Friday, 10 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 10

ரூத்து




ரூத்து 2:23

இன்றையநாளின் சிந்தனை : ரூத்து

இன்றையநாளின் குறியீடு : கதிர்க்கட்டு


நீதித்தலைவர்கள் இஸ்ரயேலை வழிநடத்திய காலகட்டத்தில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. யூதாவிலுள்ள பெத்லகேம் என்னும் ஊரைச் சேர்ந்த எலிமலேக்கு என்பவருடைய குடும்பம் பிழைப்பதற்காக மோவாபு சென்றது. எலிமலேக்கின் மனைவியின் பெயர் நகோமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மோவாபில் இவர்கள் இருந்த வேளையில் எலிமலேக்கு இறந்துவிட்டார். அவருடைய இரண்டு மகன்களும் மோவாபு நாட்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து வந்த நாட்களில் நகோமியின் இரு மகன்களும் இறந்துவிட்டனர். 

தன்னுடைய கணவனும், மகன்களும் இறந்த பிறகு பெத்லகேமுக்கு திரும்பிப்போக நகோமி முடிவெடுத்தார். எனவே தன்னுடைய மருமகள்களை அழைத்து தாய் வீட்டுக்கு அவர்களைத் திரும்பிப்போக கேட்டுக்கொண்டார். அதன்படியே ஒரு மருமகள் தன்னுடைய பிறந்தகம் சென்றுவிட்டாள். ஆனால் இன்னொரு மருமகளோ தன்னுடைய மாமியாரை விட்டுவிட்டு பிறந்தகம் செல்ல மறுத்துவிட்டாள். அவளுடைய பெயர்தான் ரூத்து. 

இதற்குபின்பு நகோமி தனது மருமகள் ரூத்தையும் அழைத்துக்கொண்டு பெத்லகேமுக்கு திரும்பினார். அங்கு சென்றபிறகு போவாசு என்ற செல்வருடைய வயலில் சிந்திய கதிர்களை ரூத்து தினமும் பொறுக்கிச் சேர்த்து வீட்டுக்கு எடுத்து வருவார். போவாசு நகோமிக்கு உறவினர்முறை. இறுதியில் ரூத்தை போவாசு மணந்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஓபேது என்று பெயரிட்டார்கள். இந்த ஓபேதுதான் தாவீதின் தந்தையாகிய ஈசாயின் தந்தை ஆவார். இவ்வாறு மோவாபு நாட்டைச் சேர்ந்த ரூத்தும் இயேசுவின் வழிமரபு அட்டவணையில் இடம் பெற இறைவன் துணை செய்தார். 

உறவுகள் ஏதும் இல்லாமற்போனாலும், புதிய மற்றும் பெருமைக்குரிய உறவுகளை கடவுள் உருவாக்கித் தருவார் என்பதை ரூத்துவினுடைய வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. தனது மாமியாருடனான உறவை முறிக்க விரும்பாத ரூத்தை, இறைவன் எவ்வளவு ஆசீர்வதித்தார் என்பதை நாம் அறிவோம். நாமும் நம்முடைய உறவுகளை உடைக்காமல், உறவுகளுக்கு உயிர்கொடுக்கவும், உருக்கொடுக்கவும் தீர்மானிக்க வேண்டியநாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! ரூத்தைப் போல நாங்களும் பிறரோடு நல் உறவில் வாழுகிறபோது, உம்மோடு எங்களை நீர் புதிய உறவில் பிணைத்துக் கொள்வீர் என்பதை நம்புகிறோம். ‘உறவே மனிதம், உறவே புனிதம்’ என்பதை உணர்ந்த நாங்கள், எங்களுடைய உறவுகளை மதிப்புடனும், மாண்புடனும் நடத்த உதவி செய்யும். இறை மனித உறவில் நாளும் வளர எங்களுக்கு அருள் புரிவீராக. ஆமென்.