Sunday, 5 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 5

ஆபிரகாம்



தொடக்கநூல் 12: 2

இன்றைய நாளின் சிந்தனை : ஆபிரகாம்

இன்றைய நாளின் குறியீடு : கூடாரமும், ஒட்டகமும்


ஊர் என்ற கல்தேயர் நகரில் வாழ்ந்தவர் ஆபிராம். கடவுள் இவரை அழைத்து ‘ஆபிரகாம்’ என்கிற புதுப் பெயரைச் சூட்டினார். இஸ்ரயேல் மக்களின் வரலாறு ஆபிரகாமிடமிருந்து தொடங்குகிறது. யூதர்கள் தங்கள் முதுபெரும் தந்தையாக ஆபிரகாமைக் கருதினர். கடவுள் ஆபிரகாமை அவருடைய சொந்தநாட்டிலிருந்து அழைத்து, ‘நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்’ என்று சொன்னார். எங்கு போகிறோம் எனத் தெரியாதிருந்தும், ஆண்டவரை நம்பி தன் பயணத்தைத் தொடங்கினார் ஆபிரகாம். 

தன் மனைவி சாராயையும், தன் சகோதரன் லோத்துவையும் உடன் அழைத்துப் போனார். வாக்களித்த நாட்டிற்குச் செல்லும் வழிநெடுகிலும் எத்தனையோ சறுக்கல்கள், சரிவுகள் இருந்தாலும் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் ஆபிரகாம் சிறிதும் வீழ்ந்துவிடவில்லை. கடைசியில் கடவுள் ஆபிரகாமைப் பாலும், தேனும் ஓடும் கானான் நாட்டில் குடி அமர்த்தினார். 

ஆபிரகாம் தன் வாழ்வு முழுவதும் ஆண்டவர் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே ஆண்டவர் ஆபிரகாமிடம், உன் இனத்தை கடற்கரை மணலைப் போலவும், வானத்து விண்மீன்களைப் போலவும் ஆக்குவேன் என்று உறுதியளித்தார். ஆண்டுகள் பல கடந்தன. ஆனால் ஆபிரகாமுக்கோ குழந்தை பிறக்கவேயில்லை. 

ஒரு முறை மம்ரே என்ற இடத்தில் கூடார முற்றத்தில் அமர்ந்திருந்த ஆபிரகாமைச் சந்தித்த கடவுள், முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கும் அவர் மனைவி சாராயிக்கும் ஒரு மகனை வாக்களிக்கிறார். கடவுள் தான் வாக்களித்ததை நிறைவேற்றியும் காட்டுகிறார். 

வாக்களித்ததை நிறைவேற்றிக் காட்டுகிறவர் கடவுள் என்பதை ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. கடவுளை நம்பி வாழ்ந்தால், கடவுள் நம்மையும் ஆபிரகாமைப் போல பெரிய இனமாக்குவார் என்ற நம்பிக்கையும் நமக்கு கிடைக்கிறது. எனவே நாம் கடவுள் காட்டுகிற பாதையில் நடக்க விருப்பம் கொள்வோம். நல்வாழ்வுக்கான வாக்குறுதியை நமக்கு வழங்க வரும் கடவுளை, நம்முடைய அன்றாட வாழ்க்கை எனும் கூடாரத்தின் முற்றத்தில் உறுதியான நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்ள வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பான இறைவா! நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நாளுக்கு நாள் ஆழப்பட உதவி செய்யும். உம்மை மட்டுமே நம்பியவர்களாய், நீர் எங்களுக்கு காட்டுகிற வழித்தடத்தில் வாழ்நாள் முழுவதும் ஆபிரகாமைப் போல நாங்களும் நடக்க எங்களுக்கு மனத்திடன் தாரும்;. ஆபிரகாமை வேரோடு பெயர்த்து, புதிய இடத்தில் நட்டு புதுவாழ்வை வழங்கியது போல எங்களுக்கும் செய்தருளும். நல்வாழ்வுக்கான வாக்குறுதிகளை எங்கள் நம்பிக்கையின் பயனாகத் தந்து எங்களை ஆசீர்வதியும். ஆமென்.


