Tuesday, 7 November 2023

கல்லறைப் பாடம் - 7

தூய்மை பெறும் நிலையில் உள்ள (உத்தரிக்கும்) ஆன்மாக்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?



புனிதர்களின் சமூக உறவினால் மண்ணுலகில் இன்னும் திருப்பயணிகளாக இருக்கும் இறைமக்கள், தூய்மை பெறும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காகச் செய்யப்படும் இறைவேண்டல், சிறப்பாக நற்கருணைப்பலி வழியாக உதவ இயலும். மேலும் ஏழைகளுக்கு உதவுதல், பாவ மன்னிப்பு அருள்பலன்கள், தவ முயற்சிகள் வழியாகவும் உதவலாம். 

(கத்தோலிக்க திரு அவையின் மறைக்கல்வி 1032)


Monday, 6 November 2023

கல்லறைப் பாடம் - 6

தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் உள்ள 

ஆன்மாக்களுக்காக நாம் ஏன் செபிக்க வேண்டும்?



பல ஆன்மாக்கள் உண்மையில் தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் துன்பப்படுகின்றனர். தூய்மை பெறும் செயல் எந்த வடிவத்தை எடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது மிகவும் வேதனையானது என்பது முற்றிலும் உண்மை. 

அக்குவினா நகர் புனித தாமஸ் நமக்கு கூறுகிறார்: 

“ஒருவர் ஒன்றிற்காக எவ்வளவு அதிகமாக ஏங்குகிறாரோ, அது இல்லாமல் போகிறபோது அது அவ்வளவு வேதனையாக அவருக்கு மாறுகிறது. இந்த வாழ்க்கைக்குப் பிறகு, கடவுள் மட்டுமே உன்னத ஆன்மாக்களின் ஒரே விருப்பமாக இருக்கும். அக்கடவுளை அடைவதில் ஏற்படும் தாமதமே அந்த ஆன்மாக்களுக்கு மிகப்பெரிய வேதனையாகும்”.   

எனவே, வேதனையில் இருக்கும் இந்த ஆன்மாக்களுக்காக நாம் செபிப்பது அவர்களது வேதனையைத் தணித்து, கடவுளில் இளைப்பாற நாம் அவர்களுக்கு செய்யும் நல் உதவியாகும். 

மேலும் நம்மில் பெரும்பாலோர் ஒருவேளை தூய்மை பெறும் நிலையின் அனுபவத்தை சந்திக்க நேரிடலாம். ஆகவே, உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபிப்பதன் நன்மைகளில் ஒன்று, ஒரு நாள் நமக்காக இதேபோன்று செபிக்கும் நண்பர்கள் நமக்குத் தேவைப்படும் சூழலில் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த ஆன்மாக்கள் ஒரு நாள் விண்ணகத்தில் இருக்கும்போது, நமக்கு பதில் உதவி செய்யும்படியாக நிச்சயம் நமக்காக கடவுளிடம் மன்றாடுவார்கள்.  இவ்வாறு இந்த உத்தரிக்கும் ஆன்மாக்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நமக்கு கற்பிக்கிறது. 


Thursday, 30 March 2023

தவக்காலத் திருவுரைகள்

 இறவாமையை அடைய இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்! 

யோவா 8:51-59


நாம் வாழும் வாழ்க்கைக்கு தொடக்கமும் முடிவும் உண்டு. ஆனால் இவ்வாழ்வைக் கொடுத்த கடவுளின் வார்த்தைக்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. இவ்வாறு தொடக்கமும் முடிவும் இல்லாத இந்த இறைவார்த்தையே நம்முடைய வாழ்வுக்கு வழியும் ஒளியும் என்கிறது திருப்பாடல். காலம் நிறைவுற்றபோது இந்த இறைவனின் வார்த்தையே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்தது. முதலும் முடிவும் இல்லாத வார்த்தை மனிதரானதன் நோக்கம் நாமும் இறைவனைப் போன்று இறவாமையில் இணைந்திட வேண்டுமென்பதே ஆகும்.  

உடல் கொண்ட அனைத்தும் சாவை சந்திக்க வேண்டும். இந்த சாவு உடலைத் தீண்டமே ஒழிய ஆன்மாவை அல்ல. உடலுக்குள் உறையும் ஆன்மா சாகாது. அந்த சாகாத ஆன்மா இறைவனின் இறவாமையில் இணைந்து இன்புற்றிட வழி சொன்னவர்தான் இயேசு. ஆம், மனிதர்களும் சாவைக் கடந்து வாழ முடியும் என்பது மனிதராகப் பிறந்த இயேசு நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பது நிலைவாழ்வை உறுதி செய்யும் என்கிறார் இயேசு. என்றும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தையை கடைப்பிடிப்பது மட்டுமே நமக்கான வழி.

திருச்சட்டத்தை நிறைவேற்றவே வந்தேன் என்றார் இயேசு. திருச்சட்டமும் அனைத்து இறைவாக்குகளும் இயேசுவில்தான் நிறைவேறின. தந்தையாம் கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ இயேசு ஒருபோதும் தயங்கியதுமில்லை, அதைத் தவிர்த்ததுமில்லை. கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்வது எப்படி என்பதை இயேசுவே கற்றுக்கொடுத்துள்ளார். சடங்காச்சாரமாகவோ, சம்பிரதாயத்திற்காகவோ அன்று, மாறாக உண்மை அர்த்தம் உணர்ந்து உளப்பூர்வமாக உறுதிப்பாட்டுணர்வோடு இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ இயேசுவின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

இறவாமையை அடைய இறைவார்த்தையைக் கடைப்பிடிக்க கற்றுத்தரும் இயேசு, இவ்வாறு கடைப்பிடிப்போர் அடையும் சவால்களையும், சிரமங்களையும் முன்னுணர்த்துகிறார். மனிதர்களின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்போர் பலர் இருக்கையில் இறைவனது வார்த்தைகளைக் கடைப்பிடிக்கவும் அதனால் சிரமப்படவும் இயேசு அழைக்கிறார். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்போரை மனிதர்கள் மட்டம் தட்டலாம். ஆனால் இறைவனோ அவர்களுக்கு பெருமை சூட்டுகிறார் என்றும் இயேசு தெளிவுபடுத்துகிறார். இறவாமை நமது இலக்கென்றால், இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பதே நம்முடைய வழியாகட்டும். நிலை வாழ்வு நமக்கான பரிசாகிட, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவோம். இறவாமையை அடைய இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்!