Tuesday, 1 November 2022

கல்லறைப் பாடம் - 1

கல்லறைகளிலிருந்து கற்றுக்கொள்வோம்!




நவம்பர் மாதம் என்றாலே கல்லறைத் திருநாள்தான் கிறித்தவர்களின் நினைவுக்கு வரும். இம்மாதத்தின் இரண்டாம் நாள் இறந்த நம் குடும்ப உறவுகளின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, மலர் மாலையிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி, ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் வைத்து, இறந்த ஆன்மாக்களை நினைவு கூரும் மரபு இன்றளவும் சிறப்பாய்த் திகழ்கிறது. இந்த ஒரு நாள் மட்டும் அல்ல, என்றும் கல்லறைகள் நம்முடைய மேலான கவனத்தைப் பெற்றிட வேண்டும். 

கல்லறை என்பது வாழ்க்கையின் அனுபவங்கள் அயர்ந்த நித்திரையில் இருக்கும் இடம். அது கடவுள் காலத்தின் ஓட்டத்தில் வரைந்த பல காவியங்களும் காப்பியங்களும் கண்ணுறங்கும் இடம். கல்லறை நம்முடைய வாழ்வின் மிகப்பெரிய சிறந்த நூலகம். அது வாழ்ந்து முடித்தவர்களைப் பார்த்து வாழப் பழகுகின்றவர்கள் படிக்கவேண்டிய இடம். 

உரோமையராலும் யூதராலும் கல்லறை என்பது தீட்டாகப் பார்க்கப்பட்டது. யூத வழக்கத்தில் கல்லறைகள் பொதுவாக ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருக்கும். கல்லறைகளை இறந்தோருடைய நகரம் என்று யூதர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது, கிறித்தவர்களுக்கு அது வாழ்வோரின் நகரமாகவே அறிவுறுத்தப்பட்டது. கிறிஸ்துவின் கல்லறையும் அது சுட்டிக்காட்டும் உயிர்ப்புமே அதற்கு சாட்சி. 

இயேசுவின் உயிர்ப்பைத் தொடர்ந்து கல்லறையைக் குறித்த உயர்ந்த உன்னதமான புரிதல் கிறித்தவ மரபில் எப்போதும் இருந்துள்ளது. நம்பிக்கையாளர்கள் மறைச்சாட்சியரின் கல்லறைகளில் கூடி செபித்தும், மறைவாக வழிபாடு நடத்தியும் வந்துள்ளனர். இவ்வாறு கல்லறைகள் நம் விசுவாசத்தின் விளைநிலமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்கத் திரு அவையின் நாற்றங்கால் கல்லறையே. 

எனவே இறந்த நம்பிக்கையாளர்களின் கல்லறைகள் இன்றைய நமது நம்பிக்கையின் கருவறைகள் என்னும் தெளிவு நம்மிடம் இருக்கட்டும். கல்லறைகளிலிருந்து கற்றுக்கொள்ளத் தயாராவோம்!