Sunday, 28 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 இயேசுவோடு செல்வோம்! இயேசுவாக மாறுவோம்!

மாற்கு 9: 2-10


உலகில் நமக்கான மாதிரிகளாக திரை நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும், அரசியல் தலைவர்களையும் நாம் தேர்ந்தெடுத்து, அவர்களைப் போன்று மாறவும், வாழவும் துடிக்கிறோம். ஆனால் நம்மைப் போன்று மனிதராய் மாறவும், வாழவும் ஆசைப்பட்டு, அதற்காக கடவுள் நிலையை விரும்பித் துறந்து பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப்போன்று வாழந்து காட்டிய இயேசுவை நம் வாழ்வின் மாதிரியாக வைத்திட வேண்டாமா? நம்மைப் போல மாறியவருக்காக, நாம் அவரைப் போல மாறிட முயற்சி செய்ய வேண்டாமா? 

கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் என்கிற இந்த வார்த்தையின் பொருள் நமக்குப் புரிந்துள்ளதா? கிறிஸ்தவன் (கிறிஸ்து அவன்) அல்லது கிறிஸ்தவள் (கிறிஸ்து அவள்) என்று சொல்லும் போது நாமே மறு கிறிஸ்துவாக மண்ணில் நடமாடும் பொறுப்பை இப்பெயர் நமக்கு வழங்கியுள்ளது என்பதை உணர்ந்துள்ளோமா? இயேசு கிறிஸ்துவின் பாசறையில் பயிற்சி பெறும் நம் அனைவருக்கும் அவரைப் போன்று வாழ வேண்டிய கடமையும் பொறுப்பும் மிகவே உண்டு என்பதை உணர்ந்தவர்களாக, பேருக்கு வாழாமல், பெயருக்கேற்ற வாழ்வு வாழ தீர்மானிப்பதே இன்றைய தேவையாக உள்ளது. 

இயேசுவின் உருமாற்ற அனுபவத்தைக் குறித்து இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். மலைக்குத் தன் சீடர்களோடு இயேசு சென்றார். அங்கு தம் தந்தையிடம் செபத்தில் ஒன்றித்திருந்தார். அப்போது அவர் தோற்றம் மாறினார். தந்தையாம் கடவுள் இயேசுவைக் குறித்து சாட்சியம் பகர்ந்தார். அந்த மலையில் இயேசுவோடு சீடர்கள் இருந்தாலும் இயேசு மட்டுமே உருமாறினார். தந்தையாம் கடவுளுக்கு உகந்த வாழ்வு இயேசுவிடம் மட்டுமே இருந்தது. எனவே மாட்சிக்குரிய தோற்றம் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது. இயேசுவோடு மலையில் ஏறிய எல்லோரும் தந்தைக்குரியவர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். ஆகவே தான் மீண்டும் மலையைவிட்டு கீழே இறங்கி வருகிறார். எப்படியும் எல்லோரையும் தம்மைப் போன்று கடவுளுக்கு உகந்தவர்களாய் உருவாக்கிட வேண்டும் என்பதே இயேசுவின் கனவாக இருந்தது. எப்படி தந்தைக்குரியவர்களாக வாழ்வது? இயேசுவுக்கு செவிசாய்த்து, அவரைப்போல வாழ்வது. 

அன்று இயேசுவோடு மலைக்குச் சென்ற சீடர்கள், மாட்சிக்குரிய தோற்றத்தில் இயேசுவைப் பார்த்தார்கள், பரவசமடைந்தார்கள். அதையே நாமும் இன்று திருக்கோயில்களில் திருப்பலி நேரத்தில் பெற்று உளப்பூரிப்படைகின்றோம். ஆனால் அத்தோடு நின்றுவிடாமல், இத்தவக்காலத்தில் இயேசுவாகவே மாறிட அழைப்பு பெறுகிறோம். இயேசுவோடு செல்வதும், இயேசுவாக மாறுவதும் நம் வாழ்வில் நம்மையும் விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாக்கிடும். எனவே நாம் இயேசுவுக்கு செவிசாய்த்தவர்களாய் வாழ்ந்து, இயேசுவோடு செல்வோம்! இயேசுவாக மாறுவோம்!


Saturday, 27 February 2021

தவக்காலம் - கிறிஸ்துவின் கைகள்

 இழந்த கைகளின் கதை



ஒரு நாள் காலை.

நான் மண்டியிட்டு செபிக்கும்போது 

கிறிஸ்துவின் சிலுவையைப் பார்த்தேன்.

மிகவே திகைத்துப் போனேன். 

இயேசுவின் கைகளை அதில் காணவில்லை.

நான் கூரையிலிருந்து தரை வரைக்கும் தேடினேன்.

அதற்கு அப்பாலும் தேடினேன்.

ஆனால் காயமடைந்த அவருடைய கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.


அதனால் ஆண்டவர் பக்கம் திரும்பினேன்.

இது ஒரு கனவு தானா?

