Monday, 5 April 2021

ஈஸ்டர்

 உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்)



இயேசுவின் உயிர்ப்பையே ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். 

ஈஸ்டர் பண்டிகையின் தோற்றம்



கிபி 29 லிருந்து இயேசுவின் உயிர்ப்பு நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்டதென்று வரலாறு சொல்கிறது.

ஆனாலும், கிபி 325 இல் உரோமையை ஆட்சி செய்த மன்னன் கான்ஸ்டன்டைன் என்பவன் காலத்திலேதான் இது பரவலானதாகவும், பிரபலமாகதாகவும் வரலாறு கூறுகிறது. 


ஈஸ்டர் என்பதன் பொருள் என்ன?



கிரேக்கத் தொன்மங்களிலே ‘ஈஸ்டர்’ என்பது விடியலுக்கான பெண் தேவதையின் பெயராகும். 

இந்த வார்த்தைக்கு வசந்த காலம் என்ற அர்த்தமும் உண்டு.  

வசந்த காலத்தின் தொடக்கத்தில்தான் ஈஸ்டர் தேவதையின் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. 


ஈஸ்டரும் முயலும் 



ஈஸ்டர் தேவதையின் விலங்கு முயல். 

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதர்கள் புல்வெளிகளில் முயல்கள் துள்ளிவிளையாடுவதைப் பார்த்தால் வசந்தகாலம் ஆரம்பமானதென அறிந்துகொண்டனர். 

இவ்வாறு முயல்களின் மகிழ்வையும், வசந்தகாலத்தின் வருகையையும் தொடர்புபடுத்தி இதையே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடத்தொடங்கினர். 

இன்றும் ஐரோப்பியாவில் மதச்சார்பற்ற நாடுகள்கூட ஈஸ்டர் பண்டிகையின்போது முயல் வடிவிலான தின்பண்டங்களைச் செய்து உண்பது வழக்கம்.


ஈஸ்டரும் முட்டையும் 


முட்டை என்பது வாழ்க்கையின் முடிவற்ற சுழற்சியை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது ஐரோப்பியரின் பாரம்பரிய நம்பிக்கை. 

புதுவாழ்வு மற்றும் புதுப்பிறப்பின் குறியீடாக முட்டை கருதப்பட்டது. 

முட்டை அடைகாக்கப்பட்டு புதிய உயிர் உருவாவதுபோன்று, வசந்த காலத்தில் பூமி மீண்டும் பிறக்கிறதென்று கருதிய ஐரோப்பியர்கள் ஈஸ்டர் நாளில் சாயம் பூசப்பட்ட அல்லது வண்ணம் தீட்டப்பட்ட முட்டைகளை பரிசளித்துக் கொண்டாடினர். 

கிறிஸ்தவ சமயக் கண்ணோட்டத்தில் முட்டை கல்லறையின் குறியீடாகவும், முட்டை உடைபடுவது இயேசுவின் உயிர்ப்பிற்கான குறியீடாகவும் வழங்கப்படுகிறது.  

முட்டைகளின் மீது பெரும்பாலும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. இது இயேசு நமக்காக இரத்தம் சிந்தியதைக் குறித்துக்காட்டுகிறது. 


விவிலியமும் இயேசுவின் உயிர்ப்பும்



விவிலியத்தில் நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் உயிர்ப்பு பற்றிய பல்வேறு தரவுகளைத் தருகின்றன. 

இயேசு எவ்வாறு உயிர்த்தார் என்பதையும், உயிர்ப்பு எப்படி நிகழ்ந்தது என்னும் செய்திகளைத் தருவதைவிட, அது ஏன் நிகழ்ந்தது என்பதற்கே நற்செய்தி நூல்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. 

தன் உயிர்ப்பு நிகழ்வின் மூலமாக இயேசு உலகின் எல்லாவற்றையும் வெற்றிக்கொண்டார் என்பதே அது குறித்துக் காட்டும் செய்தி.

இயேசுவின் இறப்பிற்குப் பிறகு, அவருடைய சீடர்கள் நம்பிக்கையற்று, சோர்வுற்று, தளர்ந்திருந்த சமயத்தில் இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை சந்தித்து தைரியமும், ஊக்கமும் அளித்து, இறைப்பணிக்காக மீண்டும் அவர்களை நியமித்தார். 

இயேசுவின் உயிர்த்த தோற்றத்தை ஓர் உண்மை நிகழ்வாக விவிலியம் நமக்குக் காட்டுகிறது. 

சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் ஒரு கனவோ, உளவியல் மாற்றமோ அல்ல, மாறாக இது உண்மை நிகழ்வு ஆகும்.


