Thursday, 14 November 2024

கல்லறைப் பாடம் - 14

 கல்லறைப் பாடம் - 14

அப்பெனைன் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு

ஒரு முக்கியமான சிக்கல் குறித்து விவாதிப்பதற்காக சில அருள்பணியாளர்கள் கொண்ட குழு ஒன்று உரோமைக்கு அழைக்கப்பட்டது. அவர்களிடம் முக்கியமான ஆவணங்களும், திருத்தந்தையிடம் கொடுப்பதற்கான ஒரு பெரிய தொகையும் இருந்தன. அவர்கள் உரேமைக்குச் செல்லும் வழியில் கொடிய கொள்ளையர்கள் வசித்த அப்பெனைன் என்ற ஊரின் வழியாகவே பயணிக்க வேண்டியிருந்தது. தங்களுக்கு நம்பகமான ஓர் ஓட்டுநரைத் தேர்ந்தெடுத்து, ஒரு குதிரை வண்டியில் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

அருள்பணியாளர்கள் அனைவரும் தங்களை உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாப்பில் ஒப்படைத்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கான கட்டளை செபம் சொல்லவும் தீர்மானித்து பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் மலையின் மையப் பகுதியைக் கடக்கையில், ஓட்டுநர் அபயக்குரல் எழுப்பினார். அதே நேரத்தில் குதிரைகளை ஆவேசமாக அடித்து, வண்டியை கூடுதலான வேகத்தில் செலுத்தத் தொடங்கினார். அருள்பணியாளர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது, பாதையின் இருபுறமும் துப்பாக்கிகளுடன், அப்பெனைன் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதைக் கண்டனர். ஆனால் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட சுடப்படவில்லை. 

ஒரு மணி நேரம் மிகவும் வேகமாக வண்டியைச் செலுத்திய ஓட்டுநர், பாதுகாப்பான பகுதியை அடைந்த பின்பு வண்டியை நிறுத்தி,  அருள்பணியாளர்களைப் பார்த்து, “நாம் எப்படி தப்பித்தோம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த ஈவு இரக்கமற்ற கொள்ளையர்கள் இதுவரை யாரையும் தப்பவிட்டதே இல்லை”.

அருள்பணியாளர்கள் தாங்கள் தப்பியது முழுக்க முழுக்க உத்தரிக்கும் ஆன்மாக்களால்தான் என்று உறுதியாக நம்பினர். இது பின்னைய நாள்களில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டது. எவ்வாறெனில், உரோமையில் அவர்களது 

வேலை முடிந்ததும், அவர்களில் ஓர் அருள்பணியாளர் மட்டும் அங்கே உள்ள ஒரு சிறைச்சாலைக்கு ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, இத்தாலியின் கடுமையான அப்பெனைன் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார். நீண்ட தொடர் கொலைகளுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அந்த சிறையில் மரணதண்டனைக்காக காத்திருந்தார்.

இக்கைதியைப் பற்றி எதுவும் அறியாத அந்த அருள்பணியாளர், கைதியின் மனமாற்றத்திற்காக தினமும் அவரைச் சந்தித்து, தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். அவ்வாறு ஒரு சமயம், அவர் அப்பெனைன் கொள்ளையர்களிடமிருந்து தப்பித்த அனுபவத்தை அந்த கைதிக்கு விவரித்தார். அவர் அதைச் சொல்லி முடித்ததும், அந்த கைதி, ‘குருவே, நான் தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவன். உங்களிடம் பணம் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் உங்கள் பொருள்களைக் கொள்ளையடித்துவிட்டு, உங்களைக் கொலை செய்ய முடிவு செய்தோம். ஆனால் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி, அன்று எங்கள் அனைவரையும் துப்பாக்கிச் சூடு நடத்தவிடாமல் தடுத்தது’. 

இக்கொள்ளைக் கூட்டத் தலைவனின் வாக்குமூலம் உத்தரிக்கும் ஆன்மாக்களின் உதவியால் அன்று அந்த அருள்பணியாளர்கள் பாதுகாக்கப்பட்டனர் என்பதை மிகவே உறுதிப்படுத்தியது. அதற்கு பிறகு, அக்கொள்ளையன் மனம்மாறி, தம் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்து இறந்தான். 


Wednesday, 13 November 2024

கல்லறைப் பாடம் - 13

 கல்லறைப் பாடம் - 13


இறந்த நம்பிக்கையாளர் நினைவு நாளில் 3 திருப்பலிகள்

இறந்த நம்பிக்கையாளர் நினைவு தினத்தில், அருள்பணியாளர்கள் மூன்று திருப்பலிகளைக் கொண்டாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

வரலாற்றுச் சூழல்

1915 ஆம் ஆண்டில், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் முதல் உலகப் போரின்போது, அதிக எண்ணிக்கையிலான போர் இறப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆலயங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக, இறந்த நம்பிக்கையாளர் நினைவு தினத்தில், மூன்று திருப்பலிகளைக் கொண்டாடும் அனுமதியை அருள்பணியாளர்களுக்கு வழங்கினார். 

பின்வரும் கருத்துக்களுக்காக மூன்று திருப்பலிகள் கொண்டாடப்படுகிறது:

முதல் திருப்பலி: அன்றைய ஒரு குறிப்பிட்ட கருத்திற்காக 

இரண்டாவது திருப்பலி: இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமாக 

மூன்றாவது திருப்பலி: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக


Tuesday, 12 November 2024

கல்லறைப் பாடம் - 12

கல்லறைப் பாடம் - 12



புனித ஒடிலோ 

பிறப்பு: 962, பிரான்ஸ்

இறப்பு: சனவரி 1, 1049

புனிதர் நிலை: திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டர் 1063


1030 ஆம் ஆண்டில், குளுனி துறவற மடத்தின் தலைவர் ஒடிலோ நவம்பர் 2 ஆம் தேதியை தனது துறவற சபையில் இறந்த உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு சிறப்பு நினைவு நாளாக ஒதுக்கினார். அனைத்து புனிதர்களின் பெருவிழாவுக்கு அடுத்த நாளில், அதாவது நவம்பர் 2 ஆம் தேதி அன்று, இறந்த துறவிகளுக்காக இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். 

நாளடைவில் அவர் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து மடங்களுக்கும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2 ஆம் தேதியில் திருப்பலி, இறைவேண்டல், சுய ஒறுத்தல் செயல்கள் மற்றும் பிறரன்புச் செயல்கள் ஆகியவற்றை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக அவசியம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

இது உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு மூன்று திருப்பலிகள் நிறைவேற்றும் பழக்கமாக மிக விரைவில் வளர்ந்தது. இறுதியில் 1748 இல் உரோமைத் திரு அவையால், இந்த அனுசரிப்பு அதிகாரப்பூர்வமாக முழு மேற்கத்திய திரு அவைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பிறகு இது உலகளாவிய அனுசரிப்பாக வளர்ந்தது.