Tuesday, 25 May 2021

வணக்க மாதம் : நாள் - 25

 ஏழைகளின் அன்னை

(பெல்ஜியம் - பானியூக்ஸ்)



ஜனவரி 15, 1933 மாலை, மரியெட் பெக்கோ (வயது 11) தனது ஜன்னலுக்கு வெளியே தோட்டத்தில் ஏதோ ஒன்றைக் கண்டதாக நினைத்தாள். அது ஏதோ ஒரு பிரதிபலிப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்த அவள் எண்ணெய் விளக்கை வேறு இடத்திற்கு நகர்த்தினாள். ஆனாலும் தோட்டத்தில் கைகளில் செபமாலையுடன் ஓர் அழகான மற்றும் ஒளிரும் பெண்ணை மரியெட் பார்த்தார். கொட்டும் பனியில் அப்பெண் வெறுங்காலுடன் அங்கே நின்றவாறு இருந்தார். 

புனித மரியன்னை சிறுமி மரியெட்டிற்கு மேலும் ஏழு முறை தோன்றினார். இரண்டு தோற்றங்களின் போது மரியெட் ஒரு நீரூற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே கடவுளின் தாய் மரியா, ‘இந்த வசந்தம் எல்லா தேசங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்’ என்றும் அவளுக்கு கூறினார். 

இக்காட்சிகளின் போது, மரியா ஒரு வெள்ளை அங்கியும் இடையில் நீலக் கச்சையும் அணிந்திருந்தார். அவர் தன்னுடைய தலை மற்றும் தோள்களை மறைக்கும் வகையில் ஒரு முக்காடு அணிந்திருந்தார்.  அவருடைய வலது கால் வெளியே தெரிந்தது. மேலும் அவரது கால்விரல்களுக்கு இடையில் ரோஜா மலர்களால் முடிசூட்டப்பட்டிருந்தது. 

மரியா ஏழைகளின் அன்னை என்று இக்காட்சியில் தன்னை வெளிப்படுத்தினார். அவர் ஏழைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும், மற்றும் துன்புறுகின்றவர்களுக்கும் கடவுளிடம் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். மரியா இக்காட்சிகளில் பல முறை செபத்தை ஊக்குவித்தார். துன்புறுவோரின் துன்பங்களைத் தணிக்க வந்ததாக அவர் கூறினார். தனக்காக ஒரு சிறிய தேவாலயத்தையும் கட்டும்படி அவர் கேட்டார்.

திருவிழா நாள்: ஜனவரி 15

செபம்: ஏழைகளின் அன்னையே! எங்கள் வாழ்வின் எளிமையும் ஏழ்மையும் இறைவனால் எப்போதும் விரும்பப்படுவதாக. அதனால் எங்கள் துன்பங்கள் அகன்று, இறையருளால் நாங்கள் நிறைவடையவும் நீரே எங்களுக்காக மன்றாடும். ஆமென். 


Monday, 24 May 2021

வணக்க மாதம் : நாள் -24

 வானதூதர்களின் அன்னை

(ஆர்கோலா, இத்தாலி) 


ஆர்கோலா கிராமத்தில் கன்னி மரியாவின் அதிசயமான தோற்றம் நடந்த இடத்தில் வானதூதர்களின் அன்னை ஆலயம் கட்டப்பட்டுள்ளது.  21 மே 1556 அன்று, அந்த ஆண்டில், அது பெந்தெகொஸ்தே நாளின் இரண்டாவது நாள். திருப்பலிக்குப் பிறகு, கார்பனாராவில் இருந்த தங்கள் பண்ணையில் பார்பரா, கமிலா, எலிசபெட்டா, கேடரினெட்டா மற்றும் ஏஞ்சலா, ஆகிய ஐந்து சகோதரிகளும் அவர்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்களும் செபமாலை செபிக்கையில், ஒரு உன்னதமான பெண்மணி ஒருவர் ரோஸ்மேரி புதருக்கு மேலே தோன்றினார்.  சூரியனை விட பிரகாசமாக அவர் இருந்தார். வெள்ளை உடை அணிந்திருந்தார். இரண்டு வானதூதர்களால் சூழப்பட்டிருந்தார். அப்பெண்மணி தனது கையை உயர்த்தி, இனிமையான குரலில் அவர்களிடம், ‘அன்பர்களே, போய், அனைவரையும் செபிக்கவும், தவம் செய்யவும்  சொல்லுங்கள். நல்ல கிராமவாசிகளிடம் எனக்கு இந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டும்படி சொல்லுங்கள்’ என்றார். 

அப்பெண் மேல்நோக்கி ஆகாயம் வரை உயர்ந்து, அவளுடைய வானதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் பார்வையில் இருந்து மெதுவாக மறைந்தார். அவர்கள் விண்ணக ஆறுதலாலும் நம்பிக்கையாலும் நிறைந்திருந்தனர். அவர்கள் அக்காட்சியில் இருந்து மீண்டவர்களாய், ஆச்சரியத்தில் திகைத்து நின்றார்கள். அவசரமாக தங்கள் வீட்டை அடைந்து தாங்கள் கண்ட காட்சியைப் பற்றி தங்கள் அன்புக்குரியவர்களிடமும் பங்குத்தந்தையிடமும் பரவசமாய் எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட கிராமவாசிகளுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி பிறந்தது. அனைவரின் ஆன்மாவிலும் ஓர் உறுதியான நம்பிக்கை எழுந்தது. விரைவில் இச்செய்தி அண்டை மற்றும் தொலைதூர நகரங்கள் மற்றும் அதற்கு அப்பாலும் சென்று சேருகிறது. மரியன்னையின் மீது பக்தியும் அன்பும் கொண்டிருந்த பலர் கார்போனாராவுக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு அவர்கள் ஆறுதலையும், உண்மையான அமைதியையும், ஒரு வகையான உள் புதுப்பிப்பையும் உணர்ந்தனர். 

