Saturday, 22 May 2021

வணக்க மாதம் : நாள் - 22

 நல்லாலோசனையின் அன்னை

(ஜெனாசானோ - இத்தாலி)



நல்லாலோசனையின் அன்னையின் அசல் ஓவியத்தை உள்ளடக்கிய திருத்தலம் உரோம் நகருக்கு தென்கிழக்கில் சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள ஜெனாசானோ என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜெனாசானோவிலிருந்த மக்கள் கன்னி மரியாவுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தனர். எனவே அவர்கள் நல்லாலோசனையின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயத்தை கட்டினார்கள். இந்த தேவாலயம் 1356 இல் அகுஸ்தீன் துறவற சபை குருக்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டது. நாளடைவில் அக்கோவில் பழுதடைந்தது. பெட்ரூசியா டி ஜெனியோ என்ற கைம்பெண் தனது சேமிப்பை வைத்து அதனைப் புதுப்பிக்க முன்வந்தார். தனது சேமிப்பு அனைத்தையும் அப்பணிக்காக அவர் செலவிட்டும், அவரால் ஆலயம் முழுவதையும் புதுப்பிக்க முடியவில்லை. 

1467ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று அந்நகர மக்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் நகரின் பாதுகாவலரான புனித மாற்குவின் விழாவை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்று மாலை 4 மணியளவில், மக்களை ஆடல்பாடல்களால் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் மிக நேர்த்தியான இசையைக் கேட்டனர். பின்னர் அனைவரும் அமைதியாக அந்த இசை வந்த திசை நோக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்மமான மேகம் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த ஆலயத்தில் முடிக்கப்படாத சுவரில் இறங்கியது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அந்த மேகம் மறைந்தது. ஆனால் அவ்விடத்தில் அன்னை மரியாவையும் குழந்தை இயேசுவையும் கொண்ட ஓர் ஓவியம் தெரிந்தது. இந்த ஓவியம் முடிக்கப்படாத அந்த ஆலயச் சுவரில் இருந்தது. உடனடியாக ஆலய மணிகள் தானாகவே ஒலித்தன. 

இப்புதுமைச் செய்தி இத்தாலி முழுவதும் பரவியது. பலருக்குப் புதுமைகள் நடந்தன. முக்கியமான புதுமைகளைப் பதிவுசெய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். 1939ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் தனது பாப்பிறைப் பதவிக்காலத்தை நல்லாலோசனை அன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்தார். தற்போதைய திருத்தலமானது 1628 இல் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில், இத்திருத்தலத்தில் ஒரு குண்டு விழுந்து, தூயகத்தையும், பலிபீடத்தையும் சிதைத்தது. ஆனால் சற்று தொலைவில் இருந்த உடையக்கூடிய நல்லாலோசனையின் அன்னையின் படம்  சிறிதும் சேதமடையவில்லை.

திருவிழா நாள்: ஏப்ரல் 26

செபம்: நல்லாலோசனையின் அன்னையே! குழப்பங்களாலும், சிக்கல்களாலும் நாங்கள் சிரமப்படும் நேரங்களில் எங்களுக்கு நீரே நல்லாலோசனை தந்து உதவியருளும். ஆமென். 


Friday, 21 May 2021

வணக்க மாதம் : நாள் - 21

 வெட்டுக்கிளிகளின் அன்னை

(கோல்ட் ஸ்பிரிங் - மினசோட்டா)



முதன்முதலில் இவ்வாலயம் கட்டப்பட்டபோது, அது மரியாவின் சகாயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்போது, இது அதிகாரப்பூர்வமாக விண்ணேற்பு அன்னைக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஆலயமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அது தனது பழைய புனைப்பெயரான வெட்டுக்கிளிகளின் அன்னை ஆலயம் என்பதனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மரியா இங்கு வெட்டுக்கிளிகளின் அன்னை என்று வணங்கப்படுகிறார்.

மினசோட்டா என்ற பகுதியில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பயங்கரமான பிளேக் ஜூன் 1873 நடுப்பகுதியில் தொடங்கியது. தென்மேற்கு மினசோட்டாவில் உள்ள விவசாயிகள் மேற்கிலிருந்து ஓர் இருண்ட புயல் மேகம் போல் நகர்வதைப் பார்த்தார்கள். ஆனால் அது மழை தாங்கும் மேகம் அல்ல. இது மில்லியன் கணக்கான வெறித்தனமான மலை வெட்டுக்கிளிகளின் மேகமாக இருந்தது. வெட்டுக்கிளிகள் எல்லா பயிர்களையும் அழித்தன. 

