Monday, 3 May 2021

வணக்க மாதம் : நாள் - 3

 நம்பிக்கையின் அன்னை

(பெல்ஜியம் - லீஜ்)



லீஜ் நாட்டில் அமைந்துள்ள டினாட் என்னும் நகரிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் செல்லஸ் என்பவரின் வீட்டிற்கு அருகில் இரண்டு அற்புதமான ஓக் மரங்கள் வளர்ந்திருந்தன. 1609 ஆம் ஆண்டில் இந்த இரண்டு பழைய மரங்களில் ஒன்று கில்லஸ் என்னும் மரம் வெட்டுபவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரத்தின் உட்புறத்தை பரிசோதித்த அம்மரம் வெட்டும் மனிதர்,  மூன்று இரும்புக் கம்பிகளுடன், ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் மீது அமர்ந்த வண்ணம் இருக்கும் மண்ணால் செய்யப்பட்ட புனித மரியன்னையின் ஒரு சிறிய திருவுருவச் சிலையைக் கண்டார். 

முன்பு அந்த ஓக் மரம் இளமையாக இருந்திருந்த காலத்தில் அவ்வழியே பயணம் செய்திருந்த நல்ல கிறிஸ்தவர்களுள் எவராவது ஒருவர், அந்த மரத்தில் காணப்பட்ட ஒரு துவாரத்தில் இந்த மரியன்னையின் திருவுருவச் சிலையை வைத்திருக்க வேண்டும். பின்பு காலப்போக்கில் திறந்திருந்த அந்த துவாரம்  படிப்படியாக மூடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு வளர வளர, அம்மரம் தன்னுடைய வயிற்றில் அச்சிறப்புக்குரிய மரியன்னையின் திருவுருவச் சிலையை சிதைவுறாமல் தாங்கியபடியே இருந்திருக்க வேண்டும் என்பதாக நம்பப்படுகிறது.

இந்நிகழ்வுக்குப் பின்னர், செல்லஸ் என்னும் அந்த உரிமையாளர் விரும்பியபடியே புனித கன்னி மரியாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக, அத்திருவுருவச் சிலையை மீண்டும் அங்கிருந்த மற்றொரு ஓக் மரத்தின்மீது நிறுவப்பட்டது. இந்த இரண்டாவது மரத்தில் நிறுவப்பட்ட கடவுளின் தாய் மரியாவின் திருவுருவத்தை ‘எங்கள் நம்பிக்கையின் தாய்’ என்ற தலைப்பில் மக்கள் வணங்கத் தொடங்கினர். பல அதிசயிக்கத்தக்க குணப்படுத்துதல்கள் அவ்விடத்தில் நடைபெற்றன. இவ்வாறு ஆச்சரியமூட்டும் அற்புதங்களால் விரைவில் திருப்பயணிகள் அந்த பகுதிக்கு பெருமளவில் வரத் தொடங்கினர். 

இப்பக்தி முயற்சியை ஒழுங்குபடுத்தும் நோக்கில், முதல் ஓக் மரத்திலிருந்து உண்மையான அன்னையின் திருவுருவத்தைப் போலவே ஒரு திருவுருவச் சிலையைச் செய்யச் சொன்னார். வியப்பூட்டும் வகையில் இரண்டாவதாக செய்யப்பட்ட அத்திருவுருவம் அப்படியே முதலாவதை ஒத்து இருந்தது. இந்த இரண்டாவது திருவுருவச் சிலையானது மறைமாவட்ட ஆயர் அவர்களால் பங்கு ஆலயத்தில் ஆடம்பரமாய் நிறுவப்பட்டது. 1622 ஆம் ஆண்டிலிருந்து இந்த நம்பிக்கை அன்னையின் பக்தி முயற்சி நாட்டின் பிற இடங்களுக்கும் பரவியது. 