Saturday, 4 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 4

நோவா


தொடக்கநூல் 9: 13

இன்றைய நாளின் சிந்தனை : நோவா

இன்றைய நாளின் குறியீடு : பேழையும், வானவில்லும்;


முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால், பாவமாசு மனுக்குலத்தின் மீது படிந்தது. கடவுளிடமிருந்து விலகி நிற்கின்றோம் என்கிற கவலை மனிதருக்கு துளியும் இல்லாதிருந்தது. அத்தகைய சூழலில் ஏறக்குறைய கி.மு 2970 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்தான், நோவா என்கிற பழைய ஏற்பாட்டின் இஸ்ரயேல் குலமுதுவர். இவருடைய காலத்தில் மண்ணகம் பாவச் சேற்றில் மூழ்கிக் கிடந்தது. அதுவரை இல்லாத அளவிற்கு பாவ நாட்டம் மண்ணில் பெருகி இருந்தது. குற்ற உணர்வு உலகில் எவருக்குமே இல்லை. கடவுள் முதன் முதலாகதான் நன்மையாகப் படைத்த உலகைத் தீமை ஆதிக்கம் செய்வதைப் பார்த்து வருத்தமுற்றார். உலகை முழுவதுமாக அழித்துவிட முடிவெடுத்தார். 

காரிருள் கவ்வியவானில் கண்சிமிட்டும் ஒற்றை விண்மீனாய் இருந்தவர் நோவா. இவருடைய வாழ்க்கையை வாசிக்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படும். ஏனென்றால் ‘நோவா கடவுளோடு நடந்தார்’ என்று தொடக்கநூல் 6:9 சொல்கிறது. தம் காலத்தவருள் நோவா மட்டுமே நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார் என்ற செய்தி நோவாவினுடைய தூய்மையான வாழ்வுக்குச் சான்று. கடவுள் பார்வையில் நோவாவின் வாழ்வு புனிதமாக இருந்ததால், உலகின் அழிவிலிருந்து நோவாவை மட்டும் காப்பாற்ற கடவுள் திருவுளமானார். எனவே 3 தளங்கள் கொண்ட, 300 முழம் நீளம், 50 முழம் அகலம், 30 முழம் உயரம் கொண்ட பேழை ஒன்றைச் செய்யும்படி கடவுள் நோவாவுக்கு கட்டளையிட்டார். 

அதன்படி நோவாவும் பேழையைச் செய்து தன் குடும்பத்தோடும், மண்ணின் உயிரினங்களின் வகைகள் அனைத்திலும் சோடியாகவும் எடுத்து பேழைக்குள் சென்றார். பின்னர் கடவுள் நாற்பது இரவும், நாற்பது பகலும் மண்ணுலகில் பெருமழை பெய்யச் செய்தார். இவ்வாறு மண்ணுலகை, பெரும் வெள்ளப்பெருக்கு அழித்தது. இதில் நோவா மட்டும் கடவுளால் காப்பாற்றப்பட்டார். பெரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிய நோவா ஆண்டவருக்கு பலி பீடம் ஒன்றைக் கட்டி, பலி ஒப்புக்கொடுத்தார். அப்போது ஆண்டவர் நோவாவுடன் ஓர் உடன்படிக்கையை செய்து கொள்கிறார். அதன்படி இனி உலகை வெள்ளம் அழிக்காது என்று வாக்களித்த கடவுள் அதன் அடையாளமாக தன் வில்லை மேகத்தின் மீது வைத்தார்.