இது உள்;ர் விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இது பல ஆண்டுகளாக நீடித்தது.  இறுதியில் மினசோட்டாவின் ஆளுநர் ஜான் எஸ். பில்ஸ்பரி, 1877 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியை வெட்டுக்கிளிகளிடமிருந்து கடவுளின் விடுதலையைக் கேட்கும் பிரார்த்தனை நாளாக அறிவித்தார். 

அச்சமயத்தில் லியோ வின்டர் என்ற குரு கோல்ட் ஸ்பிரிங் என்ற இடத்திலுள்ள தம் பங்கு மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி அவர்கள் கன்னி மரியாவுக்கு ஒரு நேர்ச்சை சிற்றாலயம் எழுப்புவதாகவும், அங்கு மரியாவின் வணக்க நாளான சனிக்கிழமைகளில் திருப்பலியை நிறைவேற்றி, வெட்டுக்கிளிகளின் தொல்லை நீங்க அன்னையின் பரிந்துரையை நாடி, அவளிடம் அடைக்கலம் புகவும் அவர் தன் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜூலை 16, 1877 அன்று மக்கள் இதற்கு ஒப்புக் கொண்டனர். ஆகஸ்ட் 15, 1877 அன்று இச்சிற்றாலயம் புனிதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 8 ஆம் தேதி, வெட்டுக்கிளிகளின் தொந்தரவு அப்பகுதியில் முழுவதும் இல்லாமல் போய்விட்டது. அதன்பிறகு ஒரு தீவிர வெட்டுக்கிளி படையெடுப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

திருவிழா நாள்: ஆகஸ்ட் 15

செபம்: வெட்டுக்கிளிகளின் அன்னையே! வாழ்வில் எங்களை வருத்தத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்ற, எல்லா விதமான நெருக்கடியான நேரங்களிலும் நீரே எங்களுக்கு ஆறுதலும் ஆதரவுமாக இருந்தருளும். ஆமென். 


Thursday, 20 May 2021

வணக்க மாதம் : நாள் - 20

 குளத்தின் அன்னை

(ஜோன் - பிரான்ஸ்)



குளத்தின் அன்னை என்பது வேலார்ஸில் உள்ள ஓச்சே பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் ஆலயம் ஆகும். இது பர்கண்டியில் டிஜோனில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருத்தலம் 12 ஆம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. 

1435 ஆம் ஆண்டில் ஜூலை 2 ஆம் தேதி குழந்தை இயேசுவை சுமந்த கன்னி மரியாவின் புதைக்கப்பட்ட சிலை இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. இது முற்றிலும் கல்லால் ஆனது. முஸ்லீம் படையெடுப்பின் போது அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

அதிசயமான இச்சிலையை நிறுவுவதற்காக புனித ஆசீர்வாதப்பர் சபை துறுவிகளால் இங்கு முதலில் ஓர் ஆலயம் கட்டப்பட்டது. குளத்தின் அன்னை என்று மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருத்தலம் விரைவில் இப்பகுதியின் முக்கிய ஆலயமாக மாறியது. பலர் இத்திருத்தலத்திற்கு திருயாத்திரையாகச்;கு சென்ற பல பிரபலமானவர்கள் இருந்தனர். அத்தகையோருள் புனித பிரான்சிஸ் சலேசியாரும் ஒருவர். இவரே குளத்தின் அன்னையிடம் மன்றாட ஒரு செபத்தையும் உருவாக்கினார்.

புனித ஆசீர்வாதப்பர் துறுவற சபை மடமும் இந்த ஆலயமும் 1791 இல் பிரெஞ்சு புரட்சியின் கத்தோலிக்க எதிர்ப்பு பயங்கரவாதத்தின் போது இடிக்கப்பட்டன. துறவு மடத்தின் இடத்தில் ஒரு கல் சிலுவை பின்னர் அதன் நினைவாக அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் குளத்தின் அன்னையின் திருவுருவச் சிலையானது பக்கத்திலிருந்த பங்கின் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இந்த குளத்தின் அன்னையின் அதிசய சிலையின் ஆலயம் நிரந்தரமாக வேலார்ஸ் ஆலயத்திற்கு மாற்றப்பட்டதோடு, அது 1861 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது.

திருவிழா நாள்: நவம்பர் 7

செபம்: குளத்தின் அன்னையே! எங்களுடைய வாழ்வு புதைந்து போனாலும் மீண்டும் உம் தயவால் புதுப்பிக்கப்படவும், உடைந்து போனாலும் மீண்டும் உம் பரிவால் உருப்பெறவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.