தூய்மை பெறும் நிலை என்றால் என்ன?
தூய்மை பெறும் நிலை (உத்தரிக்கும் நிலை) என்பது ஏற்கனவே நிலைவாழ்வுக்கான உறுதிபெற்றுள்ள ஆன்மாக்கள், எல்லாம் வல்ல கடவுளின் தூய திருமுகத்தைக் காண அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பாவத்தின் தற்காலிக விளைவுகளிலிருந்து தூய்மைப்படுத்தப்படும் இடம்.
“விவிலியத்தில் தூய்மை பெறும் நிலை என்ற வார்த்தை எங்கே இருக்கிறது?” என்று பலர் கேட்கிறார்கள். இது விவிலியத்தில் காணப்படாது. ஆனால் தூய்மை பெறும் நிலை பற்றிய கருத்துகள் விவிலியத்திலும், தொடக்க கால திரு அவைத் தந்தையரின் எழுத்துக்களிலும் தெளிவாக உள்ளன.
‘தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோதும் விண்ணகத்தில் நுழையாது’ என்று திவெ 21:27 நமக்குச் சொல்கிறது. ஆக, தூய்மை பெறும் நிலை என்பது திவெ 21:27 இன் படி அசுத்தமான எதுவும் விண்ணகத்தில் நுழையாது என்பதை உறுதிசெய்யும் கடவுளின் வழியாகும்.
தானியேல் 12:2, மத்தேயு 12:32, 1 கொரிந்தியர் 3:13-15, 2 திமொத்தேயு 1:16-18, எபிரேயர் 12:14, எபிரேயர் 12:22-23, 1 பேதுரு 4:6 மற்றும் திருவெளிப்பாடு 21:10, 27 போன்ற பகுதிகளில் தூய்மை பெறும் நிலையின் தேவை, இறந்தவர்களுக்காக மன்றாட வேண்டியதன் அவசியம் ஆகிய கருத்துக்களைப் பார்க்க முடியும்.
தெர்த்தூலியன் (கி.பி. 211) தனது நூலான ‘மணிமுடி’ 3:3 இல் இவ்வாறு கூறுகிறார்: “இறந்தவர்களுக்காக அவர்களின் பிறந்தநாளில் நாம் பலி ஒப்புக்கொடுக்கிறோம்”.
கார்தேஜின் சிப்ரியான் (கி.பி. 253) இவ்வாறு எழுதுகிறார்: “மன்னிப்புக்காக காத்து நிற்பது ஒன்று, மாட்சியை அடைவது வேறொன்று. சிறைச்சாலையில் தள்ளப்பட்டால், ஒருவர் தன் கடன் தொகையை செலுத்தும் வரை அங்கிருந்து வெளியே செல்லக்கூடாது என்பது ஒன்று, நம்பிக்கையின் பலனை உடனே பெறுவது மற்றொன்று. பாவங்களுக்காக நிலையான துன்பத்தை அடைவது ஒன்று, சிறிது கால துன்பத்தால் அனைத்து பாவங்களிலிருந்தும் தூய்மைப்படுத்தப்படுவது மற்றொன்று. இறுதித்தீர்ப்பு நாளில் இறைவனின் தீர்ப்புக்காக காத்திருப்பது ஒன்று, இறப்பிற்குப் பின்பு கடவுளின் மாட்சியில் உடனடியாக பங்குபெறுவது மற்றொன்று”.
புனித ஜான் கிறிசோஸ்தோம் (கி.பி. 392) 1 கொரிந்தியர் 41:5 ஐ விளக்கிய தனது மறையுரையில் இவ்வாறு கூறுகிறார்: “இறந்தவர்களுக்கு நம்முடைய செப உதவியை வழங்க நாம் ஒருபோதும் தயங்கக் கூடாது”.
புனித அகுஸ்தின் (கி.பி. 419) தனது ‘கடவுளின் நகரம்’ என்னும் நூலில் இவ்வாறு கூறுகிறார்: “பாவத்தின் தற்காலிகத் தண்டனைகளை சிலர் இவ்வுலக வாழ்க்கையிலும், சிலர் மரணத்திற்குப் பிறகும், சிலர் இங்கேயும் மறுமையிலும் அனுபவிக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் இறுதித் தீர்ப்புக்கு முன்னரே முடிந்துவிடும். மரணத்திற்குப் பிறகு தற்காலிகத் தண்டனைகளை அனுபவிக்கும் அனைவரும் நிலையான தண்டனைக்கு உள்ளாகமாட்டார்கள்”.