ஏன் மாட்சிக்குரிய அவரது இருக்கையில் 

அவர் முழுமையற்றவராக தெரிகிறார்?

என்று கேட்டேன்.


அவர் சொன்னார்:

“குழந்தாய்! 

நீங்களே என் கைகள்.  

பாதிக்கப்பட்டவரின் காயங்களை குணமாக்குங்கள்.  

ஏழைகளை கரிசனையோடு கவனித்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கையற்றோருக்கு நம்பிக்கை கொடுங்கள். 

சோர்வுற்றோரை  தேற்றுங்கள். 

ஆடை இழந்தோரை உடுத்துங்கள்.

இதைச் செய்வதன் மூலம் 

நீங்கள் என் கைகளை மீட்டெடுங்கள்."


மூலம்: " Encountering God in our Life ".


தவக்காலத் திருவுரைகள்

 வெறுப்பை வேரறுப்போம்! அன்பை அறுவடை செய்வோம்!

மத்தேயு 5: 43-48


மனிதர்களிடத்தில் அன்பிற்கான எதிர்பார்ப்பும் ஏக்கமும் அதிகமாகவே இருக்கிறது. நாம் அனைவரும் எல்லோராலும் அன்பு செய்யப்படவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால் அதே சமயத்தில் எல்லோரையும் அன்பு செய்வதற்குத் தயக்கமும் காட்டுகின்றோம். பிறரால் வெறுக்கப்பட வேண்டும் என்று நம்மில் எவரும் இங்கு விரும்புவதில்லை. ஆனால் அதே சமயத்தில் பிறர் மீது வெறுப்பைக் காட்ட நாம் துளியும் தயங்குவதுமில்லை. இந்த முரண்பாடு நம்முடைய வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறது. 

அன்பு ஒன்றே நிறைவுக்கு நம்மை அழைத்துச் செல்லும். திருச்சட்டங்களின் நிறைவு அன்பே. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்கிறார் வள்ளுவர். ‘அன்பே அனைத்துக்கும் ஆதாரம்’ என்பதை எல்லாச் சமயங்களும் எடுத்துரைக்கின்றன. அன்பே கடவுள் என்பது இறைமொழி. ஆனால் அந்த அன்பை வாழ்வாக்குதில் எண்ணற்ற சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன என்பதை அதிகமாய் நம்முடைய வாழ்வு அனுபவங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. 

பிடித்தவருக்கு அன்பு, பிடிக்காதவருக்கு வெறுப்பு என்பதைத்தான் நம்முடைய வாழ்வின் போக்காக அமைத்திருக்கிறோம். ஆனால் பகைவருக்கு அன்பு, வெறுப்போருக்காக செபம் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு நிறைவாழ்வுக்கான புதிய பாதையை நமக்குக் கற்றுத்தருகிறார். அப்பாதையை ‘அன்பு’ என்று இயேசு நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்பாதையில் அவரே நமக்குமுன் நடந்தும் காட்டியிருக்கிறார். நமது விண்ணகத் தந்தை நிறைவாக இருக்கிறார் ஏனெனில் அவர் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கிறார். அவரைப் போன்று நாமும் நிறைவாக இருக்க நாமும் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்க வேண்டும் என்பதே இயேசு நமக்குத் தரும் படிப்பினை.

நம்மை அன்பு செய்பவரை பதிலுக்கு அன்பு செய்வதே இன்;றைய சூழலில் மிகவும் சவாலாக இருக்கும் பட்சத்தில், நம்மை வெறுப்பவரையும், அன்பு செய்ய மறுப்பவரையும் எப்படி அன்பு செய்வது? அன்பு என்பதே அனைவரையும் அரவணைப்பதுதானே. அந்த அன்பில் அளவுபார்க்க அளவுகோலையும், எடை பார்க்க தராசையும் தூக்கித் திரிவது சரியாகுமோ? வெறுப்பை விதைத்தால் வெறுப்பையே அறுவடை செய்யமுடியும். அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யமுடியும். 

அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுபவரா நீங்கள்? பிறகு என்ன தயக்கம், அன்பை எல்லோரிடத்திலும் விதையுங்கள். வெறுப்புணர்வு அடுத்தவரை பாதிப்பதைவிட நம்மையே அதிகம் பாதிக்கும். அன்பை அடுத்தவருக்கு நாம் வழங்குகிறதுபோது அது அவர்களைவிட நம்மையே அதிகமாக மகிழ்வடையவும், நிறைவடையவும் செய்யும். நாம் பிறரால் அன்பு செய்யப்படுவதில் அல்ல, நாம் பிறரை அன்பு செய்வதில்தான் அன்பின் உன்னதத்தை உணர முடியும். ஆம், வெறுப்பு நஞ்சென்றால், அன்பே அகில உலகும் வாழ்வதற்கான அமிழ்தும் அருமருந்தும் ஆகும். எனவே வெறுப்பை வேரறுப்போம். அன்பை அறுவடை செய்வோம்.