Sunday, 2 May 2021

வணக்க மாதம் : நாள் - 2

 மேகத்தின் அன்னை

(குயிட்டோ - ஈக்வடார்)



மேகத்தின் அன்னை என்னும் பக்தி முயற்சி ஈக்வடாரில் தோன்றியது. 1696 ஆம் ஆண்டின் இறுதியில், குயிட்டோவின் ஆயர் டான் சாஞ்சோ டி ஆண்ட்ரேட் ஒய் ஃபிகுரோ என்பவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது குயிட்டோவின் புறநகரில் உள்ள குலூபோ என்ற கிராம மக்கள், கன்னி மரியாவுக்கு தங்கள் ஆயர் குணமடையுமாறு மன்றாடி ஒரு நவநாளை ஏற்பாடு செய்தனர். 

டிசம்பர் 30 அன்று, அவர்கள் குஸ்லுபோ நகரத்திலிருந்து குயிட்டோவில் உள்ள மறைமாவட்டப் பேராலயம் வரை ஒரு செபமாலை பவனியை ஏற்பாடு செய்தனர். அப்பவனியில், ஏறக்குறைய மாலை 4:30 மணியளவில், அருள்பணியாளர் டான் ஜோஸ் டி உலோவா என்பவர் வானத்தில் ஒரு பெரிய மேகத்தில் தோன்றிய ஒரு பெண்ணின் உருவத்தைக் கண்டார். உடனே அவர் அதைச் சுட்டிக்காட்டி, கூட்டத்தினரிடம் ‘கன்னி! கன்னி!’ என்று கூச்சலிட்டார். 

குவாப்லோ மற்றும் குயிட்டோ ஆகிய இரு இடங்களுக்கிடையே வானத்தில், இருண்ட மற்றும் அடர்த்தியான மேகத்தின் மீது நின்றவாறு புனித கன்னி மரியா தோன்றினார். அம்மேகம் அவளுடைய காலுக்கு பீடமாக இருந்தது. அவள் தலையில் ஒரு கிரீடம் அணிந்தவளாய், செங்கோல் போல வலது கையில் லில்லி மலர்க்கொடியை பிடித்தவளாய், இடது கையில் அவள் தன்னுடைய தெய்வீக மகன் இயேசுவைச் சுமந்தவாறு காட்சியளித்தாள். 

இக்காட்சியை அன்று பவனியில் பங்குபெற்ற 500 க்கும் மேற்பட்ட நபர்களும், குயிட்டோவின் சுற்றுப்புறங்களில் இருந்த பலரும் கண்டனர் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சாட்சியங்களும் இன்றும் குயிட்டோ உயர் மறைமாவட்டத்தின் ஆவணக் காப்பகங்களில் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. பின்பு ஆயரும் உடனடியாக குணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து ‘மேகத்தின் அன்னை’ என்ற தலைப்பின் கீழ் அவர் புனித கன்னி மரியாவுக்கான பக்தி முயற்சியை அங்கீகரித்தார். மேலும் குயிட்டோ உயர் மறைமாவட்டப் பேராலயத்தில் மேகத்தின் அன்னைக்கு ஒரு சிறப்பு பீடத்தை அமைத்தார். 


திருவிழா கொண்டாடப்படும் நாள்: சனவரி 1

செபம்: மிகவும் அதிசயமான மேகத்தின் அன்னையே! உம்முடைய பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் எங்களை எந்நாளும் வைத்து காத்தருளும். எங்கள் தேவைகளில் எங்களுக்கு உதவியருளும். எங்கள் துன்பங்களில் எங்களுக்கு நீரே ஆறுதலாயிரும். ஆமென்.


