Monday, 1 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இரக்கம் காட்டுவோம்! இறைவனைக் காட்டுவோம்! 

லூக்கா 6:36-38



மனிதரின் வாழ்வுக்கான இயக்கம் இரக்கத்தில் தான் இருக்கிறது. இரக்கம் இல்லையேல் இம்மண்ணில் இனிமை என்பதே இல்லாமல் போய்விடும். இரக்கம் காட்டப்படாததால் வாழ்வைத் தொலைத்தவர்களும் இங்கு உண்டு. இரக்கம் காட்டப்பட்டதால் வாழ்வைப் பெற்றவர்களும் இங்கு உண்டு. இரக்கம் இறைமையின் குணம். இரக்கமின்மை அரக்க குணம். அதனாலேயே இரக்கம் காட்டும் இயல்புடையவர்களை இறைவனைப் போன்று பார்க்கிறோம். இன்று இரக்கத்திற்கான அவசியம் இவ்வுலகில் மிகவே இருக்கிறது. எனவே தான் அகிம்சையை அடிக்கோடிட்டுக் காட்டிய புத்தரும், கொல்லாமையைக் கற்றுத்தந்த மகாவீரரும், ஜீவ காருண்யம் வளர்த்த வள்ளலாரும் நம் மண்ணில் மகான்களாய்ப் போற்றப்படுகிறார்கள். 

இன்றைய நற்செய்தி நம்மையும் தந்தையாம் இறைவனைப் போல தரணியில்; இரக்கமுடையவர்களாய் இருக்க அழைப்பு தருகிறது. ‘தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்’ (லேவி 19:2) என்கிற பழைய ஏற்பாட்டுக் கட்டளையை, ‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (லூக் 6:36) என்று இயேசு புதிய ஏற்பாட்டில் மாற்றித் தருகிறார். 

இயேசு புனிதத்தை, இறைமையை, தூய்மையை இரக்கத்தோடு இணைத்துப் பார்க்கிறார். ஆகவே தான் பழைய ஏற்பாட்டில் தூயோராய் இருங்கள் என்று சொல்லப்பட்டதை, இயேசு இரக்கமுள்ளரோய் இருங்கள் என்று இன்னும் இயல்பு வாழக்கைக்கு ஏற்ற விதத்தில் தெளிவாய் கற்பிக்கிறார். இறைவன் காட்டும் இரக்கம் நம்மை வாழச் செய்வது போல, நாம் பிறர் மீது காட்டும் இரக்கம் அவர்களையும் வாழச் செய்யட்டும். அடுத்தவருக்கு இரக்கம் காட்டுகிறவர்கள் இரக்கத்தை மட்டுமல்ல, இறைவனையே காட்டுகிறார்கள் என்பதே உண்மை. 

மானுட வரலாற்றில் மனித மனங்கள் எனும் தராசில்  இரும்பாய் இறுகிப்போன இதயங்களல்ல, இலவம் பஞ்சாய் இளகி நின்ற இதயங்களே அதிக நிறை கொண்டிருந்தன. ஹிட்லரைப் போன்று இரக்கம் தொலைத்த அரக்கர்களாக அல்ல, இயேசுவைப் போன்று இரக்கம் வளர்க்கும் இனியவர்களாக வாழ்வதே வாழ்க்கைக்கு அழகு சேர்க்கும். ‘இறக்கத்தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ என்ற புனித அன்னை தெரசாவின் அமுத மொழிகள் நம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கட்டும். 

வாழ்க்கையில் இரக்கம் எவரையும் எப்போதும் கீழே இறக்கிவிடுவதில்லை. மாறாக ஒருவரின் இரக்கம் அவரை இமயமளவு உயரே ஏற்றிவிடுகிறது என்பதே உண்மை. இரக்கம் சுரக்கும் இதயங்களாய் இனி நம் இதயங்கள் இருந்திடட்டும். இரக்கம் நிச்சயம் நம்மை சிறக்கச் செய்யும். ஆம், இரக்கம் சுரக்கும் இதயம் என்றுமே சிறக்கும். எனவே இனி அடுத்தவருக்கு இரக்கம் காட்டுவோம்! அதன் வழியாய் இறைவனைக் காட்டுவோம்!


Sunday, 28 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 இயேசுவோடு செல்வோம்! இயேசுவாக மாறுவோம்!

மாற்கு 9: 2-10


உலகில் நமக்கான மாதிரிகளாக திரை நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும், அரசியல் தலைவர்களையும் நாம் தேர்ந்தெடுத்து, அவர்களைப் போன்று மாறவும், வாழவும் துடிக்கிறோம். ஆனால் நம்மைப் போன்று மனிதராய் மாறவும், வாழவும் ஆசைப்பட்டு, அதற்காக கடவுள் நிலையை விரும்பித் துறந்து பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப்போன்று வாழந்து காட்டிய இயேசுவை நம் வாழ்வின் மாதிரியாக வைத்திட வேண்டாமா? நம்மைப் போல மாறியவருக்காக, நாம் அவரைப் போல மாறிட முயற்சி செய்ய வேண்டாமா? 

கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் என்கிற இந்த வார்த்தையின் பொருள் நமக்குப் புரிந்துள்ளதா? கிறிஸ்தவன் (கிறிஸ்து அவன்) அல்லது கிறிஸ்தவள் (கிறிஸ்து அவள்) என்று சொல்லும் போது நாமே மறு கிறிஸ்துவாக மண்ணில் நடமாடும் பொறுப்பை இப்பெயர் நமக்கு வழங்கியுள்ளது என்பதை உணர்ந்துள்ளோமா? இயேசு கிறிஸ்துவின் பாசறையில் பயிற்சி பெறும் நம் அனைவருக்கும் அவரைப் போன்று வாழ வேண்டிய கடமையும் பொறுப்பும் மிகவே உண்டு என்பதை உணர்ந்தவர்களாக, பேருக்கு வாழாமல், பெயருக்கேற்ற வாழ்வு வாழ தீர்மானிப்பதே இன்றைய தேவையாக உள்ளது. 

இயேசுவின் உருமாற்ற அனுபவத்தைக் குறித்து இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். மலைக்குத் தன் சீடர்களோடு இயேசு சென்றார். அங்கு தம் தந்தையிடம் செபத்தில் ஒன்றித்திருந்தார். அப்போது அவர் தோற்றம் மாறினார். தந்தையாம் கடவுள் இயேசுவைக் குறித்து சாட்சியம் பகர்ந்தார். அந்த மலையில் இயேசுவோடு சீடர்கள் இருந்தாலும் இயேசு மட்டுமே உருமாறினார். தந்தையாம் கடவுளுக்கு உகந்த வாழ்வு இயேசுவிடம் மட்டுமே இருந்தது. எனவே மாட்சிக்குரிய தோற்றம் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது. இயேசுவோடு மலையில் ஏறிய எல்லோரும் தந்தைக்குரியவர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். ஆகவே தான் மீண்டும் மலையைவிட்டு கீழே இறங்கி வருகிறார். எப்படியும் எல்லோரையும் தம்மைப் போன்று கடவுளுக்கு உகந்தவர்களாய் உருவாக்கிட வேண்டும் என்பதே இயேசுவின் கனவாக இருந்தது. எப்படி தந்தைக்குரியவர்களாக வாழ்வது? இயேசுவுக்கு செவிசாய்த்து, அவரைப்போல வாழ்வது. 

அன்று இயேசுவோடு மலைக்குச் சென்ற சீடர்கள், மாட்சிக்குரிய தோற்றத்தில் இயேசுவைப் பார்த்தார்கள், பரவசமடைந்தார்கள். அதையே நாமும் இன்று திருக்கோயில்களில் திருப்பலி நேரத்தில் பெற்று உளப்பூரிப்படைகின்றோம். ஆனால் அத்தோடு நின்றுவிடாமல், இத்தவக்காலத்தில் இயேசுவாகவே மாறிட அழைப்பு பெறுகிறோம். இயேசுவோடு செல்வதும், இயேசுவாக மாறுவதும் நம் வாழ்வில் நம்மையும் விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாக்கிடும். எனவே நாம் இயேசுவுக்கு செவிசாய்த்தவர்களாய் வாழ்ந்து, இயேசுவோடு செல்வோம்! இயேசுவாக மாறுவோம்!


Saturday, 27 February 2021

தவக்காலம் - கிறிஸ்துவின் கைகள்

 இழந்த கைகளின் கதை



ஒரு நாள் காலை.

நான் மண்டியிட்டு செபிக்கும்போது 

கிறிஸ்துவின் சிலுவையைப் பார்த்தேன்.

மிகவே திகைத்துப் போனேன். 

இயேசுவின் கைகளை அதில் காணவில்லை.

நான் கூரையிலிருந்து தரை வரைக்கும் தேடினேன்.

அதற்கு அப்பாலும் தேடினேன்.

ஆனால் காயமடைந்த அவருடைய கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.


அதனால் ஆண்டவர் பக்கம் திரும்பினேன்.

இது ஒரு கனவு தானா?

ஏன் மாட்சிக்குரிய அவரது இருக்கையில் 

அவர் முழுமையற்றவராக தெரிகிறார்?

என்று கேட்டேன்.


அவர் சொன்னார்:

“குழந்தாய்! 

நீங்களே என் கைகள்.  

பாதிக்கப்பட்டவரின் காயங்களை குணமாக்குங்கள்.  

ஏழைகளை கரிசனையோடு கவனித்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கையற்றோருக்கு நம்பிக்கை கொடுங்கள். 

சோர்வுற்றோரை  தேற்றுங்கள். 

ஆடை இழந்தோரை உடுத்துங்கள்.

இதைச் செய்வதன் மூலம் 

நீங்கள் என் கைகளை மீட்டெடுங்கள்."


மூலம்: " Encountering God in our Life ".