Saturday, 23 November 2024

கல்லறைப் பாடம் - 23

கல்லறைப் பாடம் - 23

நிலைவாழ்வை நம்புகிறேன்


நிலை வாழ்வு என்றால் இறப்பிற்குப் பிறகு உடனே தொடங்கும் வாழ்வு ஆகும். இதற்கு முடிவே இராது. இதற்கு முன்பாக ஒவ்வொருவருக்கும் தனித் தீர்ப்பு உண்டு. இந்த தனித் தீர்ப்பு பொதுத் தீர்ப்பில் உறுதி செய்யப்படும்.

உலகம் முடியும் நாளில் நாம் அனைவரும் நமது உடலோடு உயிர்தெழுந்து அழியா உடலைப் பெறுவோம். அந்நாளில் நமது ஆன்மாவும் உடலும் மீண்டும் இணையும். நேர்மையாளர்கள் (கடவுளின் திருவுளத்திற்கேற்ப வாழ்ந்தவர்கள்) இவ்வுலக வாழ்விற்குப்பின் நிலையான பேரின்பத்தை (விண்ணகத்தை) அடைவார்கள். தீயவர்கள் முடிவில்லா தண்டனைக்கும் அழியா நெருப்பிற்கும் (நரகத்திற்கும்) செல்வார்கள். 

உலகம் முடியும் நாளில் பொதுத் தீர்வையின் போது உத்தரிக்கிற இடத்தில் இருக்கின்றவர்கள் அனைவரும் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்தில் இறைத் தந்தையோடு அமர்வர். அதன் பின் உத்தரிக்கின்ற இடம் என்ற ஒரு நிலை இல்லாமல் போகும்.

Friday, 22 November 2024

கல்லறைப் பாடம் - 22

கல்லறைப் பாடம் - 22

தனித் தீர்ப்பு, பொதுத் தீர்ப்பு



தனித் தீர்ப்பு

தனித் தீர்ப்பு என்றால் இறந்தவுடன் ஒவ்வொருவருக்கும் கைம்மாறு அளிக்கும் தீர்ப்பு ஆகும். நம்பிக்கைக்கும் செயல்களுக்கும் ஏற்பத் தம் அழியா ஆன்மாவில் கடவுளிடமிருந்து ஒவ்வொருவரும் அந்தக் கைமாற்றை பெற்றுக்கொள்வர். உடனடியாகவோ தகுந்த தூய்மையாக்குதலுக்குப் பிறகோ, விண்ணகப் பேரின்பத்தை அடைவதில் அல்லது நரகத்தின் முடிவில்லா தண்டனையை அடைவதில் அது அடங்கும். 

பொதுத் தீர்ப்பு

பொதுத் தீர்ப்பு என்பது பேரின்பத்திற்கோ முடிவில்லாத் தண்டனைக்கோ வழங்கப்படும் தீர்ப்பு ஆகும். உலக முடிவில் ஆண்டவர் இயேசு வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராக வரும்போது, நேர்மையாளருக்கும் நேர்மையற்றோருக்கும் இத்தீர்ப்பை வழங்குவார். பொதுத் தீர்ப்புக்குப் பிறகு, தனித்தீர்ப்பில் ஆன்மா ஏற்கெனவே கைம்மாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ தண்டனையிலோ உயிர்த்த உடல் பங்குபெறும். 

பொதுத் தீர்ப்பு உலக முடிவில் நடைபெறும். அந்நாளையும் நேரத்தையும் கடவுள் மட்டுமே அறிவார். 

பொதுத் தீர்ப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் அழிவிற்குரிய அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்துவின் மாட்சியில் பங்கு பெறும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் தொடங்கும் (2பேது 3:13). அப்போது இறையாட்சி முழுமை பெறும்.

Thursday, 21 November 2024

கல்லறைப் பாடம் - 21

 கல்லறைப் பாடம் - 21

உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்


உடலின் உயிர்ப்பு என்பது ஆன்மா உடலிலிருந்து பிரிக்கப்பட்ட நிலை, மனிதரின் முடிவான நிலையாக இருக்காது என்பதைக் குறிக்கிறது. ஏனெனில் அழிவுக்குரிய நம் உடல்களும் ஒரு நாள் மீண்டும் வாழ்வு பெறும்.

நம்பிக்கை அறிக்கையில் இடம்பெறும் உடலின் உயிர்ப்பு என்பதன் நேர் பொருள் ஊனுடலின் உயிர்ப்பு ஆகும். ஊனுடல் என்னும் சொல் வலுவற்ற, அழிவுக்குரிய நிலையில் உள்ள மானுடத்தைக் குறிக்கிறது. ஊனுடல் மீட்பின் காரணியாக உள்ளது என்கிறார் தெர்த்துலியன். ஊனுடலைப் படைத்த கடவுளை நம்புகிறோம். ஊனுடலை மீட்க மனித உடல் எடுத்த வார்த்தையானவரை நம்புகிறோம். மேலும் உடலின் உயிர்ப்பை நம்புகிறோம். இது ஊனுடலின் படைப்பு, மீட்பு ஆகியவற்றின் நிறைவு ஆகிறது.