உயிர்ப்புக்கான மூன்று சான்றுகள்



1) காலியாயிருந்த இயேசுவின் கல்லறை

2) உயிர்ப்புக்குப் பிறகான இயேசுவின் தோற்ற நிகழ்வுகள்

3) திருத்தூதர்கள் வாழ்வில் காணப்பட்ட திடீர் மாற்றம்


Wednesday, 31 March 2021

தவக்காலத் திருவுரைகள் - புனித வாரத்தின் புதன்

 இயேசுவை விற்க விலை பேச வேண்டாம்!

மத்தேயு 26:14-25



விற்பதும் வாங்குவதும் வாழ்க்கை என்னும் வியாபாரத்தில் தொடர்ந்து நடக்கும் செயல்களே. ஒன்றை வாங்குவதற்கு, நாம் இன்னொன்றை கொடுக்கவோ அல்லது இழக்கவோ அல்லது விற்கவோ வேண்டியிருக்கிறது. எதை விற்கிறோம்? எதை வாங்குகிறோம்? என்கிற தெளிவு இல்லாமல் போனால் வாழ்க்கையில் வசந்தம் வற்றிப்போகும். காலை விற்று செருப்பும், கையை விற்று கைக்கடிகாரமும் வாங்கும் நிலை போன்று நம் ஆன்மீக வாழ்வு மாறிக் கொண்டு வருகின்றது. 

இன்றைய நற்செய்தியில் யூதாசு இயேசுவுக்கு விலை பேசுகிறான். இதுவரை இயேசுவில் தனது நம்பிக்கையை, இயேசுவில் தனது கனவை, இயேசுவில் தனது பற்றுறுதியை வைத்திருந்த யூதாசு, இப்போது அவற்றை எல்லாம் பணத்தின் மீது வைக்கிறான். முன்பு இயேசு தன்னை அழைத்தபோது, அவரைப் பின்பற்றுவதற்காக யூதாசு தன்னையே அவருக்கு கையளித்தான். இப்போது அவரையே யூதத் தலைமைக் குருவுக்கு கையளிக்கிறான். எந்த பணத்திற்காக யூதாசு தனக்கு சொந்தமான இயேசுவைக் காட்டிக்கொடுத்தானோ, கடைசியில் அப்பணத்தையே அவனால் சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. இயேசுவிடம் தன்னையே அவன் விற்றபோது அவனுக்கு வந்தது வாழ்வு. இயேசுவை தலைமைச் சங்கத்திடம் விற்றபோது அவனுக்கு வந்தது சாவு.      

ஒருவர் தனக்குரிய யாவற்றையும் விற்று முத்தை வாங்கினார் என்றும் இன்னொருவர் தனக்குரிய அனைத்தையும் விற்று பெரும் புதையல் இருக்கும் நிலத்தை வாங்கினார் என்றும் நற்செய்தியில் ஓர் இடத்தில் இயேசு கூறுவார். விலை மதிப்பு மிகுந்த முத்தும், பெரும் புதையல் உள்ள நிலமும் இயேசுவே. இயேசுவை சொந்தமாக்கிக் கொள்வதற்காக எதையும் விற்றுவிடலாம். ஒருவன் இயேசுவை சொந்தமாக்குவது என்பது, தனக்குரிய யாவற்றையும் விற்றாவது பெரும் புதையல் உள்ள நிலத்தையோ அல்லது விலை மதிப்பு மிகுந்த முத்தையோ சொந்தமாக்குவதைவிட மேலானது ஆகும். 

அன்று வரலாற்றில் ஒரு முறை இயேசுவுக்கு விலை பேசினான் யூதாசு. ஆனால் இன்று நாமோ தினமும் ஓராயிரம் முறை நமது வேலைக்காக, தொழிலுக்காக, படிப்பிற்காக, பொழுதுபோக்கிற்காக, திறமைகளுக்காக என்று இயேசுவுக்கு விலை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். அன்று ஒரு தடவை முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இயேசுவின் மீது தான் கொண்டிருந்த தன்னுடைய நம்பிக்கையை, கனவை, பற்றுறுதியை விற்றுத் தொலைத்தான் யூதாசு. ஆனால் இன்று நாமோ தினமும் பலமுறை இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்முடைய நம்பிக்கையை, கனவை, பற்றுறுதியை விற்றுக்கொண்டே இருக்கின்றோம். எதையும் இயேசுவுக்காக இழக்கலாம். ஆனால் இயேசுவை எதற்காகவும் இழந்துவிடக் கூடாது. எனவே நாம் இனியாவது யூதாசைப் போன்று இயேசுவை விற்க விலை பேச வேண்டாம்!

