Sunday, 28 March 2021

தவக்காலத் திருவுரைகள் - குருத்து ஞாயிறு

இயேசுவைச் சுமக்கும் கழுதை ஆவோம்!

மாற்கு 11:1-10


ஒருநாள் எருசலேமின் வீதியில் இரு கழுதைகள் பேசிக்கொண்டன. முதல் கழுதை சொன்னது: ‘இந்த எருசலேம் நகரின் வீதியில்தான் நேற்று நான் பவனியாய் வந்தேன். எவ்வளவு வரவேற்பு! எத்தனை உபசரிப்பு! ஆனால் இன்றும் அதே பாதையில்தான் வருகிறேன். ஆனால் இன்று என்னைக் கவனிப்பார் எவருமில்லை’. இன்னொரு கழுதை சொன்னது: ‘நீ சொல்வது உண்மைதான். நேற்று உனக்கு மிகப் பெரிய வரவேற்பு, உபசரிப்பு எல்லாம் கிடைத்தது. ஆனால் அது உனக்கானது அல்ல. நீ சுமந்த வந்த இயேசுவுக்கு இம்மக்கள் கூட்டம் கொடுத்தது. அவர் உன் மீது அமர்ந்திருந்ததால் அது உனக்கும் கிடைத்தது. நீ யாரைச் சுமக்கின்றாயோ, எதைச் சுமக்கின்றாயோ அதைப் பொறுத்தே உன் மதிப்பு அமையும்’. 

மனிதர்களாகிய நாமும் நம்முடைய உள்ளத்தில் யாரைச் சுமக்கின்றோம், எதைச் சுமக்கின்றோம் என்பவற்றைப் பொறுத்தே நம்முடைய வாழ்வின் மதிப்பு தீர்மானிக்கப்படும். ஒரு பாத்திரத்தில் மண்ணும் இன்னொரு பாத்திரத்தில் பொன்னும் இருந்தால், பொன் இருக்கும் பாத்திரத்தின் மதிப்பே பெரிதாகக் கருதப்படும். மண்ணைச் சுமக்கும் மடையர்களாக அல்ல, பொன்னைச் சுமக்கும் பாக்கியசாலிகளாக வாழ்வதே நம் வாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும். நம்முடைய வாழ்வில் நாம் எதைச் சுமக்கிறோம் என்று சிந்திப்போம்.  

இயேசுவின் மகிமையைத் தானும்  அனுபவிக்க அன்று அக்கழுதை நான்கு காரியங்களை செய்தது. 

1. யாரும் அதுவரை அமராததாக அது இருந்தது. 

2. இருக்கும் இடத்திலிருந்து அவிழ்த்து வரப்பட்டது. 

3. இயேசு இருக்கும் இடத்திற்கு வந்தது. 

4. இயேசுவை விரும்பிச் சுமந்தது. 

இதையே இன்று நாமும் செய்யத் துணிவோம். 

அற்ப மனிதர்களும், அவர்களது ஆக்கப்பூர்வமற்ற கருத்தியல்களும் நம்மீது சவாரி செய்ய ஒருபோதும் அனுமதியாதிருப்போம். இயேசுவைச் சுமக்க வேண்டிய நமது வாழ்க்கையில், உலகின் எச்சங்களையும், மிச்சங்களையும் சுமந்து நொந்து போக வேண்டாம். இயேசுவே நம்மீது அமரட்டும். அவருடைய இறையாட்சி விழுமியங்களும் மதிப்பீடுகளும் நம்மீது சவாரி செய்யட்டும்.  சொல்லிலும் செயலிலும் நாம் இயேசுவையே சுமந்து போவோம். 

அன்று எருசலேம் நகரில் எத்தனையோ கழுதைகள் இருந்திருக்கக் கூடும். ஆனால் இயேசு ஏதோ ஒரு கழுதையை மட்டும் அவர் தன்க்காக தெரிவு செய்தார். அக்கழுதையை இயேசு மிகவும் கவனமாய்த் தன்னுடைய பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார். ‘இந்த கழுதைக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்’ என்று சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். இயேசுவால் அன்று அந்த எருசலேம் கழுதைக்கு வாழ்வு வந்தது. நாமும் இயேசுவுக்கு கழுதையானால் நமக்கும் இன்று அச்சிறப்பான வாழ்வு வரும். ‘நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்’ என்று சொல்வதைப் போன்று இயேசுவுக்கு கிடைப்பது அனைத்தும் இயேசுவைச் சுமக்கும் நம் அனைவருக்கும் கிடைக்கும். எனவே, நாமும் அன்றாடம் சொல்லிலும் செயலிலும் இயேசுவைச் சுமக்கும் கழுதை ஆவோம்!