திருவிழா கொண்டாடப்படும் நாள்: ஜீலை 27

செபம்: அற்புதமாய் ஓக் மரத்தில் வீற்றிருந்த புனித அன்னையே! உம் கருணையும் கரிசனையும் எங்களுக்கு நிறைவாய் கிடைக்கட்டும். அன்றாட வாழ்வில் எங்களுக்கு அருளின் வாய்க்காலாய் நீரே இருந்தருளும். எங்கள் நம்பிக்கையில் நாளும் எங்களை புதுப்பித்தருளும். ஆமென்.


Sunday, 2 May 2021

வணக்க மாதம் : நாள் - 2

 மேகத்தின் அன்னை

(குயிட்டோ - ஈக்வடார்)



மேகத்தின் அன்னை என்னும் பக்தி முயற்சி ஈக்வடாரில் தோன்றியது. 1696 ஆம் ஆண்டின் இறுதியில், குயிட்டோவின் ஆயர் டான் சாஞ்சோ டி ஆண்ட்ரேட் ஒய் ஃபிகுரோ என்பவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது குயிட்டோவின் புறநகரில் உள்ள குலூபோ என்ற கிராம மக்கள், கன்னி மரியாவுக்கு தங்கள் ஆயர் குணமடையுமாறு மன்றாடி ஒரு நவநாளை ஏற்பாடு செய்தனர். 

டிசம்பர் 30 அன்று, அவர்கள் குஸ்லுபோ நகரத்திலிருந்து குயிட்டோவில் உள்ள மறைமாவட்டப் பேராலயம் வரை ஒரு செபமாலை பவனியை ஏற்பாடு செய்தனர். அப்பவனியில், ஏறக்குறைய மாலை 4:30 மணியளவில், அருள்பணியாளர் டான் ஜோஸ் டி உலோவா என்பவர் வானத்தில் ஒரு பெரிய மேகத்தில் தோன்றிய ஒரு பெண்ணின் உருவத்தைக் கண்டார். உடனே அவர் அதைச் சுட்டிக்காட்டி, கூட்டத்தினரிடம் ‘கன்னி! கன்னி!’ என்று கூச்சலிட்டார். 

குவாப்லோ மற்றும் குயிட்டோ ஆகிய இரு இடங்களுக்கிடையே வானத்தில், இருண்ட மற்றும் அடர்த்தியான மேகத்தின் மீது நின்றவாறு புனித கன்னி மரியா தோன்றினார். அம்மேகம் அவளுடைய காலுக்கு பீடமாக இருந்தது. அவள் தலையில் ஒரு கிரீடம் அணிந்தவளாய், செங்கோல் போல வலது கையில் லில்லி மலர்க்கொடியை பிடித்தவளாய், இடது கையில் அவள் தன்னுடைய தெய்வீக மகன் இயேசுவைச் சுமந்தவாறு காட்சியளித்தாள். 

இக்காட்சியை அன்று பவனியில் பங்குபெற்ற 500 க்கும் மேற்பட்ட நபர்களும், குயிட்டோவின் சுற்றுப்புறங்களில் இருந்த பலரும் கண்டனர் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சாட்சியங்களும் இன்றும் குயிட்டோ உயர் மறைமாவட்டத்தின் ஆவணக் காப்பகங்களில் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. பின்பு ஆயரும் உடனடியாக குணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து ‘மேகத்தின் அன்னை’ என்ற தலைப்பின் கீழ் அவர் புனித கன்னி மரியாவுக்கான பக்தி முயற்சியை அங்கீகரித்தார். மேலும் குயிட்டோ உயர் மறைமாவட்டப் பேராலயத்தில் மேகத்தின் அன்னைக்கு ஒரு சிறப்பு பீடத்தை அமைத்தார். 


திருவிழா கொண்டாடப்படும் நாள்: சனவரி 1

செபம்: மிகவும் அதிசயமான மேகத்தின் அன்னையே! உம்முடைய பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் எங்களை எந்நாளும் வைத்து காத்தருளும். எங்கள் தேவைகளில் எங்களுக்கு உதவியருளும். எங்கள் துன்பங்களில் எங்களுக்கு நீரே ஆறுதலாயிரும். ஆமென்.


