நீரூற்றின் அன்னை
(கான்ஸ்டான்டிநோபிள் - துருக்கி)
கி.பி. 457 ஆம் ஆண்டு முதல் கி.பி. 474 வரை முதலாம் லியோ பைசண்டைன் பேரரசின் பேரரசராக இருந்தார். முதலில் இராணுவத்தில் தனது பணியைத் தொடங்கிய இவர், 457 இல் அப்போதைய பேரரசர் இறந்தபோது, லியோ புதிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் ஒரு புனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தின் வரலாறு பின்வருமாறு:
பிற்காலத்தில் பைசண்டைன் பேரரசின் பேரரசராக மாறிய லியோ, பேரரசராக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு நல்ல மற்றும் பக்தியுள்ள மனிதர் ஆவார். ஒரு நாள் அவர் தனது பயணத்தில் ஒரு பார்வையற்ற மனிதரைப் பார்த்தார். அவர் தாகத்தால் வேதனை அடைந்து, லியோவிடம் தாகத்தைத் தணிக்க தண்ணீரைக் கண்டுபிடிக்கும்படி கெஞ்சினார். இந்த மனிதன் மீது இரக்கம் கொண்ட லியோ, நீர் ஆதாரத்தைத் தேடிச் சென்றார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சோர்வுற்று அவர் தனது தேடலை நிறுத்தவிருந்தபோது, ஒரு குரல் கேட்டது: ‘லியோ, அருகிலேயே தண்ணீர் இருப்பதால் நீ சோர்வடையத் தேவையில்லை.’ லியோ மீண்டும் தேடத் தொடங்கினார். ஆனால் இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மீண்டும் அதே குரலைக் கேட்டார்.
இந்த முறை அவரிடம் அக்குரல் இவ்வாறு கூறியது: ‘மன்னன் லியோ, காடுகளின் அடர்ந்த பகுதிக்குள் நீ நுழை. அங்கே நீ ஓர் ஏரியைக் காண்பாய். அதிலிருந்து சிறிது தண்ணீரை உன் கைகளால் எடுத்து பார்வையற்றவரின் தாகத்தைத் தணிக்கக் கொடு. பின்னர் அவரது பார்வையற்ற கண்களில் அந்த ஏரியின் களிமண்ணைப் பூசு. பின்னர் நான் யார் என்பதை நீ உடனடியாக அறிந்து கொள்வாய். ஏனென்றால் நான் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருக்கிறேன். இங்கு என்னை தரிசிக்க வருபவர்கள் அனைவரும் தங்கள் மன்றாட்டுகளுக்கு பதில் பெறும் வகையில் இங்கு எனக்கு ஓர் ஆலயம் கட்டு’.
இதைக் கேட்ட லியோ ஏரியைக் கண்டுபிடித்து அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி செய்தார். பார்வையற்றவரின் கண்களில் களிமண் பூசப்பட்டவுடன், அவர் தனது பார்வையைப் பெற்றார். சிறிது காலத்திற்குப் பிறகு லியோவும் பேரரசராக ஆனார். பின்னர் அவர் அந்த இடத்தில் மரியாவுக்கு ஒரு பெரிய, அழகான ஆலயத்தை கட்டினார். இந்த ஆலயம் பல்வேறு படையெடுப்புகளில் சேதமடைந்தபோதும், மீண்டும் மீண்டும் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இன்னும் இங்குள்ள நீரூற்றில் இருந்து வரும் நீர் தொடர்ந்து அற்புதங்கள் நிகழ்த்தும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
திருவிழா நாள்: மார்ச் 16
செபம்: நீரூற்றின் அன்னையே! உமது தயை நிறைந்த தாயுள்ளம் எங்கள் வாழ்வின் தாகம் தணிக்கும் அற்புத நீரூற்றாய் அமைந்திடவும், அதனால் நாங்கள் என்றும் உம் பிள்ளைகளாய் அகமகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு நீர் உதவி புரியும். ஆமென்.