Saturday, 1 May 2021

வணக்க மாதம் : நாள் - 1

தூணின் அன்னை

(சரகோசா – ஸ்பெயின்)



திரு அவையின் வரலாற்றில் புனித மரியன்னை முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள எப்ரோ ஆற்றின் கரையில் அமைந்துள்ள சரகோசா என்னுமிடத்தில் புனித யாக்கோபுவிற்கு (நற்செய்தியாளரான புனித யோவானின் சகோதரர்) காட்சியளித்தார் என்று திரு அவையின் மரபுவழிச் செய்திகளின்படி நாம் அறிகிறோம். பதிவுசெய்யப்பட்ட மற்ற எல்லா மரியன்னையின் திருக்காட்சிகளைப் போலல்லாமல், இது மரியாவின் மண்ணக வாழ்க்கையின் போதே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு அவையின் பாரம்பரியத்தின்படி, இன்றைய ஸ்பெயினில் உள்ள பிறசமயத்தினருக்கான புனித யாக்கோபுவின் கடினமான மறைபரப்புப் பணியில் அவருக்கு மிகவும் தேவை ஏற்படும்போது, அவரை ஊக்குவிக்க மரியன்னை அவருக்குத் தோன்றுவார் என்று மரியன்னையே அவருக்கு அக்காட்சியில் உறுதியளித்தார் என்றும் சொல்லப்படுகிறது. 

கி.பி 40 ஆம் ஆண்டில், சனவரி இரண்டாம் நாள், டோபர்ட் கரையில் ஓர் இரவு புனித யாக்கோபு மற்றும் அவரது எட்டு சீடர்கள் செபம் செய்துகொண்டிருந்தபோது, தன் கையில் குழந்தை இயேசுவுடன் ஒரு தூணில் நின்றவாறு காட்சியளித்த புனித மரியன்னை, அவர்களிடம் அந்த இடத்தில் ஓர் ஆலயத்தை கட்டும்படி கேட்டுக்கொண்டார். ‘என் பாதுகாப்பின் கீழ் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் அனைவருக்கும், கடவுள் என் பரிந்துரையின் மூலம் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்காக, அவ்வாலயம் அத்தருணத்திலிருந்து உலகின் இறுதிக் காலம் வரையிலும் நிலைத்து நிற்கும்.’ என்ற வாக்குறுதியையும் புனித மரியன்னை வழங்கினார். 

சராகோசாவில் உள்ள தூணின் அன்னை ஆலயம் தான், வரலாற்றில் புனித மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் ஆகும். அன்னையின் வாக்கின்படியே, இவ்வாலயம் படையெடுப்புகள் மற்றும் போர்களில் இருந்து தப்பித்து இன்றுவரை நிலைத்திருக்கிறது.  1936 முதல் 1939 வரையிலான ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் மூன்று குண்டுகள் இந்த ஆலயத்தில் வீசப்பட்டன. ஆனால் அவை எதுவும் வெடிக்கவில்லை.

இப்போது ஆலயத்தில் ஒரு தூணில் நிற்கும் அன்னையின் சிறிய மரத்தாலான திருவுருவச் சிலையானது புனித யாக்கோபுவிற்கு புனித மரியன்னை காட்சியளித்தபோது வழங்கியதாக கூறப்படுகிறது.


திருவிழா கொண்டாடப்படும் நாள்: அக்டோபர் 12

செபம்: தூணின் அன்னை என்று பெருமையோடு அழைக்கப்படும் இறைவனின் புனித அன்னையே!  தாழ்மையுடன் உம்மை அணுகி, உம்மிடம் வேண்டுதல் செய்யும் எனக்கு நீர் ஒரு பரிந்துரையாளராகவும், அருளின் வாய்க்காலாகவும் இருந்து, இறைவனின் மீதான என் நம்பிக்கையை தூணைப் போல் உறுதிப்படுத்தியருளும். ஆமென். 

 

Monday, 5 April 2021

ஈஸ்டர்

 உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்)



இயேசுவின் உயிர்ப்பையே ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். 

ஈஸ்டர் பண்டிகையின் தோற்றம்



கிபி 29 லிருந்து இயேசுவின் உயிர்ப்பு நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்டதென்று வரலாறு சொல்கிறது.

ஆனாலும், கிபி 325 இல் உரோமையை ஆட்சி செய்த மன்னன் கான்ஸ்டன்டைன் என்பவன் காலத்திலேதான் இது பரவலானதாகவும், பிரபலமாகதாகவும் வரலாறு கூறுகிறது. 


ஈஸ்டர் என்பதன் பொருள் என்ன?



கிரேக்கத் தொன்மங்களிலே ‘ஈஸ்டர்’ என்பது விடியலுக்கான பெண் தேவதையின் பெயராகும். 