Saturday, 1 May 2021

வணக்க மாதம் : நாள் - 1

தூணின் அன்னை

(சரகோசா – ஸ்பெயின்)



திரு அவையின் வரலாற்றில் புனித மரியன்னை முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள எப்ரோ ஆற்றின் கரையில் அமைந்துள்ள சரகோசா என்னுமிடத்தில் புனித யாக்கோபுவிற்கு (நற்செய்தியாளரான புனித யோவானின் சகோதரர்) காட்சியளித்தார் என்று திரு அவையின் மரபுவழிச் செய்திகளின்படி நாம் அறிகிறோம். பதிவுசெய்யப்பட்ட மற்ற எல்லா மரியன்னையின் திருக்காட்சிகளைப் போலல்லாமல், இது மரியாவின் மண்ணக வாழ்க்கையின் போதே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு அவையின் பாரம்பரியத்தின்படி, இன்றைய ஸ்பெயினில் உள்ள பிறசமயத்தினருக்கான புனித யாக்கோபுவின் கடினமான மறைபரப்புப் பணியில் அவருக்கு மிகவும் தேவை ஏற்படும்போது, அவரை ஊக்குவிக்க மரியன்னை அவருக்குத் தோன்றுவார் என்று மரியன்னையே அவருக்கு அக்காட்சியில் உறுதியளித்தார் என்றும் சொல்லப்படுகிறது. 

கி.பி 40 ஆம் ஆண்டில், சனவரி இரண்டாம் நாள், டோபர்ட் கரையில் ஓர் இரவு புனித யாக்கோபு மற்றும் அவரது எட்டு சீடர்கள் செபம் செய்துகொண்டிருந்தபோது, தன் கையில் குழந்தை இயேசுவுடன் ஒரு தூணில் நின்றவாறு காட்சியளித்த புனித மரியன்னை, அவர்களிடம் அந்த இடத்தில் ஓர் ஆலயத்தை கட்டும்படி கேட்டுக்கொண்டார். ‘என் பாதுகாப்பின் கீழ் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் அனைவருக்கும், கடவுள் என் பரிந்துரையின் மூலம் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்காக, அவ்வாலயம் அத்தருணத்திலிருந்து உலகின் இறுதிக் காலம் வரையிலும் நிலைத்து நிற்கும்.’ என்ற வாக்குறுதியையும் புனித மரியன்னை வழங்கினார். 

சராகோசாவில் உள்ள தூணின் அன்னை ஆலயம் தான், வரலாற்றில் புனித மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் ஆகும். அன்னையின் வாக்கின்படியே, இவ்வாலயம் படையெடுப்புகள் மற்றும் போர்களில் இருந்து தப்பித்து இன்றுவரை நிலைத்திருக்கிறது.  1936 முதல் 1939 வரையிலான ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் மூன்று குண்டுகள் இந்த ஆலயத்தில் வீசப்பட்டன. ஆனால் அவை எதுவும் வெடிக்கவில்லை.

இப்போது ஆலயத்தில் ஒரு தூணில் நிற்கும் அன்னையின் சிறிய மரத்தாலான திருவுருவச் சிலையானது புனித யாக்கோபுவிற்கு புனித மரியன்னை காட்சியளித்தபோது வழங்கியதாக கூறப்படுகிறது.


திருவிழா கொண்டாடப்படும் நாள்: அக்டோபர் 12

செபம்: தூணின் அன்னை என்று பெருமையோடு அழைக்கப்படும் இறைவனின் புனித அன்னையே!  தாழ்மையுடன் உம்மை அணுகி, உம்மிடம் வேண்டுதல் செய்யும் எனக்கு நீர் ஒரு பரிந்துரையாளராகவும், அருளின் வாய்க்காலாகவும் இருந்து, இறைவனின் மீதான என் நம்பிக்கையை தூணைப் போல் உறுதிப்படுத்தியருளும். ஆமென்.