Friday, 29 March 2024

புனித வியாழன் - 7 ஆலயங்கள் சந்திப்பு

புனித வியாழனன்று 7 ஆலயங்கள் சந்திப்பு ஏன்? 




புனித வியாழன் அன்று இயேசுவின் இறுதி இரவு உணவு திருப்பலியைக் கொண்டாடியதைத் தொடர்ந்து, ஏழு ஆலயங்களுக்கு திருப்பயணம் செய்யும் ஒரு பண்டைய கத்தோலிக்கப் பாரம்பரியம் உள்ளது.

இந்த ஏழு ஆலயங்கள் என்பவை ஒவ்வொன்றும் கிறிஸ்து தமது பாடுகளின் நேரத்தில் சந்தித்த, அதாவது கெத்சமனி தொடங்கி கல்வாரியில் அவரது இறப்பு வரையிலான இறுதி ஏழு இடங்களைப் பிரதிபலிக்கின்றன. 

கைது செய்யப்படுவதிலிருந்து சாவது வரையிலான இயேசுவின் பாடுகளின் பயணம் பின்வரும் ஏழு இடங்களைக் கொண்டது. 

1. கெத்சமனித் தோட்டம் (லூக் 22: 39-46)
2. அன்னாவின் வீடு (யோவா 18:19-22)
3. தலைமைச் சங்கம் (மத் 26: 63-65)
4. பிலாத்துவின் அரண்மனை (யோவா 18: 35-37)
5. ஏரோதுவின் மாளிகை (லூக் 23: 8-9)
6. மீண்டும் பிலாத்துவின் அரண்மனை (மத் 27: 22-26)
7. கல்வாரி மலை (மத் 27: 27-31)

இந்த பாரம்பரியத்தின் தோற்றம் உரோம் நகரில் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து என அறிகிறோம். புனித பேதுருவிற்குப் பிறகு “உரோமின் இரண்டாவது திருத்தூதர்” என்று அழைக்கப்படும் புனித பிலிப் நேரி (1515-1595), உரோமின் கற்கள் வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு, உரோமிலுள்ள ஏழு பசிலிக்காக்களுக்குச் செல்வதுண்டு. பின்னாளில், பலரும் அவருடன் இத்திருப்பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவரே புனித வாரத்தில் இயேசுவின் பாடுகளைத் தியானித்தவாறு, ஏழு ஆலயங்களுக்கு இரவில் நடந்து செல்லும் பாரம்பரியத்தைத் தொடங்கினார்.

கத்தோலிக்க பழம்பெரும் பாரம்பரியப்படி புனித வியாழன் அன்று 7 ஆலயங்களைச் சென்று சந்தித்து செபிக்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகின்றது. இவ்வாறு 7 ஆலயங்களுக்குச் சென்று நற்கருணை ஆண்டவரைச் சந்தித்து செபிப்பது, நாமும் இயேசுவுடைய பாடுகளின் பயணத்தில் உடன் நடக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமே. 

ஆகவே, 

புகைப்படம் எடுப்பதற்கோ, அலங்காரங்களைக் கண்டு அதிசயித்து ஆச்சரியப்பட்டு மதிப்பெண்கள் வழங்குவதற்கோ நாம் ஆலயம் ஆலயமாகச் செல்லவதில்லை என்பது நமக்கு நினைவிருக்கட்டும்! 

இயேசுவின் பாடுகள் எவ்வாறு துன்பகரமாக இருந்தன என்பதை நாம் தியானிப்பதற்கே ஆலயங்களைச் சென்று சந்திக்கும் இம்முயற்சி நமக்கு வழிசெய்யட்டும்! 

வெளிப்புற அலங்காரங்களும் ஆடம்பரங்களும் இந்நாளில் நம்மை திசைதிருப்பாதிருக்கட்டும்!

பல்வேறு செயல்களில் பரபரப்பாய் இருக்காமல் இறைவனோடு தனித்திருக்க, விழித்திருக்க, செபித்திருக்க இந்நாள் உதவட்டும்!

Thursday, 28 March 2024

தோள் துகிலுக்கு முத்தம்

 தோள் துகிலுக்கு முத்தம்


நான் தோள் துகிலை அணியும்போதும், கழற்றும்போதும் அதை முத்தமிடுவேன். 

ஏனென்றால், பரிதாபத்துக்குரிய என் சுயத்தை விட குருத்துவம் பெரிது. தகுதியற்ற நான் ஒரு மாபெரும் பரிசைப் பெற்றிருக்கிறேன் என்பதை இந்த தோள் துகில் எனக்கு நினைவூட்டுகிறது.

ஏனென்றால் தோள் துகில் அணிந்த நிலையில், கிறிஸ்துவின் இடத்தினின்று நான் பேசுவதும் செயல்படுவதும் எனது புனிதமான பாக்கியம்.

ஏனென்றால், என் குருத்துவ அருள்பொழிவில் நான் முதன்முறையாக தோள் துகிலை அணிந்த அப்பொன்னாளில், நான் கடவுளின் அருளால் மட்டுமே இதனைக் காப்பாற்ற முடியும் என்று வாக்குறுதி அளித்தேன்.

