Wednesday, 2 November 2022

கல்லறைப் பாடம் - 2

எனக்கு ஒரு திருப்பலி தேவை!



ஒரு நாள் புனித பியோ தனியாக செபம் செய்து கொண்டிருந்தார். அப்போது பூட்டப்பட்டிருந்த அந்த அறையில் ஒரு முதியவர் நிற்பதைக் கண்டு பியோ ஆச்சரியமடைந்தார். அவர் யாரென அறிய விரும்பிய பியோ அந்த நபரிடம், “நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். 

அதற்கு அந்த நபர் இவ்வாறு பதிலளித்தார்: “தந்தை பியோ அவர்களே, என் பெயர் பியெத்ரே தி மௌரோ. என் தந்தையின் பெயர் நிக்கோலா. என்னை ப்ரேகோகோ என்றும் அழைப்பதுண்டு. இங்குதான் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி, அறை எண் 4 இல், நான் இறந்தேன். அப்போது இந்த இடம் ஓர் ஏழைகளின் விடுதியாக இருந்தது. ஒரு நாள் இரவு, படுக்கையில் இருந்தபோது, நான் புகைப்பிடித்துக் கொண்டே தூங்கிப்போனேன். புகைந்து கொண்டிருந்த அந்த நெருப்பால் எனது மெத்தையில் தீப்பிடித்து, அறையே முற்றிலும் எரிந்தது. இதில் நான் இறந்தேன். இதன் காரணமாக நான் இன்னும் உத்தரிக்கும் நிலையிலேயே இருக்கிறேன். அங்கிருந்து என் ஆன்மா விடுதலை பெற எனக்கு ஒரு திருப்பலி தேவைப்படுகிறது. எனவே நான் உத்தரிக்கும் நிலையிலிருந்து இங்கு வந்து உங்களிடம் இவ்வுதவியைக் கேட்க கடவுள் என்னை அனுமதித்தார்”. 

இதைக் கேட்ட பியோ “உங்கள் ஆன்மாவின் விடுதலைக்காக நாளை நான் திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன். நிச்சயம் அமைதியில் இளைப்பாறுவீர்கள்” என்று அந்த ஆன்மாவிற்கு ஆறுதல் கூறினார். பின்பு அந்த நபர் அங்கிருந்து அகன்றார். 

அடுத்த நாள் பியோ அந்த ஆன்மாவின் இளைப்பாறுதலுக்காக ஒரு திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். பின்பு பியோ மற்றொரு கப்புச்சின் சபைத் துறவியின் உதவியுடன் நகர் மன்றம் சென்று இந்நிகழ்வின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடித்தார். 1908 இல் அதே இடத்தில், அதே பெயரில் ஒரு நபர் எப்படி இறந்தார் என்பதையெல்லாம் நகர் மன்ற ஆவணங்களிலிருந்து உறுதிப்படுத்திக்கொண்டார்.





Tuesday, 1 November 2022

கல்லறைப் பாடம் - 1

கல்லறைகளிலிருந்து கற்றுக்கொள்வோம்!




நவம்பர் மாதம் என்றாலே கல்லறைத் திருநாள்தான் கிறித்தவர்களின் நினைவுக்கு வரும். இம்மாதத்தின் இரண்டாம் நாள் இறந்த நம் குடும்ப உறவுகளின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, மலர் மாலையிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி, ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் வைத்து, இறந்த ஆன்மாக்களை நினைவு கூரும் மரபு இன்றளவும் சிறப்பாய்த் திகழ்கிறது. இந்த ஒரு நாள் மட்டும் அல்ல, என்றும் கல்லறைகள் நம்முடைய மேலான கவனத்தைப் பெற்றிட வேண்டும். 

கல்லறை என்பது வாழ்க்கையின் அனுபவங்கள் அயர்ந்த நித்திரையில் இருக்கும் இடம். அது கடவுள் காலத்தின் ஓட்டத்தில் வரைந்த பல காவியங்களும் காப்பியங்களும் கண்ணுறங்கும் இடம். கல்லறை நம்முடைய வாழ்வின் மிகப்பெரிய சிறந்த நூலகம். அது வாழ்ந்து முடித்தவர்களைப் பார்த்து வாழப் பழகுகின்றவர்கள் படிக்கவேண்டிய இடம். 

