Monday, 27 February 2023

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு செய்ய விரும்பவதையெல்லாம் அடுத்தவருக்கு செய்வோம்!

மத்தேயு 25:31-46


மனிதர்கள் கடவுளின் சாயலாய் படைக்கப்பட்டுள்ளனர். மனிதம் இறைமையைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு மனிதனும் நமக்கு கடவுளின் முகத்தையே அடையாளம் காட்டுகின்றனர். கடவுள் கடவுளாகவே இவ்வுலகுக்கு வந்தால் கடவுளை எவரும் விரட்டியடிக்கப்போவதில்லை. ஆனால் கடவுள் கடவுளாகவே இவ்வுலகுக்கு ஒருபோதும் வருவதில்லை. கடவுள் தம் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதர்களின் வழியாகவே இம்மண்ணில் வலம் வருகிறார். மனிதர்களின் மாண்பைக் காக்கிறவர்கள் கடவுளையே மாட்சிப்படுத்துகிறார்கள். 

இயேசு சவுலை தமஸ்குக்கு செல்லும் பாதையில் சந்திக்கிறபோது ‘ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்கிற கேள்வியை எழுப்புகிறார். ஆனால் உண்மையில் பவுல் இயேசுவை அல்ல, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருந்த கிறிஸ்தவர்களையே துன்புறுத்தினார். துன்புறுவோரின் துன்பத்தை தம் துன்பமாகவே பாவிக்கிறவர் நம் கடவுள். ஆகவே கடவுளை நேரடியாக எவரும் துன்புறுத்த விரும்புவதில்லை. ஆனால் சக மனிதர்களை துன்பத்துக்கு உள்ளாக்குவதன் வழியாக கடவுளை நம்மால் துன்புறச் செய்ய முடியும்.

இறுதித் தீர்ப்பு குறித்த நற்செய்திப் பகுதியில் நிலைவாழ்வு என்பது அடுத்தவர் மீது அக்;கறைகொண்டு அவர்களின் தேவைகளை நிறைவு செய்கிறவர்களுக்கு வழங்கப்படும் கடவுளின் அன்புப் பரிசாகும் என்றும், அணையா நெருப்பு என்பது அடுத்தவர் மட்டில் அக்கறையற்று அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவிடும் மனமில்லாதவர்களுக்கு வழங்கப்படும் முடிவில்லாத் தண்டனையாகும் என்றும் சொல்லப்படுகிறது. 

தேவையில் இருப்போருக்கு செய்யப்படும் எதுவும் தெய்வத்துக்கே செய்யப்படுவதாகும் என்றும், தேவையில் இருப்போருக்கு செய்யப்படாத எதுவும் தெய்வத்துக்கே செய்யப்படாததாகும் என்றும் இயேசுவின் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆகவே கருணையுள்ளமே கடவுளுக்கு உகந்த இல்லிடம்.  ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார் (நீமொ 19:17). 

பசித்திருப்பவரும், தாகத்தோடு இருப்பவரும் இயேசுக்களே. ஆடையின்றி இருப்பவரும், அன்னியராய் இருப்பவரும் இயேசுக்களே. நோயுற்றிருப்பவரும், சிறையிலிருப்பவரும் இயேசுக்களே. இல்லாமையில் இழிவுறும் இந்த இயேசுக்களின் மீது நம் கண்களை திருப்புவோம். அடுத்தவருக்கு செய்யப்படும் நன்மைகள் ஆண்டவருக்கு செய்யப்படும் ஆராதனைகளே. அடுத்தவருக்கு செய்ய மறந்த நன்மைகள் ஆண்டவருக்கு செய்யப்படும் அவசங்கைகளே. ஆகவே ஆண்டவருக்கு செய்ய விரும்புவதையெல்லாம் அடுத்தவருக்கு செய்வோம்!  


Saturday, 5 November 2022

கல்லறைப் பாடம் - 5

உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாவலர்  




1245 ஆம் ஆண்டு மத்திய இத்தாலியில் உள்ள சான்ட் ஏஞ்சலோ நகரில் பிறந்த நிக்கோலஸ், இளம் வயதிலேயே டோலண்டினோ நகரிலிருந்;த அகஸ்தினார் துறவற சபையில் சேர்ந்து, ஏழு ஆண்டுகள் படித்த பிறகு, குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 

நிக்கோலஸ் ஒரு புனிதமான மனிதர். அவர் அடிக்கடி உண்ணா நோன்பும் ஒறுத்தலும் இருந்து, தன்னைத் தானே வருத்திக் கொண்டார். நீண்ட நேரம் செபத்தில் ஈடுபட்டார். 

கத்தோலிக்கத் திரு அவை 1274 இல் நடைபெற்ற இரண்டாம் லயன்ஸ் பொதுச் சங்கத்தில் தூய்மைபெறும் நிலை (உத்தரிக்கும் நிலை) கோட்பாட்டை முறையாக வரையறுத்தது. 