ஏனென்றால், கிறிஸ்து அளிக்கும் நுகத்தடியை நான் என்மீது ஏற்றுக்கொள்வதால், அவருடன் நான் ஒன்றித்திருக்கும்போதுதான் நான் நிறை பலனளிக்க முடியும், இளைப்பாற முடியும்.

ஏனென்றால், தோள் துகில் என்பது கடவுள் என்னை அருள்பணியாளராக அனுப்பும் மக்களுடனான எனது பிணைப்பு. தோள் துகில் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய பணியின் அடையாளம். தோள் துகில் அணிந்து, நான் திருமுழுக்கின் வழியாக அவர்களை திரு அவையில் சேர்க்கிறேன், அவர்களின் பாவங்களை மன்னித்து, கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அவர்களுக்கு வழங்குகிறேன், புனித திருமணத்தில் அவர்களை ஒன்றிணைத்து, நோயில்பூசுதலில் அவர்களை ஆறுதல்படுத்துகிறேன். 

ஏனென்றால், நான் இறக்கும் நாளில், இறுதி மூச்சுவிடும்போது, யாராவது தோள் துகிலை என் உதடுகளில் வைத்திருப்பதால், வாழ்நாள் முழுவதும் நான் கடவுளின் பணியாற்றிய உன்னத கொடைக்காக அவருக்கு நன்றி சொல்ல முடியும் என வேண்டுகிறேன். 

(நானும் தோள் துகிலுக்கு அன்பு முத்தம் தர மறந்ததில்லை.) 

குருத்துவத் திருநாள் வாழ்த்துகள்! 

தமிழாக்கம் 

அருள்பணி. மரியசூசை, 

திருச்சி மறைமாவட்டம்.


Saturday, 11 November 2023

கல்லறைப் பாடம் - 11

 நினைவாற்றல் குறைபாட்டை நிவர்த்தி செய்த 

திருத்தந்தை 9 ஆம் பயஸ்


வணக்கத்திற்குரிய திருத்தந்தை 9 ஆம் பயஸ் பக்தியான நேர்மையான தோமாசா என்கிற அருள்பணியாளரை, ஆயராக ஒரு மறைமாவட்டத்திற்கு தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த அருள்பணியாளரோ, பெரும் பொறுப்புகளை எண்ணி அச்சமுற்றவராய் அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். ஆனால் அந்த அருள்பணியாளரின் பல நற்குணங்களை அறிந்திருந்த திருத்தந்தையோ மறுத்துவிட்டார். 

பின்பு திருத்தந்தையிடம் நேரில் பேசுவதற்கு அனுமதி பெற்றுச் சென்ற அருள்பணியாளர் தோமாசா, மீண்டும் தன் கோரிக்கையை ஏற்க வேண்டினார். ஆனால் மிகுந்த அன்போடு அவரை வரவேற்ற திருத்தந்தையோ, தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். 

இறுதியில் அருள்பணியாளர் தோமாசா திருத்தந்தையிடம் தனக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அது உயர்ந்த பொறுப்பலிருந்து பணியாற்றுவதற்கு பெரும் தடையாக இருக்கும் என்பதாலேயே தனக்கு ஆயர் பொறுப்பு வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.

அதற்கு திருத்தந்தை 9 ஆம் பயஸ் சிரித்தவாறு, “அன்பான அருள்பணியாளரே, என் தோளில் நான் ஏற்றிருக்கும் உலக திரு அவையின் பொறுப்புகளை ஒப்பிட்டால் உமது மறைமாவட்டம் மிகவும் சிறியது. அதன் பொறுப்புகளும் எளியதே. நானும் ஒரு காலத்தில் உங்களைப் போல நினைவாற்றல் குறைபாட்டால் அதிக சிரமப்பட்டேன். ஆனால் உத்தரிக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காக நான் தினமும் தீவிரமாக செபம் செய்து வந்தேன். அவர்கள் அதற்கு ஈடாக எனக்கு நல்ல நினைவாற்றலை பெற்றுத் தந்துள்ளார்கள். நீங்களும் என்னைப் போலவே செய்யுங்கள். ஒரு நாள் கண்டிப்பாக பலன் பெற்று மகிழ்வீர்கள்” என்றார். 

உத்தரிக்கும் நிலையிலுள்ள புனித ஆன்மாக்கள் நமக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் சிறந்த பரிந்துரையாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், நாம் அவர்களுக்காக செபிப்பதன் மூலம், அவர்கள் நம்முடைய தேவைகளில் நமக்காக செபிக்க முடியும். புனித ஆன்மாக்கள் ஒருபோதும் தங்களுக்காக செபிக்க முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக செய்யப்படும் அவர்களின் செபங்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. இந்த ஆன்மாக்களிடம் செபம் செய்வதன் மூலமும், அவர்களின் சில துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதன் மூலமும், நாம் கடவுளின் சிறப்பு அருளைப் பெறமுடியும். ஏனெனில் “இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.”