Tuesday, 19 November 2024

கல்லறைப் பாடம் - 19

கல்லறைப் பாடம் - 19

உத்தரியமும் உத்தரிக்கும் நிலையும்


பல பிரபலமான புனிதர்களும், பல்வேறு காட்சிகளில் புனித கன்னி மரியாவும் உத்தரிக்கும் நிலையில் துன்பப்படும் ஆன்மாக்களின் சார்பாக மன்றாடுபவர்களாக திரு அவையால் குறிப்பிடப்படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக கார்மல் அன்னை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக பரிந்துரைப்பவராக உள்ளார். 

மணிமுடி சூட்டப்பட்ட கார்மல் அன்னை தம் கையில் ஒரு பழுப்பு நிற உத்தரியத்தை வைத்திருப்பார். இது கார்மல் சபைத் துறவியரின் சிறப்பு வாய்ந்த பக்தி ஆடைகளின் ஒரு வடிவம். இந்த உத்தரியம் பரிபூரணபலன்களைப் பெற்றிடவும் அதன் வழியாக மீட்கப்படவும் நமக்கு உதவக் கூடியதாக உள்ளது.

முதல் வாக்குறுதி

“இந்த உத்தரியத்தை அணிந்துகொண்டு பக்தியுடன் இறப்பவர், முடிவில்லா நரக நெருப்பிற்கு ஆளாகமாட்டார்". 

(புனித சைமன் ஸ்டாக் அவர்களுக்கு புனித கன்னி மரியா வழங்கியது) 

இதுவே உத்தரியம் அணிவோருக்கு கார்மெல் அன்னை அளித்த முதலாவதும் நன்கு அறியப்பட்டதுமான வாக்குறுதிகளில் ஒன்றாகும். இறக்கும் நேரத்தில் உத்தரியத்தை அணிந்த எவரும் அன்னையின் தயவைப் பெறுவார்கள் என்று கத்தோலிக்க இறையியலாளர்கள் இந்த வாக்குறுதியை விளக்குகிறார்கள், 

இரண்டாவது வாக்குறுதி

“ஒரு கனிவான தாயாக, நான் அவர்களின் மரணத்திற்குப் பிறகு சனிக்கிழமையன்று உத்தரிக்கும் நிலைக்கு இறங்குவேன், அங்கிருந்து அவர்களை விடுவிப்பேன், புனித மலைக்கு, நிலைவாழ்வின் மகிழ்ச்சியான விண்ணகத்திற்கு கொண்டு வருவேன்."

(திருத்தந்தை 22 ஆம் ஜான் அவர்களுக்கு புனித கன்னி மரியா வழங்கியது) 

இந்த வாக்குறுதியே சனிக்கிழமை சிறப்புரிமை என்று அழைக்கப்படுகிறது.

Monday, 18 November 2024

கல்லறைப் பாடம் - 18

 கல்லறைப் பாடம் - 18


புனித ஜெம்மா கல்கானியும் உத்தரிக்கும் நிலையிலிருந்த ஓர் அருள்சகோதரியின் ஆன்மாவும்


இத்தாலியின் கார்னெட்டோவில் உள்ள ஓர் அருள்சகோதரிகளின் துறவு மடத்தில், கடவுளுக்கு மிகவும் பிரியமான ஓர் அருள்சகோதரி மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு செபங்கள் தேவை எனவும் புனித ஜெம்மா தமது செப வல்லமையால் அறிய வந்தார்.

பிறகு புனித ஜெம்மா அந்த மரணப் படுக்கையில் இருந்த அருள்சகோதரியின் பாவங்களை மன்னிக்குமாறு இயேசுவிடம் மன்றாடத் தொடங்கினார். இதனால் அந்த அருள்சகோதரி இறந்தவுடன் விண்ணகத்தில் நுழையலாம் என புனித ஜெம்மா நம்பினார். 

சில மாதங்களில், அந்தச் சகோதரி இறந்து போனார் என்று புனித ஜெம்மா தன் துறவு மடத்தில் இருந்தவர்களிடம் சொல்லியதோடு, இறந்தவருக்காக செபிக்க வேண்டும் என்பதற்காக, அச்சகோதரியின் பெயரைக் குழந்தை இயேசுவின் மரியா தெரசா என்று சொன்னார். இறந்த அந்த அருள்சகோதரியின் ஆன்மா உத்தரிக்கும் நிலையில் துன்புற்றுக்கொண்டிருந்ததை காட்சியில் கண்ணுற்ற புனித ஜெம்மா, அந்த அருள்சகோதரியின் ஆன்மாவுக்காக மிகுந்த செபங்களையும் ஒறுத்தல்களையும் மேற்கொண்டார். 

இந்தச் சூழலில் புனித ஜெம்மா தனது நாள்குறிப்பில் பின்வருமாறு எழுதுகிறார்:

“அன்று மணி 9:30 ஆயிற்று. நான் படித்துக் கொண்டிருந்தேன்; திடீரென்று என் இடது தோளில் யாரோ கை வைத்தது போல் இருந்தது. நான் பயந்து நடுங்கி, திரும்பினேன்;. அங்கு வெள்ளை உடை அணிந்திருந்த ஒருவரைப் பார்த்தேன். அவருடைய முகத் தோற்றத்திலிருந்து நான் பயப்பட ஒன்றுமில்லை என்று எனக்கு நம்பிக்கை பிறந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, “ஜெம்மா, என்னைத் தெரியுமா?" என்று அவர் என்னைக் கேட்டார். நானோ “தெரியாது” என உண்மையை உரைத்தேன்.

