Friday, 25 June 2021

இயேசுவின் தூய்மைமிகு இதயம்

திருஇதய ஆண்டவர் புனித மார்கரெட் மரியாவின் வழியாக அளித்த 12 வாக்குறுதிகள்




1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.

2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.

3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம்.

4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.

5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.

6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும்.

7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.

8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.

9. எந்த வீட்டில் நம் திருஇதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.

10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.

11. திருஇதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும்.

12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம் பகைவராகவோ, அருளடையாளங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.


Monday, 31 May 2021

வணக்க மாதம் : நாள் - 31

 

 நிறைவின் அன்னை

(கர்சி - இத்தாலி)


1640 ஆம் ஆண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் இத்தாலியின் சிறிய நகரமான கர்சியில் ஒரு மோசமான நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் செபிக்கவும், கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டவும்  மக்கள் ஆலயத்தில் கூடிவந்தனர். 

ஒரு நாள் பாக்லியோ என்ற நபர் தனது கால்நடைகளை காணவில்லை என்பதால் அவற்றைத் தேடிச் சென்றார். அப்போது திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி வெளிப்படுவதைக் கவனித்தார். அவர் கிட்டத்தட்ட பயந்து ஓடத்தொடங்கினார். மரியா அவரைத் திரும்ப அழைத்தார். தன்னை விண்ணக அரசி என்று அவருக்கு அடையாளப்படுத்தினார்.  பின்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள  வறட்சியின் கொடுமைக்காக தான் வருத்தப்படுவதாகவும், இரக்கம் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் மரியா, பாக்லியோவிடம் கர்சியின் அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களுடன் சேர்ந்து தனக்கான ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அவ்விடத்திற்கு வரும்படியாக பங்கு குருவிடம் சென்று தெரிவிக்கச் சொன்னார். 

அவ்வாறு செய்யப்பட்டால், மரியன்னை கர்சியையும் சுற்றியுள்ள பகுதியையும் தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்வார் என்றும், அதே ஆண்டின் இறுதியில் யாரும் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஏராளமான அறுவடை இருக்கும் என்று பாக்லியோவுக்கு உறுதியளித்தார். கடைசியாக, பாக்லியோ தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஏனென்றால் மரியன்னை அவரை தனது பணிக்காகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும்;, மேலும் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட பின்பு, அவர் அங்கு தனக்காக பணியாற்ற வேண்டுமெனவும் சொன்னார். பின்னர் அன்னை தோன்றியபடியே திடீரென்று மறைந்துவிட்டார்.

இந்த நிகழ்வை பாக்லியோ குருவிடம் சொன்னார். பின்பு குருவோடு இணைந்து கர்சி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாக்லியோ தலைமையில், மரியா தோன்றிய இடத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அங்கே அவர்கள் முழங்காலில் நின்று செபித்தார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நகரத்திற்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கினர். ஆனால் சிறிது தூரம் சென்றதுமே, மழை பெய்து கூட்டம் முழுவதையும் நனைத்தது. மூன்று நாட்கள் நல்ல மழை பெய்தது. அறுவடை முடிந்து, அனைவரின் களஞ்சியமும் நிரம்பி வழிந்தது. விரைவில் நன்றியுள்ள மக்கள் புனித மரியாவுக்கு ஓர் ஆலயத்தை எழுப்பினர். 

திருவிழா நாள்: சனவரி 5

செபம்: நிறைவின் அன்னையே! வறட்சியில் பிடியில் சிக்கி நாங்கள் வேதனைப்படும் போதெல்லாம் நீரே எங்கள் வாழ்வின் களஞ்சியங்கள் நிரம்பிட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Sunday, 30 May 2021

வணக்க மாதம் : நாள் - 30

நீரூற்றின் அன்னை 

(கான்ஸ்டான்டிநோபிள் - துருக்கி)


கி.பி. 457 ஆம் ஆண்டு முதல் கி.பி. 474 வரை முதலாம் லியோ பைசண்டைன் பேரரசின் பேரரசராக இருந்தார். முதலில் இராணுவத்தில் தனது பணியைத் தொடங்கிய இவர், 457 இல் அப்போதைய பேரரசர் இறந்தபோது, லியோ புதிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் ஒரு புனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தின் வரலாறு பின்வருமாறு:

பிற்காலத்தில் பைசண்டைன் பேரரசின் பேரரசராக மாறிய லியோ, பேரரசராக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு நல்ல மற்றும் பக்தியுள்ள மனிதர் ஆவார். ஒரு நாள் அவர் தனது பயணத்தில் ஒரு பார்வையற்ற மனிதரைப் பார்த்தார். அவர் தாகத்தால் வேதனை அடைந்து, லியோவிடம் தாகத்தைத் தணிக்க தண்ணீரைக் கண்டுபிடிக்கும்படி கெஞ்சினார். இந்த மனிதன் மீது இரக்கம் கொண்ட லியோ, நீர் ஆதாரத்தைத் தேடிச் சென்றார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சோர்வுற்று அவர் தனது தேடலை நிறுத்தவிருந்தபோது, ஒரு குரல் கேட்டது: ‘லியோ, அருகிலேயே தண்ணீர் இருப்பதால் நீ சோர்வடையத் தேவையில்லை.’ லியோ மீண்டும் தேடத் தொடங்கினார். ஆனால் இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மீண்டும் அதே குரலைக் கேட்டார். 

இந்த முறை அவரிடம் அக்குரல் இவ்வாறு கூறியது: ‘மன்னன் லியோ, காடுகளின் அடர்ந்த பகுதிக்குள் நீ நுழை. அங்கே நீ ஓர் ஏரியைக் காண்பாய். அதிலிருந்து சிறிது தண்ணீரை உன் கைகளால் எடுத்து பார்வையற்றவரின் தாகத்தைத் தணிக்கக் கொடு. பின்னர் அவரது பார்வையற்ற கண்களில் அந்த ஏரியின் களிமண்ணைப் பூசு. பின்னர் நான் யார் என்பதை நீ உடனடியாக அறிந்து கொள்வாய். ஏனென்றால் நான் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருக்கிறேன். இங்கு என்னை தரிசிக்க வருபவர்கள் அனைவரும் தங்கள் மன்றாட்டுகளுக்கு பதில் பெறும் வகையில் இங்கு எனக்கு ஓர் ஆலயம் கட்டு’. 

இதைக் கேட்ட லியோ ஏரியைக் கண்டுபிடித்து அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி செய்தார். பார்வையற்றவரின் கண்களில் களிமண் பூசப்பட்டவுடன், அவர் தனது பார்வையைப் பெற்றார். சிறிது காலத்திற்குப் பிறகு லியோவும் பேரரசராக ஆனார். பின்னர் அவர் அந்த இடத்தில் மரியாவுக்கு ஒரு பெரிய, அழகான ஆலயத்தை கட்டினார். இந்த ஆலயம் பல்வேறு படையெடுப்புகளில் சேதமடைந்தபோதும், மீண்டும் மீண்டும் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இன்னும் இங்குள்ள நீரூற்றில் இருந்து வரும் நீர் தொடர்ந்து அற்புதங்கள் நிகழ்த்தும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

திருவிழா நாள்: மார்ச் 16

செபம்: நீரூற்றின் அன்னையே! உமது தயை நிறைந்த தாயுள்ளம் எங்கள் வாழ்வின் தாகம் தணிக்கும் அற்புத நீரூற்றாய் அமைந்திடவும், அதனால் நாங்கள் என்றும் உம் பிள்ளைகளாய் அகமகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு நீர் உதவி புரியும். ஆமென்.