Wednesday, 26 May 2021

வணக்க மாதம் : நாள் -26

எதிர்நோக்கின் அன்னை

(போன்ட்மைன் - பிரான்ஸ்)


1871 இல் பிரான்ஸ் மற்றும் பிரஷ்ய நாடுகளுக்கிடையிலான போரினால் பிரான்ஸ் பேரழிவிற்கு உட்பட்டது. பிரான்சின் பெரும்பகுதி பிரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. இப்பின்னணியில் சுமார் 500 மக்களைக் கொண்ட ஒரு குக்கிராமமான போன்ட்மைன் என்னும் இடத்தில் அன்னையின் காட்சி நடந்தது. பார்பெடெட் என்ற குடும்பத்தில் தந்தை சீசர், அவரது மனைவி விக்டோயர், அவர்களது இரண்டு மகன்களான ஜோசப் (10 வயது) மற்றும் யூஜின் (12 வயது) மற்றும் இராணுவத்தில் இருந்த மற்றொருவன் ஆகியோர் இருந்தனர். 1871 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மாலை, இரண்டு சிறுவர்களும் கொட்டகையில் தங்கள் தந்தைக்கு உதவி செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வானத்தைப் பார்த்தபோது, திடீரென்று ஓர் அழகான பெண்மணி அவர்களைப் பார்த்து சிரிப்பதைக் கண்டார்கள். அவர் தங்க நட்சத்திரங்களால் மூடப்பட்ட நீல நிற அங்கியையும், தலையில் தங்க கிரீடத்தின் கீழ் ஒரு கருப்பு முக்காடும் அணிந்திருந்தார். அங்கிருந்த பெரியவர்களால் எதையும் காண இயலவில்லை. ஆனால் மேலும் இரு சிறுமிகளான பிராங்கோயிஸ் ரிச்சர் (11 வயது) மற்றும் ஜீன் மேரி லெபோஸ் (9 வயது) ஆகியோரும் அவளை வானத்தில் பார்த்தார்கள்.

இருப்பினும், பெரியவர்கள் மூன்று நட்சத்திரங்களாலான ஒரு முக்கோணத்தை மட்டுமே பார்த்தார்கள். அவர்கள் செபமாலையை செபிக்கையில், அன்னையின் ஆடையிலிருந்த தங்க நட்சத்திரங்கள் பெருகுவதைக் குழந்தைகள் கண்டார்கள். அடுத்து, அன்னையின் காலடியில் ஒரு பதாகையில் இருந்த, ‘என் பிள்ளைகளே, செபியுங்கள். கடவுள் இன்னும் சிறிது காலத்திலேயே உங்கள் குரலுக்கு செவிமடுப்பார். கனிவிரக்கத்தால் என் மகனின் மனம் நெகிழ்ந்துள்ளது.’ என்ற செய்தியை வாசித்தார்கள். சத்தமாக வாசிக்கப்பட்ட இச்செய்தியைக் கேட்டதும், கூட்டம் தன்னிச்சையாக ‘எதிர்நோக்கின் தாய்’ என்ற பாடலைத் தொடங்கியது. மேலும் ஒரு சிவப்பு சிலுவை அவரது கைகளில் தோன்றியது. அதன் மேலே ‘இயேசு கிறிஸ்து’ என்ற வார்த்தைகள் இருந்தன. இத்தோற்றம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் நீடித்தது.

பதினொரு நாட்களுக்குள், பிரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. ஒரு போர் ஒப்பந்தம் கையெழுத்தானது மற்றும் போர் முடிந்தது. போன்ட்மெயினும் பிரான்சும் காப்பாற்றப்பட்டன. ஒரு வருடத்திற்குள், லாவல் மறைமாவட்டத்தின் ஆயர் வைகார்ட் இந்த காட்சிக்கு அங்கீகாரம் அளித்தார். 

திருவிழா நாள்: ஜனவரி 17 

செபம்: எதிர்நோக்கின் அன்னையே! எங்கள் எதிரிகள் பெருகும் போதும், அச்சம் ஆக்கிரமிக்கும்போதும், நீரே எங்களுக்கு உதவிட விரைந்து வாரும். ஆமென்.  

 


Tuesday, 25 May 2021

வணக்க மாதம் : நாள் - 25

 ஏழைகளின் அன்னை

(பெல்ஜியம் - பானியூக்ஸ்)



ஜனவரி 15, 1933 மாலை, மரியெட் பெக்கோ (வயது 11) தனது ஜன்னலுக்கு வெளியே தோட்டத்தில் ஏதோ ஒன்றைக் கண்டதாக நினைத்தாள். அது ஏதோ ஒரு பிரதிபலிப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்த அவள் எண்ணெய் விளக்கை வேறு இடத்திற்கு நகர்த்தினாள். ஆனாலும் தோட்டத்தில் கைகளில் செபமாலையுடன் ஓர் அழகான மற்றும் ஒளிரும் பெண்ணை மரியெட் பார்த்தார். கொட்டும் பனியில் அப்பெண் வெறுங்காலுடன் அங்கே நின்றவாறு இருந்தார். 

புனித மரியன்னை சிறுமி மரியெட்டிற்கு மேலும் ஏழு முறை தோன்றினார். இரண்டு தோற்றங்களின் போது மரியெட் ஒரு நீரூற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே கடவுளின் தாய் மரியா, ‘இந்த வசந்தம் எல்லா தேசங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்’ என்றும் அவளுக்கு கூறினார். 

