Saturday, 4 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 4

நோவா


தொடக்கநூல் 9: 13

இன்றைய நாளின் சிந்தனை : நோவா

இன்றைய நாளின் குறியீடு : பேழையும், வானவில்லும்;


முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால், பாவமாசு மனுக்குலத்தின் மீது படிந்தது. கடவுளிடமிருந்து விலகி நிற்கின்றோம் என்கிற கவலை மனிதருக்கு துளியும் இல்லாதிருந்தது. அத்தகைய சூழலில் ஏறக்குறைய கி.மு 2970 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்தான், நோவா என்கிற பழைய ஏற்பாட்டின் இஸ்ரயேல் குலமுதுவர். இவருடைய காலத்தில் மண்ணகம் பாவச் சேற்றில் மூழ்கிக் கிடந்தது. அதுவரை இல்லாத அளவிற்கு பாவ நாட்டம் மண்ணில் பெருகி இருந்தது. குற்ற உணர்வு உலகில் எவருக்குமே இல்லை. கடவுள் முதன் முதலாகதான் நன்மையாகப் படைத்த உலகைத் தீமை ஆதிக்கம் செய்வதைப் பார்த்து வருத்தமுற்றார். உலகை முழுவதுமாக அழித்துவிட முடிவெடுத்தார். 

காரிருள் கவ்வியவானில் கண்சிமிட்டும் ஒற்றை விண்மீனாய் இருந்தவர் நோவா. இவருடைய வாழ்க்கையை வாசிக்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படும். ஏனென்றால் ‘நோவா கடவுளோடு நடந்தார்’ என்று தொடக்கநூல் 6:9 சொல்கிறது. தம் காலத்தவருள் நோவா மட்டுமே நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார் என்ற செய்தி நோவாவினுடைய தூய்மையான வாழ்வுக்குச் சான்று. கடவுள் பார்வையில் நோவாவின் வாழ்வு புனிதமாக இருந்ததால், உலகின் அழிவிலிருந்து நோவாவை மட்டும் காப்பாற்ற கடவுள் திருவுளமானார். எனவே 3 தளங்கள் கொண்ட, 300 முழம் நீளம், 50 முழம் அகலம், 30 முழம் உயரம் கொண்ட பேழை ஒன்றைச் செய்யும்படி கடவுள் நோவாவுக்கு கட்டளையிட்டார். 

அதன்படி நோவாவும் பேழையைச் செய்து தன் குடும்பத்தோடும், மண்ணின் உயிரினங்களின் வகைகள் அனைத்திலும் சோடியாகவும் எடுத்து பேழைக்குள் சென்றார். பின்னர் கடவுள் நாற்பது இரவும், நாற்பது பகலும் மண்ணுலகில் பெருமழை பெய்யச் செய்தார். இவ்வாறு மண்ணுலகை, பெரும் வெள்ளப்பெருக்கு அழித்தது. இதில் நோவா மட்டும் கடவுளால் காப்பாற்றப்பட்டார். பெரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிய நோவா ஆண்டவருக்கு பலி பீடம் ஒன்றைக் கட்டி, பலி ஒப்புக்கொடுத்தார். அப்போது ஆண்டவர் நோவாவுடன் ஓர் உடன்படிக்கையை செய்து கொள்கிறார். அதன்படி இனி உலகை வெள்ளம் அழிக்காது என்று வாக்களித்த கடவுள் அதன் அடையாளமாக தன் வில்லை மேகத்தின் மீது வைத்தார்.

கடவுளின் முன் மாசற்ற வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது நோவாவின் வாழ்வு நமக்கு தரும் அறை கூவல். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருந்தாலும், நாம் இறைவனுக்கு உகந்தவர்களாக இருந்தால் கடவுள் நம்மைக் கண்டிப்பாகக் காப்பார். எந்தச் சூழ்நிலையிலும் நாம் கடவுளோடு நடக்க உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நோவாவைப் போன்று குற்றமற்றவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இம்மண்ணில் வாழ எங்களுக்கு உதவும். வாழ்க்கைப் பயணத்தில் நாங்கள் எப்போதும் உம் கரம் பற்றி நடக்கச் செய்தருளும். நீரே எங்களைக் காக்கும் பேழையாக இருந்தருளும். உம்மில் மட்டுமே எங்களுக்கு புதுவாழ்வு என்ற நம்பிக்கையைத் தரும் உடன்படிக்கையின் வானவில்லை எங்கள் வாழ்விலும் வைத்தருளும். ஆமென்.


Thursday, 2 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 3

முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்



தொடக்கநூல் 1: 27

இன்றைய நாளின் சிந்தனை    :     முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்

இன்றைய நாளின் குறியீடு     :     பாம்பும் கனியும்


படைப்புகள் அனைத்தின் சிகரமாக கடவுள் மனிதரைப் படைத்தார். யாவற்றையும் தன் வாய்ச் சொல்லால் உண்டாக்கிய கடவுள், தன்னுடைய கைகளால் மண்ணைப் பிசைந்து மனிதனை உண்டாக்கினார். இறைவனின் உருவிலும், சாயலிலும் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். இறைவனது உயிர் மூச்சு, மனிதருக்குள் இருக்கிறது. இவ்வாறு மிகச் சிறப்புக்குரிய விதத்தில் முதல் பெற்றோரான ஆதாமையும், ஏவாளையும் இறைவன் படைத்தார். அவர்களைத் தன்னுடைய ஏதேன் தோட்டத்தில், தன்னோடு வைத்திருந்து, தன்னுடைய பேரின்பத்தில் பங்களித்திருந்தார். ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருக்கும் மரத்தின் கனியை மட்டும் முதல் பெற்றோர் உண்ணக்கூடாது என்பதை கடவுள் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தார்.

