Saturday, 11 November 2023

கல்லறைப் பாடம் - 11

 நினைவாற்றல் குறைபாட்டை நிவர்த்தி செய்த 

திருத்தந்தை 9 ஆம் பயஸ்


வணக்கத்திற்குரிய திருத்தந்தை 9 ஆம் பயஸ் பக்தியான நேர்மையான தோமாசா என்கிற அருள்பணியாளரை, ஆயராக ஒரு மறைமாவட்டத்திற்கு தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த அருள்பணியாளரோ, பெரும் பொறுப்புகளை எண்ணி அச்சமுற்றவராய் அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். ஆனால் அந்த அருள்பணியாளரின் பல நற்குணங்களை அறிந்திருந்த திருத்தந்தையோ மறுத்துவிட்டார். 

பின்பு திருத்தந்தையிடம் நேரில் பேசுவதற்கு அனுமதி பெற்றுச் சென்ற அருள்பணியாளர் தோமாசா, மீண்டும் தன் கோரிக்கையை ஏற்க வேண்டினார். ஆனால் மிகுந்த அன்போடு அவரை வரவேற்ற திருத்தந்தையோ, தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். 

இறுதியில் அருள்பணியாளர் தோமாசா திருத்தந்தையிடம் தனக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அது உயர்ந்த பொறுப்பலிருந்து பணியாற்றுவதற்கு பெரும் தடையாக இருக்கும் என்பதாலேயே தனக்கு ஆயர் பொறுப்பு வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார்.

அதற்கு திருத்தந்தை 9 ஆம் பயஸ் சிரித்தவாறு, “அன்பான அருள்பணியாளரே, என் தோளில் நான் ஏற்றிருக்கும் உலக திரு அவையின் பொறுப்புகளை ஒப்பிட்டால் உமது மறைமாவட்டம் மிகவும் சிறியது. அதன் பொறுப்புகளும் எளியதே. நானும் ஒரு காலத்தில் உங்களைப் போல நினைவாற்றல் குறைபாட்டால் அதிக சிரமப்பட்டேன். ஆனால் உத்தரிக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காக நான் தினமும் தீவிரமாக செபம் செய்து வந்தேன். அவர்கள் அதற்கு ஈடாக எனக்கு நல்ல நினைவாற்றலை பெற்றுத் தந்துள்ளார்கள். நீங்களும் என்னைப் போலவே செய்யுங்கள். ஒரு நாள் கண்டிப்பாக பலன் பெற்று மகிழ்வீர்கள்” என்றார். 

உத்தரிக்கும் நிலையிலுள்ள புனித ஆன்மாக்கள் நமக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் சிறந்த பரிந்துரையாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், நாம் அவர்களுக்காக செபிப்பதன் மூலம், அவர்கள் நம்முடைய தேவைகளில் நமக்காக செபிக்க முடியும். புனித ஆன்மாக்கள் ஒருபோதும் தங்களுக்காக செபிக்க முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக செய்யப்படும் அவர்களின் செபங்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. இந்த ஆன்மாக்களிடம் செபம் செய்வதன் மூலமும், அவர்களின் சில துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதன் மூலமும், நாம் கடவுளின் சிறப்பு அருளைப் பெறமுடியும். ஏனெனில் “இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.” 


Friday, 10 November 2023

கல்லறைப் பாடம் - 10

புனித மரிய பவுஸ்தினாவின் 

இறந்த ஆன்மாக்களுடனான சந்திப்புகள் - 2



நவம்பர் 2, 1936 அன்று இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு நாளில் ஒரு சந்திப்பு நடந்தது. அன்று மாலை புனித மரிய பவுஸ்தினா கல்லறைக்குச் சென்றார். அங்கு சிறிது நேரம் இறைவேண்டல் செய்தார்.

“நாங்கள் சிற்றாலயத்தில் இருக்கிறோம்” என்று சொன்ன சகோதரிகளுள் ஒருவரை அவர் அங்கு பார்த்தார். அதைக் கேட்ட புனித மரிய பவுஸ்தினா உடனே தான் சிற்றாலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொண்டு, அங்கு சென்று உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு பரிபூரணப்பலன் கிடைக்க இறைவேண்டல் செய்தார். 