உரோமையராலும் யூதராலும் கல்லறை என்பது தீட்டாகப் பார்க்கப்பட்டது. யூத வழக்கத்தில் கல்லறைகள் பொதுவாக ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருக்கும். கல்லறைகளை இறந்தோருடைய நகரம் என்று யூதர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது, கிறித்தவர்களுக்கு அது வாழ்வோரின் நகரமாகவே அறிவுறுத்தப்பட்டது. கிறிஸ்துவின் கல்லறையும் அது சுட்டிக்காட்டும் உயிர்ப்புமே அதற்கு சாட்சி. 

இயேசுவின் உயிர்ப்பைத் தொடர்ந்து கல்லறையைக் குறித்த உயர்ந்த உன்னதமான புரிதல் கிறித்தவ மரபில் எப்போதும் இருந்துள்ளது. நம்பிக்கையாளர்கள் மறைச்சாட்சியரின் கல்லறைகளில் கூடி செபித்தும், மறைவாக வழிபாடு நடத்தியும் வந்துள்ளனர். இவ்வாறு கல்லறைகள் நம் விசுவாசத்தின் விளைநிலமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்கத் திரு அவையின் நாற்றங்கால் கல்லறையே. 

எனவே இறந்த நம்பிக்கையாளர்களின் கல்லறைகள் இன்றைய நமது நம்பிக்கையின் கருவறைகள் என்னும் தெளிவு நம்மிடம் இருக்கட்டும். கல்லறைகளிலிருந்து கற்றுக்கொள்ளத் தயாராவோம்!


Saturday, 25 December 2021

கிறிஸ்துமஸ் - இயேசுவாகப் பிறந்திடுவோம்!

 இயேசுவாகப் பிறந்திடுவோம்!


கிறிஸ்து பிறப்பு ஓர் இறை - மனித சந்திப்பின் திருவிழா. கடவுள் மனிதனைச் சந்திக்க மனிதனாகவே வந்த ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு இது. பழைய ஏற்பாட்டில் கடவுள் பல்வேறு வகையான அடையாளங்கள் வழியாகத் தன்னை வெளிப்படுத்தினார். ஆனால் புதிய ஏற்பாட்டில் கடவுள் மனிதனைச் சந்திப்பதற்காக மனிதனாகவே உடலெடுத்து மண்ணகம் வந்தார். கடவுள் மனிதராகப் பிறந்த பெருவிழாவைவே கிறிஸ்து பிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறோம். 

படைத்தவர் தன் படைப்பாகிய மனிதரைத் தேடி மண்ணுக்கு வருகிறார். அவ்வாறு வருகிற கடவுள் கடவுளாகவே வரவில்லை. படைப்பாகிய மனிதரைத் தேடி மனிதராகவே வருகிறார். வலுக்குறைந்த மனித உடலை எடுக்கிறார். கன்னி மரியாவிடம் கருவாகி உருவெடுக்கிறார். மண்ணைப் பிசைந்து தான் படைத்த மனிதருக்காக கடவுள் வானகம் இறங்கி மண்ணகம் வந்தார். கடவுள் நிலையைத் துறந்து மனித நிலையை விரும்பி எடுத்தார். கடவுள் மனிதராவது என்பது மாபெரும் மீட்பின் மறைபொருள். மனித மூளைக்கு எட்டாத இறை இரகசியம். 

வரையறை இல்லாத கடவுள் வரையறைக்குள் தன்னைக் கொண்டு வந்தார். காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்ட கடவுள் காலத்துக்கும் இடத்துக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டார். உடலும் உருவமும் இல்லாத கடவுள் மனித உடலுக்குள்ளும் உருவத்துக்குள்ளும் தன்னை சுருக்கிக் கொண்டார். எல்லாம் வல்லவர் எதுவும் இல்லாத நிலையில் நின்றார். வல்லமையும் வலிமையும் கொண்ட கடவுள் வலுவின்மையை போர்த்திக்கொண்டார். இதுதான் கடவுள் மனிதரானதன் மகத்துவம். இதைக் குறித்தே புனித பவுல் பின்வருமாறு எழுதினார்: ‘கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.’ (பிலி 2:6-8). 