ஆனால் ‘கடவுளைப் போல் ஆவீர்கள்’ என்ற பாம்பின் பொய்யுரையைக் கேட்டு விலக்கப்பட்ட மரத்தின் கனியை அவர்கள் விரும்பிப் பறித்து உண்டார்கள். அலகையின் ஆசை வார்த்தைகளை நம்பி பாவப் படுகுழியில் விழுந்தனர். கடவுளால் முதல் பெற்றோர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனித இனம் தவறிழைத்தாலும், அவர்கள் மீது ஆண்டவருக்கு இன்னும் அக்கறை இருக்கத்தான் செய்தது. ‘உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்’ (தொநூ 3:15) என்று பாம்பிடம் கடவுள் கூறிய வார்த்தைகளில் மனித இனத்தின் மீட்புத் திட்டம் முதன் முதலாக அப்போதே முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பது நமக்குப் புலப்படுகிறது.

கீழ்ப்படியாமையால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவோம் என உணருவோம். இனி பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளைவிட்டு விலகி நிற்போம் என்றும் உளப்பூர்வமாகத் தீர்மானிப்போம். கடவுளின் கட்டளைகளைக் கருத்தாய்க் கடைபிடித்து கடவுளின் அன்புப் பிள்ளைகளாய் வாழ முயல வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! உம்முடைய உருவிலும், சாயலிலும் எங்களைப் படைத்ததற்காக நன்றி. நீதியின்படி நீர் எங்கள் குற்றங்களைத் தண்டித்தாலும், உம்முடைய இரக்கத்தை எங்களுக்குக்காட்ட நீர் ஒருபோதும் தவறியதில்லை. உம் கட்டளைகளின்படி நாங்கள் தொடர்ந்து வாழவும், எங்கள் பலவீன நேரங்களில், உம் இரக்கத்தால் நீர் எங்களைத் தாங்கிடவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.


ஈசாய் மரம் - டிசம்பர் : 2

 படைப்பு



தொடக்க நூல் 2:3

இன்றைய நாளின் சிந்தனை :படைப்பு

இன்றைய நாளின் குறியீடு : உலகமும் கோள்களும்


நாம் காணும் இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. தொடக்க நூலில் நாம் படிக்கிறோம்: ஆண்டவர் ஆறு நாள்களாக படைப்புகள் அனைத்தையும் படைத்தார். தான் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. இப்பிரபஞ்சம் கடவுளின் கைவண்ணம். மனிதரைப் படைப்பின் சிகரமாக படைக்க விரும்பிய இறைவன், அதற்கு முன்னதாகவே அனைத்தையும் படைத்துவிடுகிறார். இவ்வாறு அனைத்தும் மனிதருக்காகவே படைக்கப்பட்டன. எனவேதான் படைப்புகள் முழுவதையும் ஆண்டு நடத்துகிற பொறுப்பை கடவுள் மனிதருக்கு கொடுக்கிறார்.

படைப்பு என்பது உலகின் முதல் அதிசயம். அதுவே மூத்த அதிசயம். கடவுள் ஒன்றுமில்லாமையின்று இந்த அழகிய உலகைப் படைத்தார். தன்னுடைய வார்த்தையால் அனைத்தையும் வடிவமைத்தார். தொடக்கத்தில் உருவற்று, வெறுமையாய் இருந்த உலகம் கடவுளின் கை வண்ணத்தால், கவினுறு ஓவியமாய் காட்சி அளிக்கிறது. 

படைப்பை புரிந்துகொள்ள அறிவியல் ஆசைப்படுகிறது. ஆனால் அணுவைக்கூட அப்பட்டமாக அப்படியே அறிந்துகொள்ள அறிவியலால் முடியவில்லை. அறிவால் ஆண்டவரைச் சிறைபிடிக்க முடியாது. பிரபஞ்சத்தின் படைப்பு இன்னும் நமக்கு வியப்பே. படைத்தவரை படைப்புகளில் பார்த்து மகிழ்கிறோம். படைப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் படைத்தவரின் பேராற்றல் நமக்கு நினைவுக்கு வருகிறது. படைப்புகளே இவ்வளவு இன்பம் என்றால் படைத்தவர் எவ்வளவு பேரின்பமயமானவர்? 

அகிலம் அனைத்தும் இறைவனின் கைவண்ணம் என்பதை உணருவோம். படைப்புகளைக் காணும் போதெல்லாம் படைத்தவரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுவோம். நமக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்துப் படைத்த நல்லவரும், வல்லவருமான கடவுளை நன்றியோடு துதிக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! படைப்பு அனைத்தையும் படைத்தீர் மனிதருக்காக. மனிதரைப் படைத்தீர் உம்மைப் புகழ. நாங்கள் வாழும் இந்த அழகான உலகிற்காக உமக்கு நன்றி. நாங்கள் பார்க்கும், பயன்படுத்தும் அனைத்திலும் உமது பாசத்தையும், பராமரிப்பையும் கண்டுணர எமக்கு அருள்தாரும். ஆமென்.