Wednesday, 2 November 2022

கல்லறைப் பாடம் - 2

எனக்கு ஒரு திருப்பலி தேவை!



ஒரு நாள் புனித பியோ தனியாக செபம் செய்து கொண்டிருந்தார். அப்போது பூட்டப்பட்டிருந்த அந்த அறையில் ஒரு முதியவர் நிற்பதைக் கண்டு பியோ ஆச்சரியமடைந்தார். அவர் யாரென அறிய விரும்பிய பியோ அந்த நபரிடம், “நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். 

அதற்கு அந்த நபர் இவ்வாறு பதிலளித்தார்: “தந்தை பியோ அவர்களே, என் பெயர் பியெத்ரே தி மௌரோ. என் தந்தையின் பெயர் நிக்கோலா. என்னை ப்ரேகோகோ என்றும் அழைப்பதுண்டு. இங்குதான் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி, அறை எண் 4 இல், நான் இறந்தேன். அப்போது இந்த இடம் ஓர் ஏழைகளின் விடுதியாக இருந்தது. ஒரு நாள் இரவு, படுக்கையில் இருந்தபோது, நான் புகைப்பிடித்துக் கொண்டே தூங்கிப்போனேன். புகைந்து கொண்டிருந்த அந்த நெருப்பால் எனது மெத்தையில் தீப்பிடித்து, அறையே முற்றிலும் எரிந்தது. இதில் நான் இறந்தேன். இதன் காரணமாக நான் இன்னும் உத்தரிக்கும் நிலையிலேயே இருக்கிறேன். அங்கிருந்து என் ஆன்மா விடுதலை பெற எனக்கு ஒரு திருப்பலி தேவைப்படுகிறது. எனவே நான் உத்தரிக்கும் நிலையிலிருந்து இங்கு வந்து உங்களிடம் இவ்வுதவியைக் கேட்க கடவுள் என்னை அனுமதித்தார்”. 

இதைக் கேட்ட பியோ “உங்கள் ஆன்மாவின் விடுதலைக்காக நாளை நான் திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன். நிச்சயம் அமைதியில் இளைப்பாறுவீர்கள்” என்று அந்த ஆன்மாவிற்கு ஆறுதல் கூறினார். பின்பு அந்த நபர் அங்கிருந்து அகன்றார். 

அடுத்த நாள் பியோ அந்த ஆன்மாவின் இளைப்பாறுதலுக்காக ஒரு திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். பின்பு பியோ மற்றொரு கப்புச்சின் சபைத் துறவியின் உதவியுடன் நகர் மன்றம் சென்று இந்நிகழ்வின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடித்தார். 1908 இல் அதே இடத்தில், அதே பெயரில் ஒரு நபர் எப்படி இறந்தார் என்பதையெல்லாம் நகர் மன்ற ஆவணங்களிலிருந்து உறுதிப்படுத்திக்கொண்டார்.