இக்காட்சிகளின் போது, மரியா ஒரு வெள்ளை அங்கியும் இடையில் நீலக் கச்சையும் அணிந்திருந்தார். அவர் தன்னுடைய தலை மற்றும் தோள்களை மறைக்கும் வகையில் ஒரு முக்காடு அணிந்திருந்தார்.  அவருடைய வலது கால் வெளியே தெரிந்தது. மேலும் அவரது கால்விரல்களுக்கு இடையில் ரோஜா மலர்களால் முடிசூட்டப்பட்டிருந்தது. 

மரியா ஏழைகளின் அன்னை என்று இக்காட்சியில் தன்னை வெளிப்படுத்தினார். அவர் ஏழைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும், மற்றும் துன்புறுகின்றவர்களுக்கும் கடவுளிடம் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். மரியா இக்காட்சிகளில் பல முறை செபத்தை ஊக்குவித்தார். துன்புறுவோரின் துன்பங்களைத் தணிக்க வந்ததாக அவர் கூறினார். தனக்காக ஒரு சிறிய தேவாலயத்தையும் கட்டும்படி அவர் கேட்டார்.

திருவிழா நாள்: ஜனவரி 15

செபம்: ஏழைகளின் அன்னையே! எங்கள் வாழ்வின் எளிமையும் ஏழ்மையும் இறைவனால் எப்போதும் விரும்பப்படுவதாக. அதனால் எங்கள் துன்பங்கள் அகன்று, இறையருளால் நாங்கள் நிறைவடையவும் நீரே எங்களுக்காக மன்றாடும். ஆமென். 


Monday, 24 May 2021

வணக்க மாதம் : நாள் -24

 வானதூதர்களின் அன்னை

(ஆர்கோலா, இத்தாலி) 


ஆர்கோலா கிராமத்தில் கன்னி மரியாவின் அதிசயமான தோற்றம் நடந்த இடத்தில் வானதூதர்களின் அன்னை ஆலயம் கட்டப்பட்டுள்ளது.  21 மே 1556 அன்று, அந்த ஆண்டில், அது பெந்தெகொஸ்தே நாளின் இரண்டாவது நாள். திருப்பலிக்குப் பிறகு, கார்பனாராவில் இருந்த தங்கள் பண்ணையில் பார்பரா, கமிலா, எலிசபெட்டா, கேடரினெட்டா மற்றும் ஏஞ்சலா, ஆகிய ஐந்து சகோதரிகளும் அவர்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்களும் செபமாலை செபிக்கையில், ஒரு உன்னதமான பெண்மணி ஒருவர் ரோஸ்மேரி புதருக்கு மேலே தோன்றினார்.  சூரியனை விட பிரகாசமாக அவர் இருந்தார். வெள்ளை உடை அணிந்திருந்தார். இரண்டு வானதூதர்களால் சூழப்பட்டிருந்தார். அப்பெண்மணி தனது கையை உயர்த்தி, இனிமையான குரலில் அவர்களிடம், ‘அன்பர்களே, போய், அனைவரையும் செபிக்கவும், தவம் செய்யவும்  சொல்லுங்கள். நல்ல கிராமவாசிகளிடம் எனக்கு இந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டும்படி சொல்லுங்கள்’ என்றார். 

அப்பெண் மேல்நோக்கி ஆகாயம் வரை உயர்ந்து, அவளுடைய வானதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் பார்வையில் இருந்து மெதுவாக மறைந்தார். அவர்கள் விண்ணக ஆறுதலாலும் நம்பிக்கையாலும் நிறைந்திருந்தனர். அவர்கள் அக்காட்சியில் இருந்து மீண்டவர்களாய், ஆச்சரியத்தில் திகைத்து நின்றார்கள். அவசரமாக தங்கள் வீட்டை அடைந்து தாங்கள் கண்ட காட்சியைப் பற்றி தங்கள் அன்புக்குரியவர்களிடமும் பங்குத்தந்தையிடமும் பரவசமாய் எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட கிராமவாசிகளுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி பிறந்தது. அனைவரின் ஆன்மாவிலும் ஓர் உறுதியான நம்பிக்கை எழுந்தது. விரைவில் இச்செய்தி அண்டை மற்றும் தொலைதூர நகரங்கள் மற்றும் அதற்கு அப்பாலும் சென்று சேருகிறது. மரியன்னையின் மீது பக்தியும் அன்பும் கொண்டிருந்த பலர் கார்போனாராவுக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு அவர்கள் ஆறுதலையும், உண்மையான அமைதியையும், ஒரு வகையான உள் புதுப்பிப்பையும் உணர்ந்தனர். 

1558 ஆம் ஆண்டில், இப்போது இருக்கும் தரையின் கீழ்த்தள ஆலயம் அன்னை தோன்றிய புனித இடத்தில் கட்டப்பட்டது. பலிபீடத்தின் இரு பக்கங்களில் உள்ள சுவர்களில் ஓவியர் லூய்கி அக்ரெட்டி வரைந்த இரண்டு பெரிய ஓவியங்கள் உள்ளன. ஒன்று வானதூதர்களின் அன்னையின் அதிசயமான காட்சியைப் பற்றியது. மற்றொன்று மே 16, 1910 இல் நடந்த வானதூதர்களின் அன்னைக்கான புனிதமான மணிமுடிசூட்டலைப் பற்றியது. 

திருவிழா நாள்: மே 21

செபம்: வானதூதர்களின் அன்னையே! மங்கும் மண்ணக மனிமையை நாடாமல் விண்ணுக்குரிய மகிமையையும், மாட்சியையும் நாங்கள் நாடித் தேட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.