Monday, 6 November 2023

கல்லறைப் பாடம் - 6

தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் உள்ள 

ஆன்மாக்களுக்காக நாம் ஏன் செபிக்க வேண்டும்?



பல ஆன்மாக்கள் உண்மையில் தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் துன்பப்படுகின்றனர். தூய்மை பெறும் செயல் எந்த வடிவத்தை எடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது மிகவும் வேதனையானது என்பது முற்றிலும் உண்மை. 

அக்குவினா நகர் புனித தாமஸ் நமக்கு கூறுகிறார்: 

“ஒருவர் ஒன்றிற்காக எவ்வளவு அதிகமாக ஏங்குகிறாரோ, அது இல்லாமல் போகிறபோது அது அவ்வளவு வேதனையாக அவருக்கு மாறுகிறது. இந்த வாழ்க்கைக்குப் பிறகு, கடவுள் மட்டுமே உன்னத ஆன்மாக்களின் ஒரே விருப்பமாக இருக்கும். அக்கடவுளை அடைவதில் ஏற்படும் தாமதமே அந்த ஆன்மாக்களுக்கு மிகப்பெரிய வேதனையாகும்”.   

எனவே, வேதனையில் இருக்கும் இந்த ஆன்மாக்களுக்காக நாம் செபிப்பது அவர்களது வேதனையைத் தணித்து, கடவுளில் இளைப்பாற நாம் அவர்களுக்கு செய்யும் நல் உதவியாகும். 

மேலும் நம்மில் பெரும்பாலோர் ஒருவேளை தூய்மை பெறும் நிலையின் அனுபவத்தை சந்திக்க நேரிடலாம். ஆகவே, உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபிப்பதன் நன்மைகளில் ஒன்று, ஒரு நாள் நமக்காக இதேபோன்று செபிக்கும் நண்பர்கள் நமக்குத் தேவைப்படும் சூழலில் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த ஆன்மாக்கள் ஒரு நாள் விண்ணகத்தில் இருக்கும்போது, நமக்கு பதில் உதவி செய்யும்படியாக நிச்சயம் நமக்காக கடவுளிடம் மன்றாடுவார்கள்.  இவ்வாறு இந்த உத்தரிக்கும் ஆன்மாக்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நமக்கு கற்பிக்கிறது. 


Thursday, 30 March 2023

தவக்காலத் திருவுரைகள்

 இறவாமையை அடைய இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்! 

யோவா 8:51-59


நாம் வாழும் வாழ்க்கைக்கு தொடக்கமும் முடிவும் உண்டு. ஆனால் இவ்வாழ்வைக் கொடுத்த கடவுளின் வார்த்தைக்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. இவ்வாறு தொடக்கமும் முடிவும் இல்லாத இந்த இறைவார்த்தையே நம்முடைய வாழ்வுக்கு வழியும் ஒளியும் என்கிறது திருப்பாடல். காலம் நிறைவுற்றபோது இந்த இறைவனின் வார்த்தையே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்தது. முதலும் முடிவும் இல்லாத வார்த்தை மனிதரானதன் நோக்கம் நாமும் இறைவனைப் போன்று இறவாமையில் இணைந்திட வேண்டுமென்பதே ஆகும்.  

உடல் கொண்ட அனைத்தும் சாவை சந்திக்க வேண்டும். இந்த சாவு உடலைத் தீண்டமே ஒழிய ஆன்மாவை அல்ல. உடலுக்குள் உறையும் ஆன்மா சாகாது. அந்த சாகாத ஆன்மா இறைவனின் இறவாமையில் இணைந்து இன்புற்றிட வழி சொன்னவர்தான் இயேசு. ஆம், மனிதர்களும் சாவைக் கடந்து வாழ முடியும் என்பது மனிதராகப் பிறந்த இயேசு நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பது நிலைவாழ்வை உறுதி செய்யும் என்கிறார் இயேசு. என்றும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தையை கடைப்பிடிப்பது மட்டுமே நமக்கான வழி.

திருச்சட்டத்தை நிறைவேற்றவே வந்தேன் என்றார் இயேசு. திருச்சட்டமும் அனைத்து இறைவாக்குகளும் இயேசுவில்தான் நிறைவேறின. தந்தையாம் கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ இயேசு ஒருபோதும் தயங்கியதுமில்லை, அதைத் தவிர்த்ததுமில்லை. கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்வது எப்படி என்பதை இயேசுவே கற்றுக்கொடுத்துள்ளார். சடங்காச்சாரமாகவோ, சம்பிரதாயத்திற்காகவோ அன்று, மாறாக உண்மை அர்த்தம் உணர்ந்து உளப்பூர்வமாக உறுதிப்பாட்டுணர்வோடு இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ இயேசுவின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