அதற்கு அவர் “நான்தான் அருள்சகோதரி குழந்தை இயேசுவின் மரியா தெரசா. நீங்கள் என்னிடம் காட்டிய மிகுந்த அக்கறைக்கு மிக்க நன்றி. ஏனென்றால் விரைவில் நான் விண்ணக மகிழ்ச்சியை அடைய இருக்கிறேன்”. 

இவை அனைத்தும் நான் விழிப்புடனும் முழு சுய உணர்வுடனும் இருந்தபோது நடந்தது. பின்னர் அச்சகோதரி மேலும் இவ்வாறு சொன்னார்: “இன்னும் எங்கள் செபம் தேவை. ஏனென்றால் எனக்கு இன்னும் சில நாள்கள் உத்தரிக்கும் நிலையில் துன்பம் உள்ளது." 

அதிலிருந்து அவர் விரைவில் விண்ணகத்தை அடைய வேண்டும் என்று, நான் அவருடைய ஆன்மாவுக்காக என் செபங்களை இரட்டிப்பாக்கினேன். 

பதினாறு நாள்களுக்குப் பின்பு, அச்சகோதரியின் ஆன்மா உத்தரிக்கும் நிலையிலிருந்து விடுதலை பெற்று, விண்ணகத்தை அடைந்தது. 


Sunday, 17 November 2024

கல்லறைப் பாடம் - 17

கல்லறைப் பாடம் - 17

போலந்து இளவரசர்




சில அரசியல் காரணங்களுக்காக, தனது சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு போலந்து இளவரசர் பிரான்சில் ஓர் அழகான கோட்டையையும் சொத்துக்களையும் வாங்கி அங்கு வசித்து வந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது குழந்தைப் பருவத்தில் பெற்ற கிறிஸ்தவ நம்பிக்கையை இழந்துவிட்டார். மேலும் அவர் கடவுளுக்கும் மறுமை வாழ்க்கையின் இருத்தலுக்கும் எதிராக ஒரு புத்தகத்தை எழுதுவதில் ஈடுபட்டிருந்தார்.

ஒரு நாள் மாலையில் அவர் தனது தோட்டத்தில் உலா வந்து கொண்டிருந்தபோது, ஓர் ஏழைப் பெண் கதறி அழுவதைக் கண்டார். அவளின் வருத்தத்திற்குக் காரணம் என்ன என்று அவர் அவளிடம் விசாரித்தார்.

“ஓ! இளவரசே, நான் இரண்டு நாள்களுக்கு முன்பு இறந்த, உங்கள் முன்னாள் பணியாளரான ஜோன் மரியின் மனைவி. அவர் எனக்கு ஒரு நல்ல கணவராகவும், உங்களுக்கு நல்ல ஊழியராகவும் இருந்தார். அவருக்கு நோய் நீண்ட காலமாக இருந்தது. அதனால் எங்களுடைய சேமிப்பை எல்லாம் மருத்துவர்களுக்காகச் செலவழித்தேன். இப்போது அவருடைய ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒரு திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்குக்கூட என்னிடம் எதுவும் இல்லை" என்று அவள் பதிலளித்தாள்,

அவளது துயரத்தைக் கண்ட இளவரசர், சில அன்பான ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார். மேலும் இறப்புக்குப் பிறகான வாழ்க்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அவளது கணவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்குச் சில பொற்காசுகளைக் கொடுத்தார்.

சிறிது காலத்திற்குப் பின்பு, ஒரு நாள் மாலை வேளையில், இளவரசர் தனது படிக்கும் அறையில், தீவிரமாக வாசிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாசலில் கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டது. மேலே நிமிர்ந்து பார்க்காமலே அந்த பார்வையாளரை உள்ளே வரும்படி இளவரசர் அழைத்தார். கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. ஒரு நபர் உள்ளே நுழைந்து இளவரசரின் புத்தக மேசைக்கு அருகே வந்தார். இளவரசர் நிமிர்ந்து பார்த்தபோது, மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். ஏனென்றால் அங்கே நின்றது இறந்துபோன அவருடைய பணியாளர் ஜோன் மரி.

ஓர் இனிமையான புன்னகையுடன் ஜோன் மரி இளவரசரைப் பார்த்து,  “இளவரசே, என் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்க,  நீங்கள் என் மனைவிக்கு உதவியதற்காக நன்றி சொல்ல வந்தேன். என் மீட்புக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நன்றி. நான் இப்போது விண்ணகம் போகிறேன். அதற்கு முன்பு, உங்களுக்கு நன்றி தெரிவித்துவர, கடவுள் என்னை அனுமதித்தார்.” என்று கூறினார்.

பின்னர் மேலும் அவர் இவ்வாறு கூறினார்:  “இளவரசே, கடவுள், இறப்புக்குப் பின் வாழ்வு, விண்ணகம், நரகம் நிச்சயம் உண்டு”. இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவர் மறைந்தார்.

உடனே, இளவரசர் முழங்காலிட்டு, நம்பிக்கை அறிக்கையை செபித்தார்.