Saturday, 29 May 2021

வணக்க மாதம் : நாள் -29

 இறைப்பராமரிப்பின் அன்னை

(கசானியோ, இத்தாலி)



இறைப்பராமரிப்பின் அன்னையின் திருத்தலம் இத்தாலியின் ஃபோசானோ மறைமாவட்டத்தின் குசானியோ என்னும் கிராமத்தில் உள்ளது. அங்கு பிறப்பு முதல் காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாதிருந்த பார்தலோமியோ கோப்பா என்பவர் இருந்தார். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். மிகவும் மோசமான தோற்றம் மற்றும் நாகரீகமற்ற உடையில் எப்போதும் அவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பார்தலோமியோவைப் பற்றி யாரும் எப்போதும் கவலைப்பட்டதேயில்லை. 1521 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி மரியா வெண்ணிற அங்கியில் அவருக்குத் தோன்றி, அவரை ஆசீர்வதித்து, அவரது இயலாமையை குணப்படுத்தினார். பின்பு பார்தலோமியோவிடம் மரியன்னை ஃபோசானோவில் வாழ்பவர்களுக்கு, மனம்மாறும்படி அறிவிக்கும்படியும், கடவுளின் நீதியைப் பறைசாற்றும்படியும் சொன்னார். அவர்கள் தவம் செய்து மனம்மாறாவிட்டால் கொடிய துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று அவர்களை எச்சரிக்கவும் சொல்லிவிட்டு மரியன்னை மறைந்துவிட்டார். 

மரியன்னை கேட்டுக்கொண்டபடி, பார்தலோமியோ மூன்று நாட்கள் ஃபோசானோவின் தெருக்களில் மரியா தனக்குச் சொல்லியதை அறிவித்தார். ஆனால் எவரும் இவர் சொன்னதைக் குறித்து கவலைப்படவில்லை. மூன்று நாட்களுக்குப் பின்பு, சோர்வுடனும் பசியுடனும் அவர் அன்னை காட்சியளித்த இடத்திற்குத் திரும்பி, திறந்த நிலத்தில் தூங்கினார். இங்குதான் ஒரு புதிய அதிசயம் நடந்தது. மரியா பார்தலோமியோவுக்கு இரண்டாவது முறையாக தோன்றினார். இம்முறை நீல நிற அங்கியில் அன்னை காட்சியளித்தார். பார்தலோமியோவின் பசியை அறிந்து, மூன்று புதிய ரொட்டிகளை கொடுத்து, மீண்டும் ஃபோசானோ மக்களுக்கு மனமாற்றத்தை அறிவிக்கச் சொல்லி மறைந்துபோனார். அவர் ஃபோசானோவுக்குத் திரும்பி, மீண்டும் அவர்களுக்கு அன்னை கூறியவற்றை எடுத்துரைத்தார். ஆனால் மீண்டும் அவர் அவர்களால் நம்பாமல் ஏளனம் செய்யப்பட்டார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆண்டின் அக்டோபரில், ஃபோசானோவிலும் அதைச் சுற்றியும் ஒரு பயங்கரமான பிளேக் நோய் வந்தது. பின்பு பார்தலோமியோவின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்து தவம் செய்து அன்னையிடம் மன்றாடினர். பிளேக் நோய் தணிந்தது. மேலும் கன்னி மரியாவுக்கு ஒரு சிறிய ஆலயம் எழுப்பப்பட்டது. இது இறைப்பராமரிப்பின் அன்னை ஆலயம் என்று அழைக்கப்பட்டது. 

திருவிழா நாள்: நவம்பர் 19

செபம்: இறைப்பராமரிப்பின் அன்னையே! உமது இரக்கத்தாலும் கருணையாலும் எங்கள் வாழ்வில் எப்போதும் உமது அன்பான பரிந்துரையின் பயனாக, இறைப்பராமரிப்பை முழுமையாகப் பெற்று மகிழ உதவிசெய்யும். ஆமென்.