இறவாமையை அடைய இறைவார்த்தையைக் கடைப்பிடிக்க கற்றுத்தரும் இயேசு, இவ்வாறு கடைப்பிடிப்போர் அடையும் சவால்களையும், சிரமங்களையும் முன்னுணர்த்துகிறார். மனிதர்களின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்போர் பலர் இருக்கையில் இறைவனது வார்த்தைகளைக் கடைப்பிடிக்கவும் அதனால் சிரமப்படவும் இயேசு அழைக்கிறார். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்போரை மனிதர்கள் மட்டம் தட்டலாம். ஆனால் இறைவனோ அவர்களுக்கு பெருமை சூட்டுகிறார் என்றும் இயேசு தெளிவுபடுத்துகிறார். இறவாமை நமது இலக்கென்றால், இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பதே நம்முடைய வழியாகட்டும். நிலை வாழ்வு நமக்கான பரிசாகிட, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவோம். இறவாமையை அடைய இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்!


Friday, 24 March 2023

தவக்காலத் திருவுரைகள்

தவக்காலத் திருவுரைகள் 


பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வருவோம்!


யோவான் 7:1,2,10, 25-30



நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒருபோதும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஆகவே நமது பாதுகாப்பு என்பது நம்முடைய அடிப்படை எதிர்பார்ப்பாகவும், அத்தோடு நம்முடைய சுகமான வாழ்வு என்பது நம்முடைய அடிப்படை ஏக்கமாகவும் எல்லோருக்கும் இருக்கிறது. எதிர்பாராமல் நம் வாழ்க்கையில் வரும் பாதுகாப்பற்ற சூழலை சந்திப்பதில் பலரும் சோர்ந்து போகிறார்கள் அல்லது சோடை போகிறார்கள். 

நம்முடைய பாதுகாப்புக்காவும் வசதிக்காகவும் நாம் பலவற்றை விரும்பிச் செய்கிறோம். எவையெல்லாம் நம்மை எவ்வித தொல்லையும் தொந்தரவும் இல்லாமல் வைத்திருக்குமோ அவற்றையே விரும்பிச் செய்ய எண்ணுகிறோம். எவையெல்லாம் நமக்கு வருத்தமும் வேதனையும் தராதோ அவற்றையே விரும்பித் தேடுகிறோம். எவையெல்லாம் நம் வாழ்வில் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தாதோ அவற்றையே நமது அன்றாட பழக்க வழக்கங்களாக்கிவிடுகிறோம். 

பாதுகாப்பு வளையத்தினுள்ளேயே எப்போதும் இருப்பவர்களின் வாழ்க்கை ஆமைக்கு ஒப்பானது. சிறிது ஆபத்து வருவதை உணர்ந்ததும் ஆமை தன்னுடைய ஓட்டுக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்ளும். அதைப் போலவே நம்மில் பலரும் ஆபத்தான சூழலை, பாதுகாப்பற்ற சூழலை, வசதி குறைவான சூழலை சந்திக்க தயக்கம் காட்டுவதுண்டு. ஆபத்தை விரும்பாத ஆமை நல்ல ஆளுமையை உருவாக்க சரியான எடுத்துக்காட்டு அல்ல. பாதுகாப்பையும், வசதியான சூழலையும் எப்போதும் விரும்புகிற ஆமையின் மனநிலை கிறிஸ்துவின் மனநிலைக்கு ஏற்புடையதாகாது.   

பாதுகாப்பற்ற சூழல்கள் மட்டுமே நமது வாழ்வுக்கு வளர்ச்சியைக் கொணரும். சவாலான நேரங்கள் மட்டுமே நமது வாழ்வை சிகரத்திற்கு அழைத்துப்போகும். சிரமமான தருணங்கள் மட்டுமே நமது வாழ்வில் முன்னேற்றத்தை வழங்கும்.  ஆக, பாதுகாப்பு வளையங்களுக்கு வெளியே அடியெடுத்து வைப்பவர்களே, தங்கள் வாழ்வுக்கு மகத்தான பாதையை அமைத்துக்கொள்கிறார்கள். 

இயேசுவைக் கொல்ல யூதர்கள் அவரைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் வெளிப்படையாக திருவிழாவில் மக்களுக்கு போதிக்கிறார். அனைவரும் அதைக் குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். சாவு துரத்துகிறது என்பதற்காக, வாழ்வை பிறருக்கு பயன் தரும் விதத்தில் வாழ இயேசு எப்போதும் மறந்ததே இல்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் ஒரு நாளும் பதுங்கி இருந்தவர் அல்ல இயேசு. தன்னுடைய வசதிகளை முன்னிறுத்தி இயேசு என்றும் செயல்பட்டதே இல்லை. கிறிஸ்துவின் பணி வாழ்வும் பலி வாழ்வும் பாதுகாப்பு வளையத்தை துறப்பதை வலியுறுத்துகிறது. நாமும் இனி நம்முடைய   பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வருவோம்!