Wednesday, 8 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 8

யோசேப்பு




தொடக்கநூல் 37:3

இன்றைய நாளின் சிந்தனை : யோசேப்பு

இன்றைய நாளின் குறியீடு : பல வண்ண அங்கி


யாக்கோபின் கடைசி மகனுடைய பெயர் யோசேப்பு. யோசேப்புக்கு பதினொரு சகோதரர்கள் இருந்தனர். ஆனால் யோசேப்பின் மீது மட்டும் தனிப்பட்ட சிறப்பான அன்பும், பாசமும் அவருடைய தந்தை யாக்கோபுக்கு இருந்தது. யாக்கோபு தன்னுடைய செல்லப் பிள்ளை யோசேப்புக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியைச் செய்து கொடுத்தார். அதுமற்ற சகோதரர்கள், யோசேப்பை பொறாமையோடு பார்க்கவும், வெறுப்போடு நடத்தவும் காராணமாக அமைந்தது. 

புழைய ஏற்பாட்டின் ‘கனவின் மன்னன்’ என்று சொல்லப்படக் கூடியவர் யோசேப்பு. ஒரு முறை இவர் தன்னுடைய இரு கனவுகளைத் தன் வீட்டில் சொன்னார். முதலாவதாக வயலில் இவருடைய அரிக்கட்டை சகோதரர்களின் அரிக்கட்டுகள் சுற்றி வணங்கின என்றும், இரண்டாவதாக கதிரவன், நிலா, விண்மீன்கள் அனைத்தும் யோசேப்பை வணங்கின என்றும் இவர் கூறியபோது, அனைவரும் இவரை இன்னும் வெறுப்போடு பார்க்கத் தொடங்கினர். 

இப்படிப்பட்ட அதீத வெறுப்பின் காரணமாக யோசேப்பின் சகோதரர்கள் அவரைக் கொல்ல விரும்பினார்கள். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இவர்களைக் காண வந்த யோசேப்பை முதலில் ஆழ் குழிக்குள் தள்ளிவிடுகிறார்கள். பின்னர் யோசேப்பை எகிப்துக்குப் போகின்ற வணிகர்களிடம் 20 வெள்ளிக்காசுகளுக்கு விற்றுவிடுகிறார்கள். யோசேப்பு முதலில் எகிப்திய மன்னன் பார்வோனின் படைத்தலைவன் போத்திபாரின் வீட்டில் வேலை செய்து வந்தார். போத்திபாரின் மனைவியின் சதியால் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிறகு மன்னனின் கனவுக்கு பொருள் சொல்லி, யோசேப்பு எகிப்தின் ஆளுநராகவே உயர்ந்தார். 

பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கிய காலத்தில், எகிப்து நாட்டில் மட்டும் யோசேப்பால் முன்னதாகவே தானியங்கள் சேகரித்து வைக்கப்பட்டன. அச்சமயத்தில் யோசேப்பின் சகோதரர்களும், தந்தையும் உணவுவேண்டி எகிப்திற்கு வருகிறார்கள். யோசேப்பு அவர்களுக்கு தான் யார் என்று வெளிப்படுத்துகிறார். தன்னுடைய குடும்பத்தையும், மக்கள் அனைவரையுமே பஞ்சகாலத்தில் காப்பாற்றும்படியாக கடவுள் அவரை முன்னதாகவே எகிப்திற்கு அனுப்பியதாக யோசேப்பு அறிவித்தார். 

நமக்கு செய்யப்படும் கெடுதல்களிலும் கடவுள் நன்மையின் ஊற்றை திறந்துவிடுவார் என்பதே யோசேப்பின் வாழ்வு நமக்குத் தரும் செய்தி. அடுக்கடுக்கான துன்பங்கள், துயரங்கள் மத்தியிலும் யோசேப்பு தவறு இழைக்க மனதில்லாதவராய், கடவுளின் விருப்பத்தை செயல்படுத்தி வாழ்ந்ததை நாமும் கற்றுக் கொள்வோம். கடவுளின் விலையேறப் பெற்ற அன்பிற்காக, நம்முடைய சிரமங்களையும் நாம் உற்சாகமாய் சந்திக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! உறவுகள் எங்களை வெறுத்தாலும் நீர் எங்களை அன்பு செய்கிறீர். சூழ்ச்சிகள் எங்களை வீழ்த்தினாலும் நீர் எங்களைத் தாங்குகின்றீர். எனவே நன்றி கூறுகிறோம். உம்மால் நாங்கள் இன்னும் நேசிக்கப்படவும், நீர் எங்கள் வாழ்வில் வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையோடு காத்திருக்கவும் வரம் தாரும். ஆமென்.