இந்த வார்த்தைக்கு வசந்த காலம் என்ற அர்த்தமும் உண்டு.  

வசந்த காலத்தின் தொடக்கத்தில்தான் ஈஸ்டர் தேவதையின் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. 


ஈஸ்டரும் முயலும் 



ஈஸ்டர் தேவதையின் விலங்கு முயல். 

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதர்கள் புல்வெளிகளில் முயல்கள் துள்ளிவிளையாடுவதைப் பார்த்தால் வசந்தகாலம் ஆரம்பமானதென அறிந்துகொண்டனர். 

இவ்வாறு முயல்களின் மகிழ்வையும், வசந்தகாலத்தின் வருகையையும் தொடர்புபடுத்தி இதையே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடத்தொடங்கினர். 

இன்றும் ஐரோப்பியாவில் மதச்சார்பற்ற நாடுகள்கூட ஈஸ்டர் பண்டிகையின்போது முயல் வடிவிலான தின்பண்டங்களைச் செய்து உண்பது வழக்கம்.


ஈஸ்டரும் முட்டையும் 


முட்டை என்பது வாழ்க்கையின் முடிவற்ற சுழற்சியை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது ஐரோப்பியரின் பாரம்பரிய நம்பிக்கை. 

புதுவாழ்வு மற்றும் புதுப்பிறப்பின் குறியீடாக முட்டை கருதப்பட்டது. 

முட்டை அடைகாக்கப்பட்டு புதிய உயிர் உருவாவதுபோன்று, வசந்த காலத்தில் பூமி மீண்டும் பிறக்கிறதென்று கருதிய ஐரோப்பியர்கள் ஈஸ்டர் நாளில் சாயம் பூசப்பட்ட அல்லது வண்ணம் தீட்டப்பட்ட முட்டைகளை பரிசளித்துக் கொண்டாடினர். 

கிறிஸ்தவ சமயக் கண்ணோட்டத்தில் முட்டை கல்லறையின் குறியீடாகவும், முட்டை உடைபடுவது இயேசுவின் உயிர்ப்பிற்கான குறியீடாகவும் வழங்கப்படுகிறது.  

முட்டைகளின் மீது பெரும்பாலும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. இது இயேசு நமக்காக இரத்தம் சிந்தியதைக் குறித்துக்காட்டுகிறது. 


விவிலியமும் இயேசுவின் உயிர்ப்பும்



விவிலியத்தில் நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் உயிர்ப்பு பற்றிய பல்வேறு தரவுகளைத் தருகின்றன. 

இயேசு எவ்வாறு உயிர்த்தார் என்பதையும், உயிர்ப்பு எப்படி நிகழ்ந்தது என்னும் செய்திகளைத் தருவதைவிட, அது ஏன் நிகழ்ந்தது என்பதற்கே நற்செய்தி நூல்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. 

தன் உயிர்ப்பு நிகழ்வின் மூலமாக இயேசு உலகின் எல்லாவற்றையும் வெற்றிக்கொண்டார் என்பதே அது குறித்துக் காட்டும் செய்தி.

இயேசுவின் இறப்பிற்குப் பிறகு, அவருடைய சீடர்கள் நம்பிக்கையற்று, சோர்வுற்று, தளர்ந்திருந்த சமயத்தில் இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை சந்தித்து தைரியமும், ஊக்கமும் அளித்து, இறைப்பணிக்காக மீண்டும் அவர்களை நியமித்தார். 

இயேசுவின் உயிர்த்த தோற்றத்தை ஓர் உண்மை நிகழ்வாக விவிலியம் நமக்குக் காட்டுகிறது. 

சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் ஒரு கனவோ, உளவியல் மாற்றமோ அல்ல, மாறாக இது உண்மை நிகழ்வு ஆகும்.


உயிர்ப்புக்கான மூன்று சான்றுகள்



1) காலியாயிருந்த இயேசுவின் கல்லறை

2) உயிர்ப்புக்குப் பிறகான இயேசுவின் தோற்ற நிகழ்வுகள்

3) திருத்தூதர்கள் வாழ்வில் காணப்பட்ட திடீர் மாற்றம்