அவையில் காணப்பட்ட மரபு இது.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில பேராலயங்களில் காணப்படும் ஓவியங்களில் இது பற்றி பார்க்க முடியும். 

குறிப்பாக கி.பி. 1260 இல் அர்ப்பணிக்கப்பட்ட சார்ட்ரஸ் பேராலயத்தின் சன்னல் கண்ணாடியில் ஈசாய் மரத்தின் மரபைச் சுட்டிக்காட்டும் ஓவியத்தைக் காணமுடியும்.

இவ்வகையான ஓவியங்களில் காணப்படும் மரத்தின் கிளைகளில் பழைய ஏற்பாட்டு மனிதர்களின் படங்களும், மரத்தின் உச்சியில் இயேசுவின் தாய் மரியா மற்றும் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பின் படங்களும், அதற்கு மேலாக இயேசுவின் படமும் வரையப்பட்டிருக்கும். 

பயன்பாடு


குடும்பங்களில் அனைவரும் இணைந்து செபிக்கவும், தியானிக்கவும் இது உதவுகிறது.

குழந்தைகளுக்கு பழைய ஏற்பாட்டின் முக்கியமான மனிதர்களைப் பற்றிக் கற்றுத்தர இது பயன்படுகிறது. 

குடும்பங்கள், குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் பங்குகள் ஆகியவற்றில் கிறிஸ்து பிறப்பை தகுந்த விதத்தில் கொண்டாடுவதற்கான நல்ல தயாரிப்பாக இது அமைகிறது.

மீட்பின் வரலாற்றை மீண்டுமாக மீள்பார்வை செய்வதற்கான நல்ல வாய்ப்பாக இது இருக்கிறது.

கதையாடல்கள் வடிவிலும், அடையாளங்கள் வடிவிலும், குறியீடுகள் வடிவிலும் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதத்தில் பழைய ஏற்பாட்டு மாந்தர்களை நமக்கு இது அறிமுகப்படுத்துகிறது.

விவிலியத்தை மையப்படுத்தியதாகவும், இறைவார்த்தையின் ஒளியில் அமைக்கப்பட்டதாகவும் இம்மரபு அமைந்துள்ளது.

குறிப்பு: டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை கிறிஸ்து பிறப்புக்கு தகுந்த விதத்தில் நம்மைத் தயாரிப்பு செய்வதற்காக 24 அடையாளங்களும், அவற்றிற்கான தியானச் சிந்தனைகளும்  தொடர்ந்து கொடுக்கப்படும். 

Friday, 25 June 2021

இயேசுவின் தூய்மைமிகு இதயம்

திருஇதய ஆண்டவர் புனித மார்கரெட் மரியாவின் வழியாக அளித்த 12 வாக்குறுதிகள்




1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.

2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.

3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம்.

4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.

5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.

6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும்.

7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.

8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.

9. எந்த வீட்டில் நம் திருஇதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.

10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.

11. திருஇதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும்.

12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம் பகைவராகவோ, அருளடையாளங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.


Monday, 31 May 2021

வணக்க மாதம் : நாள் - 31

 

 நிறைவின் அன்னை

(கர்சி - இத்தாலி)


1640 ஆம் ஆண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் இத்தாலியின் சிறிய நகரமான கர்சியில் ஒரு மோசமான நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் செபிக்கவும், கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டவும்  மக்கள் ஆலயத்தில் கூடிவந்தனர். 

ஒரு நாள் பாக்லியோ என்ற நபர் தனது கால்நடைகளை காணவில்லை என்பதால் அவற்றைத் தேடிச் சென்றார். அப்போது திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி வெளிப்படுவதைக் கவனித்தார். அவர் கிட்டத்தட்ட பயந்து ஓடத்தொடங்கினார். மரியா அவரைத் திரும்ப அழைத்தார். தன்னை விண்ணக அரசி என்று அவருக்கு அடையாளப்படுத்தினார்.  பின்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள  வறட்சியின் கொடுமைக்காக தான் வருத்தப்படுவதாகவும், இரக்கம் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் மரியா, பாக்லியோவிடம் கர்சியின் அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களுடன் சேர்ந்து தனக்கான ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அவ்விடத்திற்கு வரும்படியாக பங்கு குருவிடம் சென்று தெரிவிக்கச் சொன்னார். 

அவ்வாறு செய்யப்பட்டால், மரியன்னை கர்சியையும் சுற்றியுள்ள பகுதியையும் தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்வார் என்றும், அதே ஆண்டின் இறுதியில் யாரும் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஏராளமான அறுவடை இருக்கும் என்று பாக்லியோவுக்கு உறுதியளித்தார். கடைசியாக, பாக்லியோ தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஏனென்றால் மரியன்னை அவரை தனது பணிக்காகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும்;, மேலும் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட பின்பு, அவர் அங்கு தனக்காக பணியாற்ற வேண்டுமெனவும் சொன்னார். பின்னர் அன்னை தோன்றியபடியே திடீரென்று மறைந்துவிட்டார்.

இந்த நிகழ்வை பாக்லியோ குருவிடம் சொன்னார். பின்பு குருவோடு இணைந்து கர்சி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாக்லியோ தலைமையில், மரியா தோன்றிய இடத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அங்கே அவர்கள் முழங்காலில் நின்று செபித்தார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நகரத்திற்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கினர். ஆனால் சிறிது தூரம் சென்றதுமே, மழை பெய்து கூட்டம் முழுவதையும் நனைத்தது. மூன்று நாட்கள் நல்ல மழை பெய்தது. அறுவடை முடிந்து, அனைவரின் களஞ்சியமும் நிரம்பி வழிந்தது. விரைவில் நன்றியுள்ள மக்கள் புனித மரியாவுக்கு ஓர் ஆலயத்தை எழுப்பினர். 

திருவிழா நாள்: சனவரி 5

செபம்: நிறைவின் அன்னையே! வறட்சியில் பிடியில் சிக்கி நாங்கள் வேதனைப்படும் போதெல்லாம் நீரே எங்கள் வாழ்வின் களஞ்சியங்கள் நிரம்பிட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.