1558 ஆம் ஆண்டில், இப்போது இருக்கும் தரையின் கீழ்த்தள ஆலயம் அன்னை தோன்றிய புனித இடத்தில் கட்டப்பட்டது. பலிபீடத்தின் இரு பக்கங்களில் உள்ள சுவர்களில் ஓவியர் லூய்கி அக்ரெட்டி வரைந்த இரண்டு பெரிய ஓவியங்கள் உள்ளன. ஒன்று வானதூதர்களின் அன்னையின் அதிசயமான காட்சியைப் பற்றியது. மற்றொன்று மே 16, 1910 இல் நடந்த வானதூதர்களின் அன்னைக்கான புனிதமான மணிமுடிசூட்டலைப் பற்றியது. 

திருவிழா நாள்: மே 21

செபம்: வானதூதர்களின் அன்னையே! மங்கும் மண்ணக மனிமையை நாடாமல் விண்ணுக்குரிய மகிமையையும், மாட்சியையும் நாங்கள் நாடித் தேட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Sunday, 23 May 2021

வணக்க மாதம் : நாள் - 23

 தைரியத்தின் அன்னை

(அம்ப்ரியா, இத்தாலி)



இத்தாலிய சிறந்த ஓவியர் கார்லோ மராட்டா என்பவரால் (1625-1713) இப்படம் வரையப்பட்டது. இவர் இந்த ஓவியத்தை ஓர் இளம் பெண்ணுக்குக் கொடுத்ததாகவும், பின்னர் அப்பெண் டோடி நகரில் உள்ள புனித பிரான்சிஸின் ஏழை கிளாரா துறவு மடத்தின் தலைவியாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அவர்தான் வணக்கத்திற்குரிய அருள்சகோதரி கிளாரா இசபெல் ஃபோர்னாரி. இவர் கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்தவர். இயேசுவின் ஐந்து திருக்காய வரத்தையும் பெற்றிருந்தார். அருள்சகோதரி கிளாரா இசபெல் மற்ற எல்லா புனிதர்களையும் போலவே, அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மேலும் மிகவும் சிறப்பு வாய்ந்த மரியாவின் இத் திருப்படத்தை பக்தியோடு வணங்கும் யாவருக்கும் சிறப்பு அருட்கொடைகளை வழங்குவதாக அருள்சகோதரி கிளாரா இசபெல்லுக்கு அன்னை வாக்குறுதியை அளித்திருந்தார்.  

தைரியத்தின் அன்னையின் பரிந்துரையின் மூலம் நடைபெற்ற பல அற்புதங்கள் காரணமாக, இத்திருவுருவப் படத்தின் பிரதிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இந்த நகல்களில் ஒன்று உரோமில் உள்ள லாத்தரன் பசிலிக்காவில் இருக்கும் புனித மரியா குருமடத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது. இங்கு குருமாணவர்கள் மற்றும் குருக்களின் பிரார்த்தனைகள் மற்றும் தேவைகள் எப்போதும் அன்னையால் கேட்கப்படுவதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர்.

1837 ஆம் ஆண்டில் உரோமில் பல உயிர்களைக் கொன்ற ஆசிய காய்ச்சலின் போது அவர்களை அன்னை பாதுகாத்தார். மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு. முதலாம் உலகப் போரின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட குரு மாணவர்கள் இத்தாலியின் ஆயுதப் பணிகளில் கட்டாயப்படுத்தப்பட்டபோது, புனித மரியா குருமட மாணவர்கள் தங்களை அன்னையின் சிறப்பு பாதுகாப்பின் கீழ் வைத்து, போருக்குச் சென்றார்கள். போருக்குப் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக திரும்பினர். தங்கள் நன்றியின் அடையாளமாக குரு மாணவர்கள் மரியன்னை மற்றும் குழந்தை இயேசு இருவருக்கும் தங்கத்தால் மணிமுடி சூட்டினர்.

இத்திருவுருவப் படம் தைரியத்தை வளர்க்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது. ஏனென்றால் படத்தில் குழந்தை இயேசு தன் தாயின் கைகளில் மிகவும் தைரியமாக அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். ஒரு ஆச்சரியமான சைகையுடன், குழந்தை இயேசு தனது தாயைச் சுட்டிக்காட்டுகிறார். அது சொல்லும் அர்த்தமாவது: ‘நீங்கள் என்னிடம் வந்தால், அவளிடம் செல்லுங்கள். அவள் என்னைக் கேட்கிறாள், நான் அவளுக்குக் கொடுப்பேன்.’

திருவிழா நாள்: பிப்ரவரி 9

செபம்: தைரியத்தின் அன்னையே! எம் வாழ்வில் பயமும் பதட்டமும் என்னை அலைக்கழிக்கும்போது உம் அரவணைப்பில் நானும் தைரியமும் துணிவும் பெற்றிட எனக்கு உதவி செய்யும். ஆமென்.