கடவுளின் முன் மாசற்ற வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது நோவாவின் வாழ்வு நமக்கு தரும் அறை கூவல். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருந்தாலும், நாம் இறைவனுக்கு உகந்தவர்களாக இருந்தால் கடவுள் நம்மைக் கண்டிப்பாகக் காப்பார். எந்தச் சூழ்நிலையிலும் நாம் கடவுளோடு நடக்க உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நோவாவைப் போன்று குற்றமற்றவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இம்மண்ணில் வாழ எங்களுக்கு உதவும். வாழ்க்கைப் பயணத்தில் நாங்கள் எப்போதும் உம் கரம் பற்றி நடக்கச் செய்தருளும். நீரே எங்களைக் காக்கும் பேழையாக இருந்தருளும். உம்மில் மட்டுமே எங்களுக்கு புதுவாழ்வு என்ற நம்பிக்கையைத் தரும் உடன்படிக்கையின் வானவில்லை எங்கள் வாழ்விலும் வைத்தருளும். ஆமென்.


Thursday, 2 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 3

முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்



தொடக்கநூல் 1: 27

இன்றைய நாளின் சிந்தனை    :     முதல் பெற்றோர் – ஆதாம், ஏவாள்

இன்றைய நாளின் குறியீடு     :     பாம்பும் கனியும்


படைப்புகள் அனைத்தின் சிகரமாக கடவுள் மனிதரைப் படைத்தார். யாவற்றையும் தன் வாய்ச் சொல்லால் உண்டாக்கிய கடவுள், தன்னுடைய கைகளால் மண்ணைப் பிசைந்து மனிதனை உண்டாக்கினார். இறைவனின் உருவிலும், சாயலிலும் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். இறைவனது உயிர் மூச்சு, மனிதருக்குள் இருக்கிறது. இவ்வாறு மிகச் சிறப்புக்குரிய விதத்தில் முதல் பெற்றோரான ஆதாமையும், ஏவாளையும் இறைவன் படைத்தார். அவர்களைத் தன்னுடைய ஏதேன் தோட்டத்தில், தன்னோடு வைத்திருந்து, தன்னுடைய பேரின்பத்தில் பங்களித்திருந்தார். ஏதேன் தோட்டத்தின் நடுவில் இருக்கும் மரத்தின் கனியை மட்டும் முதல் பெற்றோர் உண்ணக்கூடாது என்பதை கடவுள் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தார்.

ஆனால் ‘கடவுளைப் போல் ஆவீர்கள்’ என்ற பாம்பின் பொய்யுரையைக் கேட்டு விலக்கப்பட்ட மரத்தின் கனியை அவர்கள் விரும்பிப் பறித்து உண்டார்கள். அலகையின் ஆசை வார்த்தைகளை நம்பி பாவப் படுகுழியில் விழுந்தனர். கடவுளால் முதல் பெற்றோர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனித இனம் தவறிழைத்தாலும், அவர்கள் மீது ஆண்டவருக்கு இன்னும் அக்கறை இருக்கத்தான் செய்தது. ‘உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்’ (தொநூ 3:15) என்று பாம்பிடம் கடவுள் கூறிய வார்த்தைகளில் மனித இனத்தின் மீட்புத் திட்டம் முதன் முதலாக அப்போதே முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பது நமக்குப் புலப்படுகிறது.

கீழ்ப்படியாமையால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவோம் என உணருவோம். இனி பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளைவிட்டு விலகி நிற்போம் என்றும் உளப்பூர்வமாகத் தீர்மானிப்போம். கடவுளின் கட்டளைகளைக் கருத்தாய்க் கடைபிடித்து கடவுளின் அன்புப் பிள்ளைகளாய் வாழ முயல வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பான இறைவா! உம்முடைய உருவிலும், சாயலிலும் எங்களைப் படைத்ததற்காக நன்றி. நீதியின்படி நீர் எங்கள் குற்றங்களைத் தண்டித்தாலும், உம்முடைய இரக்கத்தை எங்களுக்குக்காட்ட நீர் ஒருபோதும் தவறியதில்லை. உம் கட்டளைகளின்படி நாங்கள் தொடர்ந்து வாழவும், எங்கள் பலவீன நேரங்களில், உம் இரக்கத்தால் நீர் எங்களைத் தாங்கிடவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.