இச்சிறப்புக்குரிய இறை மனித சந்திப்பு கிறிஸ்துவின் பிறப்பிலே சாத்தியப்பட்டது. இயேசுவின் மானிட உடலேற்றல் என்பது அவர் நம்மில் ஒருவராக, நம்மைப் போல் ஒருவராக மாறியதன் அடையாளமே. ஆக, கடவுள் மனிதரானது ஏன் என்னும் கேள்விக்கு ஏராளமான பதில்கள் முன்மொழியப்பட்டாலும், நம்முடைய கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி பின்வருமாறு எடுத்துரைக்கிறது. ‘நமக்காகவும் நம் மீட்புக்காகவும், தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின் உதரத்தில் இறைமகன் மானிட உடல் எடுத்தார். பாவிகளாகிய நம்மை கடவுளோடு ஒப்புரவாக்கவும், கடவுளின் எல்லையற்ற அன்பை நாம் அறிந்துகொள்ளவும், நமக்குப் புனிதத்தின் முன்மாதிரியாகத் திகழவும், நாம் அனைவரும் அவரது “இறைத்தன்மையில் பங்கேற்கவும்” (2 பேது 1:4) அவர் இவ்வாறு செய்தார்’. (காண்: கத்தோலிக்க திருஅவை மறைக்கல்வி சுருக்கம் எண்: 85)

தொடக்கநூலில் வாசிக்கிறபடி முதல் பெற்றோரான ஆதாம், ஏவாள் அவர்களது கீழ்ப்படியாமையால் மானுடம் இழந்துபோனதை (இறைச்சாயல்) நாம் மீண்டும் பெற்றுக்கொள்ளவே இயேசுவின் வருகை அமைந்திருப்பதாக நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார். (காண்: லூக் 19:10இ யோவா 10:10) ‘மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரனார்’ என்று புனித அத்தனாசியுஸ் குறிப்பிடுவதையும் இங்கு நினைவுகூருவது பொருத்தமானது. மனிதம் இறைமையை அணிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக, இயேசுவின் பிறப்பில் இறைமை மனிதத்தை அணிந்து கொண்டது. ‘தியோசிஸ்’ (Theosis) என்று கீழைத் திருஅவையின் இறையியல் இதற்கு மிகவே அழுத்தம் தருகிறது. நமது இலத்தீன் திருவழிபாட்டு ரீதியிலும் திருப்பலியில் காணிக்கைச் சடங்கின்போது அருள்பணியாளர் திராட்சை இரசத்தில் ஒரு துளி நீரைச் சேர்க்கும் போது இவ்வாறு கூறுவார்: ‘கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு பெறத் திருவுளமானார். நாமும் இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக அவரது இறை இயல்பில் பங்கு பெறுவோமாக’. 

ஆக மேற்கூறியவை அனைத்தும் இயேசுவின் மானிட உடலேற்றலின் நோக்கத்தை நமக்கு மிகவே தெளிவுபடுத்துகின்றன. இச்சூழலில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் நமக்கு, இன்றைய ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழா முன்வைக்கும் சவால் நாம் இயேசுவாக பிறக்க வேண்டும் என்பதே. எவ்வளவு காலத்திற்கு இயேசு நமக்காகப் பிறந்தார் என்று மட்டுமே சொல்லி நம் மனதைத் தேற்றிக்கொள்ளப் போகிறோம். நமக்காகப் நம்மைப் போல பிறந்த இயேசு இன்று நம்மையும் பிறருக்கு இயேசுவாகப் பிறக்க அழைக்கிறார் என்னும் உண்மை இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு நமக்கு உணர்த்தட்டும். 

எத்தனை நாளைக்குத்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இயேசு மீண்டும் மீண்டும் நமக்காக பிறப்பது. இனியாகினும் இயேசு பிறப்பின் உண்மையான அர்த்தமும் நோக்கமும் புரியட்டும். அவ்வகையில் இயேசு பிறப்பின் நோக்கமாகிய நாமும் இயேசுவாக பிறப்பது என்பது இனி நமக்கு சாத்தியமாகட்டும். நாம் எல்லோரும் இயேசுவாகப் பிறப்பதே இன்றைய தேவை என்பதை உணர்ந்தவர்களாக, இயேசுவின் மானிட உடலேற்றல் முன்வைத்தவற்றை வாழப் பழகுவோம். இயேசு நமக்காகப் பிறந்தார் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு நாமும் நம்மோடு வாழ்பவர்களுக்கு இயேசுவாகப் பிறக்க வேண்டும் என்பதும் உண்மையே. 

இந்த ஆண்டு இயேசுவும் பிறக்கட்டும்! 

இயேசுவோடு சேர்த்து நாமும் இயேசுவாக பிறக்கும் நிலைவரட்டும்!