Monday, 6 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 6

 ஈசாக்கு



தொடக்கநூல் 22: 14

இன்றைய நாளின் சிந்தனை : ஈசாக்கு

இன்றைய நாளின் குறியீடு : செம்மறி ஆடு


கடவுள் முதிர்ந்த வயதில் ஆபிரகாமிற்கும், சாராயிற்கும் ஒரு மகனைக் கொடுத்தார். அக்குழந்தைக்கு ஈசாக்கு என்று அவர்கள் பெயரிட்டார்கள். எபிரேய மொழியில் ஈசாக்கு என்பதற்கு ‘சிரிப்பவன்’ என்று அர்த்தம். கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும், இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர் என்றும் இந்த ஈசாக்கின் பிறப்பினைக் குறித்து சாரா சொன்னார். 

ஆபிரகாமின் நூறாம் வயதில் ஈசாக்கு பிறந்தான். காலம் கடந்து பிறந்த தன்னுடைய ஆசை மகன் ஈசாக்கின் மீது ஆபிரகாம் அதிக அன்பு கொண்டிருந்தார். ஒருமுறை கடவுள் ஆபிரகாமைக் கூப்பிட்டு மோரியா மலையில் ஈசாக்கைத் தனக்கு எரிபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மறுப்போ, மனக் கசப்போ எதுவும் இல்லாமல் மகனைப் பலியாக ஒப்புக்கொடுக்க ஆபிரகாம் புறப்பட்டார். 

ஈசாக்கின் மீது விறகுக் கட்டைகளை சுமத்தி, ஆபிரகாம் தன்னுடைய கைகளில் நெருப்பும், கத்தியும் எடுத்துக்கொண்டு, கடவுள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அங்கே பலிபீடம் அமைத்து ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் மீதிருந்த விறகுக்கட்டைகளின் மேல் கிடத்தினார். முகனை வெட்ட ஆபிரகாம் கத்தியைக் கையில் எடுத்தபோது ஆண்டவரின் தூதர் அவரைத் தடுத்தி நிறுத்தினார். ஈசாக்குக்கு பதிலாக முட்புதரில் சிக்கியிருந்த ஓர் ஆட்டுக்கிடாயை எடுத்து பலியிடச் சொன்னார். 

மகனையும் பலியிடத் தயங்காத, ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்ட கடவுள் மண்ணுலகில் அனைவருக்கும் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஆசியை ஆபிரகாமுக்கு வழங்கினார். கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் ஆபிரகாம் மிகவும் கவனமாக இருந்தார். 

கடவுளுக்கும், நமக்கும் இடையேயான உறவில்  எதுவும் தடையாய் இருக்காமல் பார்த்துக் கொள்வோம். நம்பிக்கை வாழ்வில் நாளும் நாம் தொடர்ந்து வளர இறைப்பற்றோடு செயல்படுவோம். நம்மிடம் இருந்து அகற்ற வேண்டியவையாக, கடவுள் எதிர்பார்க்கும் எதிர்மறை காரியங்களை பலியாக்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நம்பிக்கை என்னும் புண்ணியத்தில் நாங்கள் ஆபிரகாமைப் போல வளரவும், வாழவும் செய்தருளும். உம் மீது நாங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் எழுச்சியும், வளர்ச்சியும் அடைவோமாக. நாங்கள் உம்மோடு உறவில் வாழத் தடையாக இருப்பவற்றை பலியாக்கிடவும், அதன் வழியாக நம்பிக்கையில் நிலைத்திருந்து உம் திருமகனின் வருகைக்காகத் தயாரிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.