Sunday, 5 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 5

ஆபிரகாம்



தொடக்கநூல் 12: 2

இன்றைய நாளின் சிந்தனை : ஆபிரகாம்

இன்றைய நாளின் குறியீடு : கூடாரமும், ஒட்டகமும்


ஊர் என்ற கல்தேயர் நகரில் வாழ்ந்தவர் ஆபிராம். கடவுள் இவரை அழைத்து ‘ஆபிரகாம்’ என்கிற புதுப் பெயரைச் சூட்டினார். இஸ்ரயேல் மக்களின் வரலாறு ஆபிரகாமிடமிருந்து தொடங்குகிறது. யூதர்கள் தங்கள் முதுபெரும் தந்தையாக ஆபிரகாமைக் கருதினர். கடவுள் ஆபிரகாமை அவருடைய சொந்தநாட்டிலிருந்து அழைத்து, ‘நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்’ என்று சொன்னார். எங்கு போகிறோம் எனத் தெரியாதிருந்தும், ஆண்டவரை நம்பி தன் பயணத்தைத் தொடங்கினார் ஆபிரகாம். 

தன் மனைவி சாராயையும், தன் சகோதரன் லோத்துவையும் உடன் அழைத்துப் போனார். வாக்களித்த நாட்டிற்குச் செல்லும் வழிநெடுகிலும் எத்தனையோ சறுக்கல்கள், சரிவுகள் இருந்தாலும் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் ஆபிரகாம் சிறிதும் வீழ்ந்துவிடவில்லை. கடைசியில் கடவுள் ஆபிரகாமைப் பாலும், தேனும் ஓடும் கானான் நாட்டில் குடி அமர்த்தினார். 

ஆபிரகாம் தன் வாழ்வு முழுவதும் ஆண்டவர் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே ஆண்டவர் ஆபிரகாமிடம், உன் இனத்தை கடற்கரை மணலைப் போலவும், வானத்து விண்மீன்களைப் போலவும் ஆக்குவேன் என்று உறுதியளித்தார். ஆண்டுகள் பல கடந்தன. ஆனால் ஆபிரகாமுக்கோ குழந்தை பிறக்கவேயில்லை. 

ஒரு முறை மம்ரே என்ற இடத்தில் கூடார முற்றத்தில் அமர்ந்திருந்த ஆபிரகாமைச் சந்தித்த கடவுள், முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கும் அவர் மனைவி சாராயிக்கும் ஒரு மகனை வாக்களிக்கிறார். கடவுள் தான் வாக்களித்ததை நிறைவேற்றியும் காட்டுகிறார். 

வாக்களித்ததை நிறைவேற்றிக் காட்டுகிறவர் கடவுள் என்பதை ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. கடவுளை நம்பி வாழ்ந்தால், கடவுள் நம்மையும் ஆபிரகாமைப் போல பெரிய இனமாக்குவார் என்ற நம்பிக்கையும் நமக்கு கிடைக்கிறது. எனவே நாம் கடவுள் காட்டுகிற பாதையில் நடக்க விருப்பம் கொள்வோம். நல்வாழ்வுக்கான வாக்குறுதியை நமக்கு வழங்க வரும் கடவுளை, நம்முடைய அன்றாட வாழ்க்கை எனும் கூடாரத்தின் முற்றத்தில் உறுதியான நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்ள வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பான இறைவா! நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நாளுக்கு நாள் ஆழப்பட உதவி செய்யும். உம்மை மட்டுமே நம்பியவர்களாய், நீர் எங்களுக்கு காட்டுகிற வழித்தடத்தில் வாழ்நாள் முழுவதும் ஆபிரகாமைப் போல நாங்களும் நடக்க எங்களுக்கு மனத்திடன் தாரும்;. ஆபிரகாமை வேரோடு பெயர்த்து, புதிய இடத்தில் நட்டு புதுவாழ்வை வழங்கியது போல எங்களுக்கும் செய்தருளும். நல்வாழ்வுக்கான வாக்குறுதிகளை எங்கள் நம்பிக்கையின் பயனாகத் தந்து எங்களை ஆசீர்வதியும். ஆமென்.