Tuesday, 30 March 2021

தவக்காலத் திருவுரைகள் - புனித வாரத்தின் செவ்வாய்

 பலவீனங்கள் எனும் பள்ளங்களை நிரப்பிடுவோம்!

யோவான் 13:21-33, 36-38



பள்ளங்களை நிரப்புவது மிக எளிது. ஆனால் பாதாளங்களை நிரப்புவது மிகக் கடினம். நம்முடைய பலவீனங்கள் பள்ளங்களாக இருக்கும் பொழுதே அவற்றை நாம் சரிசெய்துவிட வேண்டும். அப்படி செய்யத் தவறினால், நம்முடைய பலவீனங்கள் பாதாளங்களாக மாறிவிட்ட பின்பு, நாம் அவற்றைச் சரி செய்ய இயலாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம். ஆகவே நமது பலவீனங்கள் பள்ளங்களாக இருக்கும் பொழுதே நாம் அவற்றை இறையருள்கொண்டு நிரப்பிவிடுவோம். இல்லாவிட்டால் பள்ளங்கள் பாதாளங்களாய் மாறிப்போகும். 

இது ஒரு சிறிய பலவீனம்தானே, யாருக்குத்தான் இல்லை இந்த பலவீனம், பலவீனம் எல்லாம் ஒரு பெரிய குற்றம் ஒன்றும் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, நாம் பலவீனங்களில் சுகித்திருக்கத் தொடங்கினால், நம்முடைய பலவீனங்கள் பாவங்களாய் உருவெடுக்கும் பேரவலம் ஏற்படும். பலவீனங்கள் காலப்போக்கில் கண்டிப்பாக பாவங்களாக வடிவம் பெறத் தொடங்கும். பலவீனங்களை வெற்றி கொள்ளாமல் வாழ்வில் சாதனை சாத்தியமில்லை. நமது பலவீனங்களால் நம்முடைய பலம் மறைக்கப்படும். நம்முடைய பலவீனங்கள் நமது பலங்களைப் புதைத்துவிடும்.  

பலவீனங்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பது இல்லை. அதே சமயத்தில் அப்பலவீனங்களை மனிதர்கள் கையாளும் விதமும் ஒன்றுபோல இருப்பதுமில்லை. இன்றைய நற்செய்தியில் இரு மனிதர்களின் பலவீனங்களை நம்மால் பார்க்க முடியும். ஒன்று யூதாசு இஸ்காரியோத்து. மற்றொன்று சீமோன் பேதுரு. யூதாசுக்கு ஒரு பலவீனம் இருந்தது. அது பணம் என்னும் பாதாளமாக இருந்தது என நற்செய்தி சொல்கிறது. பேதுருவுக்கும் ஒரு பலவீனம் இருந்தது. அது பயம் என்னும் பள்ளம் ஆக இருந்தது என நற்செய்தி சொல்கிறது. தன்னுடைய பலவீனத்தால் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். தன்னுடைய பலவீனத்தால் பேதுரு இயேசுவை மறுதலித்தார். பணம் காட்டிக்கொடுக்கச் செய்தது. பயம் மறுதலிக்கச் செய்தது.     

யூதாசு தன் பலவீனமாகிய பணம் எனும் பள்ளத்தை அறியவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதனால் அவன் அந்த பணம் எனும் பள்ளத்தை நிரப்பிட முடியாமல், பள்ளத்தை பாதாளமாக்கி இயேசுவைக் காட்டிக்கொடுத்து அதிலேயே விழுந்துவிட்டான். ஆனால் பேதுரு தன்னுடைய பலவீனமாகிய பயம் எனும் பள்ளத்தை அறிந்து, ஏற்றுக்கொண்டார். அதனால் அவர் இயேசுவை மறுதலித்து அந்த பயம் எனும் பள்ளத்தில் விழுந்தாலும் மீண்டும் எழுந்து, இறையருளால் அப்பள்ளத்தை நிரப்புவதில் வெற்றி கண்டார். வாழ்க்கையில் நமக்கும் பலவீனங்கள் உண்டு. யூதாசைப் போன்று நாம் ஒருபோதும் பள்ளங்களை பாதாளங்களாக்கிவிட வேண்டாம், பலவீனங்களை பாவங்களாக்கிவிட வேண்டாம். மாறாக நாம் பேதுருவைப் போல நம்முடைய பலவீனங்கள் எனும் பள்ளங்களை நிரப்பிடுவோம்!