Saturday, 27 February 2021

தவக்காலம் - கிறிஸ்துவின் கைகள்

 இழந்த கைகளின் கதை



ஒரு நாள் காலை.

நான் மண்டியிட்டு செபிக்கும்போது 

கிறிஸ்துவின் சிலுவையைப் பார்த்தேன்.

மிகவே திகைத்துப் போனேன். 

இயேசுவின் கைகளை அதில் காணவில்லை.

நான் கூரையிலிருந்து தரை வரைக்கும் தேடினேன்.

அதற்கு அப்பாலும் தேடினேன்.

ஆனால் காயமடைந்த அவருடைய கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.


அதனால் ஆண்டவர் பக்கம் திரும்பினேன்.

இது ஒரு கனவு தானா?

ஏன் மாட்சிக்குரிய அவரது இருக்கையில் 

அவர் முழுமையற்றவராக தெரிகிறார்?

என்று கேட்டேன்.


அவர் சொன்னார்:

“குழந்தாய்! 

நீங்களே என் கைகள்.  

பாதிக்கப்பட்டவரின் காயங்களை குணமாக்குங்கள்.  

ஏழைகளை கரிசனையோடு கவனித்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கையற்றோருக்கு நம்பிக்கை கொடுங்கள். 

சோர்வுற்றோரை  தேற்றுங்கள். 

ஆடை இழந்தோரை உடுத்துங்கள்.

இதைச் செய்வதன் மூலம் 

நீங்கள் என் கைகளை மீட்டெடுங்கள்."


மூலம்: " Encountering God in our Life ".


தவக்காலத் திருவுரைகள்

 வெறுப்பை வேரறுப்போம்! அன்பை அறுவடை செய்வோம்!

மத்தேயு 5: 43-48


மனிதர்களிடத்தில் அன்பிற்கான எதிர்பார்ப்பும் ஏக்கமும் அதிகமாகவே இருக்கிறது. நாம் அனைவரும் எல்லோராலும் அன்பு செய்யப்படவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் அதே சமயத்தில் எல்லோரையும் அன்பு செய்வதற்குத் தயக்கமும் காட்டுகின்றோம். பிறரால் வெறுக்கப்பட வேண்டும் என்று நம்மில் எவரும் இங்கு விரும்புவதில்லை. ஆனால் அதே சமயத்தில் பிறர் மீது வெறுப்பைக் காட்ட நாம் துளியும் தயங்குவதுமில்லை. இந்த முரண்பாடு நம்முடைய வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறது. 

அன்பு ஒன்றே நிறைவுக்கு நம்மை அழைத்துச் செல்லும். திருச்சட்டங்களின் நிறைவு அன்பே. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்கிறார் வள்ளுவர். ‘அன்பே அனைத்துக்கும் ஆதாரம்’ என்பதை எல்லாச் சமயங்களும் எடுத்துரைக்கின்றன. அன்பே கடவுள் என்பது இறைமொழி. ஆனால் அந்த அன்பை வாழ்வாக்குதில் எண்ணற்ற சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன என்பதை அதிகமாய் நம்முடைய வாழ்வு அனுபவங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. 

பிடித்தவருக்கு அன்பு, பிடிக்காதவருக்கு வெறுப்பு என்பதைத்தான் நம்முடைய வாழ்வின் போக்காக அமைத்திருக்கிறோம். ஆனால் பகைவருக்கு அன்பு, வெறுப்போருக்காக செபம் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு நிறைவாழ்வுக்கான புதிய பாதையை நமக்குக் கற்றுத்தருகிறார். அப்பாதையை ‘அன்பு’ என்று இயேசு நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்பாதையில் அவரே நமக்குமுன் நடந்தும் காட்டியிருக்கிறார். நமது விண்ணகத் தந்தை நிறைவாக இருக்கிறார் ஏனெனில் அவர் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கிறார். அவரைப் போன்று நாமும் நிறைவாக இருக்க நாமும் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்க வேண்டும் என்பதே இயேசு நமக்குத் தரும் படிப்பினை.

நம்மை அன்பு செய்பவரை பதிலுக்கு அன்பு செய்வதே இன்;றைய சூழலில் மிகவும் சவாலாக இருக்கும் பட்சத்தில், நம்மை வெறுப்பவரையும், அன்பு செய்ய மறுப்பவரையும் எப்படி அன்பு செய்வது? அன்பு என்பதே அனைவரையும் அரவணைப்பதுதானே. அந்த அன்பில் அளவுபார்க்க அளவுகோலையும், எடை பார்க்க தராசையும் தூக்கித் திரிவது சரியாகுமோ? வெறுப்பை விதைத்தால் வெறுப்பையே அறுவடை செய்யமுடியும். அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யமுடியும். 

அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுபவரா நீங்கள்? பிறகு என்ன தயக்கம், அன்பை எல்லோரிடத்திலும் விதையுங்கள். வெறுப்புணர்வு அடுத்தவரை பாதிப்பதைவிட நம்மையே அதிகம் பாதிக்கும். அன்பை அடுத்தவருக்கு நாம் வழங்குகிறதுபோது அது அவர்களைவிட நம்மையே அதிகமாக மகிழ்வடையவும், நிறைவடையவும் செய்யும். நாம் பிறரால் அன்பு செய்யப்படுவதில் அல்ல, நாம் பிறரை அன்பு செய்வதில்தான் அன்பின் உன்னதத்தை உணர முடியும். ஆம், வெறுப்பு நஞ்சென்றால், அன்பே அகில உலகும் வாழ்வதற்கான அமிழ்தும் அருமருந்தும் ஆகும். எனவே வெறுப்பை வேரறுப்போம். அன்பை அறுவடை செய்வோம். 


Friday, 26 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!

மத்தேயு 5:20-26


மனிதன் தனித்தீவல்ல. மனிதன் ஒரு சமூக உயிரி என்று மானுடவியலாளர்கள் சொல்வார்கள். மனித வாழ்வு உறவுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. உறவுகள் மனித வாழ்வுக்கு வர்ணம் சேர்க்கின்றன. உறவுகளின் உன்னதம் மனித உயிர்களை உயிர்த்துடிப்புடன் வாழவும் வளரவும் வைக்கிறது. ஆனால் இன்றைய சமுதாயம் உறவை ஒதுக்கி பிளவைப் போற்றுகிறது. நெருக்கத்தை வெறுத்து தொலைவில் செல்ல விரும்புகிறது. அன்பு முற்றிலும் குறைந்து அறிவு மட்டுமே அதிகரித்ததால் வந்த ஆபத்து என்னவென்றால் உறவுகளற்ற சமுதாயம் என்று சொல்லலாம். 

இப்படியாக மனிதன் வளர வளர நாளுக்குநாள் தன்னைச் சுற்றி ஒரு குறுகிய வட்டம் ஒன்றை வரைந்து கொண்டு, அந்த வட்டத்தினுள் வெளி நபர் எவரையும் சேர்ப்பதைத் தவிர்த்து வருகிறான். உறவோடு வாழப் பணிக்கப்பட்ட மனிதன் இன்று உறவுகளைத் தொலைத்துவருகிறான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. ஆனால் டிஜிட்டல் உலகில் வாழும் நமக்கு உறவு என்பதே பழைய சித்தாந்தமாகவும், நாகரிக வாழ்வுக்குத் தடையாக இருப்பதாகவும் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

இப்படி உறவுகள் அஸ்தமித்துப்போன சூழலில் உறவுச் சிறகை உயரே விரித்து உலகை வட்டமிட இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு அழைப்பு தருகிறார். பலிபீடத்திற்கு வரும்போது பிளவுபட்ட உறவுகளோடு வரவேண்டாம் என்று இயேசு சொல்கிறார். நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு காணிக்கையை செலுத்த நமக்கு கற்பிக்கிறார். உலகமே சமூக இடைவெளியைப் பெரிதும் வலியுறுத்தும் இக்கொரோனா காலச்சூழலில், உள்ளங்களுக்கு இடையே உருவாகிக் கொண்டிருக்கும் இடைவெளியானது இன்றைய உறவுகளுக்கு சமாதிகளைக் கட்டுகிறது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

‘மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று’, என்று படைப்பின் தொடக்கத்தில் கருதிய கடவுள் மனிதனுக்கு தகுந்த துணையை ஏற்படுத்தினார். இணைந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்றும், இறைவனின் விருப்பம் என்றும் படைப்பின் தொடக்கத்திலேயே நமக்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது. ‘உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்பதை உணர்ந்து, நம் சகோதர  சகோதரிகளுடன் உள்ள உறவை சீர் செய்ய முற்பட வேண்டும். இணையாத தண்டவாளங்களாய் இறைவன் முன் இனியும் நாம் நிற்க வேண்டாம். உறவுகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்வோம். இதயங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்புவோம். இனியாவது இணைந்த இதயங்களாய் இறைவனிடம் செல்வோம்!