அடுத்த நாள் திருப்பலிக்குச் சென்றபோது அவர், மூன்று வெள்ளை புறாக்கள் பலிபீடத்தில் இருந்து வானத்தை நோக்கி உயரப் பறந்ததைப் பார்த்தார். அதிலிருந்து மூன்று ஆன்மாக்கள் விண்ணப் பேரின்பம் சென்றதாகப் அவர் புரிந்துகொண்டார். இந்நிகழ்வையும் அவர் தம்முடைய நாட்குறிப்பில் எழுதுகிறார். (எண். 748).


Thursday, 9 November 2023

கல்லறைப் பாடம் - 9

புனித மரிய பவுஸ்தினாவின் 

இறந்த ஆன்மாக்களுடனான சந்திப்புகள் - 1



புனித மரிய பவுஸ்தினாவின் பெயரைக் கேட்டவுடன், இறை இரக்க பக்தியை நாம் உடனடியாக நினைவுகூறுகிறோம். இப்புனிதருக்கு தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்கள் இவரைச் சந்தித்த அனுபவங்களும் இருந்தன. 

1933 இல், புனித மரிய பவுஸ்தினாவை அன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட ஓர் அருள்சகோதரியின் ஆன்மா சந்தித்தது. அந்த சகோதரி மிகவும் பயங்கரமான நிலையில் இருந்தார். அவரது முகம் வலிமிகுந்ததாயும், தீப்பிழம்புகளில் சிதைந்ததாயும் இருந்தது. புனித மரிய பவுஸ்தினா அச்சகோதரிக்காக தனது செபங்களை அர்ப்பணித்தார்.

அடுத்த நாள் இரவு, இன்னும் மோசமான தீப்பிழம்புகளால் சூழப்பட்ட நிலையில், முன்பு இருந்ததைவிட இன்னும் மோசமான நிலையில், அச்சகோதரி மீண்டும் தம்மிடம் வருவதைக் கண்டு மரிய பவுஸ்தினா அதிர்ச்சியடைந்தார்.

“என் செபங்கள் உங்களுக்கு உதவவில்லையா?" புனித மரிய பவுஸ்தினா அச்சகோதரியிடம் கேட்டார். 

“உதவவில்லை, எதுவும் எனக்கு உதவாது” என்று அச்சகோதரி பதிலளித்தார். 

“எல்லோரும் சேர்ந்து உங்களுக்காகச் செய்த எந்த செபங்களும் உங்களுக்கு உதவவில்லையா?" என்றார் புனித மரிய பவுஸ்தினா. 

“இல்லை. அந்த செபங்கள் மற்ற ஆன்மாக்களுக்கு உதவின” என்றார் அச்சகோதரி.

“என் செபங்கள் உங்களுக்கு உதவவில்லை என்றால், தயவுசெய்து நீங்கள் என்னிடம் வருவதை நிறுத்துங்கள்" என்று புனித மரிய பவுஸ்தினா பதிலளித்தார். உடனே அச்சகோதரியின் ஆன்மா அங்கிருந்து மறைந்தது.

ஆனாலும், புனித மரிய பவுஸ்தினா செபித்துக்கொண்டே இருந்தார். 

சிறிது நேரம் கழித்து, அச்சகோதரி மீண்டும் திரும்பி வந்தார். ஆனால், இம்முறை அவருடைய தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. தீப்பிழம்புகள் மறைந்துவிட்டன, மேலும் அவருடைய முகம் சிறிது பிரகாசமாக இருந்தது. அவருடைய கண்கள் மகிழ்ச்சியால் பிரகாசித்தன என்று புனித மரிய பவுஸ்தினா தனது நாட்குறிப்பில் எழுதுகிறார். (எண். 58). 

“தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக செபம் செய்வதை நிறுத்த வேண்டாம் என்று அச்சகோதரி எனக்கு வலியுறுத்தினார்….. கடவுளின் வழிகள் எவ்வளவு பிரமிக்க வைக்கின்றன!” என்று புனித மரிய பவுஸ்தினா எழுதுகிறார்.  

அந்த சகோதரி மூன்றாவது முறையாக புனித மரிய பவுஸ்தினாவிடம் சென்றபோது, அவர் இன்னும் தூய்மைபெறும் நிலையில் இருந்தபோதிலும், அவருடைய துன்ப நிலையின் அளவு மாறியிருந்தது. அவர் வேதனை மற்றும் விரக்தியிலிருந்து ஒளி மற்றும் பேரின்பத்தை நோக்கிய தன் வழியில் இருந்தார்.