அதே காலகட்டத்தில் வாழ்ந்த புனித நிக்கோலஸைக் குறித்து இவ்வாறு சொல்வதுண்டு: நிக்கோலஸ் ஒரு இரவு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ஓர் இறந்த துறவியின் குரலைக் கேட்டார். அத்துறவி நிக்கோலஸிடம் அவர் இப்போது தூய்மை பெறும் நிலையில் (உத்தரிக்கும் நிலை) இருப்பதாகக் கூறினார். எனவே அவருக்கும் அங்குள்ள மற்ற ஆன்மாக்களுக்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்குமாறு வலியுறுத்தினார். நிக்கோலஸ் ஏழு நாட்கள் அவ்வாறு செய்த பிறகு, துறவி மீண்டும் அவருக்குத் தோன்றி, இப்போது ஏராளமான ஆன்மாக்கள் கடவுளைச் சென்றடைந்துள்ளதாக்கூறி, நன்றி தெரிவித்தார். 

இவ்வாறு டோலண்டினோ நகர் புனித நிக்கோலஸ் இன்று உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாவலர் என்று திரு அவையால் போற்றப்படுகிறார். 


Friday, 4 November 2022

கல்லறைப் பாடம் - 4

ஒரு புனித ஆன்மாவின் கை ரேகை 




அவர் பெயர் தெரசா கெஸ்டா. அவர் இத்தாலியின் அசிசி நகருக்கு அருகிலுள்ள ஃபோலிக்னோவில் பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரியாக இருந்தார். இவர் நவம்பர் 4, 1859 அன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். சரியாக 12 நாட்களுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட சகோதரி அன்னா ஃபெலிசியா திருப்பண்ட அறையின் உள்ளே இருந்து அழுகுரல் ஒன்றைக் கேட்டார். சகோதரி அன்னா ஃபெலிசியா அவசரமாக கதவைத் திறந்து பார்க்க, அங்கே யாரும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்து அழு குரலைக் கேட்டார். 

இப்போது “கடவுளே, நான் இப்படி துன்புறுகிறேனே!" என்று சகோதரி தெரசா வருத்தத்துடன் புலம்புவதை அன்னா தெளிவாகக் கேட்டார். சற்று நேரத்தில் அறை கடும் புகையால் இருட்டாக மாறியது. அதிலிருந்து சகோதரி தெரசா தோன்றி, அறையின் வாசலை நோக்குச் சென்றபோது, “இதோ, கடவுளின் கருணைக்கு ஓர் ஆதாரம்" என்று கூக்குரலிட்டார். பின்பு அவர் அங்கிருந்த கதவில் கையை ஊன்றி தனது கை ரேகையை அதிலே விட்டுவிட்டு மறைந்தார். அது எரியும் கூடான இரும்பை மரத்தில் பதித்தது போல இருந்தது. 

சகோதரி அன்னா ஃபெலிசியா பயந்து போய், உதவிக்காக கூக்குரலிட்டார். சிறுது நேரத்தில் எல்லா சகோதரிகளும் அங்கு கூடினர். சகோதரி அன்னா ஃபெலிசியா, சகோதரி தெரசா உத்தரிக்கும் நிலையிலிருந்து வருகை தந்ததாகவும், கதவில் எரிந்த கை ரேகையை விட்டுச் சென்றதாகவும் கூறினார். அவர்கள் அனைவரும் அது சகோதரி தெரசாவின் கை என்று அங்கீகரித்தனர். 

அவர்கள் இரவு முழுவதும் சகோதரி தெரசாவுக்காக செபித்தனர். அடுத்த நாள் காலையில் அவர்கள் அனைவரும் சகோதரி தெரசாவுக்காக நற்கருணை பெற்றனர். பின் வந்த நாட்களில், சகோதரி தெரசாவின் எரிந்த கை ரேகை மரக் கதவில் பொறிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியது. 

சகோதரி தெரசாவின் முதல் காட்சிக்குப் பிறகு மூன்றாவது நாளில், அவர் மீண்டும் சகோதரி அன்னா ஃபெலிசியாவுக்கு ஓர் அற்புதமான ஒளியில் தோன்றினார். அப்போது சகோதரி தெரசா கூறியது: “நான் ஒரு வெள்ளிக்கிழமை அன்று இறந்தேன். இதோ இன்று மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை, இன்று நான் நிலையான மாட்சிக்குள் நுழைகிறேன்!" அவர்  விண்ணகத்திற்குச் செல்வதற்கு முன், சகோதரி அன்னா ஃபெலிசியாவிடம், “சிலுவையைச் சுமக்க வலிமையாயிருங்கள், துன்பப்படுவதற்கு துணிவோடிருங்கள், ஏழ்மையை விரும்புங்கள்" என்று அறிவுறுத்தினார்.