Thursday, 9 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 9

மோசே



விடுதலைப்பயணம் 34:29

இன்றையநாளின் சிந்தனை : மோசே

இன்றையநாளின் குறியீடு : கற்பலகைகள்


யோசேப்பின் காலத்திற்குப் பின்பு இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். இஸ்ரயேல் மக்கள் எண்ணிக்கையில் மிகுதியாவதையும், பலத்தில் சிறந்து விளங்குவதையும் கண்ட எகிப்தின் புதிய மன்னன், இஸ்ரயேல் மக்களுக்கு பிறக்கும் அனைத்து ஆண் மகவுகளையும் நைல் நதியில் வீசிக் கொல்ல உத்தரவிட்டான். அத்தருணத்தில் பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளையை பேழையில் வைத்து நைல் நதியில் விட்டாள். அக்குழந்தையை எடுத்த பார்வோனின் மகள் அதற்கு மோசே என்று பெயரிட்டாள். 

மன்னனின் மாளிகையில் வளர்ந்த மோசே, எபிரேயனைத் துன்புறுத்திய எகிப்தியன் ஒருவனை கொன்றுவிட்டு, எகிப்தைவிட்டு தப்பியோடினார். ஒரேபு மலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேயை, எரியும் முட்புதரின் வாயிலாக கடவுள் அழைத்தார். எகிப்தில் அடிமைகளாக இருக்கும் இஸ்ரயேல் மக்களை விடுதலைசெய்து அழைத்துவரும்படி ஆண்டவர் மோசேக்கு சொன்னார். 

மோசேயும் எகிப்துக்குப் போனார். கடவுளின் வல்லமையின் உதவியால் பத்து கொள்ளை நோய்கள் ஏற்பட்டன. கடைசியில் மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து விடுதலைபெற்று இஸ்ரயேல் மக்கள் வெளியேறினர். செங்கடலில் அவர்கள் கால் நனையாமல் கடவுள் கடந்துபோகச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இடையிலான மாபெரும் இணைப்பாளராக மோசே இருந்தார். அவ்வப்போது முணுமுணுப்புகள் வந்தாலும், மோசே அம்மக்களுக்காக எப்போதும் கடவுளிடம் பரிந்து பேசினார். காலையில் மன்னாவும், மாலையில் காடையும் கடவுளால் அவர்களுக்கு கிடைத்தது. பாலைநிலத்தில் பாறையிலிருந்து குடிப்பதற்கு தண்ணீர் பெற்றனர். 

விடுதலைப் பயண நிகழ்வுகளில் எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாய் மலையில் மோசேயின் வழியாக கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். பத்துக் கட்டளைகளைக் கொடுத்து தன்னுடைய சொந்த மக்களினமாக அவர்களைத் தெரிந்துகொண்டார். 

பயந்து ஓடிப்போன மோசேயை, விடுதலைப்பயணத்துக்குத் தலைவராக கடவுள் ஏற்படுத்தியது போல, நம்முடைய பலவீனங்களிலும் அவர் பலமாக வெளிப்படுவார் என்பதை நம்புவோம். இறை மனித உறவுவாழ்வுக்காக கடவுள் தந்த பத்துக்கட்டளைகளை இனிமேல் மிகவும் கவனத்துடன் கடைப்பிடிப்போம் என்று முடிவெடுத்து, உடன்படிக்கையின் மக்களாக நாம் வாழத் தொடங்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! பழைய ஏற்பாட்டு விடுதலைப் பயணத்தில் வியப்புக்குரிய செயல்கள் பலவற்றை நீர் செய்து அவர்களை வழி நடத்தியதுபோல, எங்கள் வாழ்விலும் செய்வீராக. பல்வேறு அடிமைத் தளைகளில் சிக்கியிருக்கும் எங்களுக்கு விடுதலைதந்து, உம்முடைய கட்டளைகளின்படி வாழ்வதற்குத் தேவையான அருளை வழங்கியருளும். ஆமென்.