Saturday, 11 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 11

எலியா




1 அரசர்கள் 18:38

இன்றையநாளின் சிந்தனை : எலியா

இன்றையநாளின் குறியீடு : நெருப்பு


எலியா என்பவர் பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பெரிய இறைவாக்கினருள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். இவருடைய காலம் ஏறக்குறைய கி.மு. 9 ஆம் நூற்றாண்டு. எலியா என்பதற்கு ‘யாவே என் கடவுள்’ என்று பொருள். இவருடைய பணி  இஸ்ரயேல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

வடக்கு இஸ்ரயேல் நாட்டை ஆகாபு மன்னன் ஆட்சி செய்த சமயத்தில், அவனுடைய மனைவி ஈசபேல்லின் தூண்டுதலால் நாட்டில் பாகால் வழிபாடு பெருகியது. அக்கட்டத்தில் இறைவாக்கினர் எலியா இஸ்ரயேல் நாட்டில் பஞ்சத்தை முன்னறிவித்தார். இவருடைய வாக்கின்படி ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு இஸ்ரயேலில் பஞ்சம் நீடித்தது. பிறகு எலியாவின் சொல்லின்படியே வானிலிருந்து மழை பெய்தது.

யாவே மட்டுமே உண்மையான கடவுள் என்பதை நிரூபிக்க, இறைவாக்கினர் எலியா பாகாலின் நானூற்றைம்பது பொய்வாக்கினர்களையும், மக்கள் கூட்டத்தையும் கர்மேல் மலையில் ஒன்று கூட்டினார். அங்கே ஒப்புக்கொடுக்கப்பட்ட எலியாவின் பலியை மட்டும் வானத்திலிருந்து நெருப்பு வந்து சுட்டெரித்தது. இதன் வழியாக மக்கள் அனைவருக்கும் யாவே தான் உண்மையான ஒரே இறைவன் என்று எலியா உணர்த்தினார். 

எலியாவின் விண்ணேற்பு இன்னொரு முக்கியமான பழைய ஏற்பாட்டு நிகழ்வாகும். நெருப்புக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் எலியா சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் மீண்டும் வந்து, மெசியாவின் வருகைக்கு முன் தயாரிப்புசெய்வார் என்பது யூதர்களின் நம்பிக்கை ஆகும். 

பிற கடவுள்களை வழிபடுவது என்பது நம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டுள்ள, என்றும் வாழும் ஒரே கடவுளை உதறித்தள்ளுவது ஆகும். எலியாவைப் போல அரசனைவிட ஆண்டவருக்குப் பணிவதே உன்னதமானது என நாமும் உணர்ந்து கொள்வோம். வறுமையிலும், வளமையிலும், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் எப்போதும் ஒரே கடவுளையே நம்பி, அவரை மட்டுமே வழிபடுவோம் என்று உறுதி எடுக்கவேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மையே அறிந்து, உம்மை மட்டுமே அன்பு செய்யவும், உம்மை மட்டுமே வழிபடவும் எங்களை அழைத்திருக்கின்றீர். நாங்கள் ஒருபோதும் பிற தெய்வங்களைத் தேடி அலையாமல், மெய்யான கடவுளாகிய உம்மையே ஆராதித்து வணங்கவும், எச்சூழலிலும் உம்முடைய உடன்படிக்கையின் மக்களாக வாழவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.