Friday, 4 November 2022

கல்லறைப் பாடம் - 4

ஒரு புனித ஆன்மாவின் கை ரேகை 




அவர் பெயர் தெரசா கெஸ்டா. அவர் இத்தாலியின் அசிசி நகருக்கு அருகிலுள்ள ஃபோலிக்னோவில் பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரியாக இருந்தார். இவர் நவம்பர் 4, 1859 அன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். சரியாக 12 நாட்களுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட சகோதரி அன்னா ஃபெலிசியா திருப்பண்ட அறையின் உள்ளே இருந்து அழுகுரல் ஒன்றைக் கேட்டார். சகோதரி அன்னா ஃபெலிசியா அவசரமாக கதவைத் திறந்து பார்க்க, அங்கே யாரும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்து அழு குரலைக் கேட்டார். 

இப்போது “கடவுளே, நான் இப்படி துன்புறுகிறேனே!" என்று சகோதரி தெரசா வருத்தத்துடன் புலம்புவதை அன்னா தெளிவாகக் கேட்டார். சற்று நேரத்தில் அறை கடும் புகையால் இருட்டாக மாறியது. அதிலிருந்து சகோதரி தெரசா தோன்றி, அறையின் வாசலை நோக்குச் சென்றபோது, “இதோ, கடவுளின் கருணைக்கு ஓர் ஆதாரம்" என்று கூக்குரலிட்டார். பின்பு அவர் அங்கிருந்த கதவில் கையை ஊன்றி தனது கை ரேகையை அதிலே விட்டுவிட்டு மறைந்தார். அது எரியும் கூடான இரும்பை மரத்தில் பதித்தது போல இருந்தது. 

சகோதரி அன்னா ஃபெலிசியா பயந்து போய், உதவிக்காக கூக்குரலிட்டார். சிறுது நேரத்தில் எல்லா சகோதரிகளும் அங்கு கூடினர். சகோதரி அன்னா ஃபெலிசியா, சகோதரி தெரசா உத்தரிக்கும் நிலையிலிருந்து வருகை தந்ததாகவும், கதவில் எரிந்த கை ரேகையை விட்டுச் சென்றதாகவும் கூறினார். அவர்கள் அனைவரும் அது சகோதரி தெரசாவின் கை என்று அங்கீகரித்தனர். 

அவர்கள் இரவு முழுவதும் சகோதரி தெரசாவுக்காக செபித்தனர். அடுத்த நாள் காலையில் அவர்கள் அனைவரும் சகோதரி தெரசாவுக்காக நற்கருணை பெற்றனர். பின் வந்த நாட்களில், சகோதரி தெரசாவின் எரிந்த கை ரேகை மரக் கதவில் பொறிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியது. 

சகோதரி தெரசாவின் முதல் காட்சிக்குப் பிறகு மூன்றாவது நாளில், அவர் மீண்டும் சகோதரி அன்னா ஃபெலிசியாவுக்கு ஓர் அற்புதமான ஒளியில் தோன்றினார். அப்போது சகோதரி தெரசா கூறியது: “நான் ஒரு வெள்ளிக்கிழமை அன்று இறந்தேன். இதோ இன்று மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை, இன்று நான் நிலையான மாட்சிக்குள் நுழைகிறேன்!" அவர்  விண்ணகத்திற்குச் செல்வதற்கு முன், சகோதரி அன்னா ஃபெலிசியாவிடம், “சிலுவையைச் சுமக்க வலிமையாயிருங்கள், துன்பப்படுவதற்கு துணிவோடிருங்கள், ஏழ்மையை விரும்புங்கள்" என்று அறிவுறுத்தினார்.